ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 1

ஒரு மகா யோகியின் தரிசனங்கள்

Glimpses of A Great Yogi in Tamil – Part 1
Currently being shared for proof reading!
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். வே. ரங்கராஜன்

தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

மொழி பெயர்ப்பாளரின் முன்னுரை

யோகி ராம்சுரத்குமார்

துவங்கிய அன்று….

அய்யன் பாலகுமாரனின் எழுத்துக்களை படித்து அவரால் ஒரு உன்னத குருவான யோகி ராம்சுரத்குமார் அவர்களை வாழும் காலத்தில் மூன்று முறை தரிசித்தது அவரின் கருணையால் நடந்த ஒன்று. அந்த கருணையின் வெளிப்பாடாக எனது வாழ்நாளில் கிடைத்த முக்கியமான வாய்ப்புக்கள் மூன்று. 

1. அய்யன் பாலகுமாரன் அவர்களை சந்தித்து அவரது யோகியுடனான அனுபவங்கள் குறித்த மிக நீண்ட நேர்க்காணல் நூலான, ‘விஷாதயோகம்’. 

2. அய்யா திரு. பார்த்தசாரதி அண்ணாச்சி அவர்களின் ஆங்கில நூலான ‘அமரகாவியம்’ என்ற நூலை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்ய கிடைத்த வாய்ப்பு. 

3. இதோ இன்று சாது பேராசிரியர் வே. ரங்கராஜன் எழுதிய ஆங்கில நூலை அவரின் அனுமதியோடு தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு. 

முதலிரண்டு வாய்ப்புக்களை ஆசிர்வதித்து முடித்து தந்த யோகி ராம்சுரத்குமார் இந்த மூன்றாவது வாய்ப்பையும் செவ்வனே செய்து முடிக்கவும் என்னோடு உடனிருந்து வழி நடத்துவார். 

எது காணாமல் போனாலும், யோகி ராம்சுரத்குமார் குறித்த காவியங்கள் காலம் கடந்து நிற்கும், ஏனெனில் அவைகள் சத்தியத்தின் சாயல்கள். 

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெய குரு ராயா.

எனச் சொல்லி ஆதியும், அந்தமுமான குருவை நினைத்து இன்று துவங்கிவிட்டேன். இனி இந்தக்கருவிக்கு எந்த கர்வமும் வராமல் இச்செயலை முடித்து தருவது குரு யோகி ராம்சுரத்குமாரின் விருப்பம். 

என்றென்றும் அன்புடன்,

சரஸ்வதி சுவாமிநாதன்

11/07/2020
———

ஒரு மகா யோகியின் தரிசனங்கள்

பகுதி – I

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் காவியம்

அத்தியாயம் 1.1

காலை நட்சத்திரம்

ஓம் பூர் புவ: ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி 

தியோ யோந: ப்ரசோதயாத். 

“எங்களின் புத்தியை மூன்று உணர்வு நிலைகளிலும் பிரகாசிக்க வைக்கின்ற, சூரியனிடமிருந்து வெளிப்படுகின்ற, அந்த பேரொளியை நாங்கள் தியானிக்கிறோம்.”

இந்த பிரபஞ்சத்தை வெதுவெதுப்பான சூழலில் வைத்திருக்கும் சூரியனை, கங்கையின் கரைகளில் நின்று சூரிய உதயத்தின் போது கிழக்கு நோக்கி நின்று பக்தியுள்ள இந்துக்கள் இவ்விதமாகவே தியானிப்பார்கள். இந்த மந்திர ஒலி கங்கையில் பட்டு எதிரொலித்து பல்லாண்டு காலமாகவே ஹிந்துக்களின் ஆன்மீக மலர்ச்சிக்கு ஊட்டத்தை தந்திருக்கிறது. 

புனிதமான கங்கையின் ஓட்டத்தை பார்க்கும் எவரும் அதன் ஆடம்பரமான அழகோடு இந்த நாட்டின் மகிமையையும் உணர்வர். 

கங்கே சே யமுனே சைவ 

கோதாவரி சரஸ்வதி

நர்மதே சிந்து காவேரி

ஜலேஸ்மின் சந்நிதிம் குரு. 

“ஓ! கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து மற்றும் காவேரி நீங்கள் அனைவரும் இந்த நீரில் வருவீர்களாக.”

அனைத்து புனித நதிகளையும் இந்த நீரில் வருமாறு அழைப்பதன் காரணம் இந்த அனைத்து நதியின் கரைகளிலும் புனிதமான கோயில்கள் மற்றும் ஆன்மீக கேந்திரங்கள் இருப்பதேயாகும். 

கங்கையின் ஓட்டம் பழங்காலத்திலிருந்து எவ்விதம் மகிமை படுத்தியதோ அவ்விதமே பல ஞானிகள், துறவிகள், சாதுக்கள், யோகிகள், அவதார புருஷர்கள் வேதகாலம் தொடங்கி இன்றைய நவீன காலம்வரை இந்த தேசத்தை மகிமைப்படுத்தி வருகிறார்கள். 

இந்த புனித பாரதம் என்பது, “ஆன்மீக ஒளியில் திளைக்கின்ற நாடு” — தெய்வீக தாயின் வெளிப்பாடு.

ரத்னாகரா தௌத பாடம்

ஹிமாலய கீரிடினம்

பிரம்மராஜா ரிஷி ரத்னாதயம்

வந்தே பாரத மாதரம் ! 

“அற்புதமான கடல்கள் கால்களை கழுவ, ஹிமாலயத்தை கிரீடமாகவும், கழுத்தின் அணிகலனின் முத்தாக விளங்கும் பிரம்மரிஷிகளையும், ராஜரிஷிகளையும் கொண்ட, இறை தாயான பாரத மாதாவே உன்னை வணங்குகிறோம்.” 

வேதரிஷிகள் இந்த தேசத்தின் பணி உலக குருவாக திகழ்வது எனக் கண்டனர், மனித இனம் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதை இம்மண்ணில் தோன்றியுள்ள பெரும் ஞானிகள் மூலம் கற்றுணர அறைகூவல் விடுத்தனர். ஸ்ரீமன் நாராயணன், தட்சிணாமூர்த்தி என தொடங்கி, சங்கரர், இராமானுசர், மத்வர் என மிக நீண்ட குரு பரம்பரையையும், ஆன்மீக குருமார்களையும் வரிசையையும் கொண்டது இந்த பாரதம். 

மழையானது வானத்திலிருந்து பொழிந்து பல வடிவங்கள் கொண்டு பின்னர் ஆறாக மாறி இறுதியாக கடலில் எப்படி கலந்து விடுகிறதோ அதுபோல் பல ஆச்சார்யர்களின் உள்தன்மையானது ஒரே சத்தியத்தில் இருந்து உருவானதே அவர்களின் கடவுள் அறிதல் என்ற பயணத்தின் பாதைகள், பரம்பரைகள் வேறான போதிலும் அனைவரின் இறுதி இலக்கும் சத் – சித் – ஆனந்தம் – இருப்பு – விழிப்புணர்வு – பேரின்பம் – பரப்பிரம்மம் என்பதாகவே இருக்கிறது. 

இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சி பெற்ற புரட்சிகள் நிறைந்த காலத்திலும், பாரதத்தின் ஆன்மீக மரபு, எந்த தடங்கலுமின்றி பல புதிய தொலைநோக்காளர்கள், மகாத்மாக்கள் என பலரை தந்து வருகிறது. மேலும் புதிய பாரதம் துறவிகளான தயானந்தர், பங்கிம், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் மற்றும் ரமணர் போன்றவர்களை தந்தது. பழங்கால வழிகளான ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் மற்றும் கர்ம யோகம் போன்றவைகளை புதுமையாக போதித்த சிவானந்தர், ராம்தாஸ், ஓம்கார் மற்றும் சாது வஸ்வனி போன்றவர்களையும் தந்தது. இத்தகைய வரிசையில் நம்மிடையே இருப்பவரே யோகி ராம்சுரத்குமார், அவர் ஒரு துறவி, சித்தர், ஞானி, மற்றும் பெரும் பக்தர், மேலும் அர்ப்பணிப்பான கர்ம யோகி என அனைத்தையுமே ஒருங்கே கொண்டவர். ஆன்மீக மையமாக விளங்கும் தமிழகத்தின் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலத்தைப் புனிதப்படுத்தியவர். 

பரம்பொருள் நிலையானது. ஆனால் அதே நேரம் மாறும் தன்மையும் கொண்டது. இதிலிருந்தே சகலமும் தோன்றுகின்றன. நிலைப்பெற்று இருக்கின்றன. இறுதியாக அதில் கலந்தும் விடுகின்றன. இந்த விழிப்புணர்வு-சக்தியே சிவம்-சக்தி எனப்படுகிறது. சிவம் என்பதே பிரம்மம், நிலையானது. சக்தி என்பதே ப்ரக்ருதி, அதாவது பிரம்மத்தின் ஆற்றல் வடிவம். இவ்விரண்டும் சொல்லும், பொருளும் போன்று பிரிக்க இயலாதவை. 

‘அருண’ என்றால் சூரியன், தொடர் சலனத்தில் இருக்கும் ஆற்றல். ‘அசலா’ என்றால் திடமான பாறை – நிலையாக இருக்கும் ஆற்றலின் வெளிப்பாடு. அருணாச்சலா என்பது மாறுகின்ற மற்றும் நிலைப்பெற்ற நிலை, சக்தி மற்றும் சிவம், ப்ரக்ருதி மற்றும் புருஷ என்ற பிரிக்க இயலாத சேர்க்கையாகும். சிவமானது பெரும் ஜோதியாக அருணாச்சல மலைமீது கார்த்திகை மாதத்தின் கிருத்திகை நாளில் தோன்றி, பார்வதியிடம் மலையைச் சுற்றி வரச் சொல்வார். பார்வதியின் கிரி பிரதட்சணம் முடிந்தப்பின் சிவமானது பார்வதியை தனது உடலின் இடது பாதியில் கலக்குமாறு செய்து அருணாச்சலேஸ்வரர் ஆவார். இந்த வருடாந்திர கார்த்திகை தீபத்திருவிழா நமக்கு நினைவூட்டுவது இதனையே. திருவண்ணாமலையைச் சேர்ந்த பெரியவர்கள் விஷ்ணுவும், பிரம்மாவும் முறையே வராகம், அன்னம் வடிவத்தைக் கொண்டு அண்ணாமலையாரின் அடி மற்றும் முடியை காண முயன்றனர் என்றும், வராகம் பூமியை குடைந்து கீழே சென்றும், அன்னம் உயர, உயர பறந்தும் பெரும் ஜோதியின் அடி மற்றும் முடியின் எல்லைகளை காண இயலவில்லை என்பார்கள். 

அந்த ஆதியந்தமில்லா பெரும் ஜோதி பலரை பல்லாண்டு காலமாக திருவண்ணாமலையை நோக்கி ஈர்த்திருக்கிறது. அருணகிரிநாதர் தனது முக்கியமான வாழ்க்கை கட்டத்தை கிளியாக வடிவம் கொண்டு, இன்று கிளிகோபுரம் என அழைக்கப்படும் அருணாச்சலேச்வரர் கோயில் கோபுரத்தில் அமர்ந்து ‘கந்தர் அனுபூதி’ என்ற பாடல்கள் தொகுப்பை பாடியிருக்கிறார். குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி மற்றும் ஈஸ்வர சுவாமி என பல ஞானிகள் இங்கு தங்கி திருவண்ணாமலையை புனிதப்படுத்தியிருக்கின்றனர். இன்று யோகி ராம்சுரத்குமார் அவர்களின். இருக்கையால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் பைத்தியம் போல் வயதான பிச்சைக்காரனாக, கன்னியாக்குமரியை சேர்ந்த மாயம்மாவைப் போல் வாழ்ந்து வந்தார். யோகி ராம்சுரத்குமார் ரமணரைப் போலவே பேருரைகள் வழங்குவதை தவிர்த்தார். ஆனால் இவரது ஆன்மீக பாடங்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தியுடையது போன்று ஆழமானவை. எந்த நூலையும் யோகி ராம்சுரத்குமார் எழுதினாரில்லை. ஆனால் இவரின் அதீத விழிப்புணர்வு மகாயோகி ஸ்ரீ அரவிந்தரை போன்றது். காஞ்சி காமகோடி பீடத்தின் மகாபெரியவர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி போலவே யோகி ராம்சுரத்குமார் பேரானந்த நிலையிலேயே மூழ்கியிருந்தார். அனைவரும் யோகி ராம்சுரத்குமாருக்கு ஒன்றே. 

யோகி ராம்சுரத்குமார் சந்நியாசியைப் போல் உடுத்தியதில்லை. அவர் பலவிதமான துணிகளை தனது உடலில் சுற்றியிருப்ப்பார். தலையில் ‘டர்பன்’ எனும் தலைப்பாகை, சட்டை, வேட்டி மற்றும் சால்வை உடுத்தியிருப்பார். அந்த சால்வை முறையாக துவைக்கப்பட்டதில்லை. அவர் வழக்கமாக குளித்ததில்லை, நித்ய கர்மா எனும் எந்த சடங்கையும் பின் தொடர்ந்ததில்லை. ஆனால் அவர் அகமானது தூய்மையாக இருந்தது. கைகளில் பனையோலை விசிறி, மயிலிறகுகள், வைத்திருந்ததோடு தேங்காய் சிரட்டையில் தனது உணவை பிச்சையேற்று பெற்றார். அவர் பல அழுக்கு மூட்டைகளையும், குப்பைகளையும் சுமந்து இருந்தார். ஆனால் பக்தர்களின் பாவங்களை கழுவி, துவைக்கும் வண்ணானாக இருந்தார். சில நேரங்களில் அவர் ஒரு குடிகாரனைப்போலவோ, பைத்தியக்காரனைப் போலவோ சத்தமிட்டு உரக்க சிரிப்பார். சில சமயம் அவரது விழிகள் பக்தர்களின் இதயங்களை அமைதியாக ஊடுருவும். அவரது உறைய வைக்கும், ஊடுருவும் பார்வை பலமணி நேரமும் சிலரிடம் தொடரும். ராமநாமத்தை உச்சரித்து அவர் குழந்தையைப் போல் ஆடவும், பாடவும் செய்வார். சிலநேரம் அவர் தனியே ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து தனக்குள் அழுது விசும்புவார். அறியாமை, வலி, வேதனைகள் என பலவற்றில் மூழ்கியிருக்கும் மக்கள் குறித்தே அத்தகைய விசும்பலான அழுகை இருக்கும். அவர் தனது தந்தையின் விருப்பத்திற்கேற்பவே செயல்களை புரிவார், அடுத்து என்ன செய்வார் என எவராலும் கணிக்கவே இயலாது. எவ்வளவு முக்கியமான நபராக இருந்தாலும் அந்த சந்திப்பினை அவர் ஏற்பாரா? மறுப்பாரா? எவரும் அறிய இயலாது. ஆனால் பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் வாழ்வில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தந்த கணங்களுக்கேற்பவே அவர் செயல் பட்டார். பலரை ஆன்மீக பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறார். வழமையான சாதுக்களைப்போன்றோ, துறவிகளைப் போன்றோ இல்லாமல் அவர் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராக இருந்தார். ஆனால் அவர் பல பக்தர்களை இறுக்கமாக பிணைத்திருந்த கர்மாக்களை சாம்பலாக்கியவர். யார் அவர்? 

அத்தியாயம் 1.2

அந்தி

ஜெய ஜெய ஜகதாம்பா !

ஸ்ரீகலா ஸ்ரீ ஜடாயம் 

ஜெய ஜெய ஜெயஷீலே

ஜாஹ்னுகன்யே ! நமஸ்தே ! 

ஜெய ஜெய ஜலஷாயி

ஸ்ரீமதங்கரி ப்ரஸூதே ! 

ஜெய ஜெய ஜெய பவ்யே ! 

தேவி ! பூயோ நமஸ்தே ! 

“ஓ! பிரபஞ்சத்தின் தாயே ! ஓ ஜகதாம்பா ! ஓ வெற்றியின் தாயே ! ஓ ஜெயஷீலா ! ஓ ஜாஹ்னு ரிஷியின் மகளே ! எனது வணக்கங்கள் ! புனிதமான விஷ்ணுவின் பாதங்களில் பிறந்தவளே ! உனக்கு மகிமை உண்டாகுக ! தெய்வத் தாயே ! ஓ தேவி ! மங்களகரமானவளே ! ஓ பவ்யே ! மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்!.” 

இது உத்தரகாசியில் சுவாமி தபோவன் மஹராஜ் உள்ளம் உருக பாடும் அன்னை கங்கையின் பாடல். கங்கையை அவர் ‘பிரபஞ்சத்தின் தாய்’ என்கிறார் இவரது சீடரான சுவாமி சின்மயானந்தா அதனை ஏற்பதோடு இந்த தாய் பாரதப் பிள்ளைகளை கவனித்து ஊட்டமளிப்பவளாக இருக்கிறாள் என்கிறார். பண்டிதர் ஜவஹர்லால் நேருவும் தனது, ‘ தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலில்,”கங்கையின் கதை அவளது துவக்கத்திலிருந்து கடல் வரை, பழங்காலம் முதல் இன்று வரை, இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம் மற்றும் பல சாம்ராஜ்யங்களின் எழுச்சி,வீழ்ச்சிகளை, பல பெரும் புகழ்பெற்ற நகரங்களை, மனிதர்களின் சாகசங்கள், மனங்களின் தேடல் நிரம்பி இருக்கும் பலதரப்பட்ட மனிதம், வசதிகளால் நிறைவடைந்த வாழ்க்கை, வசதியை மறுத்த துறவுநிலை, மேடு பள்ளங்கள், வளர்ச்சியும் சிதைவுகளும், வாழ்வும் மரணமும் என பல கூறுகளைக் கொண்டது கங்கையின் கதை.” என்கிறார். அதனாலேயே கங்கை வணங்கத்தக்க ஒரு தெய்வத்தாயாக பலகோடி மக்களால் போற்றப்படுகின்றாள். இன்றும் பல துறவிகளும், முனிவர்களும் கங்கைகரையில் அமர்வதாலேயே அந்தர்முகமாக பயணிக்கும் நிலையை அடைகின்ற தாக்கத்தைப் பெறுகின்றனர். 

கங்கையின் கரை நமது குருவின் தொட்டிலாக மட்டுமில்லாமல், விளையாட்டுத் திடலாகவும் இருந்திருக்கிறது. யோகி ராம்சுரத்குமாரின் இளமைப் பருவத்திலும், அவரது வாழ்வின் பிற்பகுதியிலும், கங்கையின் வேகமான ஓட்டம் அவரது ஆன்மாவை முடிவிலா விழிப்புணர்வு எனும் கடலை நோக்கி நகர்த்தியிருக்கிறது. ட்ருமன் கெய்லர் வாட்லிங்டன் இதுபற்றி குறிப்பிடுகையில், “யோகி ராம்சுரத்குமாரின் குழந்தைப்பருவத்தில் கங்கையும், அதன் புனித சாதுக்களும் தந்த ஆக்கபூர்வமான தாக்கமும், அனுபவங்களுமே தனது ஆன்மீக பயணத்தை துவக்கியதோடு, தனது இலக்கு குறித்த விழிப்புணர்வை தந்தது.” என யோகி ராம்சுரத்குமார் பகிர்ந்ததை அவரது நூலில் பதிவு செய்திருக்கிறார். சிறுவனாக கங்கையின் கரைகளில் விளையாடிய காலங்களில் தனது இதயத்திலிருந்து அமைதியின் குரலை கேட்டதாகவும், அந்தக்குரல் கங்கையின் கர்ஜிக்கும் வெள்ளத்தின் சத்தங்களில் பலமுறை எதிரொலித்ததாகவும் யோகி ராம்சுரத்குமார் கூறியிருக்கிறார். 

பனாரஸ் என அழைக்கப்படும் வாரணாசி, பாரதத்தின் ஏழு புனிதமான நகரங்களில் ஒன்றாகும். இது கங்கையின் கரையில் அமைந்த வாரணாசி, வேதம், உபநிஷத்துக்கள், புத்தமதம், ஜைனமதம் என பலவற்றில் குறிப்பிடப்பட்ட பழமை வாய்ந்த நகரகமாகும். இது ஒரு சக்தி பீடமாகும். சிவனின் நிரந்தர வாசஸ்தலம். ஆதிசங்கரர், ராமானந்தர், கபீர், துளசிதாசர், மதுசூதன் சரஸ்வதி மற்றும் பண்டிட்ராஜ் ஜெகன்னாத் போன்ற துறவிகளோடு, இன்றைய பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றும் அன்னிபெசன்ட் என பலர் மகிமைபெற்ற புனித இடம் வாரணாசி. பதினெட்டாம் நூற்றாண்டில், ராணி அகல்யாபாய் ஹோல்கர் என்பவர் புனிதமான விஸ்வநாதர் ஆலயத்தை மறுசீரமைத்து கட்டினார், இந்த சீரமைப்பு மொகலாயர்களின் ஆலய தாக்குதலுக்குப்பின் நடந்த ஒன்றாகும். காசிக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய கிராம்மான ‘நர்தரா’ என்ற ஊரில் 1918 டிசம்பர் – 1 ல் யோகி ராம்சுரத்குமார் பிறந்தார். அவரது இளமைக்காலம் குறித்து மிக குறைந்த தகவல்களே நமக்கு கிடைத்துள்ளது. அவரது பெற்றோர்கள் மூலம் ராமாயணம், மகாபாரதம் போன்றவைகளின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. சிறிய வயதில் பெற்றோர்கள் மூலம் கேட்ட இந்த இதிகாச கதைகளே வளர்ந்தப்பின் அவர் கேட்டறிந்த பல விஷயங்களை விளங்க வைத்திருக்கின்றன. அவரது புலமை இந்த இரு புனிதமான பழமையான காவியங்களில் இருப்பதை இன்றும் நாம் உணர இயலும். 

யோகி ராம்சுரத்குமார் சிறுவனாக இருக்கையில் அவர் விரும்பி அலைந்து திரியுமிடம் கங்கை கரையாகவே இருந்தது. இரவிலும், பகலிலும் மணலில் பல மணிநேரங்கள் நடப்பதும், மேலே உள்ள நட்சத்திரங்களை கவனிப்பது, கால்களை நனைத்து புரண்டோடும் கங்கையை கவனித்தல் என தனது நேரத்தை செலவழித்த அவர் சிலசமயம் கங்கையின் கரையிலேயே படுத்து உறங்கவும் செய்தார். பெற்றோர்களின் அணைப்பை புறக்கணித்த இத்தகைய செயல்களை கவனித்த அவர்கள், இவரின் அலைந்து திரிகின்ற மன உணர்வை புரிந்து கொண்டனர். 

பொதுவாக அந்த வயது சிறுவர்களின் விருப்பமான விளையாட்டு மற்றும் சாதாரண வாழ்க்கைக்கு அவர் வரவிரும்பம் இல்லாதவராகவே இருந்தார். அவரது பெரும்பான்மையான நேரம் துறவிகளுடன் கழிப்பதிலேயே இருந்தது. அவர்களோடு இருக்கும்போது மிகுந்த புத்துணர்வை பெறுவதை உணர்ந்தார். அவர்களின் குடில்களில் பல இரவு தங்கினார். ஒரு சிறிய எண்ணெய் விளக்கின் முன்னால் அமர்ந்து பல கதைகளையும், ஆச்சர்யமூட்டும் பலரின் ஆன்மீக அனுபவங்களையும் கேட்டார். அவரது மனம் அவர்களின் உரையாடல்களில் மிகுந்த லயிப்பை பெற்றிருந்தார். எனவே பள்ளியை விட்டு வந்த உடனேயே சாதுக்களை நோக்கி ஓடத்துவங்கினார். 

சாதுக்களை தனது வீட்டிற்கு பிக்ஷை அளிக்க அழைப்பது அவரது பழக்கமாகவே மாறியது. அவரது குடும்பம் அத்தகைய தொடர் தர்மங்களை செய்ய இயலாத வசதி அற்றவர்களாக இருந்தபோதும், சாதுக்களுக்கு ஏதேனும் வழங்க வேண்டும் என்ற தவிப்பும், கடவுளைத் தேடுபவர்களின் மீதான கருணை மிகுந்த சேவை உள்ளத்தையும் அவர் கொண்டிருந்தார். சில சமயம் தனது உணவை சாதுக்களுக்கு தரவும் அவர் தயங்கியதில்லை. இன்றும் அவரிடம் வந்து செல்பவர்களுக்கு சிறிய அளவிலான உணவை பிரசாதமாக தந்தே அனுப்புகிறார். 

எல்லா துறவிகளின் வாழ்விலும் ஏதேனும் ஒரு திருப்புமுனையான சம்பவம் நிகழ்ந்தே மாற்றம் ஏற்படும். நமது நாயகனின் வாழ்விலும் அத்தகைய சம்பவம் உண்டு. அத்தகைய சம்பவம் நமது நாயகனின் பன்னிரண்டாவது வயதில் நிகழ்ந்த ஒன்றாகும். ஒரு மாலையில் அவரது தாயார் அவரை கிணற்றில் இருந்து தண்ணீரை கொண்டு வர அனுப்பினார். அது மெல்ல இருட்டி நிலவு தனது பால் வெளிச்சத்தை மெல்ல படரவிடத்துவங்கிய சந்தியாக்காலம். கிணற்றடிக்குச் சென்ற சிறுவன் கயிற்றைக் கட்டி வாளியில் தண்ணீர் இறைக்க முயன்ற போது, ஒரு சிறுபறவை கிணற்றின் மறுபகுதியில் வந்தமர்ந்தது. அதன் மெல்லிய கிறீச்சிடல் அந்த இடத்தின் அமைதியை கெடுப்பதாக உணர்ந்த சிறுவன் கயிற்றின் மறுமுனையைக் கொண்டு அந்தப் பறவையை விரட்டுவதற்கு வீசினான். அது ஒரு குழந்தையின் குறும்புத்தனமாக இருந்தபோதிலும், அந்த விபத்து நடந்தே விட்டது ஆம் கயிற்றால் அடிப்பட்ட அந்த சிறுபறவை அசைவற்று கிடந்தது. வாளியை கிணற்றில் விட்டு மரணித்து கொண்டிருந்த அந்த சிறுபறவையை காப்பாற்ற அந்த சிறுவன், அதனை தனது உள்ளங்கையில் ஏந்திச் சென்று அதன் வாயில் கங்கை நீரை புகட்ட எத்தனித்தான். ஆனால் அவனது முயற்சிகள் அனைத்தும் வீணாகி, கங்கையின் கரையில் அந்த சிறுபறவையை புதைக்கவே வைத்தது. கன்னங்களில் கண்ணீர் வழிய, உணர்ச்சி பெருக்கால் அழுத அச்சிறுவனை கவலை சூழ்ந்தது. இரவு முழுவதும் உறக்கமின்றி தவித்தான். தான் செய்த தவறுக்கு தனக்கு மன்னிப்பே கிடையாது என மறுகினான். 

இந்த நிகழ்வே அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்ட ஒன்று. அவர் அனைத்து வாழ்விலும் இருந்த ஒற்றுமையை உணர்ந்த தருணம். அனைத்து உயிர்களிலும் இருக்கும் அந்த ஒருமைப்பண்பு என்ன என்பது குறித்த விசாரம் அவருள் முளைவிடத்துவங்கியது. அவர் உள்முகமாக திரும்பினார். தெய்வத்தாய் கங்கையின் அணைப்பு, பல சாதுக்களின் தொடர்பு, அவருக்குள் ஒரு சத்தியத் தேடலுடன் கூடிய ஒரு துறவு நிலை அவருக்குள் ததும்பத்துவங்கியது. 

பதினாறாம் வயதில் அவர் தீவிரமான சத்தியத்தேடலோடு வீட்டைவிட்டு கிளம்பினார். ஒரு நல்மனிதர் அவருக்கு உணவையும், பனாரஸ்க்கு அருகே உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கான டிக்கெட்டையும் தந்து அனுப்பினார். அச்சிறுவன் ஜொலிக்கும் விஸ்வநாதர் கோயிலை நோக்கி நடக்கத்துவங்கினான். அவர் கோயில் கருவறையை நெருங்கிய போது தனது இறைத்தந்தையின் இருப்பை நோக்கி தான் பயணிப்பதை உணர்ந்தார். இறை பரவசத்தில் மூழ்கினார். ஒரு வாரக்காலம் அந்த கோயில் வளாகத்திற்கு அருகிலேயே தனது நேரத்தை செலவழித்தார். தியாகமும், வைராக்கியமும் இரண்டு சிறகுகளாக அவரது ஆன்மாவிற்குள் வளரத்தொடங்கியது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் இன்னொரு ஆன்மீக மையத்தையும் அடையாளம் கண்டார். அது பனாரஸிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள சாரநாத் ஆகும். சகோதரி நிவேதிதா தனது, ‘புட்பால்ஸ் ஆஃப் இந்தியன் ஹிஸ்டரி’ என்ற நூலில், “கி.மு.583 ல் கூறப்பட்ட உண்மை — ‘ஓ துறவிகளே, உங்கள் காதுகளை திறவுங்கள். மரணத்திலிருந்து விடுதலை பெறுதல் அறியப்பட்டுவிட்டது’ — இன்றும் புனிதமான சாரநாத்தில் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது. அது வரலாற்றில் என்றும் மறையாT. ஆமாம் இந்தக் குரலின் எதிரொலிப்பு யோகி ராம்சுரத்குமார் இதயத்திலும் கேட்க துவங்கியது. அவருக்குள் கிடைத்த செய்தியைக் கொண்டு அவர் ‘மரணத்திலிருந்து விடுதலை பெறுதல்’ என்ற பாதையில் பயணிக்க முடிவு செய்தார். 

ராம்சுரத்குமார் தனது இரண்டாம்நிலை கல்வியை 1937 ல் முடித்தார். மதுரை சிவானந்த தபோவனத்தின் சுவாமி விமலானந்தாவின் கூற்றுபடி யோகி தனது உயர்கல்வியை லக்னோவில் 30 வருடங்களுக்கு முன்பு தொடர்ந்திருக்கிறார், ஒருமுறை சுவாமி விமலானந்தா யோகியை திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சந்தித்தப்போது, யோகி தானே முன்வந்து தனது லக்னோவில் பயின்ற உயர்கல்வியைப் பற்றி விமலானந்தாவிடம் பேசியிருக்கிறார். அவரது இலக்கிய, வரலாறு, மற்றும் தத்துவங்கள் குறித்த யோகியின் ஆழமான பேச்சும், மேலை மற்றும் கீழை நாடுகளின் தத்துவப்படைப்புக்கள் குறித்த அவரது ஆளுமை, ஆங்கில புலமை, அவரது வாசிப்பார்வம், குறிப்பாக தினமும் செய்திதாள்களை வாசித்தல் போன்றவைகளை யோகி தன்னிடம் பகிர்ந்து கொண்டது தனக்கு அவர் நிச்சயமாக லக்னோ பல்கலைக்கழகத்தில் சிறந்த உயர்கல்வியை பெற்றிருக்கிறார் என்பதை உணர்த்தியதாக கூறுகிறார். 

இளமையான, அறிவார்ந்த நரேந்திரன் சுவாமி விவேகானந்தராக மாறியது போல், யோகி ராம்சுரத்குமார் தனது கூர்மையான அறிவு மற்றும் தேடுதல்களாலும், மேலும் அவரது ஆன்மீகத்தவிப்பு அவரது இதயத்தில் பள்ளிபருவத்திலேயே முளைவிடத்துவங்கி, அது வளர்ந்து தகிக்கும் தணலாய் அவரைச்சுட்டு ஓய்வற்றநிலையை தந்தது. அவரது ஆன்மீகத்தாகம் ஒரு ஆன்மீக வழிக்காட்Fயை தேடி, தீவிரமாகி, கங்கைக்கரை சாதுக்களுடனான தொடர்பை பலப்படுத்தியது. அவர் தனது இறுதி இலக்கை அடைவதற்கான பாதையில் தன்னை பயணிக்க வைக்கும் ஒரு குருவை தேடிவந்தார். 

கங்கைக்கரையில் இருந்த ஒரு துறவி ஒருவர் ராம்சுரத்குமாரின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அவர் ராம்சுரத்குமாரிடம் பல கேள்விகளைக் கேட்டு, அதன் பதில்கள் மூலம் அவரது ஓய்வற்றநிலையின் மூலத்தை அறிய முற்பட்டிருக்கிறார். இருப்பினும் அந்த துறவியால் ராம்சுரத்குமாரின் தேடலை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. 

1947-ல் ஒருநாள் இரவில் யோகி ராம்சுரத்குமார் அந்த துறவியோடு இருக்கும்போது, ராம்சுரத்குமாரிடம் அவரது தேடலுக்கான விடைகளை அவரே தனக்குள்ளேயே தேடவேண்டும் என அறிவுறுத்தினார். அந்தக் காலக்கட்டங்கள் வேதனையும், வலிகளும் நிரம்பியதாக இருந்திருக்கிறது. இறுதியாக தனக்கென ஒரு குருவை தேடவேண்டும் என ராம்சுரத்குமார் முடிவு செய்திருக்கிறார். தனது நண்பராக இருக்கும் துறவியிடம், சுதந்திரப்போராட்ட வீர்ரும் துறவியுமான மஹாயோகி ஸ்ரீ அரவிந்தரை சந்திக்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார். அச்சமயம் ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரியில் வசித்து வந்தார். அதனை அங்கீகரித்த அந்த துறவி ஸ்ரீ அரவிந்தரை மட்டும் சந்தித்துவிட்டு வராமல் அவரது ஆசிரமத்திற்கு அருகே இருக்கும் இன்னொருவரையும் சந்தித்துவிட்டு வருமாறு பணிந்தார். அந்த துறவி யார் என்பதையும், அவர் எங்கிருக்கிறார் என்பதையும் தெளிவாக ராம்சுரத்குமாரின் நண்பரான துறவி தெரிவிக்காத போதும், ராம்சுரத்குமார் பின்னாளில் தனது துறவி நண்பர் குறிப்பிட்டது திருவண்ணாமலையில் இருந்த மகரிஷி ரமணர் என்பதை அறிந்து கொண்டார். பாதை தெரிந்துகொண்ட உறுதியான சாதகன் தனது பயணத்தை துவங்கினான்.

அத்தியாயம் 1.3

 விடியல்

“காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே

நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்

மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா

வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி

வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 

செந்தமிழ்த் தென்புதுவை….” 

இது மஹாகவி சி.சுப்ரமண்ய பாரதி பாடிய ‘குயில் பாட்டு’ இது அன்று வேதபுரி என்றழைக்கப்பட்ட இன்றைய பாண்டிச்சேரியின் சிறப்பை கூறுகிறது. 1910 ஏப்ரல் 4 ம் தேதி ஸ்ரீ அரவிந்தர் வந்தப்பின் மீண்டும் வேதபாடங்கள் அங்கே உயிர்ப்பெற்றன. 

ஸ்ரீ அரவிந்தர் கல்கத்தாவில் 1872 ல் ஆகஸ்ட் – 15 ல் பிறந்தவர். அவரது தந்தை டாக்டர்.கிருஷ்ண தான் கோஷ் தன்னுடைய மகன் நவீன கலாச்சாரத்தை அறிய வேண்டுமென நினைத்து ஏழு வயதான ஸ்ரீ அரவிந்தரை இங்கிலாந்து அனுப்பியிருக்கிறார். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்தது. கேம்ப்ரிட்ஜ்ல் நன்றாக படித்து ICS க்கு தகுதியானவராக இருந்தபோதும், அவர் தானே வலிந்து தகுதி தேர்வுகளில் தோல்வியைத் தழுவி, இந்தியாவிற்கு திரும்பினார். பரோடாவின் மாநில கல்லூரியில் சிலகாலம் பணிபுரிந்த அரவிந்தர். சுவாமி விவேகானந்தரின் சீடையான சகோதரி. நிவேதிதாவினால் ஈர்க்கப்பட்டு தேசவிடுதலைக்காக போராடும் புரட்சி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அரவிந்தரின் கூர்மையான எழுத்துக்கள், அவரை ஆசிரியராகக் கொண்ட ‘பந்தே மாதரம்’ என்ற ஆங்கில தினசரியில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானோர்களின் இதயங்களில் கிளர்ச்சியை விதைத்து அவர்களை பாரத தேசத்தின் விடுதலைக்காக பிரிட்டிஷாரை எதிர்க்க தூண்டின. அதனால் அரவிந்தர் அலிப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தருக்கு கிருஷ்ணவாசுதேவரின் தரிசனம் கிடைத்து, ஒரு புதிய விடியலுக்கான வெளிச்சம் அவருக்குள் பாய்ந்தது. யோக சக்திகளின் மூலம் இந்திய விடுதலையை பெற முடியும் என்றும், அது அரசியல் போராடங்களைவிட எளிய வழி என்றும் முடிவு செய்த அரவிந்தர், சிறைச்சாலையில் இருந்து விடுதலைப் பெற்றப்பின் சிறிதுகாலம் சந்தர்நகரில் இருந்துவிட்டு பின்னர் பாண்டிச்சேரிக்கு மாறினார். அங்கே கடும் தவத்தையும், சாதனாக்களையும் மேற்கொண்டார். அவரைச்சுற்றி ஒரு ஆன்மீக சமூகம் வளரலாயிற்று அது ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் ஆகும். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலங்களில் இந்த ஆசிரமம் ஆன்மீகத்தேடல் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, பாரதி, V.V.S அய்யர் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் சொர்க்கமாக திகழ்ந்தது. ஸ்ரீ அரவிந்தரோடு அமர்ந்து வேதங்கள், ஆன்மீக இலக்கியங்கள் குறித்த பல விவாதங்களோடு, தேசத்தின் அரசியல் எதிர்காலம் குறித்தும் பேசப்பட்டது. ஸ்ரீ அரவிந்தரின் 1947 ஆம் ஆண்டு பிறந்தநாளில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. தேச விடுதலையைக் கடந்து ஒவ்வொரு தனி மனிதனும் ஆன்ம விடுதலை அடைய வேண்டும் என்பதே அரவிந்தரின் லட்சியமாக இருந்தது. இறையை தனது உடலில் கண்ட ஸ்ரீ அரவிந்தர் 1950 டிசம்பர் 5 ல் மஹாசமாதியடைந்தார். 

ராம்சுரத்குமார், பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு நவம்பர் 1947 ல் ஸ்ரீ அரவிந்தர் அவரது ஆன்மீகத்தின் உச்சநிலை சாதனாக்களில் இருக்கும்போது வந்தடைந்திருக்கிறார். இளம் சாதகரான ராம்சுரத்குமார் அரவிந்தர் தனது குருவாக இருந்து தன்னை வழிநடத்துவார் என நினைத்து, அவரது வாழ்க்கையையும், அவரது எழுத்துக்களையும் படித்து, மஹா யோகியான அரவிந்தரின் உயர்ந்த சத்தியத்தின் விழிப்புணர்வை பற்றி அறிந்து கொண்டார். ராம்சுரத்குமார் தனது சாதனாக்களை தீவிரமாக்கி தனது விழிப்புணர்வை பெருக்கி தனது உண்மையான அடையாளத்தை அறியமுடியும் என்பதை உணர்ந்தார். 

ஆயினும் ராம்சுரத்குமாருக்கு உடனிருந்து வழிகாட்டி அழைத்துச் செல்லும் ஒரு குரு தேவைப்பட்டார். ஆனால் அரவிந்தர் அவரது இறுதிக்காலத்தின் சில வருடங்களில் பலரிடம் இருந்து விலகியே இருந்தார். ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பிரம்மச்சாரி ராம்சுரத்குமாரை அணுகி அவரிடம் அருகே இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்ரீ ரமண மகரிஷியை பார்க்குமாறு அறிவுறுத்தினார். ராம்சுரத்குமாரின் நண்பராக இருந்த கங்கைக்கரை துறவி கூறி அனுப்பிய குறிப்பு மனதில் நிழலாட ரமணாச்ரமம் செல்ல ராம்சுரத்குமார் முடிவு செய்தார். 

1879 ஆம் ஆண்டில் டிசம்பர் 29 அன்று சுந்தரம் ஐயருக்கும், அழகம்மாளுக்கும் திருச்சுழி என்ற ஊரில் ஆருத்திரா தரிசன நாளில் பிறந்த வேங்கடராமனே பின்னாளில் ரமண மகரிஷியாக அறியப்படுகிறார். இவரது இளமைக்காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதுமில்லை. இவர் பள்ளிப்படிப்பில் பெரும் ஆர்வம் இல்லாதவராக இருந்த போதிலும், தான் கேட்கும், படிக்கும் எதனையும் நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்திய நினைவாற்றல் கொண்டவராக இருந்தார். 

அவரது பதினாறாம் வயதில் ஒரு அசாதாரண அனுபவம் இந்த சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் தந்தையை இழந்தப்பின் தனது மாமாவின் இல்லத்தில் வசித்து வந்தார். பன்னிரண்டு வயது முதலே நல்ல உடல்நலம் கொண்டிருந்த போதிலும் அவர் அதிகமான மரணபயத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள் அவரது மாமா வீட்டின் மாடியில் அவர் இருந்தபோது அவருக்குள் மரணபயம் ஏற்பட்டு அந்த பயத்தினால் அவர் மனமானது உள்முகமாக திரும்பியது. அவர் தனக்குள்ளேயே சில கேள்விகளை எழுப்பிக்கொண்டார். “மரணிப்பது என்பது என்ன?“ என்று அவரே ஒருமுறை நிகழ்த்தியும் பார்த்திருக்கிறார். அவரது அனுபவத்தை பின்வருமாறு வர்ணிக்கிறார். “நான் எனது கை, கால்களை நன்றாக நீட்டி படுத்துக் கொண்டேன். மெல்ல அவை மரத்துப்போகும்படி அசையாமல் கிடந்தேன். எனது விசாரத்திற்கு உண்மைத்தன்மை வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்…நன்று, அடுத்து, என்னிடம் நானே, இந்த உடல் இறந்துவிட்டது. இது மயானத்திற்கு கொண்டு செல்லப்படும். பிறகு அங்கே எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். இந்த உடல் இறந்துவிட்டதால் நான் இறந்துவிட்டேனா? நான் என்பது எனது இந்த உடலா? அது அமைதியாக உள்ளே இருப்பதல்லவா? என்னால் நான் என்ற ஆளுமையை, அதன் குரலை என்னால் கேட்க முடிகிறது. எனவே நான் என்பது இந்த உடலில் இருக்கும் ஆன்மா. உடல் மரித்தாலும் ஆன்மா இருக்கிறது அதனை மரணத்தால் தொட இயலாது. அதாவது நான் என்பது அழிவில்லாத ஆன்மா. இவையனைத்தும் ஏதோ ஒரு மந்தமான எண்ணமல்ல. இவையனைத்தும் மின்னல் வெட்டாக தோன்றிய நிஜங்கள். இவையனைத்தையும் நேரடியாகவே நான் உணர்ந்தேன் அப்போது எண்ணங்கள் என்பதே என்னிடமில்லை.” சத்தியத்தின் பார்வையும், ஆன்மீகதாகமும் இளம் வேங்கடராமன் இதயத்தில் எழுந்து, அவரது வீட்டைத் துறந்து அருணாச்சலத்தை நோக்கி வர வைத்தது. இந்த அருணாச்சலம் குறித்து முன்பே அவனது வீட்டின் பெரியோர்கள் மூலம் அறிந்து வைத்திருந்தான். ஆழ்ந்த தியானம், சாதனாக்கள் என திரும்பிய அச்சிறுவன் சமாதிநிலையில் மூழ்கினார். பின்னர் அவனது தாயார் தனது மகன் திருவண்ணாமலையில் இருப்பதை அறிந்து, திருவண்ணாமலைக்கு வந்T, அவன் தாயார் அழைத்தபோதும் அதனை மறுத்தார் ரமணர். அனைத்துப் பற்றுக்களில் இருந்தும் தான் விலகிவிட்டதாக கூறி, திருவண்ணாமலையில் உள்ள விருபாக்‌ஷா குகையில் தவம் செய்ய சென்றப்பின், அவரது ஆன்ம ஒளியானது பல சாதகர்களை அவர்பால் ஈர்த்தது. அவரது தாயும், சகோதரரும் அவரைப்போல் துறவு பூண்டனர். ரமணரால் ஈர்க்கப்பட்ட சீடரான கணபதி முனி இவரது அற்புதங்களை உணர்ந்து அவரை, ‘மகரிஷி ரமணர்’ என அழைத்தார். பின்னர் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இவரது காலடியைத் தேடி சரணடைந்தனர் அவற்றில் ஒருவரே, “இந்தியப்புதையலில் ஒரு தேடல்” என்ற நூலை எழுதிய பால் பிரண்டன் ஆவார். மகரிஷியின் சுயவிசாரம் என்பதைக் குறிப்பிடும் போது, ”விசாரம் என்பது ஒரு வழிமுறை மட்டுமல்ல அதுவே இலக்கு”, ‘நான்’ என்பதே சத்தியத்தின் இறுதி இலக்கு. அதனைப்பற்ற உதவும் முயற்சியே விசாரம். அது இயல்பாக, இயற்கையாக நடக்க அதுவே அறிதல் எனப்படும்.” பகவான் 1950 ஏப்ரல் 14 ஆம் நாள் மஹா சமாதி அடைந்தார். 

ராம்சுரத்குமார், இறைஞானம், உயர்ந்த உண்மை போன்றவைகள் குறித்த அறிமுகத்தை ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களின் மூலம் அறிந்து கொண்டபோதிலும், அதனை தனது ஆன்மீக பயணத்திற்கு செயல்முறையாக்க ஒரு குரு வேண்டும் என நினைத்தார். இருப்பினும் குருநாதனின் வழிகாட்டல் பெறுவதற்கான நேரம் இன்னும் அவருக்கு வரவில்லை. மூன்று நாட்கள் மகரிஷியை தரிசித்து நகர்ந்த நிலையில், ஒரு நபர் தந்த ஒரு துண்டு விளம்பர செய்தியில், வடக்கு கேரளாவின் காஞ்சன்காடு என்ற கிராமத்தில் இருக்கும் இன்னொரு துறவியான ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த பப்பா ராம்தாஸை அறிமுகப்படுத்தியது. 

சுவாமி ராம்தாஸ் அவரது சன்னியாசத்திற்கு முந்தைய வாழ்வில் விட்டல்ராவ் என்றழைக்கப்பட்டார். இவர் பக்தி மிகுந்த பாலகிருஷ்ணராவ், லலிதாபாய் தம்பதியனர்க்கு கஞ்சன்காட்டில் புனிதமான ஹனுமன் ஜெயந்தி நாளில் பிறந்தார். அந்நாள் 1884 ஏப்ரல் 10 ஆம் தேதி ஆகும். அவர் பள்ளியில் படித்தப்போதும் விளையாட்டுக்களில் அதிகம் ஆர்வம் காட்டினார். அவர் மெட்ரிகுலேஷன் படிப்பிலும் தோல்வியடைந்தார். பின்னர் ஓவியம் மற்றும் சிற்ப படிப்பை தேர்ந்தெடுத்து பின்னர் அதனையும் பாதியில் கைவிட்டு, ஜவுளி தொழில்நுட்பம் பயின்ற அவர் பின்னர் வியாபாரத்தில் இறங்கி அதிலும் அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் தான் வேறெதோ செயலுக்காக விதிக்கப்பட்டிருப்பதையும் தனது தோல்விகள் அனைத்தும் வாழ்க்கையின் படிக்கட்டுகள் என்பதையும் மெல்ல உணரத்துவங்கினார். அவரது புற வாழ்க்கை சரிவுகள் அவரை ஆன்மீக தேடலுக்கு வலு சேர்த்தன. தினமும் மாலை வேளையில் தனது சகோதரர் வீட்டில் அவருடன் இறை பஜனை செய்வதில் தன்னை இணைத்துக் கொண்டார். மெல்ல மகிமை பொருந்திய ராம நாமத்தை சொல்லத் தொடங்கினார் அது அவரை உள்முகமாக்கியது. இந்த நிலையில் அவரது தந்தையின் மூலமாக ‘ ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரம் அவருக்கு உபதேசிக்கப்பட்டது, இது அவரது வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டி போட்டது. சில காலங்களிலேயே அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து விடைப்பெற்றார். ஸ்ரீரங்கம் வந்தடைந்த அவர் காவேரியின் கரையில் காவி உடுத்தி ‘ராம்தாஸ்’ என்ற பெயரைப் பெற்றார். சிலகாலம் கழித்து திருவண்ணாமலை வந்து ரமணமகரிஷியை சந்தித்த அவர் மீது தனது கருணைமழையை ரமணர் பொழிந்தார். அருணாச்சல மலையில் உள்ள ஒரு குகையில் தங்கி இருபது நாட்கள் ராமநாமம் சொன்ன ராம்தாஸ். இந்தியாவின் நீள, அகலங்களில் பெரும் புனிதப்பயணங்களை மேற்கொண்டு இறுதியாக காஞ்சன்காட்டில் ஆனந்தாஸ்ரமத்தை நிறுவினார். அதனை தற்சமயம் தலைமையேற்று நிர்வகித்து வருபவர் மாதாஜி கிருஷ்ணாபாய் ஆவார். (இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில் மாதாஜி கிருஷ்ணாபாய் தலைமையேற்றார். அவரைப் பின்தொடர்ந்து சுவாமி சச்சிதானந்தர், தலைமை ஏற்றார். அவருக்குப்பின் சுவாமி முக்தானந்தர் தற்சமயம் இந்த ஆனந்தாஸ்ரமத்தை நிர்வகித்து வருகிறார்.) மாதாஜி கிருஷ்ணாபாய் சுவாமி ராம்தாஸ் உடன் இணைந்து நிறுவிய இந்த ஆசிரமத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து வருகின்றனர். இது சக்தி வாய்ந்த ஆன்மீக மையமாக விளங்குகிறது. 1949 முதல் 1957 வரை இந்தியாவைக் கடந்தும் பல பயணங்களை மேற்கொண்டு, ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்’ என்ற மந்திரத்தை அனைத்து மூலை முடுக்களுக்கும் சுவாமி ராம்தாஸ் கொண்டு சேர்த்தார். 1954 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட அவர் 1963 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் மஹாசமாதி அடைந்தார். 

மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர், மகரிஷி ரமணர் போன்றோர் ராம்சுரத்குமாரை ஈர்த்ததைப்போல் சுவாமி ராம்தாஸ் அவர்களின் முதல் சந்திப்பில் ராம் சுரத் குமாருக்கு எந்த ஈர்ப்பையும் தரவில்லை. இது குறித்து யோகி ராம்சுரத்குமார் குறிப்பிடும் போது, “இந்தப்பிச்சைக்காரனை ஸ்ரீஅரவிந்தர், ரமணமகரிஷி ஈர்த்ததைப்போல் சுவாமி ராம்தாஸ் ஈர்க்கவில்லை. இந்தப்பிச்சைக்காரனால் சுவாமி ராம்தாஸை அச்சமயத்தில் புரிந்து கொள்ள இயலவில்லை. மற்ற இவரும் ஆன்மிகத்தின் உயர்நிலையில் இருப்பதை உணர்ந்த இவனால், ராம்தாஸ் முற்றிலும் வேறுபட்டவராக தோன்றினார். அவர் சொகுசான வாழ்க்கை முறையில் வாழ்ந்தார், அவருக்கு மக்கள் அரசருக்கு சேவை செய்வதைப் போன்று சேவை செய்துவந்தனர்.” எனவே சுவாமி ராம்தாஸிடம் எந்த ஈர்ப்பும் இன்றி ராம்சுரத்குமார் தனது இல்லத்திற்கே திரும்பினார். 

1948 ஆம் ஆண்டு ராம்சுரத்குமார் மீண்டும் தென்னிந்தியாவிற்கு வந்தார்.அப்போதும் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு பயணித்த அவர் அங்கே தங்காமல், திருவண்ணாமலைக்கு சென்று ரமணரின் முன்பு இரண்டு மாதங்கள் தங்கினார். இந்தமுறை ரமணரின் கருணை ராம்சுரத்குமாரிடம் வேலை செய்ய துவங்கியது. ஒருநாள் ரமணரின் ஊடுருவும் பார்வையை பெற்ற ராம்சுரத்குமார் பெரிதும் பரவசமடைந்தார். ரமணரின் ஊடுருவும் பார்வையைக் குறித்து பால் பிரண்டன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “அவரது கண்கள் ஞானத்தால் ஒளிரும் தன்மை கொண்டவை. ஆன்மாவை ஊடுருவுபவை. அவர் எனது இதயம், எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள் அனைத்தையும் தனது பார்வையிலேயே அறிந்து கொள்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது, அத்தகைய பார்வையின் முன் நான் கையறுநிலையிலேயே இருந்தேன். நானே மறந்துவிட்ட எனது கடந்த காலங்களையும் அவரால் உள்வாங்க முடிகிறது என்பதையும் உணர்ந்தேன்.அவர் அனைத்தையும் அறிவார் என நிச்சயமாக என்னால் கூற முடியும். அவரிடமிருந்து தப்பிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. ஆயினும் அதனை செய்ய நான் முயற்சிக்கவில்லை. எனது எதிர்காலம் குறித்த ஆர்வமே அந்த கூர்மையான விழிகளை சகித்துக் கொள்ள செய்தது” (‘இந்தியப்புதையலில் ஒரு தேடல்’ என்ற நூலிலிருந்து). 

ராம்சுரத்குமாரின் அனுபவம் முற்றிலும் ஆழமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர் தியானத்தில் இருந்து கண்களைத் திறந்து பார்த்தபோது மகரிஷி தன்னை ஊடுருவி பார்ப்பதை உணர்ந்திருக்கிறார். தனது உடல் உணர்வுகளை இழந்து, காலம், தூரம் போன்றவற்றை இழந்து ஒன்றுமில்லாத நிலையில் இணைவதை உணர்ந்தார். தனது இருப்பின் முந்தைய வாழ்க்கைகள், இனி வர இருப்பவைகளையும் உணர்ந்ததோடு, தனது உள்தன்மையில் தீவிரமான மாறுதல்கள் நடப்பதை அறிந்தார். அந்தக்கணத்திலிருந்து ராம்சுரத்குமாரின் வாழ்க்கை கடும் தவம் மற்றும் சுயவிசாரத்தை மேற்கொள்ள நங்கூரமிடப்பட்டது. 

இதே வருடத்தில், ராம்சுரத்குமார் மீண்டும் ஒருமுறை ராம்தாஸை நோக்கி பயணப்பட்டார். இந்தமுறையும் ஏதோஒன்று அவரை ராம்தாஸிடம் நல்லுறவை மேற்கொள்ளாமல் தடுத்தது. ராம்சுரத்குமார் தனது குருவான பப்பா ராம்தாஸே அவரை அறிந்து கொள்ள முடியாத வகையில் தடுத்துவிட்டதாக குறிப்பிடுகிறார். ஏனெனில் சாதகனுக்கு அடுத்தக்கட்ட பயணத்திற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்பதே குருவின் பார்வையாக இருந்திருக்கும். ராம்சுரத்குமார் மீண்டும் ராம்தாஸிடம் விடைப்பெற்று வட இந்தியாவிற்கு பயணமானார். பல கிராமங்கள், நகரங்கள் என பயணித்த அவர் இறுதியாக பல புதிய அனுபவங்களோடு ஹிமாலயத்தை அடைந்தார். பல சாதுக்கள், மகான்கள், துறவிகளின் தொடர்பு அவரது ஆன்மீக உணர்வை உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது. சுவாமி விமலானந்தாவின் கூற்றின்படி ராம்சுரத்குமார் ரிஷிகேஷிற்கு பயணம் செய்து சிலகாலம் இமாலயத்தின் துறவியாக திகழ்ந்த பகவான் சிவானந்தரோடும் கழித்திருக்கிறார்.

1950 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஹிமாலயத்தில் இருக்கும் போது, ராம் சுரத்குமார் ரமணமகரிஷி மகாசமாதி அடைந்த செய்தியை அறிகிறார். இந்த தனிப்பட்ட பேரிழப்பில் இருந்து மீள்வதற்கு முன்பே அதே வருட இறுதியில் ஸ்ரீ அரவிந்தர் மகா சமாதி அடைந்த தகவலையும் அறிந்த ராம் சுரத்குமாரின் இதயத்தில் ஓய்வற்றநிலை பெரும் அலையாக அடிக்கிறது. இரண்டு பொன்னான வாய்ப்புக்களையும் இழந்ததாக ராம் சுரத்குமார் வருந்துவதோடு, இவ்விரண்டு குருமார்களிடம் இருந்த நெருக்கமான உணர்வு தன்னுடைய ஆன்ம விழிப்புணர்வை மேம்படுத்தும் என்ற தனது எண்ணம் சிதைந்து போனதை நினைத்து வருந்தினார். ராம் சுரத்குமார் தீர்மானமாக முடிவெடுத்து தனக்கு இருக்கும் இன்னொரு வாய்ப்பான சுவாமி ராம்தாஸ் அவர்களை தவற விடக்கூடாது என நினைத்து தனது மூன்றாவது குருவை நோக்கிச் செல்வதற்கான மூன்றாவது பயணத்தை திட்டமிட்டார். இது குறித்து ராம் சுரத்குமார், “ராம்தாஸை நோக்கிய இப்பயணம் எனக்கான மூன்றாவது வாய்ப்பு. இரண்டு அற்புதமான குருமார்கள் மஹாசமாதி அடைந்து விட்டார்கள். எனவே ’ராம்தாஸ் ஒரு அற்புத துறவியாகவே காட்சியளிக்கிறார். அவரிடம் செல்வோம்.’ என முடிவு செய்து 1952 ஆம் ஆண்டு இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையோ, பாண்டிச்சேரியோ செல்லாமல் நேரடியாக ஆனந்தாஸ்ரமம் சென்றான். ஆனால் இந்தமுறை சுவாமி ராம்தாஸ் முற்றிலும் வேறானவராக எனக்கு தோன்றினார்.என்னைப்பார்த்த முதல் பார்வையிலேயே ராம்தாஸ் எனது வாழ்க்கை, எனது இலக்கு குறித்தும் பல தகவல்களை இந்தப் பிச்சைக்காரனிடம் பரிமாறினார். அதனை வேறெவரும் அறியமாட்டார்கள் ஆனால் இந்த பிச்சைக்காரன் அறிவான்” என்று கூறுகிறார். 

இந்தமுறை குருவே சீடனின் வருகைக்காக காத்திருந்தார், எப்படி ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேந்திரனுக்காக காத்திருந்தாரோ அவ்விதமான காத்திருப்பு இது. ராம் சுரத்குமார் பெற்ற வரவேற்பு முன்பு நடந்தது போலில்லாமல் இருந்தது இதுகுறித்து ராம் சுரத்குமார் கூறுகையில், “இந்தப்பிச்சைக்காரன் மீது குரு தனித்த சிறப்பான அக்கறையை காட்டத்துவங்கினார். இந்தப் பிச்சைக்காரன் பல அறிந்த, நெருக்கமான நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வந்ததைப்போல் உணர்ந்தான். அந்த ஆசிரமத்தின் சூழல் ராம்தாஸை ஒரு அற்புதமான துறவி என இந்தப் பிச்சைக்காரன் எண்ணவைத்தது, உண்மையிலேயே அற்புத துறவிதான். அதன்பின்னரே இந்தப்பிச்சைக்காரன் அற்புதமான குருவை புரிந்துகொண்டான். ராம்தாஸ் இந்தப்பிச்சைக்காரனின் தந்தை.”

இறுதியில் ராம் சுரத்குமார் சத்தியத்தை அறிவதற்கான நேரம் நெருங்கியது, இந்தியா முழுவதும் பயணித்த காலத்தில் பலமுறை ராம்சுரத்குமாருக்கு காவி உடை வழங்கப்பட்டது, ஆனால் அதனை அவர் புறக்கணித்தே வந்தார். அவர் விரும்பியது வெளிப்புறத் தோற்றத்தில் நடக்கும் மாற்றமல்ல, உள்முகமாக நடக்க வேண்டிய மாற்றம். புறச் சடங்குகளுக்கு அவர் ஓரளவே சாதகர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவராக இருந்தார். ஒருநாள் சுவாமி ராம்தாஸ் ஒரு பெண்மணிக்கு மந்திரோபதேசத்தை வழங்குவதைக் கண்ணுற்ற ராம் சுரத்குமார் தனது உள்ளக்கிடக்கையை ஆனந்தாஸ்ரமத்தின் செயலாளர் சுவாமி சச்சிதானந்தாவிடம் கூறியிருக்கிறார், என்ன ராம்சுரத்குமார் பகிர்ந்தார் என்பதை சுவாமி சச்சிதானந்தர் மறந்துவிட்ட போதிலும், தான் ராம்சுரத்குமாரிடம் பப்பா ராம்தாஸை அணுகி அவரிடம் மந்திரோபதேசம் கோருமாறு வழிநடத்தியது மட்டும் நினைவில் இருப்பதாக கூறுகிறார். பொதுவாக பப்பா ராம்தாஸ் எவருக்கும் வழக்கமான முறையில் சந்நியாசம் தருவதில்லை, ஆனால்,’ ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ‘ என்ற மந்திரோபதேசத்தையே தூண்டுதலாக தருவது வழக்கம். ராம்சுரத்குமார் தனது குருவிடம் பிரார்த்தனையோடு தூண்டுதலுக்காக அணுகினார். குரு அவரை உற்று நோக்கி ராம்சுரத்குமார் தூண்டுதலுக்கு தயாராகி தன்னிடமிருந்து ஆன்மீக ஆற்றலை பெறும் நிலையில் இருப்பதை அறிந்த ராம்தாஸ், “உனக்கு தூண்டுதல் வேண்டுமா? உட்கார்” என உத்தரவிட்ட குரு. ராம் சுரத்குமாருக்கு அற்புத மந்திரமான, ‘ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்’ என்பதை உபதேசிக்க ராம் சுரத்குமார் தனக்குள் கட்டற்ற ஆன்மீக ஆற்றல் பாய்வதை உணர்ந்தார். தன்னுள் இருக்கும் ஆன்மீக சக்கரங்கள் விழிப்புறுவதையும் ராம்சுரத்குமார் உணர்ந்தார். காதுகளில் ராம நாம மந்திரம் இடைவிடாது ஒலித்த வண்ணம் இருந்தது. ராம்தாஸின் குரு தூண்டுதலை தரும் என்னென்ன மாற்றங்களை உணர்ந்தார், அதே மாற்றங்களை ராம்சுரத்குமாரும் உணர்ந்தார். ராம்தாஸ் தனது நூலில் குறிப்பிடும் தகவல்கள் இவையே, “தீடிரென ஒரு விளக்கு ஏற்றப்பட்டதைப் போன்ற ஒரு ஒளி, அது உள்ளிருக்கும் இருட்டை நீக்கி, எழுப்பி, பாதையை காட்டியது. அதன்பின் எதையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப செய்யவில்லை அனைத்து செயல்களும் இறை விருப்பத்தின் படியே நடந்தன. முன்பு வாழ்ந்த வாழ்க்கையைப் போல் அல்லாமல் இறையே என் வாழ்க்கையை நடத்தியது. எதையும் எனது வாழ்க்கையில் என்னால் கோர முடியவில்லை, ஏனெனில் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருந்தது. இறையே என்னை சுத்தப்படுத்தி, என்னை தனக்குள் உறிஞ்சி, வழிநடத்தி, தனது சக்தி நிறைந்த அம்சமாக எனை மாற்றியது.” (ராம்தாஸ் பேசுகிறார் – பாகம் – 4)

குரு சீடனிடம் ஒருநாளின் இருபத்து நான்கு மணிநேரமும் மந்திரத்தை உச்சரிக்குமாறு உத்தரவிட்டார். ராம்சுரத்குமார் இறை அனுபவம் பெற்று தொடர்ந்து பல நாட்களுக்கு இறை பரவசநிலையிலேயே இருந்தார். மந்திரத்தை உச்சரித்தவாறே அவர் பரவசநிலையில் ஆடவும், பாடவும் செய்தார். மொத்த பிரபஞ்சமும் தன்னுள் இருப்பதை உணர்ந்தார். இறை விழிப்புணர்வு எனும் விடியல் அவருக்குள் மூன்று குருமார்களால் தனக்குள் நிகழ்ந்ததை நகைச்சுவையாக யோகி ராம்சுரத்குமார் குறிப்பிடுகையில், “பொதுவாக மனிதர்கள் தனக்கு மூன்று தந்தைகள் என்று கூறுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்தப் பிச்சைக்காரனுக்கோ மூன்று தந்தைகள் இருந்தனர். இவர்கள் மூவரும் இந்தப்பிச்சைக்காரனுக்கு நிறைய வேலை செய்துள்ளனர். அரவிந்தர் துவக்கினார். ரமணமகரிஷி சிலவற்றை செய்தார், ராம்தாஸ் முடித்து வைத்தார்.” ஸ்ரீ அரவிந்தர் உண்மையைத் தேடும் ஞானத்தை தந்தார். ரமணர் தவத்திற்கான பாதையைக் காட்டினார், இறுதியாக ராம்தாஸ் பக்தியை தந்து அதன்மூலம் இறை பரவசத்தை அடைய வைத்தார். 

ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது சீடனான இளம் நரேந்திரன் நிர்விகல்ப சமாதியில் மூழ்கி இருப்பதை விரும்பதாதைப் போல், ராம்தாஸூம் தனது சீடனும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட பணிகளை செய்ய நியமிக்கப்பட்டதை முன்கூட்டியே அறிந்தார். எனவே அவரை இந்த உலகத்தின் செயல்களுக்குள் தள்ளி வாழ்வின் துன்பங்களை உணர்ந்தால் மட்டுமே அவர் சரியான முறையில் வார்க்கப்பட்ட இறையின் கருவி ஆவார் என நினைத்தார். இது குறித்து ராம்சுரத்குமார் கூறுகையில், “இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் இந்தப்பிச்சைக்காரன் தொடர்ந்து ஆனந்தாஸ்ரமத்தில் தங்க நினைத்து, மூன்று முறை இந்தப்பிச்சைக்காரன் சுவாமி ராம்தாஸை அணுகினான். ஒவ்வொரு முறையும் அவர் என்னை நிராகரித்தார். இறுதியாக ஒரு முறை ராம்தாஸ், ‘ஆசிரம வாழ்க்கைக்கு பொருத்தமான பல நபர்கள் இருக்கிறார்கள். இதற்குமேல் அத்தகையோர் எங்களுக்கு தேவையில்லை.’ என்றார். 

சுவாமி சச்சிதானந்தரின் கூற்றுபடி, ராம்சுரத்குமார் ராம்தாஸ் மீது கொண்ட பக்தியானது மிகவும் தீவிரமாகி எப்போதும் தான் ராம்தாஸ் உடன் இருக்க வேண்டும் என எண்ணினார். ராம்தாஸ் ராம்சுரத்குமாரின் இறைப்பற்றை அறிந்தார். ஆயினும் அது ஆசிரமத்தில் இருக்கும் பிற பக்தர்களுக்கு சங்கடமாக இருப்பதை உணர்ந்தார். எனவே ராம்சுரத்குமார் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட, ராம்சுரத்குமாரும் ஆசிரமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். இறுதியாக தன் குருவிடம் விடைபெறுவதற்காகச் சென்ற ராம்சுரத்குமாரிடம் எங்கே செல்ல இருக்கிறாய் என ராம்தாஸ் வினவ, எந்த சிறு எண்ணமுமின்றி ராம்சுரத்குமார், ‘ திருவண்ணாமலை’ என பதிலளித்தார். 

இறைவனை அடையும் பாதைகள் விவரிக்க முடியாத வழிகளை கொண்டவை. கஞ்சன்காடு என்ற இடத்திலிருந்து திருவண்ணாமலை வந்து சேரும் பாதை சாதாரணமாக இருப்பதைப் போல் தோன்றினாலும், யோகி ராம்சுரத்குமார் கைகளில் பணம் இன்றி, பிச்சைக்காரனாக, பல கிராமம், நகரம், என கடந்து கன்னியாக்குமரி முதல் இமாலயம் வரை பயணித்து இறுதியாக திருவண்ணாமலை வந்து சேர ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. 1959 ன் வசந்தகாலத்தின் முற்பகுதியில் ராம்சுரத்குமார் திருவண்ணாமலையின் அருணாச்சல மலையை அடைந்தார். அவர் மரத்தடியில் தங்கினார், அவரின் நீண்ட புனிதப்பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் அன்றே பெரும் இலக்கை நோக்கிய பயணத்தின் ஆரம்பம் குறிக்கப்பட்டது. 

அத்தியாயம் 1.4

தகிக்கும் சூரியன்

வீடில்லாதவர்களை என்ன வீடு 

வைத்திருக்கும் நண்பனே? 

வானமே கூரை, புல்தரையே மெத்தை

உணவுக்கு? 

வாய்ப்பிருப்பின் நல்ல உணவு அல்லது 

மோசமானது, கணிக்காதே

உணவில்லை, நீரில்லை எனினும் 

கறைபடியாது கருணைமிக்க சுயம்

அது தன்னையறிந்து, சுதந்திரமாய் 

ஓடும் ஆறு அதைப்போல் சந்நியாசிகளே

உறுதியோடு எப்போதும் இருங்கள். 

“ஓம் தத் சத், ஓம்!“ எனச் சொல்லுங்கள். 

இது சுவாமி விவேகானந்தரின் சன்னியாசி பாடல். இதுவே மிகச்சரியாக ராம்சுரத்குமாரின் வாழ்க்கை, இதையே அவரது வசிப்பிடமான திருவண்ணாமலையில் அவர் மேற்கொண்ட வாழ்க்கைமுறை. சிலநேரங்களில் குகைகளில் அவர் தங்குவார், சில நேரங்களில் ஏதேனும் மரத்தடியில் இருப்பார். மற்ற நேரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் மதில்சுவர் அருகே இருப்பார். வெயில், மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கோயிலின் அருகே உள்ள கடைகளின் வராண்டாவில் ஒதுங்குவார். அவர் தனது உணவு மற்றும் வசதிக்காக எப்போதும் கவலைக் கொண்டதில்லை. எது பிச்சையாக கிடைத்ததோ அதனை அவர் அன்போடு ஏற்றுக் கொண்டார். சிலசமயம் தொடர்ந்து பலநாட்கள் பட்டினியில் இருந்திருக்கிறார், ஆனால் அவர் எப்போதும் துவண்டுபோனதில்லை, அங்குமிங்கும் திரிந்து, ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் என்று உச்சரித்தவாறே பரமானந்தநிலையில் ஆடிக்கொண்டிருப்பார். 

இன்று யோகியின் பக்தர்கள் கோயிலின் பக்கத்தில் ஒரு வசிப்பிடத்தை (சன்னதி தெரு இல்லம்) அமைத்து தந்திருந்தனர். அது பலரை வரவேற்று யோகி தரிசனம் தரும் இடமாக இருந்தது. இப்போதும் அவர் திறந்தவெளி, கோயிலின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு பொது இடத்தில் தங்குவதையே விரும்புவார். சிலருக்கு அவர் பைத்தியக்காரனைப் போலவும், சிலருக்கு கடவுளாகவும் அவர் காட்சியளித்தார். மக்கள் அவரை சூழ்ந்திருந்த போதிலும் அவர் எந்தவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவதையோ, உபன்யாசங்களையோ செய்யவில்லை. அவரிடம் வருபவர்களின் எதிர்காலத்தை கணித்து அவர் எதையும் கூறியதில்லை. எவர் அவரை பக்தியோடு உண்மையாக அணுகுகின்றனரோ அவர்களின் இதயங்களில் அமைதியை தந்து அவர்களின் உள்ளார்ந்த கேள்விகளுக்கான பதிலை ஊடுருவும் ஒரு பார்வையிலேயே தருபவராக இருந்தார். ஒரு பக்தருக்கு தனது கைகளை உயர்த்தி, “பயப்படாதே!” என சைகை செய்ததிலிருந்து அந்த பக்தர் உள்ளார்ந்த அமைதியை இன்றுவரை உணர்ந்து வருகிறார். 

தன்னை ஏற்பவர்களை நோக்கி அவரிடமிருந்து பெருகிவரும் கருணையின் மூலம் அவர், “என் தந்தை உன்னை ஆசிர்வதிக்கிறார்!” என்று கூறுவார். அவரிடம் ‘நான்’ என்ற உணர்வு வெளிப்படுவதே இல்லை, அவர் எப்போதும் தன்னை, ‘இந்தப் பிச்சைக்காரன்’ என்றே குறிப்பிடுவார். ஒரு குழந்தையைப் போல் அவர் வெகுளியாகவும், நகைச்சுவை உணர்வோடும், சிரித்தவாறே இருப்பார். அவர் சிரிக்கும் போது அவரது மொத்த உடலும் குலுங்கும். ஒருமுறை யாரோ ஒருவர் அவரிடம் உங்களை ஏன் பிச்சைக்காரன் என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்டதற்கு, நகைச்சுவையாக அவர் அளித்த பதில், ”என்னை நான் பிச்சைக்காரன் என்றழைத்துக் கொள்ளும் போதே, மக்கள் நான் ஏதோ பொக்கிஷத்தை மறைத்து வைத்திருப்பதைப் போல் சந்தேகப்பட்டு எனக்கு பல தொந்திரவுகளைத் தருகின்றனர். என்னை அரசன் என்று அழைத்துக் கொண்டால் என் விதி என்னவாகும்?”. 

சிலநேரங்களில் யோகி தன்னைக் காணவரும் பக்தர்களின் சில நேர்மையான பிரச்சனைகளை கேட்டு அதற்கு யதார்த்தமான தீர்வுகளை வழங்குவார். ஒருமுறை ஒரு பக்தரிடம், ஹிதோபதேசம் என்ற சமஸ்கிருத நீதிபோதனை நூலில் இருந்து தித்திப என்ற ஜோடி பறவைகள் குறித்த கதையை யோகி ராம்சுரத்குமார் கூறினார். கடற்கரை ஓரமாக வசித்த இந்த ஜோடி பறவைகளில் பெண் பறவை முட்டையிட்டு வைத்திருந்தது. கடலின் அலைகள் அந்த முட்டையை அடித்துச் சென்றன. ஆண் பறவை அதிகமான துன்பம் கொண்டு உறுதிக்கொண்டு முட்டைகளை மீட்க முடிவு செய்து, சிறிய புல்லொன்றின் மூலம் கடல் நீரை முகர்ந்து கடலை வற்றிவிட முயற்சி செய்தது. இந்த முயற்சி பிற பறவைகளின் கவனத்தை ஈர்க்க அவைகளும் இப்பணியில் இணைந்தன. இறுதியாக, பக்ஷிராஜனான கருடனும் அந்த பறவை தம்பதிகளுக்கு உதவ முன்வந்தார். கடலரசன், பக்ஷிராஜன் தனது இறக்கையை வீசி மொத்த கடலையும் வற்றிவிடச் செய்வார் என அஞ்சினார். எனவே கடலரசன் தனது அலைகள் சுருட்டிக் கொணர்ந்த முட்டைகளை உடனடியாக திருப்பி அந்த தம்பதியினரிடமே தந்தது. இந்தக் கதையின் இறுதியில் யோகி ராம்சுரத்குமார் தனது அறிவுரையை பக்தர்களுக்கு இணைத்து, “எனவே உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள், தொடருங்கள். உங்கள் முயற்சியும், நீங்களும் வெல்வீர்கள்.” 

சிலசமயம் யோகி தூய, எளிய ஆங்கிலத்தில் பேசுவார், மறுசமயம் தமிழில் பேசுவார். சிலசமயம் மணிக்கணக்கில் சிரிப்பார், மறுசமயம் நீண்ட மவுனத்தில் வெகுநேரம் ஆழ்ந்துவிடுவார். பால், தண்ணீர் என எதனை அவருக்கு கொடுத்தாலும் அதனை அவர் தனது சிரட்டையில் பெற்றுக் கொள்வார், அது அவருக்கு பிக்ஷை பாத்திரமாக இருந்தது. அவர் எதைப் பெற்றுக் கொண்டாலும் தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கினார். சர்க்கரை நோய் உள்ள பக்தருக்கு இனிப்பை பிரசாதமாக வழங்குவார். வயிற்றுப்புண் உள்ளவர்க்கு கடும் காரமானவற்றை வழங்குவார், அவர் எதை தந்தாலும் அது பக்தர்களுக்கு தேன் போல் இனித்தது. அவரைக்காண வந்தவர்களில் மந்திரிகள், நீதிபதிகள், நிர்வாகிகள், துணை வேந்தர்கள், இலக்கியவாதிகள், ஏழைகள், அப்பாவியான மக்கள், தொழிலாளிகள், தெருவில் இருப்பவர்கள், பக்கத்து கிராமத்து மக்களில் இருந்து தூரதேசங்களில் இருந்தும் பலர் அவரைக்காண வந்தனர். ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இலங்கை போன்ற நாடுகளும் இதில் அடங்கும். 

எது இந்த வயதான, பைத்தியக்காரனைப் போன்ற பிச்சைக்காரனை நோக்கி பலதரப்பட்ட மனிதர்களை ஈர்த்தது? அவர் ஒரு ‘விடுதலையடைந்த ஆன்மா’ என்பதாலா? அவரது பார்வை உலகியல் வசதிகளோடு, ஆன்மீகத்துடிப்பையும் அவரது பக்தர்களுக்கு தருவதாலா? அல்லது ஒரு பெரும் இலக்கிற்காக இந்த பக்தியான ஆன்மாக்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டனவா?

 “விடுதலை இந்தப்பிச்சைக்காரனுக்கு இறுதியல்ல. மாறாக அது அவனுக்கு துவக்கம்” என்று கூறிய யோகி ராம்சுரத்குமார், ”இந்தப் பிச்சைக்காரனின் வேலை ஆளுமைகளை உருவாக்குவதே” என்று தனது இலக்கு குறித்து வெளிப்படுத்தியுள்ளார். தனிநபர்களை சிறந்த கருவிகளாக்குவது மட்டுமல்ல, தேசத்திற்கும், மனித இனத்திற்கும் இலக்கை நிர்ணயிப்பதேயாகும்.” 

1972 ல் ஒருநாள் யோகி ராம்சுரத்குமார், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள திருக்கோயிலூர் ஞானானந்தகிரி தபோவனத்தில் அமைதியின்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை மாட்டுத்தொழுவத்திலோ, தோப்புக்களிலோ ஆழ்ந்த எண்ணத்தில் மூழ்கியிருப்பதைக் காணலாம். அவருக்கு ஞானானந்தகிரியோடு மிகுந்த நெருக்கம் இருந்து வந்தது. இருவரும் நாட்டில் ஆன்மீக அலையை உருவாக்க சில செயல்முறைத் திட்டங்களோடு இருந்தனர். திரு. AR.PN. ராஜமாணிக்க நாடார், நிர்வாக டிரஸ்டியாக தபோவனத்தில் இருந்ததோடு, இவ்விரு ஞானிகளின் பக்தராக இருந்த்தோடு, அன்னை மாயம்மா மற்றும் பிற துறவிகளோடும் அன்பு பூண்டிருந்தார். 1973 ஏப்ரல் 27 ல் சுவாமி ஞானானந்தா கிரி யோகி ராம்சுரத்குமாருக்கு ஒரு பனையோலை விசிறியை வழங்கினார். தனக்குப்பின் தனது ஆசிரமத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதாகவே இது பார்க்கப்பட்டது. 1973 ஏப்ரல் 29 ல் பல பக்தர்கள் குழுமியிருந்தபோது, ஞானானந்தா கிரி, ’ஒன்று, இரண்டு, மூன்று, சுடு’ என்று கூற, யோகி ஓடிவந்து ஞானானந்தா கிரியின் முன்னர் வீரசானத்தைப்போல் முழங்கால் இட்டு, இராணுவ வீரர் தனது மூத்த இராணுவ அதிகாரியை வணக்கம் செலுத்துவதைப் போல் செய்ய, இருவரும் கர்ஜனையோடுடன் கூடிய வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். இது தங்கள் ஆன்மீக சக்தியை தாய்நாட்டின் அறியாமை, சுயநலம், லௌகீக வாழ்க்கை போன்றவற்றில் இருந்து விடுதலை பெறுவதற்காக இருவரும் பயன்படுத்த இருக்கின்றனர் என்பதன் குறியீடாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. 1973 ன் நவராத்ரி விழாவிற்கு மகாத்மா காந்தியின் சிலையை ஞானானந்தகிரிக்கு யோகி ராம்சுரத்குமார் அனுப்பியதும் தேசத்தின் மீது அவர்கள் கொண்ட அக்கறையை உணர்த்துகிறது. 1974 ஜனவரி 10 ஆம் தேதி ஞானானந்தகிரி மஹாசமாதி அடைந்தபிறகு, தபோவனத்தில் 1974 ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை தபோவனத்தில் தங்கியிருந்T அதன்பின் ஆசிரமத்திற்கு செல்லவில்லை. ஞானானந்தகிரியால் கண்டறியப்பட்ட, ‘கன்னியாக்குமரியின் மாணிக்கம்’ என அறியப்பட்ட அன்னை மாயம்மா, 1976 செப்டம்பர் 26 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து யோகி ராம்சுரத்குமாரை கோயிலுக்கு முன் சந்தித்தார். 

1976 ஆம் ஆண்டு டிசம்பர் – 1 யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவை பக்தர்கள் சேர்ந்து கொண்டாடிய பொழுது யோகியின் அமைதியான, அதே நேரம் உன்னதமான, ஓர் இயக்கத்துக்கு உரிய உட்கரு உருவானது. ஜகத்குரு சந்திரசேகர

சரஸ்வதி சுவாமிகள் தனது வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார். பக்தர்கள் அவருக்கு பாதபூஜை செய்யும்போது யோகி கண்கள் திறந்திருந்த நிலையில், மிக ஆழ்ந்த சமாதிநிலையில் மூழ்கி இருந்தார். 

பைத்தியக்காரன், கனவுலகில் இருப்பவன், வெகுளியான குழந்தை, பிச்சைக்காரன் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் இன்று பல நூறு பக்தர்களுக்கு கலங்கரை விளக்கம். அவர்களின் வாழ்க்கையில் யோகி கொண்டுவந்த மாற்றம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கல்வியறிவே இல்லாத ஒருவனும் அவரது கருணையால் மிகச்சிறந்த தரமான பாடல்களை இயற்றுபவனாகிறான். இந்தப்பிச்சைக்காரனுக்கு தமிழ் மொழியும், இலக்கியமும் தெரியாது என்று கூறிக்கொண்ட போதிலும், அவர், ‘சிவஞானபோதம்’ என்ற தமிழ் வேதநூலுக்கு தரும் விளக்கங்கள் தமிழ் நன்கு கற்றறிந்த புலவர்களையும் வியக்க செய்வதாகும். யோகி ராம மந் திரத்தை ஜெபிக்கத்துவங்கினால் அவரது குரலானது கேட்பவர்களின் இதயத்தை கரைக்க வல்லது. நாத்திகர்களும் அவரோடு இணைந்து பாடுமாறு ஈர்க்கவல்லது அவரின் குரல். சில சமூக விரோதிகள் இவரைச் சாதாரண பிச்சைக்காரனாக கருதி தாக்கியபோதும், அவர்களை துணிவோடு பார்வையால் ஊடுருவி துரத்தியிருக்கிறார். யோகி கோயிலின் ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து மனிதகுலத்தின் அறியாமை மற்றும் இருள் குறித்து அமைதியாக யோசித்து விசும்பிக் கொண்டிருப்பார். 

உலகத்தின் பல பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் யோகி ராம்சுரத்குமார் குறித்த தனித்த அனுபவங்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஹோமம் கம்யூனிட்டியின் தலைவரான லீ லோசோவிக், ஆன்மீகத்தை பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக பயிற்றுவிக்கும் ஒரு ஆசிரியர் ஆவார். அவருக்கு உலகமெங்கிலும் பல மாணவர்கள் உண்டு. ‘தி ஒன்லி க்ரேஸ் இஸ் லவ்விங்’, மற்றும் ‘தி சீட்டிங் புத்தா’ போன்ற பல நூல்களின் ஆசிரியர் இவர் ஆவார். பன்னிரண்டு வருடங்களில் மூன்றுமுறை இந்தியாவிற்கு வந்த லீ லோசோவிக் ஆனந்தமயிமா, முக்தானந்தா, சச்சிதானந்தா போன்ற பல ஆன்மீக ஆசிரியர்களை சந்திந்திருக்கிறார். யோகி ராம்சுரத்குமாருடனும் அவர் நேரத்தை செலழித்திருக்கிறார், அவர் பல குருமார்களை சந்தித்தப்போதும் ஒரே ஒரு பிச்சைக்காரனை அவரது கடைசி இந்தியப் பயணத்தில் சந்தித்ததாகவும் அவரே ‘யோகி’ என்றும் குறிப்பிடுவார். லீ யோகி ராம்சுரத்குமாரின் மனிதநேயம் மற்றும் சரணாகதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது கடைசி பயணத்தின் போது யோகி தனது ஆன்மீக உணர்வை தனக்கும் பகிர்ந்ததாக உணர்ந்தார். லீ தனது பக்தியினால் சில பாடல்களை யோகி ராம்சுரத்குமார் மீது எழுதினார். அவற்றில் ஒரு பாடல், ‘ தி ஒன்லி கிரேஸ் இஸ் லவ்விங்’ என்ற நூலின் அறிமுகத்தில் உள்ள பாடல், பின்வருமாறு: 

நீண்ட காலமாக பணக்காரர்களைத் தேடினேன்

        செல்வ வளமானவர்களைக் கண்டேன் 

ஒர் பிச்சைக்காரனான உன்னை 

         நான் கண்டறிந்தவுடன்

இப்போது நீ தாங்கியிருக்கும் ஏழ்மையை 

        மட்டுமே நான் தேடுகிறேன் 

எனது அன்பான குருவே 

        உனைப்போன்ற ஏழையாயிருத்தல்

ஒரு வரம், பிரமிப்போடு 

          நான் காணும் கனவது 

எனது செல்வங்கள், எனது கடவுளின் 

          ஏழ்மையால் வெளியேற்றப்பட்டது 

எனவே லீ பாடுகிறார்

          ‘இது அப்படியே இருக்கட்டும்.’

ஒரு அமெரிக்க பக்தையான.ஃபிலிஸ் கூறுகிறார், தன்னைப் பொருத்தவரை இந்தியா என்பது யோகி ராம்சுரத்குமார். அவரது முந்தைய வருகையின் பொழுது தான் எவ்விதம் ஒரு கார் விபத்தில் இருந்து யோகியின் கருணையால் காப்பாற்றப்பட்டேன் என்பதை அவர் யோகிடம் விளக்கியபோது, யோகி ராம்சுரத்குமார் அவரிடம் நகைச்சுவையாக வினவினார்: “அப்படியெனில் விபத்தை நீ சந்தித்ததும் எனது கருணையாலா?. யோகி எளிமையானவர், தாழ்மையானவர், தற்பெருமையற்றவர். இன்னொரு அமெரிக்க பக்தரான திரு.வில்லியம், எவ்விதம் யோகி ராம்சுரத்குமார் தனது கரங்களை உயர்த்தி ஆசிர்வதித்தே, தனக்கு ஆழ்ந்த தியான நிலையையும், ஆனந்த பரவச அனுபவத்தையும் தந்ததாக கூறுகிறார். இதே மாதிரியான அனுபவங்களை, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பெற்றிருக்கிறார்… இன்னொரு அமெரிக்க்க பக்தையான ஹில்டா, மே 1978 ல் வெளியான, ‘தி ந்யூ சன்’ என்ற இதழில், ‘யோகி ராம்சுரத்குமார் – தி ஹிடன் செயின்ட் ஆஃப் இந்தியா’ எனும் கட்டுரையில் தனது அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார். யோகி ராம்சுரத்குமாரை ஒரு முறைகூட காணாதவர்களுக்கும், கனவுகளின் மூலம் யோகி தரிசனம் அளித்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் பின்னாளில் அவர்கள் யோகி ராம்சுரத்குமார் படத்தை பார்த்தப்போதே இவரின் வழிக்காட்டுதலே அது என புரிந்து கொண்டிருக்கின்றனர். இதனைக் குறித்து ஹில்டா யோகி ராம்சுரத்குமாரிடம் கேட்டப்போது, “இந்தப்பிச்சைக்காரனுக்கு எதுவும் தெரியாது, தந்தையே இவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்து இருக்கிறார்.” என்று கூறியிருக்கிறார். 

யோகி ராம்சுரத்குமார் தனது கருணையை பக்தர்களின் மீது பார்வை, எண்ணம் மற்றும் தொடுகை மூலமாகவும் பரிமாறியிருக்கிறார். ஒருமுறை யோகியிடம் வந்த பக்தர் தான் இழந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை திரும்ப பெற வேண்டும் என வேண்டினார். யோகி ஆறுதல் அளிக்கும் வகையில், சில குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் அவருடையப் பணம் அவருக்கு திரும்பக்கிடைக்கும் என உறுதியளித்தார். ஆனால் அந்த பக்தர் அந்த கால இடைவெளிக்குள் மீண்டும் யோகியை சந்தித்து தனது பணம் திரும்ப கிடைக்கவில்லையே என யோகி ராம்சுரத்குமாரைக் கேட்க, யோகி அவரிடம் எந்த பதட்டமுமின்றி, “இந்த மண்ணில் இருக்கும் பல அற்புத குருமார்கள், கடலில் விழுந்த ஊசியைக்கூட திரும்ப எடுத்து தந்திருக்கின்றனர், ஆனால் நானோ மிகச்சாதாரணமான ஏழைப் பிச்சைக்காரன்” என்றார். யோகி ராம்சுரத்குமார் மேலும், தனது தந்தையிடம் இந்தப் பக்தருக்கு தந்தையின். கருணையின் மீது நம்பிக்கை பிறக்க பிரார்த்திப்பதாக கூறினார். சிறிது காலத்திலேயே பக்தர் ஆச்சரியப்படும் வகையில், அவரது பணம் திரும்ப கிடைத்தது. 

ஜகத்குரு சங்கராச்சாரியாரின் காஞ்சி காமகோடி பீடத்தின், ஸ்ரீ சந்திரசேகரந்ர சரஸ்வதி சுவாமிகளை இரண்டு பக்தர்கள் தரிசித்துவிட்டு அவர்கள் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களையும் தரிசிக்க விரும்பினார்கள். அவர்கள் திருவண்ணாமலை வந்து யோகியின் இல்லத்தின் கதவுகளைத் தட்டினர். யோகி ராம்சுரத்குமார் வெளியே வந்து அவர்களை சில நொடிகள் உற்று நோக்கினார். உடனே அவர்களின் பாதங்களில் விழுந்து யோகி ராம்சுரத்குமார் வணங்க அவர்களிருவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். யோகி சிரித்தவாறே அவர்களிடம், “நீங்கள் இருவரும் பெரிய ஆச்சார்யாரை பார்த்தப்பிறகு என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள், இந்த பிச்சைக்காரனிடம் காண்பதற்கு என்ன இருக்கிறது? என் தந்தை உங்களை ஆசிர்வதிக்கிறார்! நீங்கள் இப்போது போகலாம்.” என்றார். வந்தவர்கள் யோகி தந்த இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்க்குள், யோகி தனது இல்லத்திற்குள் நுழைந்தார். யோகியின் இந்த எல்லையற்ற பணிவான செயலானது அவர் தனது குருமீது கொண்டிருந்த பக்தியை அறிவிக்கும் போது வெளிப்பட்டது, “தந்தை ராம்தாஸ் எப்போதும் இந்தப் பிச்சைக்காரனோடே இருக்கிறார்.” சிந்தனையைத் தூண்டக்கூடிய இத்தகைய ஆழமான பார்வைகள் அவரது கூற்றில் வெளிப்படுகிறது: ”நான் எல்லையற்றவன், எனவே நீங்களும், நாமனைவரும் எல்லயற்றவர்களே, என் நண்பர்களே, ஆனால் ஒரு முக்காடு உள்ளது, ஆம் ஒரு முக்காடு உள்ளது. என்னைப் பின் தொடர்கிறீர்களா? நீங்கள் பார்ப்பது எனது எண்ணற்ற வடிவத்தின் ஒரு பகுதி. இது கடற்கரையில் நின்றிருக்கும் ஒருவன் பெரும் கடலைப் பார்ப்பதைப்போலத்தான். அதைப்போலவே அனைவரும் என்னில் ஒரு சிறு பகுதியையே பார்க்கின்றனர். இந்த மொத்த பிரபஞ்சம் மொத்தமே மனிதனின் ஒரு பகுதியே ஆனால் ஒரு மனிதனால் எப்படி மொத்த பிரபஞ்சத்தைம் பார்க்க முடியும்?”.

சுவாமி விவேகானந்தர், தன்னை எல்லோரிலும், எல்லாவற்றிலும் கண்ட துறவி, தத்துவவாதி. அவரைப்போலவே யோகி ராம்சுரத்குமாரும் ஒரு நாட்டுப்பற்றாளர். ”தாயும், தாய்நாடும் சொர்க்கத்தைவிட புனிதமானவை” என்று ராமசந்திரமூர்த்தி அருளுகிறார். ராமனை தியானிப்பவர்கள், மற்றும் தன்னை ராமரிடம் இணைத்துக் கொண்டவர்களுக்கு இதைத்தவிர வேறு எந்த மந்திரம் இருக்க முடியும் ராம்சுரத்குமாருக்கு இந்த மொத்த தேசம் என்பது இன்றிருக்கும் துண்டாடப்பட்டிருக்கும் தேசமல்ல, அகண்ட பாரதம், முனிவர்களும், துறவிகளும் வணங!கிய தாய். இந்த நாடு பிரிவினைக்கு உட்பட்டபோது, மகா யோகி ஸ்ரீ அரவிந்தர் அறிவித்தது: “பழைய இந்து முஸ்லீம் மதப்பிரிவினை இப்போது திடமாகி, நிரந்தரமான அரசியல் பிரிவினையாக இந்த நாட்டில் ஆகிவிட்டது. இப்போது தீர்க்கப்பட்ட விவகாரம், ஏற்கப்படாது, நிரந்தரமான தீர்வுமாகாது. தற்காலிக பயனைத் தரும் இது இந்தியாவை பலவீனப்படுத்துவதோடு, முடங்கிப் போகச் செய்யும், உள்நாட்டு சண்டை எப்போது வேண்டுமானாலும் நடக்கும். புதிய படையெடுப்பும், வெளிநாட்டவரின் தாக்குதல்களும் கூட நடக்கலாம். இந்தியாவின் உள்வளர்ச்சி மற்றும் வளமும் தடைபடலாம். மற்ற நாடுகளின் மத்தியில் அவள் பலவீனமாகலாம். அவளின் இலக்கு பலவீனமாகவும், விரக்தியடைவதாகவும் மாறலாம். இந்தப்பிரிவினை, பகிர்வு கூடாது.” இந்த உணர்வுகளை மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர் 1947 ஆகஸ்ட் 15 ல் இந்தியா சுதந்திரமடைந்த `தே நாளில் வெளிப்படுத்தினார். யோகி ராம்சுரத்குமார் கூற்றும் அரவிந்தரின் எதிரொலியாகவே உள்ளது: ”இந்தியா நமது விளையாட்டுத்திடல்…. தெய்வீக திட்டத்தின் பாதுகாவலர்கள் ஆகிய குருமார்களின் விளையாட்டுத்திடல், அது ஒருபோதும் துண்டாடப்படக்கூடாது அல்லது நம்மிடம் இருந்து பறித்துச் செல்லப்படக்கூடாது. எனது நண்பனே, என்னை நம்பு, சத்தியத்திற்கு அதன் வழி இருக்கும். சத்தியம் வெல்லும்.” 

யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை புனிதப்படுத்தப்பட்டது தாய்நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்யமட்டுமல்ல, அT மொத்த மனிதகுலத்திற்கும் சேவை செய்யவே. ட்ருமன் கெய்லர் வாட்லிங்டன் இதைப்பற்றி குறிப்பிடும் போது, “பசிகொண்ட ஆத்மாக்கள் அவரை நோக்கி வருவார்கள், அவர்களுக்கு ரொட்டியை அவர் தருவார். பாவத்தாலும், நோயாலும் துன்பப்படும் ஆன்மாக்கள் அவரிடம் வரும், அவர் அவர்களை தனது உயிர்ப்பான வார்த்தைகளால் குணமாக்குவார். அறியாமையால் குருடான ஆன்மாக்கள் அவரிடம் வருகையில் அவர் ஞானத்தால் அவர்களை ஒளிர வைப்பார். மனிதகுலத்தின் அங்கமாக மட்டும் அவரில்லாமல், கடவுள் குழந்தைகளின் செயல் மிக்க சகோதரத்துவத்தின் ஒரு ஒருங்கிணைந்த உறுப்பினராகவே அவர் இருந்தார்.” 

அத்தியாயம் 1.5

 முடிவிலா ஒளி

அத்வேஷ்டா ஸர்வ பூதாநாம் மைத்ர: கருண ஏவ ச |

நிர்மமோ நிரஹங்கார: ஸம து:க ஸுக: க்ஷமீ ||

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஸ்சய: |

மய்யர்பித மநோ புத்திர் யோ மத் பக்த: ஸ மே ப்ரிய: || (ஸ்ரீமத் பகவத்கீதை – 12 : 13 & 14) 

எவ்வுயிரையும் பகைத்தலன்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும், துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய், எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கினியவன் என கீதையில் பகவான் கிருஷ்ணர் உரைக்கிறார். 

யார் அத்தகைய யோகி? எங்கே அவரைக் காணலாம்? 

ஒருநாள் அருணாச்சல மலையடிவாரத்தில் அருணாச்சல சிவனின் இரண்டு பக்தர்கள் அமர்ந்து நட்புரீதியான உரையாடல்களில் ஈடுபட்டு இருந்தனர். இருவரும் நீண்டகாலமாக இறைத்தேடலில் பரஸ்பரம் அறிந்தவர்கள், பயணித்தவர்கள். குழந்தைத்தனமான எளிமை அவர்களின் இதயத்தை பற்றியிருந்தன. அதில் இளையவரானவர் இன்னொருவரின் கரத்தை தீடிரெனப் பற்றி, “நீயொரு யோகி, இப்பொழுது நீ உன் சக்தியை காட்ட வேண்டும். நான் உனது கரத்தை விடமாட்டேன்.” என்றார். 

இளையவர் யோகியின் கரத்தை மிகக் கடுமையாக அழுத்தத் தொடங்கினார். யோகி தனது எதிர்ப்பைக் காட்டி, “இல்லை, இல்லை. நானொரு சாதாரண பிச்சைக்காரன். என்னை விடு, நான் யோகி அல்ல”. அந்த இளையவர் ஒரு வெளிநாட்டவர் அவர் துறவியாகி திருவண்ணாமலையின் குகைகளில் ஒன்றில் இருக்கிறார், யோகியிடம் தனது சக்தியைக் காட்ட அவரால் வற்புறுத்த இயலவில்லை. யோகி இந்த நிகழ்வைக் குறிப்பிட்D சொல்லுகையில், “ஓ ! எப்படி இந்தப் பிச்சசைக்காரனின் கைகளை நசுக்கினான் தெரியுமா ! இந்தப் பிச்சைக்காரன் தான் யோகி அல்ல என்று அழுது கதறினான். ஆனாலும் அவன் இந்தப் பிச்சைக்காரனை விடவில்லை.” என்று கூறி யோகி பெருங்களிப்புடன் சிரித்தார். 

அந்த யோகி வேறு எவரும் இல்லை நமது நாயகனான யோகி ராம்சுரத்குமார், அவர் தன்னை யோகி என்று அழைத்துக் கொண்டதில்லை. எந்த சக்திகளையும் வெளிக்காட்டியதில்லை. எப்போதும் தன்னை ‘பிச்சைக்காரன்’ என்றே அழைத்துக் கொள்வார். 

லீ லோசோவிக் ஒரு கடிதம் ஒன்றை பாடலாக எழுதி அதற்கு, “பெறுநர் யோகி ராம்சுரத்குமார், பைத்திய பிச்சைக்காரன், விடுநர் மோசமான கவிஞன்“ என எழுதி அனுப்ப அது யோகி ராம்சுரத்குமாரிடம் வந்தது. ஆனால், அதனை யோகி புகழவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை? அந்தக்கடிதம் யோகி பொக்கிஷமாக பாதுகாக்கும் வீணான காகிதங்களோடு சேர்ந்தது. இந்நூலின் ஆசிரியர் யோகி ராம்சுரத்குமார் குறித்த சில தகவல்களை யோகியிடம் கேட்கும் போது, யோகி சிரித்தவாறே நீண்ட நேரம் அந்த வீணான காகிதங்களைத் தேடிவிட்டு, “ஓ ! அதனைக் காணவில்லை. யாரோ எதையோ எழுதினார்கள், அதனைக் காணவில்லை“ என்று கூறினார். இதனைக்கேட்ட அடியேனின் முகம் வாடுவதைக் கண்ட யோகி மீண்டும் அந்த காகித மூட்டைகளைத் துழாவி ஒரு வீணான காகிதத்தை எடுத்துத் தந்தார். அதனைக் கண்டதும் தங்கச்சுரங்கத்தைக் கண்டதைப் போல் இந்த ஆசிரியர் மகிழ்ந்திருக்கிறார். யோகி அதனை கருணைக்கொண்ட புன்னகையோடு தந்திருக்கிறார். 

யோகியின் கருணையும், இரக்கமும் அவரது எல்லா பக்தர்கள், பிச்சைக்காரர்கள், எல்லா உயிரினங்களுக்கும் சென்றடைந்தது. அவர் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் அருகே அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இடையே சென்று அமர்ந்துவிடுவார். சில நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுக்காகவும், பிச்சைக்காரர்களை தொல்லையாகவும் கருதி, இவர்களை சூழ்ந்து மிக கடுமையான முறையில் தாக்கி பிச்சைக்காரர்களை காவல்துறையினர் விரட்டுவார்கள். ஆனால் இந்த பிச்சைக்காரன் மட்டும் மனம் புண்பட்டு, “நமது நாட்டில், பிச்சை எடுத்தல் ஒருபோதும் ஒரு குற்றமில்லை. அது ஒருபோதும் தடைசெய்யப்பட்டதில்லை. பிச்சைக்காரர்கள் மதிக்கப்பட்டு, அக்காலத்தில் பிச்சையிடப்பட்டது. ஆனால் இன்றைய அரசாங்கமோ அவர்களை கைது செய்து, துன்புறுத்தி வருகிறது. இந்த பரதகண்டத்தில், பிச்சைபெறுதல் ஒருபோதும் தடைசெய்யப்பட்டதில்லை. பிச்சைக்காரர்கள் வதைக்கப்படுதல் சரியல்ல” என்று யோகி ராம்சுரத்குமார் கூறியிருக்கிறார். 

இந்த நூலின் ஆசிரியர் முன்னிலையில் ஒருமுறை தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சில பக்தர்களுடன் ஒரு சன்னியாசினியும் உடனிணைந்து யோகியை காண வந்திருந்தனர். அவர்கள் சில பழங்கள் நிறைந்த பொட்டலங்களை கொண்டு வந்திருந்தனர். யோகியின் முன்பு அவைகள் பார்வையாளர்களால் அன்பான காணிக்கையாக வைக்கப்பட்டபோது யோகி, “இவையெல்லாம் எதற்கு? இந்தப் பிச்சைக்காரனுக்கு இவையெல்லாம் தேவையில்லை.” அந்த நேரத்தில் ஒரு பிச்சைக்காரன் கதவருகே வந்து நின்று, “யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய்!“ என கத்தினார். யோகி உடனடியாக தனது பக்தர்களில் ஒருவரை அழைத்து, “சுவாமிநாதா, இவைகள் அனைத்தையும் எடுத்துச் சென்று அவரிடம் கொடு என உத்தரவிட்டார்.” அனைத்துப் பழங்களும் அந்த பிச்சைக்காரனின் நீட்டப்பட்ட கரங்களில் திணிக்கப்பட்டன. யோகி அந்தப் பிச்சைக்காரனிடம், “இவைகளை நீ எடுத்துச் சென்று அங்கு அமர்ந்திருப்பவர்களிடம் பகிர்ந்து கொள். (கோயிலின் அருகே இருந்த பிச்சைக்காரர்களைக் காட்டி).” 

யோகியிடம் ‘மமகாரம்’ அல்லது ‘அகங்காரம்’ போன்றவை கிடையாது. அனைவருக்கும் உரியவர், அனைவருக்கும் நண்பர். டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த ஒரு தத்துவ பேராசிரியர் ஆவார். அவர் யோகியை காணவந்திருந்த போது அவரோடான உரையாடலை முடித்த யோகி, அந்த பேராசிரிய புகைபிடிப!பார் என்பதை அறிந்து, “நீ ஏன் என்னோடு புகை பிடிக்க மாட்டாயா?“ என்று கேட்க பேராசிரியர் தயங்கினார். யோகி தொடர்ந்து வற்புறுத்த, பேராசிரியர் தனது சட்டைப்பையில் இருந்து சிகரெட்டை எடுக்க முயன்றார். ஆனால் யோகியோ அவரிடம், “இல்லை.இல்லை. நான் எனது சிகரெட்டைத் தருகிறேன்” என்றார். யோகி தனது சிகரெட்டில் இருந்து ஒன்றை எடுத்து பேராசிரியருக்கு தந்தார். சிகரெட்டை எடுத்து தந்ததோடு மட்டுமின்றி, பேராசிரியரின் சிகரெட்டை பற்றவைக்கவும் செய்தார். பேராசியர் யோகியிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். “நீங்கள் இந்த சிகரெட்டின் இறுதி துண்டினை பத்திரப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.” என்றார். யோகி அவருக்கு சிரித்தவாறே அனுமதியளித்தார்.

ஒருமுறை இந்த நூலாசிரியருடன் கனடா, இத்தாலி, சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து சேலத்திலுள்ள அன்னை மாயம்மாவை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமாரை தரிசிக்க விரும்பினர். ஆனால் அவர்கள் திருவண்ணாமலைக்கு நள்ளிரவில் வந்தடைந்தனர். ஒரு பக்தர் சந்தேகத்துடன், “யோகி இப்போது விழித்திருப்பாரா? அவர் இப்போது நம்மை பார்ப்பாரா? “என வினா எழுப்பினார். 

யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாக்ரதி ஸம்யமீ |

யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிசா பச்யதோ முநே ||

(ஸ்ரீமத் பகவத் கீதை 2 : 69) 

எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு. 

ஆனால் நாங்கள் அனைவரும் யோகியின் இல்லத்தை நெருங்கும் போது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். தியானத்தில் இருந்து எழுந்து எங்கள் அனைவரையும் வரவேற்ற யோகி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆனந்தமாக உரையாடியதோடு, பஜனைப் பாடல்களையும் பாடச் சொன்னார். 

யோகி ஒரு அற்புதமான பக்தர். அவரது குருபக்தி இணையற்ற ஒன்று. அவர் எப்போதும் தனது குருவை தந்தை என்றே அழைப்பார். திரு.A.R.ராவ் என்ற பக்தர், இவரே இந்த நூலின் முதலிரண்டு பதிப்புகளை அச்சிடடவர் ஆவார். இவர் மூலநூல் ஆசிரியரோடு இணைந்து யோகியை அவரது இல்லத்தில் சந்தித்தப்போது, தான் கௌட சாரஸ்வத் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை பகிர, யோகி பெருமகிழ்வோடு, “ஓ! நீ கௌட சாரஸ்வத்தா! நீ எனது தந்தையான சுவாமி ராம்தாஸ் அவர்களின் குலத்தைச் சேர்ந்தவர்!” என்றிருக்கிறார். 

இந்த ஆசிரியரின் மகளான செல்வி நிவேதிதாவிடம் யோகி ஒருமுறை “உனது பெயரின் அர்த்தமென்ன” என வினவ, அவர், “அர்ப்பணிப்பு என்பதே அதன் அர்த்தம்” என பதிலளித்திருக்கிறார். “ஓ! அதன் அர்த்தம் தியாகம்! உன் தந்தை உன்னை கடவுளுக்கு தியாகம் செய்திருக்கிறார்! அதை நீ ஏற்கிறாயா?” என்று கூறிய யோகி, ஆசிரியரை கவனிக்க, அவர் அந்த வார்த்தைகளின் பொருளையும், தாக்கத்தையும் புரிந்து கொண்டார். இது எதிர்காலம் குறித்த குறிப்பு. வெகுளியான அந்த சிறியப் பெண் தலையசைக்க, யோகி சில கோப்பை தேனீர் கொண்டுவருமாறு கூறிய யோகி, அதனை தனது சிரட்டையில் வாங்கி அருந்திய யோகி, அதில் ஒரு பகுதி தேனீரை அந்த இளம்பெண்ணிற்கு தந்தார். பின்னர் யோகி இந்த ஆசிரியரின் மகனான சிரஞ்சீவி. விவேகானந்தனை அழைத்து, தனதருகே அமரவைத்து அவனது கரங்களை சிறிது நேரம் பற்றியவாறு அமர்ந்து, ஆழமான தியானத்தில் மூழ்கினார். பின்னர் யோகி தனது கழுத்திலிருந்து ருத்ராக்‌ஷமாலையை எடுத்து அந்த சிறுவனின் கழுத்தில் அணிவித்தார். யோகி அவ்விரு பிள்ளைகளின் தாயாரையும் ஆசிர்வதித்தார். 

இன்னொரு சமயம், யோகியின் ஒரு பக்தர் தான் துவங்க இருக்கும் டிராவல்ஸ் சேவைக்காக ஆசியை கேட்டு வந்தபோது, யோகி அருகில் இருந்த நிவேதிதாவிடம், “உனது நண்பர் டிராவல்ஸ் சேவையை துவங்க இருக்கிறார். நீ முதலில் எங்கு செல்ல விரும்புகிறாய்? “என கேட்க, மிகுந்த அப்பாவித்தனத்தோடு அந்தப் பெண், “நான் காஞ்சன்காடு போக விரும்புகிறேன்.” என்றாள். 

யோகி அளவற்ற சந்தோஷத்தோடும், சிரிப்போடும், “ஓ! நிவேதிதா எனது தந்தையின் இடத்திற்கு போக விரும்புகிறார்.“ என்று கூறியிருக்கிறார். 

யோகி தனது பக்தர்களை அவ்வப்போது வழிநடத்தினாலும், யோகியின் ஆழமான எதிர்கால கணிப்புகள் அடிக்கடி வெளிப்படுபவை அல்ல. சி்ரஞ்சீவி. விவேகானந்தன் தனது பொதுத் தேர்வுக்கு முன்னர் யோகியை சந்திக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு யோகியை காணச் சென்றபோது, அவனை சரியான முறையில் வரவேற்ற யோகி அவனது தேர்வுக்கான தயாரிப்புகள் குறித்து விசாரித்தார். அதற்கு அச்சிறுவன் தான் அனைத்துப் பாடங்களுக்குரிய தயாரிப்புகளை மேற்கொண்டு விட்டதாகவும், மொழிப்பாடங்களுக்கு மட்டும் இன்னமும் தயாராகவில்லை என்றான். “நீ அனைத்து பாடங்களையும் நன்றாகவே எழுதுவாய். மொழிப்பாடங்களையும் நன்றாகவே எழுதுவாய். ஆனால் கணிதப்பாடத்தில் விழிப்போடிரு.” என எச்சரித்தார். 

தேர்வுகள் முடிந்தபிறகு, செய்திதாள்கள் அந்த வருடத்தின் கணிதப்பாடத்தேர்வு மிகுந்த கடினமாக இருந்ததாக செய்திகளை வெளியிட்டிருந்தன. யோகி தக்க தருணத்தில் தந்த எச்சரிக்கையானது அந்த சிறுவனுக்கு உதவியது. அவன் அனைத்து பாடங்களில் உயர்ந்த மதிப்பெண்களை பெற்றிருந்தான். நம்பிக்கை, குருவின் வார்த்தைகளில் கொள்ளும் நம்பிக்கையானது அற்புதங்களை நிகழ்த்த வல்லவை. 

“துல்யா நிந்தா ஸ்துதிர் மௌனி, சந்துஷ்டோ யேனா கேனாசித்” – “எவனொருவன் புகழ்ச்சியிலும், நிந்தனையிலும் அமைதியாக இருக்கிறானோ, எவன் அவனிடம் உள்ளதைக் கொண்டு நிறைவு கொள்கிறானோ” அவனே ஒரு யோகி. யோகியின் சரிதம் முதல் பதிப்பு பதிப்பிக்கப்பட்டபோது, அவர் ஒரு பிரதியை வேண்டினார். 

நூறு பிரதிகள் யோகியை வந்தடைந்தன. யோகி அவைகளை ஏற்று அதனை கட டுக்களாக்கி ஒரு பக்தரிடம் ஒப்படைக்கும் போது, “இந்த கட்டுக்களை ஒரு வாரத்திற்குப்பின் திறந்து, அதனுள் என்ன இருக்கிறதோ, அதனை தகுதியுடையவர்களுக்கு விநியோகம் செய்.” என கூறினார். ஆசிரியருக்கோ யோகி ஒரு வேட்டியை துறவினை பரிந்துரைக்கும் வண்ணம் தந்தார், துறவே ஆசிரியரின் எண்ணமாகவும் இருந்தது. 

இந்த ஆசிரியர் தனது கரீபியநாடுகளுக்கான பயணம் மேற்கொள்ள தொடங்கிய போது, அங்கிருக்கும் இந்தியர்களுக்கான செய்தியாக சில தகவல்களை தருமாறு யோகியிடம் கேட்க, “என்ன செய்தியை இந்தப் பிச்சைக்காரன் தர முடியும், நான் மிகப்பெரியவனல்ல. ராமகிருஷ்ணா, விவேகானந்தா, அரவிந்தோ, ராம்தீர்த்தா, ராம்தாஸ், ரமணா, ஜே.கே, அனைவரும் மிகப்பெரியவர்கள் அவர்கள் தங்கள் செய்திகளைத் தந்தனர். அவர்கள் பகிர்ந்த செய்திகள் அனைத்தும், எனது தந்தையின் செய்திகளாகும். இந்தப் பிச்சைக்காரனுக்கு தருவதற்கு வேறெந்த செய்திகளும் இல்லை.” அதன்பின் தழுதழுக்கும் குரலில் உணர்ச்சிப்பொங்க யோகி, ”அவர்கள் ராமர், கிருஷ்ணர் மற்றும் சிவனின் பெயர்களை நினைவில் கொள்ளட்டும். அப்போது அவர்கள் எப்போதும் பாரத தேசத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் இந்தப் புனிதமான பாரத நாட்டிற்கு திரும்ப வருவார்கள்.” யோகி உச்சரித்தவை சுவாமி விவேகானந்தர் அவர்களின் குரலின் எதிரொலிப்பே, “இந்த பூமியில் இருக்கும் எந்த ஒரு நிலம் புண்ணிய பூமி என ஆசிர்வதிக்கப்பட்டதோ…எங்கே ஆன்மாக்கள் களைத்துப் போய் கடவுளைத் தேடி தனது வீட்டிற்கு போகுமோ….அதுதான் இந்தியா.” ஆமாம் அன்னை பாரதம் உண்மையில் முடிவிலா ஒளியின் நிலம் – பாரதம்!.

அத்தியாயம் 1.6

 பொங்கும் கருணை

அநாஸ்ரித: கர்ம்பலம் கார்யம் கர்ம கரோதி ய:|

ஸ ஸந்நியாஸீ ச யோகீ ச ந நிரக்நிர் நசாக்ரிய: || (ஸ்ரீமத் பகவத்கீதை 6 : 1) 

“செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும், கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.” 

 அருணாசல மலையில் உள்ள ஆலமர குகையில் 1988 ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற சத்குரு சுவாமி ராமதாஸ் அவர்களின் 108-ஆவது ஜெயந்தி விழாவில் பங்குகொள்ள இந்த ‘பிச்சைக்காரனின் எளிய வேலைக்காரன்’ அழைக்கப்பட்டான். அவருடன் சிரஞ்சீவி விவேகானந்தன், நேதாஜி சுபாஷ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் லெப்டனன்ட் ஆக தொண்டாற்றிய திரு சேகர் என்ற பக்தர், மூவரும் திருவண்ணாமலைக்கு ஒருநாள் முன்னராகவே யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்தை பெறுவதற்காக வந்து சேர்ந்தோம், யோகியின் இல்லத்தை நெருங்கும் போது உள்ளமானது கவலையால் பதைபதைக்கத் துவங்கியது. யோகியின் தரிசனம் கிடைக்குமா? அவர் நம்மோடு பேசுவாரா? அல்லது ஆசி தந்து அனுப்பிவிடுவாரா? என்ற எண்ணத்தோடு அவர்கள் யோகியின் இல்லத்து கதவை மெதுவாக தட்டிவிட்டு சில நிமிடங்கள் காத்திருக்க, யோகியே கதவைத்திறந்து வந்தார், அவரது ஒருகையில் இந்த தொண்டன் அனுப்பியிருந்த கடிதம், மறுகையில் பனையோலை விசிறி என ஆச்சர்யத்தை யோகி அளித்தார். யோகி எங்களை வரவேற்று பாஸ்கர்தாஸ் என்ற ஓவியர் எங்கே என வினவினார். அடியேனின் கடிதப்படி இவர்களோடு இணைந்து வரவேண்டியவர் அவர். அடியேன் யோகியிடம் அவரால் வர இயலவில்லை, எனவே அவருக்கு பதிலாக வேறொரு நண்பர் எங்களோடு வந்திருக்கிறார் என்றவுடன் யோகி திரு. சேகரின் வயது என்ன என்று வினவிவிட்டு, பிறகு பேச்சு சுவாமி விவேகானந்தரின் நேதாஜி மீதான தாக்கம், அவரது தீவிரமான தேசப்பற்று என வேறு திசைக்கு திரும்பியது. சேகர் யோகியிடம் விமான விபத்திற்கு பிறகு நேதாஜியின் சாம்பலை இந்தியாவிற்கு கொண்டுவர செய்யப்பட்ட முயற்சி பற்றி பகிர்கையில், யோகி நேதாஜியின் மரணம் பற்றியும், விமான விபத்து குறித்தும் வெளிவந்த சர்ச்சைக்குரிய தகவல்கள் பற்றி விசாரித்த யோகி, சேகரை மிக அற்புதமான தேசப்பற்றாளரான நேதாஜியின் நினைவுகளை பாதுகாக்கும் முயற்சியில் வெற்றிபெற ஆசிர்வதித்தார். அந்தப் பேச்சு மெல்ல இந்த சமூகத்தில் பிச்சைக்காரர்களின் பங்கு என்பதைக் குறித்து திரும்பியது. யோகி பிச்சைக்காரர்களை சூழ்ந்து அவர்களை துன்புறுத்துவதையும் மற்றும் அரசின் கொள்கை மீதான தனது மறுப்பை மிக கடுமையாகவும், உறுதியாகவும் பதிவு செய்தார். 

“ரங்கராஜா, இந்த நிலத்தில் பிச்சைபெறுதல் ஒருபோதும் குற்றமல்ல. சுதாமா ஒரு பிச்சைக்காரன். அவன் பிச்சைப்பெற கிருஷ்ணரிடம் சென்றான். கிருஷ்ணர் அவரை சகல மரியாதைகளோடும் வரவேற்றார். அனைத்து துறவிகளும் பிச்சைக்காரர்களே. எனது குரு, சுவாமி ராம்தாஸ், ‘கடவுளைத்தேடி’ என்ற நூலில் தான் எவ்விதம் பிச்சைக்காரனாக திரிந்தேன் என்பதை விளக்குகிறார். இந்தப் பிச்சைக்காரனும் இந்த தேசம் முழுவதும் உணவைப் பிச்சையேற்று பன்னிரண்டு வருடங்களுக்கு அலைந்திருக்கிறான். அவன் ஒருபோதும் ருத்ராக்ஷத்தை அணிந்ததோ, நெற்றியில் சாம்பலை பூசியதோ ;ல்லை. மற்ற பிச்சைக்காரர்களைப் போல கிழிந்த உடையுடனே அலைந்திருக்கிறான். இந்தப்பிச்சைக்காரன் சபர்மதி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் போது, அங்கே குளிப்பதற்கு வரும் பெண்கள் சில நாணயங்களை தினமும் என்னிடம் வீசிவிட்டு செல்வார்கள். ஒரு நாளின் வருமான சேகரிப்பு இரண்டு நாள் உணவிற்கு போதுமானதாக இருக்கும். நான் சாதுக்களுக்காக மட்டும் பேசவில்லை, பிரம்மச்சாரிகள், பிராமணர்கள் என இவர்களோடு இணைந்து இந்த நாட்டில் பிச்சையெடுப்பவர்களுக்காகவும் பேசுகிறேன். நான் சாதாரண மனிதர்களுக்காகவும் பேசுகிறேன். தினமும் பிச்சையெடுக்க செல்லும் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம். அவர்கள் குற்றவாளிகள் அல்ல. வேறு வழியில்லாதமையால் அவர்கள் பிச்சையெடுக்கிறார்கள்.” 

இந்த ஆசிரியர் யோகியிடம் அவரது வார்த்தைகளை ஏற்கனவே ‘தத்துவ தர்சன்’ என்ற இதழில் எழுதிவிட்டதாகவும், மீண்டும் ஒரு தலையங்கம் இது குறித்து எழுத இருப்பதாகவும் கூற, யோகி, “ஆமாம் நீ ஒரு தலையங்கமும் எழுது” என்றார். மேலும் யோகி, “நீ அவசரத்தேவைக்கு தலையங்கம் எழுது, ஆனால் நீ நிச்சயமாக மனு ஸ்மிருதி யாக்ஞவல்கியர் ஸ்மிருதி போன்ற நீதி புத்தகங்களையும், பிற வேதங்கள், காளிதாசன் படைப்புகள் என பழைமையான நூல்களை தொகுத்து, நமது பாரம்பரியத்தில், நமது தேசத்தில் பிச்சைக்காரர்கள் எவ்விதம் நடத்தப்பட்டார்கள் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுது, ரங்கராஜா, “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ” இது நமது பாரம்பரியம் ரங்கராஜா. பிச்சையெடுப்பவர்களைத் தேடிச் சென்று நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன என யோகி விளக்கியிருக்கிறார். 

தாழ்மையான யோகியின் வேலைக்காரனான இந்த நூலின் ஆசிரியர் தனது முந்தைய யோகியுடனான நினைவுகளை நினைவு கூர்ந்தார். யோகி ஆசிரியருக்கு வஸ்திர தானம் என்று ஒரு வேட்டியை தந்திருந்தார். அதனை அவர் பிச்சையெடுக்க செல்லும் போது உடுத்துவது வழக்கம் என்று ஆசிரியர் பகிர்ந்தவுடன் யோகி ஆச்சரியத்தோடு, “ஓ ! இந்தப்பிச்சைக்காரன் உனக்கு வேட்டியை கொடுத்திருக்கிறான்.!” என்று கரங்களை உயர்த்தி ஆசிரியரை ஆசிர்வாதம் செய்த யோகி, “நாம் பிச்சைக்காரர்கள் ரங்கராஜா, ஆனால் நாம் குற்றவளிகள் அல்ல.” 

அடியேன் யோகியிடம் லீ லோசோவிக் எழுதிய பால்ஸ் சமூக பாரம்பரியம் பற்றி குறிப்பிட யோகி, “ஆமாம். ஆமாம். அவரும் சில பாடல்களை இந்தப்பிச்சைக்காரன் மீது எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றை உன்னிடம் தந்தேன், நீயும் அதனை அச்சிட்டாய். மற்றவைகள் எங்கே என்று இந்தப். பிச்சைக்காரனுக்கு தெரியாது. அவன் ஒருபோதும் அவைகளை பாதுகாக்கவில்லை” என்றார்.

இந்த உரையாடல் மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்தது. இந்த நேரத்தில் யோகி எங்களுக்கு காபி தந்து எங்களோடு பொழுதுபோக்கிய யோகி 7 மணி அளவில், “நன்று. சுந்தரராமன் சுவாமி உங்களுக்காக காத்திருப்பார். அங்கே சில விருந்தினர்களும் இருப்பார்கள். எனவே இந்தப் பிச்சைக்காரன் உங்களை இப்போது செல்ல விடுகிறான்.”

அடியேன் முன்பு யோகி தனக்கு தந்த புகைப்படத்தை வேறொரு பக்தருக்கு தந்துவிட்டதாக கூற, யோகி உடனடியாக இன்னொரு புகைப்படத்தைக் கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்தார். மறுபடியும் நாளை வருவதற்கு ஆசிரியர் யோகியிடம் அனுமதி கேட்க, யோகி, “ஏன்? நாம் இருவரும் ஒன்றாக இன்று நிறைய நேரம் செலவழித்திருக்கிறோம். வேறென்ன இருக்கிறது பேசுவதற்கு?” என வினவினார்.

“பேசுவதற்கு ஏதுமில்லை மஹாராஜ், ஆனாலும் நாங்கள் கிளம்புவதற்கு முன் இங்கு வந்து உங்கள் ஆசியை பெற நினைக்கிறோம்.” 

“இந்தப். பிச்சைக்காரன் நாளை சந்திக்கும் மனநிலையில் இருக்கிறானா என்று பார்ப்போம். எப்போது நீங்கள் வருவீர்கள்?” 

“நாளை மதியம் விழா முடிந்தப்பின்”

யோகி எங்களை ஆசிர்வதித்து நாங்கள் கிளம்புவதைப் பார்த்தார். 

*                    *                     *

கிழக்கில் சூரியன் உதிக்கும் வேளையில் யோகியின் தாழ்மையான வேலைக்காரன் ஆலமரக்குகையில் ஒரு பாறையில் அமர்ந்து, சூரிய உதயத்தை நோக்கி சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்க, அவரது கண்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரத்தையும், யோகியையும் நினைத்தன. சுவாமி ராம்தாஸ் அவர்களின் 104 வது ஜெயந்திவிழாவைக் கொண்டாட பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். ஆலமரத்து குகை ஆசிரமத்தின் ஏழாவது ஆண்டுவிழாவும் அன்றே. அடியேன் மெல்ல எனது காயத்ரி ஜப தியானத்திலிருந்து எழுந்து கீழே வந்தபோது அங்கே பக்தர்களிடம் சிறிது சலசலப்பு ஏற்பட்டிருந்தது. யாரும் எதிர்பாராத விதமாகவும், ஆச்சரியமான வருகையாக அங்கே ஒர் அற்புத மனிதரான யோகி ராம்சுரத்குமார் நுழைந்தார். நுழையும் போதே, “சென்னையில் இருந்து வந்த சுவாமி ரங்கராஜன் எங்கே?” என்று கேட்டவாறே வந்த யோகியை சுவாமி சுந்தரராமன் வரவேற்று, அவரை அமர வைத்துவிட்டு என்னிடம் வந்து, யோகி வந்து உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார் என அறிவித்தார். இந்த வேலைக்காரனும் யோகியை நோக்கி ஓடிச் சென்று வரவேற்க, மகனுக்காக காத்திருக்கும் ஒரு தாயைப்போல எனது கைகளை இணைத்துக் கொண்ட யோகி, “நேற்று நீ இன்று மீண்டும் இந்தப்பிச்சைக்காரனை பார்க்க வருவதாக கூறினாய். ஆனால் இந்தப்பிச்சைக்காரன் அதற்கு அவசியமில்லை என்றும் நாம் ஒன்றாக நிறைய நேரம் செலவழித்து விட்டோம் என்றும் கூறினான். நேற்றிரவு நீ கிளம்பியபிறகு இந்தப்பிச்சைக்காரன் இது குறித்து மீண்டும் சிந்தித்தான்: ‘ரங்கராஜன் இந்தப்பிச்சைக்காரனுக்கு நிறைய சேவைகள் செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து இத்தனை தொலைவு வந்திருக்கிறார். சுவாமி சுந்தரராமன் வேறு என்னை அழைத்திருந்தார்.’ எனவே ஏன் இந்தப்பிச்சைக்காரன் சென்று ரங்கராஜனைப் பார்க்ககூடாது என நினைத்தான். இன்று காலையில் சிதம்பரம் வந்திருந்தார். அவர் இந்தப்பிச்சைக்காரன் இங்கு வர உதவி செய்தார். எனவே இந்தப்பிச்சைக்காரன் இங்கே ரங்கராஜனை காண வந்தான்.” 

இந்த தாழ்மையான வேலைக்காரனின் இதயத்தில் சந்தோஷம் பொங்கியது, இந்த ஏழைக்கு நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்ற உணர்வு யோகியின் கருணை நிறைந்த வார்த்தைகளை கேட்டபோது தோன்றியிருக்கிறது. முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களின் கனியை ஒரே சமயத்தில் அறுவடை செய்ததைப் போன்ற உணர்வு மேலிட இந்த வேலைக்காரனால் தன்னை கட்டுப்படுத்த முடியாது தவிக்கையில் யோகி அவசரமாக கரங்களைப் பற்றி, “எங்கே தங்கியிருக்கிறாய் ரங்கராஜா?“ என வினவினார். இந்த வேலைக்காரன் குகையின் மேல் பகுதியை சுட்டிக்காட்டி, “மொட்டை மாடி மேலே மஹாராஜ்”. 

“வா. அங்கு சென்று அமர்வோம். இந்தப்பிச்சைக்காரன் ஒரு சில மணிநேரங்கள் உன்னோடு கழிக்க விரும்புகிறான்.”

யோகி ஏறக்குறைய என்னை மாடிக்கு இழுத்துக் கொண்டே சென்றார். இருவரும் ஒரு கோரைப்பாய் மீது அமர்ந்தபோது பல பக்தர்கள் யோகியைக் காண வந்தனர். யோகி கோரைப்பாயை பக்தர்களுக்கு இரண்டு வரிசைகளாக அமர தந்துவிட்டு ஓலைகளின் மீது அமர்ந்து இந்த வேலைக்காரனையும் தனதருகே அழைத்து, “வா ரங்கராஜா, நீ என்னருகே அமர்.” என்றார். பிறகு தன்னைச் சூழ்ந்திருந்த பக்தர்களை நோக்கி, “சுவாமி விவேகானந்தர் ‘வலியத்தாக்கும் இந்துமதம்’ குறித்து பேசியிருக்கிறார். நிவேதிதாவும் இது குறித்து புத்தகம் எழுதியுள்ளார். ஆனாலும் இந்த ‘வலியத்தாக்கும் இந்துமதம்’ எப்போது வரும்? எவ்வளவு காலம் ஆகும்? “

பின்லாந்தைச் சேர்ந்த ஒரு சன்னியாசினி பக்தையான சிவப்பிரியா (கிறிஸ்டி) மேற்கத்திய நாடுகளில் இந்து மதம் வளர்ந்து வருகிறது என்று சொல்ல, யோகி நகைச்சுவையாக, “ஆமாம், இந்துமதம் ஐரோப்பா, அமெரிக்காவிற்கு சென்று அவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆவார்கள். நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆவோம், அப்படித்தானே?” மேலும் தொடர்ந்த யோகி, “இந்தப்பிச்சைக்காரன் ஒரு முறை ஒரு பிராட்டஸ்டன்ட் மிஷினரியிடம், நீங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை பிராட்டஸ்டனட் கிறிஸ்தவர்களாக ஆக்குவீர்களா?” என்று கேட்டதற்கு ‘இல்லை’ என்று பதிலளித்தார். ஆனால் அவர் ஹிந்துக்களை, கிறிஸ்தவர்களாக மாற்றுவார்.” என்று கூறிவிட்டு பெரும் சிரிப்பைத் தொடர்ந்த யோகி, “நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆவோம். அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் ஆவார்கள்.” மேலும் தொடர்ந்த யோகி, “ஒருவேளை இந்துமதம் இந்தியாவை விட்டுப்போனால், நமது வேதங்களையும், உபநிஷத்துக்களையும் யார் பாதுகாப்பர்?” என வினவினார்.

இந்த உரையாடல் பல மணி நேரங்கள் நீடித்தது. அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. இந்த வேலைக்காரன் விரதம் இருப்பதால் உப்பு போட்ட எதையும் இன்று உண்பதில்லை என்று கூற, யோகி நீ சிறிதளவு பழங்களையாவது எடுத்துக் கொள் என வலியுறுத்தினார். 

ஒரு பக்தர் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார். அதற்கு யோகி, ”இந்தப் பிச்சைக்காரன் புகைப்படங்கள் எடுப்பதை அனுமதிப்பதில்லை. ஆனால் ரங்கராஜன் என்னுடன் இருக்கிறார், எனவே நீ இரண்டு புகைப்படங்கள் இந்தப்பிச்சைக்காரனை ரங்கராஜனுடன் எடுக்கலாம். அதில் இருவரும் இருக்க வேண்டும்” என்றார். மேலும் யோகி வேறு எவரும் எங்கள் பக்கத்தில் நிற்க கூடாதென உத்தரவிட்டார். அந்த புகைப்படக்கலைஞர் இரண்டுமுறை தனது கேமராவை ‘க்ளிக்’ செய்தவுடன், அவர் கிறிஸ்டியிடம், “உன்னிடம் கேமரா உள்ளதா?” என கேட்க, கிறிஸ்டி சிரித்துக்கொண்டே தனது கேமராவை எடுத்தாள்.” சரி இந்தப் பிச்சைக்காரனை ரங்கராஜனுடன் எடு” என்றார். அப்போது இரண்டு குரங்குகள் எங்கிருந்தோ வந்து எங்களின் பின்னால் இருக்கும் பாறையில் அமர்ந்தன. கிறிஸ்டி கேமராவை க்ளிக் செய்ய தயங்கினார். யோகி, “பரவாயில்லை. ரங்கராஜனும், இந்தப்பிச்சைக்காரனும் இங்கிருக்கின்றனர், எங்களின் பின்னால், சுக்ரீவன் மற்றும் ஹனுமான்!” என்றார். 

சுந்தரராமன் சுவாமி வந்து நிகழ்ச்சி நிரல்களை துவக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறியதோடு, யோகியை தலைமைத்தாங்க வருமாறு அழைக்க யோகி, “இல்லை. இல்லை இந்தப்பிச்சைக்காரன் பேசமாட்டான், தலைமை தாங்க மாட்டான். ரங்கராஜன் பேசுவார். ஆனால் ரங்கராஜன் சிறிது நேரம் இந்தப்பிச்சைக்காரனுடன் இருப்பார். அங்கே வேறு எவரேனும் தலைமைத்தாங்க இருப்பார்கள். நீ சென்று துவக்கலாம்.” என்றார் யோகி. 

சுந்தரராமன் சுவாமி சென்றபிறகு, நிகழ்ச்சிகள் தொடங்கியபோது யோகி இந்த வேலைக்காரனை தனது கரங்களில் இழுத்துக் கொண்டு கீழே சென்றார். “வா, நாம் சென்று என்ன நடக்கிறது என பார்ப்போம்.” என்றார். அவர் சில நிமிடங்கள் பார்வையாளர்களோடு அமர்ந்தார். பிறகு மீண்டும் இந்த வேலைக்காரனை அவ்விடத்தில் இருந்து இழுத்துச் சென்றார். அவர் அருகில் உள்ள சுவாமி ராம்தாஸ் குகைக்கு அழைத்துச் சென்றார், இங்கேதான் சுவாமி ராம்தாஸ் 65 வருடங்களுக்கு முன் தியானம் செய்திருக்கிறார். 

அந்த குகைக்குள் நுழைந்தவுடன் யோகி தன்னருகே என்னை அமரவைத்துக் கொண்டு, ”ரங்கராஜா, இந்த குகையில்தான் எனது குரு வசித்தார் ! இங்கேதான் அவர் அமர்ந்து தியானம் செய்தார். இங்கேயிருந்துதான் அவர் மகரிஷி ரமணரைப் பார்க்கச் சென்றார். ஓ! இந்த குகையில்தான் சுவாமி ராம்தாஸ் அமர்ந்து தியானம் செய்தார்! வா! சில பஜனைகள் செய்வோம்.” நாங்கள் இணைந்து ராமநாமத்தை சிறிது நேரம் சொன்னோம். திடீரென, பரவச மனநிலையில், நான் அவரிடம், “மஹராஜ், ஆசிர்வதிக்கப்பட்ட இந்த நாளில், நாம் ராம்தாஸின் ஜெயந்தியை கொண்டாடும் நேரத்தில், நீங்கள் என்னை அவர் எங்கு அமர்ந்து தியானித்தாரோ அந்த குகைக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு தீக்ஷை அளிக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.”

எந்தவொரு இரண்டாவது சிந்தனையுமின்றி குரு, “சரி. உனக்கு தீக்ஷை வேண்டுமெனில் நான் தருகிறேன்.“ என பதிலளித்தார். 

பின்னர் யோகி இந்த வேலைக்காரனை மிக அருகே இழுத்து தாரக மந்திரத்தை மெல்ல காதில் ஓதினார்: “ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்”. இது யோகியின் குரு சுவாமி ராம்தாஸ் இடம் இருந்து யோகி பெற்றது. மூன்றுமுறை காதுகளில் சொல்லப்பட்டது. நானும் மூன்றுமுறை திரும்பச் சொன்னேன். இந்த வேலைக்காரன் யோகியின் பாதங்களில் விழுந்து தழுதழுக்கும் குரலில் பின்வருமாறு பிரார்த்தனை செய்தான். “மஹராஜ், எனக்கு பேராசிரியராகவோ, பத்திரிக்கையின் ஆசிரியராகவோ இருக்க விருப்பமில்லை. நான் சாதுவாக இருக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற பிச்சைக்காரனாக இருக்க விரும்புகிறேன்.” யோகி எனது கண்களை நேரடியாக பார்த்து தனது விசிறியை உயர்த்தி உரத்த குரலில், “ரங்கராஜா, நீ ஒரு சாது. இந்தப்பிச்சைக்காரன் சொல்கிறேன் நீ ஒரு சாது. ரங்கராஜா நீ பேராசிரியராகவோ, பத்திரிக்கையின் ஆசிரியராகவோ இருக்கலாம். இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நீ ஒரு சாது. இந்தப்பிச்சைக்காரன் சொல்கிறான் ரங்கராஜன் ஒரு சாது.” அவரின் உறுதியான இந்த அறிவிப்பு எனது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பின்னர் யோகியிடம், “அடுத்து நான் என்ன செய்யவேண்டும்? எங்கே நான் போக வேண்டும்? என்ன பெயரில் எனது பணிகளை இனிநான் செய்யவேண்டும்?”

“என் தந்தை உன்னை அவ்வப்போது வழிநடந்துவார்”, என்று பதில் சொன்ன யோகி மேலும், ”என் தந்தை உன்னை எவரும் தவறாக வழிநடத்தாமலும் பார்த்துக் கொள்வார்,” என்று கூறிய யோகி, எனது மகன் விவேகானந்தனையும் அழைத்து குகைக்குள் எங்களின் அருகே அமரச் சொன்னார். அதன்பின் அவரும் அவரது பக்தர்களும் வெளியே நின்று பிற நிகழ்வுகளைப் பார்த்தனர். யோகி பலமுறை தனக்கு குடிநீர் எடுத்துவரச் சொன்னார். ஒவ்வொரு முறையும் நானே அதனைச் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். அவர் இந்த வேலைக்காரன் அவரோடு குடிநீர் அருந்தவும் செய்தார். எனக்கு அந்த கூட்டத்தில் பேச விருப்பமா என்று கேட்டார். அதற்கு நான், “மஹராஜ் நீங்கள் அனுமதித்தால் நான் சில நிமிடங்கள் பேசுகிறேன்.” என பதிலளித்தேன். அவர் மீண்டும் என்னை கூட்டம் நடக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றார். அங்கே அவருக்கு மாலையணிவிக்கப்பட்டது. என்னை பேசுவதற்கு அழைக்கப்பட்டபோது, நான் யோகியை வணங்கிவிட்டு மேடைக்குச் சென்றேன். நான் அரைமணி நேரத்திற்கு பாரதத்தின் சிறப்பு மிக்க ஆன்மீக பாரம்பரியம் குறித்தும், பாரத நாட்டில் தட்சிணாமூர்த்தி தொடங்கி சுவாமி ராம்தாஸ் மற்றும் யோகி ராம்சுரத்குமார் வரை வழிவழியாக வந்துள்ள குரு பரம்பரை குறித்தும் அந்த புனிதமான நாளில் இந்த சாதுவுக்கு அற்புத யோகியால் நடந்த தீக்ஷை அளிப்பு நிகழ்வு குறித்தும் பேசினேன் . எனது பேச்சை முடித்துவிட்டு, மேடையை விட்டிறங்கி யோகியிடம் திரும்பினேன். அவர் என்னை ஆசிர்வதித்து மீண்டும் என்னை குகைக்கு அழைத்துச் சென்றார். யோகி என்னுடைய கரீபியன் தீவுகளுக்கான பயணத்திட்டம் குறித்து விசாரித்தார். மேலும் யோகி தென் அமெரிக்காவுடனான இந்துக்களின் சகோதரத்துவம் குறித்தும். என்னிடம் பேசினார். 

சாது அருணாச்சலம் மற்றும் கிறிஸ்டி எங்களோடு இணைந்தனர். உணவு விநியோகம் நடைபெறும் போது யோகி வெளியில் வந்து என்னை உணவுகூடத்திற்கு இழுத்துச் சென்றார். ஆனால் அவ்விடம் அமர இடம் இல்லாமல் நிரம்பியிருந்தது. எனவே நாங்கள் மீண்டும் ராம்தாஸ் குகைக்கு வந்து சேர்ந்தோம். ஒரு கருணைமிகுந்த தாய் எங்களுக்கு உணவை கொண்டு வந்தார். யோகி என்னை நோக்கி கைக்காட்டி, “இந்த சுவாமி பழங்களையும், இனிப்புக்களையும் மட்டுமே சாப்பிடுவார். இன்று அவர் உப்பு உள்ளவைகளை எடுத்துக்கொள்ளமாட்டார்.” என்று கூறி சில பழங்களையும், பாயாசத்தையும் இந்த வேலைக்காரன் எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார். அவர் உணவு உண்டப்பின் அவரது கரங்களை கழுவ நான் தண்ணீர் ஊற்றினேன். பின்னர் நாங்கள் வெளியே அமர்ந்திருந்தோம். சில பக்தர்களும் எங்களோடு இணைந்தனர். மதுரை சித்தாஸ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சித்த நரஹரி குருஜி, சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்த ஸ்ரீ ஒம் தத் சத் அடிகள் போன்றோரும் எங்களோடு இணைந்தனர். ஒரு பக்தர் புகைப்படம் எடுக்க விரும்பியபோது, யோகி தன்னோடு ரங்கராஜனும் அனைத்து புகைப்படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினார். எனது கைகளை பிடித்து அதனை உயரத்தூக்கினார், இந்த தாழ்மையான வேலைக்காரனை, சீடனை குரு உயர்த்திய தருணமது. 

மாலை ஐந்து மணிவரை நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம், யோகி இந்த வேலைக்காரனின் கரங்களை சில நிமிடங்கள் தவிர்த்து எப்போதும் பிடித்த வண்ணம் இருந்தார். நான் அவருக்கு தண்ணீர் கொண்டு வரவும், கூட்டத்தில் பேசவும் மட்டுமே எழுந்து சென்றேன். பின்னர் நாங்கள் தங்கியிருந்த மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தோம். மீண்டும் யோகியிடம், “நான் என்ன செய்யவேண்டும் மஹராஜ்? எனது எதிர்காலத்திற்குரிய வழிக்காட்டுதலைத் தாருங்கள்” என்று கேட்க, “என் தந்தை உன்னை வழி நடத்துவார். நீ இப்போது திரும்பிச் சென்று இத்தனைக்காலமாக நீ செய்து வந்த பணிகளை தொடர்ந்து வா. துறவு என்பது எதனையும் விட்டுவிடுவதுமல்ல, எதையும் பெறுவதுமல்ல. அது இந்த உலகத்துடனான உன் அணுகுமுறையில் வரும் மாற்றம். என் தந்தை ஒருவரே நிலைப்பெற்றிருக்கிறார், வேறெருவரும் இல்லை, வேறெதுவும் இல்லை.” மேலும் யோகி கூறியது, “ரங்கராஜா, நேற்றுவரை நீ விரும்பியபடி செயல்களை செய்து வந்தாய், இந்தக்கணம் முதல் இந்தப் பிச்சைக்காரன் தனது தந்தையின் பணியை உன் மூலமாக செய்ய இருக்கிறான்.” 

யோகி விவேகானந்தனை அழைத்து, “விவேகானந்தன், உனது தந்தைக்கு சென்னையில் நிறைய வேலைகள் உள்ளது. நீயும், உனது தந்தையும் இப்பொழுது போகலாம்.” நாங்கள் அவர் பாதங்களை வணங்கி, அவரிடம் இருந்து விடைப்பெற்றோம். 

விவேக் ஹாலில் தொலைந்த யோகியின் புகைப்படத்தை தேடியவாறு இருந்தான். யோகி கிறிஸ்டியை அனுப்பி நாங்கள் கிளம்பி விட்டோமா என பார்க்கச் சொன்னார். கிறிஸ்டி நாங்கள் கிளம்பவில்லை என்ற சேதியை பகிர, யோகி அவரை தொடர்ந்து நாங்கள் கிளம்புவது குறித்து தகவல் தெரிவிக்கச் சொன்னார். எனவே, நான். ஒரு பக்தரிடம் அந்த புகைப்படத்தை கொண்டு வருமாறு கூறிவிட்டுச் சென்றேன். நாங்கள் செல்லும் வழியில் இந்த வேலைக்காரன் யோகி முந்திய நாள் மாலை யோகி தந்த அவரின் படத்தைப் பெற்றுக் கொண்டான். அதனை பின்னர் சட்டமிட்டு வைத்துக் கொண்டேன். 

மிக அபூர்வமான மூன்று விஷயங்கள் என சங்கரர் கூறுபவை – “மனித பிறப்பு, மிக உயர்ந்த லட்சியத்தை தேடல், மற்றும் குருவின் வழிகாட்டுதல்”. வாழ்க்கையின் ஓட்டத்தில் இவைகள் தன்னிச்சையாக வந்தார். அதைவிட பெரும் பேறு வேறு என்ன தேவை. எனது குரு கூறுகிறார், “ஒரு ஆன்மீக குருவை பெறுதல் எளிதானதல்ல, சிலசமயம் ஒரு ஆன்மீக குருவை அடைய பல பிறவிகள் தேவைப்படலாம்.” குருவின் அளவிலாத இரக்கம், பொங்கும் கருணை குறித்து என்ன பேச இயலும். அவரே இந்த தாழ்மையான சாதகனை கடவுள் உணர்தல் என்ற பாதையில் வழி நடத்துபவர். 

மகிமை பொருந்திய பிச்சைக்காரர்களின் வரிசையில் உள்ள எனது குரு என்னை வழி நடத்துகிறார் ! ஜெய் குரு மஹராஜ் ! 

யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய் ! வந்தே மாதரம்.

 ஏப்ரல் – 28, 1988 ல் திருவண்ணாமலை பப்பா ராம்தாஸ் குகையில் சாதுவிற்கு யோகி ராம்சுரத்குமாரால் நடந்த தீக்ஷை நிகழ்ச்சி
சாதுவின் தீக்ஷை நடக்கையில் இருந்த பக்தர்களும். சுவாமி சுந்தரராமன், சாது மற்றும் பகவான்.  

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.19 – 2.21

அத்தியாயம் 2.19 

பகவான் வெளியிட்ட சகோதரி நிவேதிதா அகாடமியின் வெளியீடுகள்

மே 31 , 1990 அன்று திருமதி. பாரதி, சிரஞ்சீவி விவேக், சௌ. நிவேதிதா ஆகியோர், பகவானுக்கு வந்த கடிதங்களையும், அதற்கு யோகியின் உத்தரவுபடி சாது அனுப்பிய பதில் கடிதங்களின் நகல்களையும் எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு யோகியை காணச் சென்றனர். ஜூன் 2 அன்று சென்னையில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தால் துவக்கப்படும் வேத வகுப்புகள் குறித்து பகவானுக்கு தெரியப்படுத்தினர். பல இளைஞர்கள்  ருத்ரம், சமகம், சூக்தங்களை கற்க ஆர்வம் காட்டினர். வேத வகுப்புகள் தவிர்த்து சத்சங்க நிகழ்வுகளை பகவான் பக்தர்களின் இல்லங்களில் ஏற்பாடு செய்யும் வேலையில் மும்முரமாக இருந்தனர். நிவேதிதாவும் அவருடன் பணிபுரிபவர்கள் மீண்டும் ஜூன் – 9 அன்று திருவண்ணாமலை சென்று வேத வகுப்புகள் சிறப்பாக நடந்து கொண்டிருப்பதை தெரிவித்தனர். பிரபல எழுத்தாளர் உளுந்தூர்பேட்டை சண்முகம் சாதுவின் இல்லத்திற்கு வந்து பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு குருவிற்கு மரியாதை செலுத்தினார். யோகி ராம்சுரத்குமார் அவர்களின் வழிக்காட்டுதலின்படி இசையமைப்பாளர் இளையராஜா திரு. T.P.M. ஞானப்பிரகாசம் எழுதிய “திருவண்ணாமலையில் ஓர் குழந்தை“ என்ற நூலை சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிட உதவினார். 

இந்த சாது, விவேக் மற்றும் அருப்புக்கோட்டையை சேர்ந்த A.V. ராமமூர்த்தி ஆகியோருடன் பகவானின் இல்லத்திற்கு ஜூன் – 14 , 1990 அன்று சென்றோம். நாங்கள் பகவானின் இல்லத்திற்கு மாலை வெகு நேரம் கழித்து சென்றடைந்த போதிலும் எங்களை வரவேற்று, சிறிது நேரம் அவரது நாமஜெபம் கூறுமாறு சொல்லிவிட்டு, பின்னர்  எங்களை கிளம்பிச்சென்று ஓய்வெடுத்துக்கொண்டு காலையில் வருமாறு கூறினார். மறுநாள் அவரை காணச்சென்று அவருக்கு மாலை அணிவித்தோம். பின்னர் அவர் எங்களை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். மேற்கு பிரகார சுவற்றின் அருகே அமர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் அவர் முன் வரிசையாக அமரச்சொன்னார். பின்னர் அவர் எங்கள் பணிகளைப்பற்றி கூறுமாறு சொன்னார். இந்த சாது யோகியிடம், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பேட்ஜ் தயார் செய்ய விரும்புவதாகவும், அதற்கு யோகியின் ஒரு புகைப்படத்தை தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும், கூறினான். யோகி விவேக்கிடம் தன்முன் புகைப்பட ஆல்பத்தை வைக்கச் சொன்னார், அதில் ஏதேனும் ஒரு பக்கத்தை பிரிக்குமாறு விவேக்கிடம் யோகி கூறினார். அவ்விதமே விவேக் செய்தார், அந்தப்பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு புகைப்படத்தை விவேக்கை தொடுமாறு யோகி கூறினார். விவேக் அவ்விதமே செய்ய, குரு அந்த புகைப்படத்தை தேர்வு செய்தார். யோகி தனது கையொப்பத்தை அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் போட்டு அதனை ஆசீர்வதித்து தந்தார். இந்த சாது பகவானிடம் யோகி ஜெயந்தி விழாவை ஒருநாள் நடத்துவதற்கு பதிலாக மூன்று நாட்கள் நடத்தினால், பல வெளியூர்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்றும், மேலும் அவர்கள் ஜெயந்தியை ஒட்டி நடைபெறும் ராம்நாம் ஜபம், மற்றும் வேத கருத்தரங்கு போன்றவைகளில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறினான். பகவான் அதற்கு ஒப்புதல் அளித்ததோடு, “செய். என் தந்தை உன்னை ஆசீர்வதிப்பார்“ என்றார். இந்த சாது யோகியிடம் இளையராஜா செய்த உதவி குறித்தும் கூறினான். 

அதன்பின் யோகி எங்களை கிழக்கு பக்கம் அழைத்துச் சென்று கோபுர வாசலுக்கு அருகே எங்களை ஒரு மரத்தின் கீழே அமர வைத்தார். அங்கே மூன்று பக்தர்களான தேவகி, துவாரகநாத் ரெட்டி மற்றும் சந்தியா போன்றோர் எங்களோடு இணைந்தனர். பகவான் அவர்களை ஆசீர்வதித்து நாம் அனைவரும் அவரது இல்லத்திற்கு போகலாமா என துவாரகநாத் இடம் கேட்டார். அவர் சரியென்று கூற நாங்கள் அனைவரும் இரண்டு கார்களில் பயணித்து துவாரகநாத் ரெட்டி அவர்களின் இல்லத்தை அடைந்தோம். எங்களுக்கு அமருவதற்காக விரிக்கப்பட்ட பாயில் சில எறும்புகள் இருந்தன. யோகி அதனோடு விளையாடத் துவங்கினார். அவரைப் பொறுத்தவரை அந்த சிறிய உயிரினமும் தந்தையே. “தந்தை மட்டிலுமே இருக்கிறார். வேறெவரும் இல்லை. வேறெதுவும் இல்லை“ என்று தொடர்ந்து அவர் கூறியவாறே இருந்தார். துவாரகநாத் சமீபத்தில் எடுக்கப்பட்ட யோகியின் படங்களை அவரிடமே காட்டினார். யோகி துவாரகநாத்தை சிறிது நேரம் உற்று நோக்கிவிட்டு, அவர் வாழ்க்கை அனுபவத்தை கூறுமாறு பணிந்தார். அவரும்.கூறத் தொடங்கினார். பின்னர் குரு இந்த சாது குறித்து கூறத் தொடங்கினார். “உனக்குத் தெரியுமா , ரங்கராஜன் இந்தப்பிச்சைக்காரனுக்காக சில வேலைகளை செய்து வருகிறான். இந்தப்பிச்சைக்காரனுக்கு இவன் நிறைய விளம்பரங்களைத் தருகிறான்.  அவன்து நண்பர்கள் ‘மேக் ஹிஸ்டரி’ என்ற ஒரு பத்திரிகை நடத்தி வருகின்றனர். அவர்களும் இந்தப்பிச்சைக்காரனுக்கு விளம்பரம் தருகின்றனர். இந்தப்பிச்சைக்காரன் ‘வரலாற்றை உருவாக்குகின்றான்’,“ எனக்கூறி அவர் சிரித்தார். மேலும் யோகி தொடர்ந்து, “ரங்கராஜன் ராம்நாம் இயக்கத்திற்கும் சிறந்த பணியை செய்து வருகின்றான்.” இந்த சாது யோகியிடம்,  இந்தியாவில் இருக்கும் பக்தர்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் பக்தர்களுக்கும், ராம்நாம் இயக்கத்தில் பங்கு கொண்டமைக்கு நன்றி தெரிவித்து 400 கடிதங்கள் எழுதியதாக கூறினார். விவேக் ஒரு கடித நகலை யோகியிடம் தந்து அதனை முழுமையாக வாசித்தார். யோகி மேலும் அவர் பக்தர்களுக்கான பரிந்துரைகளையும் படித்தார். “எது உங்கள் தலைமையகம்“ என கேட்டார், நாங்கள் “மெட்ராஸ்“ என்று பதிலளித்தோம். 

சந்தியா எங்களுக்கு சிறிது மோர் தந்தார். பின்னர் எங்களுக்கு மதிய உணவு பரிமாறினார். நாங்கள் அனைவரும் யோகியின் பக்கத்தில் அமர்ந்து உணவை உட்கொண்டோம். மதிய உணவுக்குப்பின் நாங்கள் அமர்ந்திருந்த வராண்டாவிற்கு வந்தோம். எங்களோடு இணைந்த ராமமூர்த்தியின் நண்பர்கள் “குமுதம்“ இதழின். ஒரு பிரதியை கொண்டு வந்திருந்தனர். அதில் திரு. எம்.எஸ். உதயமூர்த்தி யோகியை குறித்து எழுதியிருந்தார். விவேக் அவருக்காக அதை படித்தான். யோகி உதயமூர்த்தி குறித்து விசாரித்தார். அவரை சந்தித்தது யோகியின் நினைவில் இல்லை. 

சந்தியா யோகியிடம் வந்து விவேக்கை மறுபக்கம் அமரச்சொல்லி தேவகிக்கு இடம் தருவதற்கு அனுமதி கேட்டார். யோகி சிரித்தவாறே, “அவசியமில்லை அவள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்“ என்றார். சந்தியா புன்னகைத்தவாறே “அநியாயம்” என்றார். பகவான் தன் வெடிச்சிரிப்பை உதிர்த்தார். பின்னர் ரெட்டி பகவானிடம் தனது இல்லத்திற்கு சுவாமி சின்மயானந்தா வந்ததை பற்றி கூறினார். பகவான், “சாதுக்கள் வந்தால் கிரஹஸ்தர்கள் தங்கள் இல்லத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார். யோகி சிரித்தவாறே தொடர்ந்தார்: ”ஆனால் சந்தியா அதை அநியாயம் என்பாள்.“ நாங்கள் அனைவரும் சிரித்தோம். சந்தியா வெட்கமடைந்தாள். அவள் ஒரு டேப்ரிக்கார்டையும், ஓஷோவின் பேச்சு அடங்கிய ஒரு கேசட்டையும் கொண்டுவந்தாள். பகவான் அதனை ரசித்து கேட்டார். எப்போதெல்லாம் ஓஷோ ஒரு கோபமான மனிதரின் செயல்களை விவரித்தாரோ அப்போதெல்லாம் யோகி நகைச்சுவையாக “ஐய்யய்யோ!“ என்றார். அதன்பின் யோகி, ஓஷோவின் பேச்சை முதன்முறையாக கேட்பதாக சொன்னார். “ஆச்சார்யா ரஜனீஷ் ஒர் அற்புத மனிதர், அவர் ஒரு மகாத்மா“ என பகவான் கூறினார். டீயும் சில பழங்களும் எங்களுக்கு வழங்கப்பட்டன. தேவகி தனது கல்லூரி விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்படுவது குறித்தும், திருவண்ணாமலையை விட்டு போவது குறித்த தனது தயக்கம் குறித்தும் கூறினார். பகவான் அவரை இப்பொழுதே கிளம்ப வேண்டும் என வலியுறுத்தினார். தேவகி பகவானிடம் தனது கல்லூரி சில வேலைகளை தந்திருப்பதாக கூறினார். பகவான் அவரிடம் கல்லூரி முதல்வர் அனுமதித்தால் அவர் தனது வேலைகள் முடியும்வரை இருக்கலாம் என்றார். மேலும் யோகி தொடர்ந்தார், தன்னைப்போன்று மக்கள் சோம்பேறியாக இருப்பதை தான் ஊக்குவிக்கவில்லை என்றார். “நான் துவாரகநாத்தை போன்று ஒரு நல்ல கிரஹஸ்தனுமல்ல, அல்லது ரங்கராஜனைப் போன்று ஒரு நல்ல சன்னியாசியுமல்ல; நஹி காவ் கா குத்தா , நஹி ஜங்கிள் கா ஷேர் ( நாட்டு நாயுமல்ல, காட்டு சிங்கமுமல்ல). அவர் தொடர்ந்து சிரித்தவாறே, தன்னைப்போல் எவரும் சிக்கி தவித்து விழாமல் இருக்கவே விரும்புவதாக கூறினார். அதனாலேயே தேவகி தனது வேலையைத் தொடர வேண்டும் என்றார். நாங்கள் அனைவரும் தேவகியிடம் விடைபெற்றோம். துவாரகநாத் மற்றும் சந்தியா பகவானை அவரது காரில் அழைத்துச் சென்றார்கள். நாங்கள் இன்னொரு காரில் அவரை பின்தொடர்ந்தோம். ரொசாரோ பகவான் இல்லத்திற்கு வெளியே பகவானின் தரிசனத்திற்காக காத்திருந்தார். 

பகவானின் இல்லத்தை அடைந்த பிறகு யோகி முதலில் ராமமூர்த்தி மற்றும் அவரது நண்பர்களை விடை பெற செய்தார். பின்னர் இந்த சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை பெற்று அதனை சக்தியேற்றம் செய்து சாதுவிடம் தந்தார். விவேக் மற்றும் சாதுவை ஆசீர்வதித்து அவர்களை அனுப்பி வைத்தார். 

சென்னை வந்து சேர்ந்தவுடன் இந்த சாது “குமுதம்” பத்திரிக்கையின் பாமா கோபாலன் அவர்களிடம் பேசி, டாக்டர். எம். எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு பகவான் குறித்த கட்டுரையை பாராட்டி ஒரு கடிதம் ஒன்றை எழுதினேன். “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற நூல் உட்பட சகோதரி நிவேதிதா அகாடமியின் பல நூல்களை அவருக்கு அனுப்பி வைத்தோம். ஜூன் 20 அன்று அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ஸ்ரீதர குருக்கள்  சாதுவை சந்தித்தார். சாது  ஒரு சிறிய காணிக்கையை பகவானின் பெயரால் கோயிலில் நடக்கும் சுந்தரமூர்த்தி விழாவிற்கு அளித்தான். ஜூன் 24 அன்று பேராசிரியர் தேவகி ராம்நாம் எண்ணிக்கையோடு சேலத்திலிருந்து எனது இல்லத்திற்கு வந்திருந்தார். அன்று மதியம் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் கூட்டம் ஒன்று இளைஞர் சங்கத்தின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்க நடத்தப்பட்டது. அனைத்து லிகித ராமநாம நோட்டுகளும் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. கே.என்.வெங்கடராமன் மூலம் மாம்பலத்தில் உள்ள ராமநாம வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூன் 29 அன்று அசோக்நகர் அஸ்வமேதா மண்டபத்தில் இந்த சாது பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டேன். யோகி ராம்சுரத்குமார் குறித்தும், ராமநாமம் குறித்தும் இந்த சாது அங்கே பேசினான். ஜூலை 1 அன்று இந்த சாது இளையராஜாவின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டான். “திருவண்ணாமலையில் ஓர் குழந்தை” என்ற நூலிற்கான அச்சு செலவிற்கான தொகையை இளையராஜா முன்பே கூறியிருந்தபடி தந்தார். இந்த சாது அடுத்தநாளே யோகிக்கு கடிதம் ஒன்றை எழுதினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த சாது மகிழ்வோடு இந்த தகவலை பரிமாறுகின்றான். நாங்கள் ஐந்து பிரிண்டிங் பிரஸிடம் இருந்து திரு.T.P.M. ஞானப்பிரகாசம் அவர்களின் நூலுக்கு கொட்டேஷன் பெற்றிருந்தோம். நேற்றிரவு நாங்கள் திரு. இளையராஜா உடன் அமர்ந்து அச்சுப்பணிக்கான இறுதிகட்ட வேலைகளை முடிவு செய்தோம். திரு.இளையராஜா உரிய பணத்தை தந்து அச்சுப்பணியை துவக்குமாறு கூறினார். 

தங்களின் ஆசியால் நாங்கள் கையெழுத்து பிரதியை பிரிண்டர் இடம் வேலையை துவங்க தந்திருக்கிறோம். மிக குறுகிய காலத்தில் இப்பணி முடிவடையும் என நம்புகிறோம். அச்சுப்பணி நிறவடைந்தவுடன் நாங்கள் புத்தகத்தோடு தங்களை பார்க்க வருகிறோம்.

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் ராமநாம பிரச்சாரத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. வேத வகுப்புகளிலும், தினமும் நடக்கும் சத்சங்க நிகழ்வுகளிலும் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். சங்கத்தின் செயல்பாடுகளில் பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கு கொள்வதுடன், ராமநாமத்தை மக்களிடம் ஊக்குவிக்க பல குழுக்களை துவக்கியிருக்கிறோம். 

“ஹிந்துயிசம் டுடே” யின் ஆசிரியர் சுவாமி முருகஸ்வாமி, ஹவாய், யு.எஸ்.ஏ யிலிருந்து எழுதிய கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டப்படி”

ஜூலை 5 அன்று சாது இன்னொரு கடிதம் ஒன்றை பகவானுக்கு அனுப்பினான். அத்துடன், 1986 ல் பகவானை தரிசிக்கும் பாக்கியம் பெற்ற, மலேசியா பக்தர் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றையும், பகவானின் சார்பில் சாது அவருக்கு அனுப்பிய பதிலின்  நகலும் உடன் இணைத்திருந்தான். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஆவடியில் ஜூலை – 8 , 1990 அன்று நடைபெற இருக்கும் ஒருநாள் ஆன்மீக புத்துணர்வு முகாம் குறித்து பகவானுக்கு தெரிவித்து, இளைஞர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் மற்றும் அவரது ஆன்மீக  வளர்ச்சிக்கு ஆசி அளிக்குமாறு வேண்டினான்.

 ஜூலை – 8 அன்று ‘தி இந்து’ செய்தி தாளில் பகவான் குறித்த இளையராஜாவின் கட்டுரை வெளிவந்தது. ஆவடி CVRDE ல் ஆன்மீக புத்துணர்வு சந்திப்பு நடைப்பெற்றது. 

திருமுல்லைவாயிலின் சுவாமி தேவானந்தா, திருமதி. திலகவதி ஐ.பி.எஸ், குமாரி் விஜயலட்சுமி, ஐ.ஆர்.எஸ் மற்றும் பிற முக்கிய பகவானின் பக்தர்கள் இந்த சாதுவுடன் பகவானின் பணியை பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டிருந்தனர். ஆகஸ்ட் 3 , 1990 அன்று திருமதி. பாரதி மற்றும் பேரா. ரங்கநாயகி சீனிவாசன் பகவானின் இல்லத்திற்கு சென்று, பகவானிடம், இந்த சாது, ஆகஸ்ட் – 6 அன்று அங்கு வர இருப்பது குறித்தும், சகோதரி நிவேதிதா அகாடமியின் நூல் வெளியீடுகளான, “திருவண்ணாமலையில் ஓர் குழந்தை”, மற்றும் “Did Swami Vivekananda Give Up Hinduism?” (சுவாமி விவேகானந்தர் ஹிந்துத்துவத்தை விட்டு கொடுத்தாரா?) என்ற பேரா. G.C. அஸ்னானி எழுதிய நூல் ஆகியவற்றை அந்த நாளில் வெளியிட எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். பகவானின்  பரவசமூட்டும் லீலா அனுபவத்தை விவேக் அன்று பெற்றான். விவேக் சென்னை சென்டல் ரயில் நிலையத்தில் மும்பைக்கு புதிய பதிப்பக வெளியீடுகளை அனுப்ப சென்றிருந்தான்.. திரும்பி வருகையில் அவனது பர்ஸ், ஐடென்டிடி கார்ட், மற்றும் பிறவற்றை விவேக் இழந்து கவலைக் கொண்டிருந்தான். இந்த சாது பகவானின் படத்தின் முன்னால் அமர்ந்து யோகியிடம் பிரார்த்தனை செய்தான். பின்!னர் எழுந்து விவேக் இடம் நிச்சயமாக தொலைந்த பர்ஸ் கிடைக்கும் என்றான்.  அடுத்தநாள் காலை முனிரத்தினம் என்ற ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் சென்னை சென்டரல் ஸடேஷனில் அதனை கண்டெடுத்தாக கூறி, அதனை கொண்டு வந்து எங்கள் இல்லத்தில் ஒப்படைத்தார். இது பகவானின் ஒரு லீலை. பாரதி திருவண்ணாமலையில் இருந்து அடுத்தநாள் காலை பகவானின் பிரசாதங்கள் உடன் திரும்பினாள்.. 

ஆகஸ்ட் – 6 அன்று குமாரி.விஜயலட்சுமி பகவானின் சில புகைப்படங்களை பகவானிடம் ஒப்படைக்க அனுப்பினார். சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர் ஆக விஜயலட்சுமி அவர்கள் இணைந்தார். அன்று மதியம் விவேக் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சிலரும் திருவண்ணாமலைக்கு சென்றோம். நாங்கள் பகவானின் இல்லத்திற்கு இரவு 9.30 மணிக்கு சென்று சேர்ந்தோம். அந்த நேரத்தில் அவர் தெருவின் முனையில் நின்று எதையோ வாங்கி கொண்டு இருந்தார். அவர் எங்களை பார்த்தவுடன் தன் அருகில் என்னை அழைத்தார். வறுத்த பலாக்கொட்டையை வாங்கிய அவர் எங்களை அழைத்துச் சென்று வேர்கடலை விற்கும் கடையில் எங்கள் அனைவருக்கும் ஒரு வறுத்த வேர்கடலை பொட்டலத்தை வாங்கி தந்தார். பின்னர் அவர் எங்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே கோயில் குளத்தினருகே அமரவைத்து வேர்கடலையை சுவைக்கச் சொன்னார். “இங்கே அமர்ந்திருங்கள். இந்தப்பிச்சைக்காரன் அரைமணி நேரத்தில் வந்துவிடுவான்.” என்றார். அவர் கோயிலுக்குள் சில வேலைகளை முடித்துவிட்டு அரைமணி நேரத்தில் திரும்பிவந்தார். அதுவரை நாங்கள் கோயிலின் பிரகாரத்தின் சுவரை நோக்கியவாறு அமர்ந்து இருந்து நாமஜெபத்தை சொன்னோம். விவேக் இடம் யோகி, “ஏன் நீ பலாக்கொட்டையை சாப்பிடவில்லை என வினவி” அவற்றை பிறரிடம் பகிருமாறு உத்தரவிட்டார். அவரின் உத்தரவுபடி நாங்கள் பலாக்கொட்டைகளை சாப்பிட்டோம். அங்கிருந்த மக்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு குருவோடு நாங்கள் என்ன செய்கிறோம் என்று வேடிக்கை பார்த்தனர். தாரிணி என்ற இளம்பெண், பி.ஏ. இலக்கியம் படிக்கும் பெண், தனது குடும்பத்தடன் வந்திருந்தார். பகவான் அந்தப்பெண்ணோடு உரையாடலை துவக்கினார். குழந்தைபிரசவத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அவளது சகோதரியை ஆசீர்வதித்தார். அந்த சகோதரியின் கணவன் ஒரு போலீஸ்காரன். அவனின் தந்தை திருவண்ணாமலையின் எஸ்.ஐ. தாரிணிய யோகி சில பாடல்களை பாடுமாறு கூறியதோடு அவள் சாய்பாபாவை சந்தித்திருக்கிறாரா என்று வினவினார். அவள் தான் புட்டபர்த்தி சென்றிருந்த போதும் அவரை சந்தித்ததில்லை என பதிலளித்தார். யோகி அவள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் ஆசீர்வதித்ததோடு, அவளின் மாமனான ஒரு கைரேகை ஜோதிடரையும் ஆசீர்வதித்தார். யோகி சிரித்தவாறே அவனிடம் இந்தப்பிச்சைக்காரனின் எதிர்காலம் குறித்து ஏதேனும் குறிப்பிட இயலுமா எனக்கேட்டார். அவன் யோகியின் கைரேகையை பார்க்க விருப்பம் தெரிவித்தபோது, பகவான் சிரித்தவாறே தனக்கு எங்களோடு வேலையிருப்பதாக கூறினார். அந்த குடும்பம் மீண்டும் யோகியை காலையில் சந்திக்க அனுமதி கேட்க யோகி அதற்கு சம்மதித்தார். அனைவரையும் அனுப்பியப்பின் நாங்கள் கோயிலை விட்டு பகவானுடன் வெளியே வந்தோம். அவர் ஒரு கவரிங் நகைக்கடையில் நுழைந்து சிலபொருட்களை வாங்கிக் கொண்டு அக்கடையின் முதலாளி மற்றும் அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தினார். அப்போது நேரம் 11.30 மணி. சாத்தியிருந்த பாத்திரக்கடையின் வராண்டாவிற்கு வந்து அமர்ந்தோம். நாங்கள் கொண்டு வந்திருந்த புத்தகக் கட்டினை பிரித்து புத்தகங்களை பகவானிடம் ஒப்படைத்தோம். இந்த சாது யோகியிடம் நாங்கள் மீண்டும் நாளை சந்திக்கிறோம் என்று கூறிவிட்டு ஆசிப்பெற்று கிளம்பியபோது, யோகி நாளை காலை 10 மணிக்கு வருமாறு கூறினார். நாங்கள் அவரிடம் விடைப்பெற்று கிளம்பினோம். வழக்கம்போல் பிருந்தாவன் லாட்ஜ் வந்தபோது அதில் இடம் இல்லை என்பதால், சிவகாசி நாடார் சத்திரம் நோக்கி சென்றோம். அதுவும் கோயிலின் திருவிழா காரணமாக நிரம்பியிருந்தது. இருப்பினும் எங்களுக்கு வராண்டாவில் படுக்க சில தலையணைகள் மற்றும் பாய்கள் தரப்பட்டது. சூரிய உதயம் வரை நாங்கள் ஓய்வெடுத்தோம். 

காலைக்குளியலுக்குப் பிறகு , விவேக் சந்தியாவந்தனமும் 108 காயத்ரி ஜபமும் சொல்ல, இந்த சாது 10,800 காயத்ரி ஜபம் செய்தான். பின்னர் நாங்கள் ஆலமரத்து குகைக்கு சென்றுவிட்டு யோகியின் இல்லத்திற்கு வந்தோம். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் பெருமகிழ்வோடு வரவேற்ற யோகி ராம்சுரத்குமார், “ரங்கராஜா, நீ ஒரு சிறந்த வேலையை செய்துவிட்டாய். புத்தகம் நன்றாக வந்துள்ளது. அது மிகச்சிறப்பாக வந்துள்ளது. இந்தப்பிச்சைக்காரன் இன்று காலை அதனை பார்த்தான். இந்தப்பிச்சைக்காரன் அதன் முன்னுரையையும், பத்தாம் அத்தியாயத்தையும் ஒருவரை படிக்கச் சொன்னான். முன்னுரை சிறப்பாக உள்ளது. கடைசி அத்தியாயத்தில் இந்தப்பிச்சைக்காரனைப்பற்றி சில தகவல்கள் உள்ளன.” அவர் “திருவண்ணாமலையில் ஓர் குழந்தை” என்ற நூலைக் குறித்து தான் பேசினார். இந்த சாது யோகியிடம் தான் முன்னுரையில் அனைத்து அத்தியாயங்களையும் இணைத்ததாக கூறினார். யோகி இந்த சாதுவை திரும்பத்திரும்ப ஆசீர்வதித்து வேலை சிறப்பாக செய்யப்பட்டதை கூறினார். இந்த சாது யோகியிடம் அவரது கையொப்பம் இட்ட சில பிரதிகளை இளையராஜா, ராமமூர்த்தி, மற்றும் சிலருக்காக கேட்டார். அதனை நிறைவேற்றிய யோகி, “நீ சிறந்த வேலையை செய்து விட்டாய். உனது பணி வளர்வதை என் தந்தை பார்த்துக்கொள்வார். உனது பணிக்கான தேவைகள் அனைத்தையும் தந்தையே உனக்கு தருவார்“ என்றார். யோகி ‘தத்துவ தர்சனா’வின் சில பிரதிகளையும் கையொப்பம் இட்டார். “Did Swami Vivekananda Give Up Hinduism?”  என்ற, பேரா. G.C. அஸ்நானி எழுதி சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிட்ட நூலிலும் யோகி கையொப்பம் இட்டு தந்தார். இந்த சாது பகவானிடம் ராமகிருஷ்ண மிஷன் இன்று நீதிமன்றத்தில் ராமகிருஷ்ணாயிஸம் என்பது ஹிந்துயிஸம் அல்ல என்றும், மிஷன் சிறுபான்மையினரின் ஒரு நிறுவனமாகும் என்றும் ஒரு வழக்கு கொண்டுவந்துள்ளது என விளக்கினான். பகவான், ராமகிருஷ்ண மிஷனின் நிலைப்பாடு குறித்து தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, “இவ்விதம் அவர்கள் செயல்படுவது தவறு“ என்றார். பகவானின் கருணையால் உச்ச நீதி மன்றம் ராமகிருஷ்ணா மிஷனின் வாதத்தை நிராகரித்து அவர்களது வழக்கை தள்ளுபடி செய்தது,. பின்னர் மிஷனும் அதனுடைய நிலைபாட்டை கைவிட்டது.

பகவான், யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா டிசம்பர் – 1 அன்று சிறப்பாக நடைபெற ஆசீர்வதித்தார். சாது யோகியிடம் தனது காயத்ரி நாள் முதல் விஜயதசமி நாள் வரையிலான விரதத்தை மேற்கொள்வதை குறித்து கூற, “உண்ணாவிரதம் அல்லது விருந்து உண்பது, எது இந்தப்பிச்சைக்காரனின் பணிக்கு உதவுகிறதோ அதை செய்! சில பழங்களை எடுத்துக்கொள்“ என்றார். யோகி சில திராட்சைப்பழங்களை தந்தார். . எனது வானொலி உரையான, “சுதந்திரத்தின் கருத்துக் கூறுகள்“ என்ற தலைப்பு பற்றி யோகியிடம் கூற, யோகி அதன் நேரம் மற்றும் நாளை குறித்து வைத்துக்கொண்டார். “விவேகானந்தா கேந்திர பத்தரிக்கா” வில் சாதுவின் கட்டுரையான “ராஷ்டிர தர்மத்தின் கருத்துகள்“ என்பதை படித்ததாகவும், “அந்தக் கட்டுரையில் இந்தப்பிச்சைக்காரன் குறித்தும் நீ குறிப்பிட்டிருக்கிறாய்“ என்றும் கூறி யோகி சிரித்தார். சாது யோகியிடம் ஒவ்வொருமுறை பேசும் போதும், எழுதும் போதும், தங்களை அழைக்காமல், நினைக்காமல் எனது மனமானது இருக்காது என்று கூற, யோகி தன் கரங்களை உயர்த்தி புன்னகையோடு ஆசீர்வதித்தார். யோகி சாதுவின் கரங்களைப் பற்றி சிறிது நேரம் தியானித்தார். பின்னர் அவர் விவேக்கிடம், ”நேற்றிரவு நடந்த அனைத்தையும் நீ புரிந்து கொண்டாயா?“ என வினவினார். விவேக் அந்தக் கேள்வியால் குழம்பி நிற்க, பகவான் சிரித்தவாறே தொடர்ந்தார்: ”நீ கண்டவைகள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொள். அதனை ஒரு கட்டுரையாக்கி ‘தத்துவ தர்சனா’வில் வெளயிடு”. இந்த சாது பகவானிடம் விவேக் “ஹிந்துயிசம் டுடே”வில் எழுத விரும்புகிறான் என்றான். யோகி அதனை ஆசீர்வதித்தார். யோகி எங்களை நீண்ட நேரம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறி அவர் எங்களுக்கு கிளம்ப அனுமதி கொடுத்தார். அவர் இந்த சாதுவின் தண்டத்தையும், தேங்காய் சிரட்டையையும் எடுத்து ஆசீர்வதித்து தந்தார். எங்களை வாசல்வரை வந்து வழியனுப்பி, அவர் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்தவாறே இருந்தார். 

விவேக் தனது பயண அனுபவத்தை ‘தத்துவ தர்சனா’ இதழில், “குருவின் லீலை“ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாக எழுதியிருந்தான்: 

“அது 1990 ஆம் ஆண்டின் புனிதமான ச்ராவண பூர்ணிமா நாள். நாங்கள் திருவண்ணாமலைக்கு இரவு 9 மணிக்கு சென்றடைந்தோம். யோகி ராம்சுரத்குமார் எங்களுக்காக காத்திருந்ததைப் போல், கோயிலின் தேரடி அருகே ஒரு பொட்டலத்தில் பலாப்பழத்தின் வறுத்த கொட்டைகளோடு  நின்றிருந்தார். முதலில் எனது தந்தை ( சாது ரங்கராஜன் ) சென்று அவரது பாதங்களை வணங்கினார். அவரைத் தொடர்ந்து பேரா. C.V. ராதாகிருஷ்ணன், திரு. ராஜ்மோகன் மற்றும் நான் அவரது பாதங்களை மரியாதையோடு வணங்கினோம். ராம்ஜி பலாப்பழக் கொட்டை பொட்டலத்தை என்னிடம் ஒப்படைத்தார். 

அவர் எங்களை கோயிலை நோக்கி கூட்டத்தினரிடையே பாத்திரக்கடை மற்றும் பிற கடைகளின் வழியே முன் நடத்திச் சென்றார். அவர் வேகமாக நடந்து சென்றார் அவரைப் பின்தொடர நாங்கள் ஓட வேண்டியிருந்தது. அவர் ஏதோ ஒரு சக்தியால் நிறுத்தப்பட்டதைப் போல் வழியில் இருந்த ஒரு தள்ளுவண்டியில் வறுத்த வேர்கடலை விற்கப்படும் கடையில் நின்று எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேர்க்கடலை பொட்டலம் வாங்கினார். அனைத்து பொட்டலங்களையும் ஒரு கையில் ஏந்திக்கொண்டு அதனை அவர் தோள்பட்டைக்கு மேலே உயர்த்தி அதனை பரிசுபொருளைப் போல் பிடித்துக்கொண்டு கோயிலை நோக்கி நடந்தார். யோகியை கண்ட மக்களில் சிலர் தெருவில் அவருக்கு வழியை விட்டு நின்றனர். கடைகளில் இருந்த சிலர் எழுந்துநின்று அவருக்கு மரியாதையையும், வணக்கத்தையும் செலுத்தினர். யோகி அந்த கடைகளை கடந்து எங்களை கோயிலின் மண்டபத்தை நோக்கி சென்று அதன் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். நாங்கள். அவரை நோக்கியவாறு அமர்ந்தோம். எங்கள் பின்னால் பெரும் ஜனத்திரள் நின்றது. அவர் எழுந்து எங்களிடம் தான் ஒரு அரைமணி நேரத்திற்கு விடைபெறுவதாகவும், திடீரென எங்கள் பக்கம் திரும்பி வேர்க்கடலையை சுட்டிக்காட்டி எங்களிடம், “இது உண்பதற்கு, வைத்துக்கொண்டிருப்பதற்கல்ல“ என்றார். நாங்கள் அனைவரும் அவரது புனிதமான பிரசாதத்தை சாப்பிடத்துவங்கினோம். அவர் மீண்டும் எங்களிடம், “நான் உங்களை விட்டுவிட்டு செல்கிறேன். நான் அரைமணி நேரம் கழித்தோ அதற்கு முன்பாகவோ திரும்பிவிடுவேன்“ என கூறிவிட்டு கோயிலுக்குள் விரைந்தார். 

சிறிதுநேரம் கழித்து யோகி எங்கள் இடத்திற்கு திரும்பிய பொழுது எனது கைகளில் பலாப்பழக் கொட்டையை வைத்திருப்பதைப் கண்டு கடுமையான சொற்களில், “நீ இன்னமும் வைத்திருக்கிறாயா?“ என வினவினார் நான் அவரிடம் பலாப்பழக்கொட்டை உண்பதற்கு கடினமாக இருப்பதாக கூறினேன். யோகி எனக்கு நினைவுப்படுத்தும் வகையில் இந்த கொட்டைகள் வறுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை என்னால் உண்ண முடியாது எனில், அதனை பிறர்க்கு வினியோகிக்கலாமே என்றார். நாங்கள் அனைவரும் பலாப்பழக்கொட்டைகளை சாப்பிட்டோம். மீதமிருந்த கொட்டைகளை நான் எனது  பையில் வைத்துக் கொண்டேன். 

அதே சமயம் ஒரு ஐம்பது பக்தர்கள் அவரைச்சுற்றி திரண்டனர். அதில் அசாமில் இருந்து வந்திருந்த திரு தேவ் என்பவரும் இருந்தார். திரு. தேவை யோகி எங்களுக்கு அறிமுகப்படுத்தி “தேவ் அசாமை சேர்ந்தவர்“என்றார். யோகி தேவை நோக்கி, “இப்போதெல்லாம் மக்கள் அசாமை, ஆசம் என்றழைக்கிறார்கள், அப்படித்தானே?“ என்று கேட்டுவிட்டு அவரது குழந்தைத்தனமான சிரிப்பை உதிர்த்தார். கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் யோகிக்கு பத்து ரூபாயை தந்தார். யோகி, தேவை நோக்கி, “ஒருவன் எனக்கு பத்து ரூபாய் கொடுத்தான். நான் செல்வந்தனாக விரும்புகிறேன். நீ ஒரு தொகையை கொடு. மற்றவர்களும் அதனை பின்பற்ற துவங்குவார்கள். இந்தப்பிச்சைக்காரன் பணக்காரன் ஆகிவிடுவான்” என்றார். நாங்கள் அனைவரும் இதனைக் கேட்டு சிரிக்கத் தொடங்கினோம். 

யோகி கூட்டத்தினரிடையே அமர்ந்திருந்த ஒரு பக்தரை அழைத்தார். அவர் அந்த பக்தரை தன் அருகே அமர வைத்து அவளின் பெயர் என்ன என்று கேட்டார். அவள் “தாரணி“ என்றாள். யோகி அவளிடம் அந்த  பெயரின் உச்சரிப்பை கேட்டு முதல் எழுத்து ‘தா’ வா அல்லது ‘த’ வா என தெளிவுப் படுத்திக்கொண்டார். யோகியின் பேச்சு பணம் குறித்து சறுக்கியது. சாதகர்கள் அவர்களின் சாதனாக்களின் பாதி வழியிலேயே பணத்தின் பின்னால் ஓடுவதைக் குறித்து நையாண்டியோடு குறிப்பிட்டார். அவர், “இந்தப்பிச்சைக்காரன் பணக்காரனாக விரும்புகிறான். நீங்கள். பணம் தருவீர்களா? இந்தப்பிச்சைக்காரன் கடவுள் தேடலோடு துவங்கிவிட்டு, இப்போது காம, குரோதம் போன்றவற்றிற்கு இறையாக விழுந்துவிட்டான். ஆகவே இந்தப்பிச்சைக்காரன் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறான்.” இதனை ஒரு பாடமாக ஆன்மீக பயணத்தின் வழித்தடங்களில் பயணிப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தாரணியை சுட்டிக்காட்டி அவளைக் குறித்து கூறுமாறு சொன்னார். அவள் தான் சென்னையில் இருந்து வருவதாகவும் அவளது சொந்த ஊர் மதுரை என்றும் அங்கே அவளது பெற்றோர்கள் தற்போதும் வசித்து வருவதாகவும் கூறினாள். தனக்கு நான்கு சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களில் இரண்டு பேர்கள் வந்துள்ளதாகவும், சகோதரியின் கணவன் போலீஸ்காரனாக இருப்பதாகவும், அவனது தாய் தன்னோடு வந்திருப்பதாகவும், தாய்மாமன் மற்றும் சிலரும் தன்னோடு வந்திருப்பதாகவும் அவள் கூறினாள். 

யோகி அவளிடம் எவ்விதம் தன்னை அறிந்து கொண்டாய் என வினவினார் அதற்கு அவள் யோகியை, இங்கு கூடியிருந்த கூட்டத்தின் மூலமாகவே அவர் சுவாமி என அறிந்து கொண்டதாகவும் கூறினாள். யோகி அதற்கு, “நான் சுவாமி அல்ல. நானொரு பிச்சைக்காரன். நான் இந்த பிச்சைப்பாத்திரத்திரம் கொண்டு பிச்சையெடுப்பதை நீ காணவில்லையா?“ என்று கேட்டார். யோகி அவளிடம் தனது இல்லத்திற்கு காலையில் வந்திருந்தாயா என வினவ, அவள் தான் காலையில் இல்லத்திற்கு வந்திருந்ததாகவும், ஆனால் அவரை  சந்திக்க முடியவில்லை என்றும் கூறினாள். 

யோகி ராம்சுரத்குமார் அவளிடம் உனக்கு ஏதேனும் பாடல் தெரியுமா என வினவினார். அவள் ஒரு பாடலை பாடினாள். யோகி அவளிடம் “இன்னொன்று“ என்று கூறினார். ஒரு பாடலில் அவள் சத்ய சாய் பாபாவை குறிப்பிட்டாள். யோகி அவளிடம் எப்போதேனும் சாய் பாபாவின் தரிசனத்தை பெற்றிருக்கிறீர்களா என கேட்டார். அதற்கு அவள் தான் பாபாவின் தரிசனத்தை பெற்றதில்லை என்றும், ஆனால் தான் புட்டபர்த்திக்கு சென்றிருந்ததாகவும் கூறினார். 

யோகி அவளிடம் என்ன செய்கிறாய் என வினவினார். அவள் தான் பி.ஏ. (ஆங்கிலம்) முதல் வருடம் சென்னைப் பல்கலைகழகத்தில் படிப்பதாகவும், சகோதரர் ப்ளஸ் டூ படிப்பதாகவும், தான் அஞ்சல்வழிகல்வி பாடத்திட்டத்தில் படிப்பதாகவும் கூறினார். யோகி யாரிடமிருந்தாவது நீ ஏதேனும் வழிக்காட்டுதல்களை பெறுகிறாயா என்று கேட்க அவள் “ஆம்” என்றாள். 

யோகி ராம்சுரத்குமாருக்கு அவள் பிஸ்கெட்களை கொடுத்தாள். அவர் சிலவற்றை தன் சிரட்டையிலும் எடுத்துக்கொண்டார். பின்னர் யோகி அவளிடம், “நான் இவர்கள் அனைவரிலும் இருக்கிறேன் (கூட்டத்தினரை சுட்டிக்காட்டினார்), அவர்களுக்கும் விநியோகம் செய். நான் இந்த வாயின் வழியாக மட்டும் உண்பதில்லை, அனைவரின் வாயின் மூலமும் உண்கிறேன்.“ அவள் அங்கே குழுமியிருந்த அனைவருக்கும் பிஸ்கெட்களை விநியோகம் செய்தாள். 

அவள் தனது மாமாவை அறிமுகப்படுத்தினாள். அவர் ஒரு சோதிடர். அவர் யோகியிடம் தான் கைரேகை சாஸ்திரம் அல்லது சப்தரிஷி நாடிகளை பார்த்து சோதிடம் சொல்வேன் என்றார். தன் தொடர்புடைய ஏதேனும் தகவல்களை அவரால் கூற முடியுமா என யோகி கேட்டார். உடனே யோகியின் நாடியை பார்க்க மரத்தாலான ஒரு அமைவு முன்வைக்கப்பட்டு யோகி இடம் அதில் கை வைக்குமாறு கோரப்பட்டது.. யோகி அதற்கு ஒத்துழைக்காமல் தனது கரங்கள் காணிக்கைகளை உண்டு அழுக்கடைந்து இருப்பதாக கூறினார். 

இரவு 11 மணி ஆனதன் காரணமாக யோகி அவர்களை வழி அனுப்ப விரும்பினார். இரவு நேரங்களில் தங்கும் விடுதிகள் ( உடுப்பி பிருந்தாவன் ) மூடப்பட்டுவிடும். ஆனால் அதே நேரத்தில் யோகிக்கு பழங்களையும், குளிர் பானங்களையும் வாங்குவதற்கு சிலர் சென்றனர். 

தாரணி இந்த மாத பௌர்ணமி முதல் தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் தான் திருவண்ணாமலைக்கு வர இருப்பதாக கூற, யோகி அவளின் சந்திப்பிற்கு அனுமதி அளித்தார். அவள் மறுநாள் காலை அவரை சந்திக்க அவரது அனுமதியை கேட்டாள். யோகி அனுமதித்தார்.

அவளது மாமா பழங்கள் போன்ற காணிக்கைகளோடு ஒரு பாக்கெட் சிகரெட்டையும் அவருக்கு கொடுக்க நினைத்தார். அவள், “விளையாட்டுத்தனமாக இருக்காதே“ என்று மாமாவை கடிந்து கொண்டாள். அவன் என்னிடம் யோகிக்கு சிகரெட் பாக்கெட்டை தரலாமா என வினவினான். நான் அவனிடம், “சிலர் அவருக்கு சிகரெட் பாக்கெட் காணிக்கையை தருவதுண்டு. அதனை யோகி ஏற்பதும் உண்டு. இந்த இடம் கோயிலாக இருப்பதால் அவர் ஏற்பாரா இல்லையா என தெரியாது“ என்றேன். 

அவர்கள் யோகியிடம் விடைப்பெற்றப்பின் யோகி என்னை வழிநடத்தி போகுமாறு கூறினார். நாங்கள் கடைகளின் வழியே சென்றோம். பின்னர் அவர் ஒரு கடைக்குள் நுழைந்தார்.  அங்கே அவர் அமர ஒரு சேர் போடப்பட்டது. அந்த கடையின் உரிமையாளர் யோகியின் கழுத்தைச் சுற்றி ஒரு நெக்லெஸ் அணிவித்தார். அதற்குள் கணிசமான கூட்டம் அங்கே கூடி, “ ஓ! நமது விசிறி சாமி இங்கே இருக்கிறார்“ என கூறத்தொடங்கினர். அதற்குள் யோகி  அவ்விடம் விட்டு நகர்ந்தார். அந்த கடையில் கணிசமான வியாபாரம் நடந்தது. 

யோகி என் தந்தையிடம் வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா என வினவினார். எனது தந்தை யோகியிடம், யோகிராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் வெளியீடான, திரு.T.P.M ஞானப்பிரகாசத்தின் “ திருவண்ணாமலையில் ஓர் குழந்தை“ என்ற தமிழ்  நூலின் சில பிரதிகள் கொண்டு வந்திருப்பதாக கூறினார். இது தவிர்த்து எனது தந்தை ஆண்டுதோரும் காயத்ரி முதல் விஜயதசமி வரை அனுஷ்டிக்கும் 55 நாட்கள் உபவாச விரதத்தை அடுத்த நாள் யோகியின் முன்னிலையில் துவக்க விரும்பினார். யோகி எங்கள் அனைவரையும்  காலையில் வருமாறு கூறினார். 

அடுத்தநாள் நாங்கள் காலையில் சென்றபோது. யோகி எனது தந்தையை பாராட்டினார். “ நீ மிகச்சிறந்த வேலையை செய்திருக்கிறாய். இந்தப்புத்தகம் மிக நன்றாக வந்துள்ளது. இந்தப் பிச்சைக்காரன் சில பிரதிகளை சிலரிடம் தந்து இன்று காலையில் அவர்களை முன்னுரை மற்றும் இந்தப்பிச்சைக்காரன் குறித்த கடைசி அத்தியாயத்தையும் படிக்கச் சொன்னேன்.“ 

எனது தந்தை யோகியிடம் சென்னையில் நடக்க இருக்கும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி குறித்த ஏற்பாடுகள் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பகிர்ந்தார். யோகி தனது ஆசியாக,  அந்த தமிழ் புத்தகத்தின் பிரதிகளிலும்,  அகாடமியின் வேறு இரண்டு புத்தக வெளியீடுகள், ‘தத்துவ தர்சனா’ ஆறாவது ஆண்டு இதழ் மற்றும் “Did Swami Vivekananda Give Up Hinduism?”  (சுவாமி விவேகானந்தர் ஹிந்துத்துவத்தை கைவிட்டாரா?) என்ற G.C. அஸ்நானி அவர்கள் எழுதிய நூல், ஆகியவற்றின் பிரதிகளிலும் அவரது கையொப்பத்தை பதித்தார்.

யோகி என் தந்தையை அவரது விரதத்திற்காக ஆசீர்வதித்து, “உண்ணாவிரதமோ, விருந்தோ, எனது தந்தையின் பணியை செய்ய எது உனக்கு  உதவுகிறதோ அதனை செய். நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய். என் தந்தை உன்னை ஆசீர்வதிப்பார்” என குரு தனது ஆசியை பொழிந்து அவரது முயற்சிகளின் வெற்றிக்கும் ஆசீர்வதித்தார். நாங்கள் அவர் பாதத்தை வணங்கி அவர் அனுமதியைப் பெற்று சென்னைக்கு கிளம்பினோம். 

நாங்கள் முற்றிலும் புத்துணர்வு ஊட்டப்பெற்று, உடலளவிலும், மனதளவிலும் புதிய தெம்புடன் அன்றைய இரவில் நடந்த நிகழ்வுகளையும், பாடங்களையும் நினைவில் அசைப்போட்டவாறு திரும்பினோம். 

ஒரு நாசிக் பக்தரின் கடிதம் ஒன்று யோகி ராம்சுரத்குமார் பெயருக்கு எங்களது முகவரியில் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு பகவானின் ஆசியும், அவர் கூறியபடி பதிலும் அனுப்பப்பட்டது. விவேக் திரு. இளையராஜா அவர்களை ஆகஸ்ட் – 11 அன்று சந்தித்து யோகியின் ஆசிகளை தெரிவித்து, யோகி கையொப்பம் இட்ட தமிழ் நூலின் பிரதிகளை அவரிடம் கொடுத்தான். இந்த சாதுவின் உரை வானொலியில் ஆகஸ்ட் – 14 அன்று ஒலிபரப்பானது. திருவண்ணாமலையில் பணிபுரிந்த திரு. S. கோவிந்தராஜன் என்ற, யோகியின் பக்தரான, ஓய்வு பெற்ற மாவட்ட செஷன்ஸ் நீதிபதி, இந்த சாதுவை சந்தித்து, தனது இல்லத்தில் ராம்நாம் சத்சங்கத்தை நடத்தவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார். திரு. கோவிந்தராஜன் விவேக் உடன் திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் – 18 அன்று யோகியின் ஆசியைப் பெற சென்றார். இந்த சாது பகவானுக்கு ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் தந்து அனுப்பினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்களின் கருணையாலும் , ஆசியாலும் ஆகஸ்ட் – 14 அன்று வானொலியில் ‘சுதந்திரத்தின் அம்சங்கள்’ என்ற உரை கேட்டவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த உரையை தாங்களும் கேட்டு ஆசீர்வதித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். 

T.P.M. ஞானப்பிரகாசம் நேற்று மதியம் இங்கு வந்திருந்தார் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறோம். மதியம் வந்த அவர் மாலைவரை எங்களோடு இருந்தார். அவரது பிரச்சனைகள் குறித்து சுதந்திரமாக பேச இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீங்கள் அவரிடம் பத்து பிரதிகளுக்கு மேல் ஒருமுறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியதையும் பகிர்ந்தார். நான் அவரிடம் பத்து புத்தகங்களையும் ரூ.300 ம் தந்து அனுப்பினேன். விற்பனை நடந்தப்பின் அவ்வப்போது அவரை இங்கே அழைத்து அவருக்குரிய பணத்தை தந்துவிடுகிறோம். அவர் தனக்கு தங்களின் பக்தர்களிடம் மிக குறைந்த அளவு தொடர்பு வைத்திருப்பதால் அந்த நூலிற்கான பிரச்சாரத்திற்கு எங்களாலான அனைத்து உதவிகளையும் அவருக்கு செய்வோம். 

திருவண்ணாமலையில் பணிபுரிந்த திரு.S.கோவிந்தராஜன் என்ற ஓய்வுபெற்ற மாவட்ட செஷன்ஸ் நீதிபதியின் இல்லத்தில் ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் நாளை நடைபெற இருக்கிறது, அவர் திருவண்ணாமலையில் பணியில் இருக்கும் போதிருந்தே உங்கள் பக்தராக இருந்திருக்கிறார். அவர் சமீபத்தில் எங்களை  சந்தித்து அவரது இல்லம் இருக்கும் சாஸ்திரி நகர் அடையாரில் ராம்நாம் சத்சங்கத்தை நடத்த அழைத்திருக்கிறார். இந்த நிகழ்வின் வெற்றிக்கு நாங்கள் உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

வெவ்வேறு ராம்நாம் பிரச்சார மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் உடன் ஒரு கூட்டத்தை சென்னையில் ஆகஸ்ட் – 25 அன்று நடத்துகிறோம். அதில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மூன்றுநாள் விழா கொண்டாட்டங்கள் குறித்தும், ராம்நாம் பிரச்சாரத்தின் விரிவாக்கம் குறித்தும் கலந்தாலோசனை செய்கிறோம். உங்கள் கருணையாலும், ஆசியாலும் நாங்கள் எங்களின் முயற்சிகளில் பெரும் வெற்றியை பெறுவோம் என நம்புகிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்”

ஆகஸ்ட் 19 அன்று அடையாரில் நடந்த ராம்நாம் சத்சங்கம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பல பக்தர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Photo

சாது பகவானுக்கு ஆரத்தி எடுக்கிறார்

அத்தியாயம் 2.20 

பகவானின் உடல் நலமின்மையும்,

சிஷ்யனின் சங்கடமும்

ஆகஸ்ட் 19 அன்று விவேக் திருவண்ணாமலையில் இருந்து காலையில் திரும்பினான். அவன் ஒரு கவலையளிக்கத்தக்க செய்தியை கொண்டுவந்திருந்தான். பகவான் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், பகவான் வாந்தி எடுக்கும்போது சிவப்பான நிறத்தில் சில பொருட்கள் இருந்ததாகவும், இது குறித்து பகவானிடம் கேட்டபோது அவர் புன்னகைத்தவாறே தான் சில பழங்களை எடுத்துக் கொண்டதாகவும் அதனாலேயே அவ்விதமாக இருந்ததாகவும் கூறினார். சாதுவின் அண்டைவீட்டுக்காரர்களான பிரசாத் மற்றும் வசந்தி என்ற இரு பக்தர்கள் திருவண்ணாமலையில் அன்று காலை இருந்தனர். அவர்களும் யோகியின் உடல்நிலை குறைவு பற்றி உறுதி செய்தனர். அன்றிரவு இளையராஜா ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் பகவானின் உடல்நலம் குறித்து இந்த சாதுவிடம் விசாரித்தார். இந்த சாது கவலையுற்று இருந்தபோதிலும், குரு தன்னைப் பார்த்துக்கொள்வார் என்றும் அனைத்தும் விரைவில் சரியாகும் என்றும் கூறினான். இருப்பினும் ஆகஸ்ட் 21 அன்று இந்த சாதுவை  திருவண்ணாமலை உடுப்பி பிருந்தாவன் ஓட்டலின் உரிமையாளர் திரு. ராமசந்திர உபாத்யாயா தொலைபேசியில் அழைத்து, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். பகவான் அவரது இல்லத்தின் வராண்டாவில் படுத்து இருப்பதாகவும் அவர் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார் என்றும், யோகி யாரையும் பார்க்கவும், அவரை கவனித்துக்கொள்ளவும் அனுமதிக்கவில்லை என்றும் கூறி, இந்த சாதுவை உடனே திருவண்ணாமலைக்கு கிளம்பி வருமாறும் உபாத்யாயா அழைத்தார். இந்த சாது மிகுந்த சங்கடத்தில் ஆழ்ந்தான். பகவான் இந்த சாதுவிடம் நிரந்தர உத்தரவாக, எப்போது திருவண்ணாமலை வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே தெரிவித்து விட்டே வரவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் உபாத்யாயா அதற்கெல்லாம் இப்பொழுது நேரமில்லை என்றும் யோகி எவரையும் அருகே அனுமதிப்பதில்லை என்பதால் உடனே சாது திருவண்ணாமலைக்கு விரைந்து வரவேண்டும் என்றும் கூறினார். இந்த சாது மீண்டும் இளையராஜாவிடம் பேசினார், அவரும். இந்த சாது நிச்சயம் பகவானை காண போகவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். திரு. பாஸ்கர்தாஸ் என்ற பக்தர் தனது கார் மற்றும் ஓட்டுனரை சாது கிளம்ப அனுப்பினார். சாது விவேக் உடன் திருவண்ணாமலைக்கு கிளம்பினான். 

குருவின் இல்லத்தை அடைந்தபோது அவர் வராண்டாவில் பாயில் படுத்திருந்தார். பக்தியோடு யோகிக்கு உணவளிக்கும் சுந்தரி என்ற அம்மையார். அவர் பக்கத்தில் இருந்தாள். அவள் பகவானிடம் சாது வந்திருப்பதாக தெரிவித்தாள். குரு எழுந்திருக்காமலே அவளிடம் சாதுவிடம் பின்னர் வருமாறு கூறினார். பெருமாள், பெருமாளப்பன், உபாத்யாயா போன்ற பக்தர்களும், சாதுவையே யோகி அனுமதிக்கவில்லையே என வருத்தம் கொண்டனர். இருப்பினும் இந்த சாது திருவண்ணாமலையில் தங்குவதற்கு உபாத்யாயா ஏற்பாடு செய்திருந்தார். இந்த சாது மற்ற பக்தர்களான T.R. ஸ்ரீனிவாசன், ரமணாச்ரமம் மணி, திரு. துவாரகநாத் ரெட்டி, மற்றும் சந்தியா போன்றவர்களை சந்தித்து விட்டு இரவு ஓட்டல் பிருந்தாவனில் தங்கினார். 

அடுத்தநாள் காலை, நாங்கள் மீண்டும் பகவானின் இல்லத்திற்கு சென்றோம். சுந்தரி மற்றும் அவரது மகன் அங்கிருந்தனர். அவர்கள் இந்த சாது வந்திருப்பதாக யோகியிடம் கூறினர். யோகி உடனே எங்களை உள்ளே அழைத்தார். சில பக்தர்கள் அங்கே கூடினர். அவர் எங்களிடம் தனக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்றும், எனவே தான் முழுமையான ஓய்வை ஒரு வாரத்திற்கு எடுத்துக்கொள்ள போவதாகவும் கூறி, “நான்  மிகச்சரியாகவே உள்ளேன்” என்றார். தன்னால் கோயிலுக்கு கூட போக முடியும் என்று கூறிவிட்டு, அனைவரையும் அவ்விடத்தை விட்டு கிளம்புமாறு சொல்லிவிட்டு, என்னையும் விவேக்கையும் அங்கு அமரச்சொல்லி, அவர் மெல்ல எழுந்து சுவற்றில் சாய்ந்து கொண்டே மெல்ல உள்ளே நடந்து சென்றார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் ஒரு புதிய ஜிப்பா மற்றும் சால்வையை அணிந்து கொண்டு வெளியே வந்து சாதுவின் முன் அமர்ந்தார். சாதுவின் கரங்களைப் பற்றிக்கொண்டு தனது சட்டைப்பையில் இருந்து மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதனை சாதுவின் கரங்களில் திணித்து, “நீ இந்தப் பிச்சைக்காரனுக்காக சிறப்பான பணியை செய்தருக்கிறாய். இதனை நீ உன்னோடு வைத்துக்கொள். இந்தப்பிச்சைக்காரன் உன்னிடம் இருந்து பத்து புத்தகங்களை எடுத்துக்கொண்டுள்ளான்.“ இந்த சாது அந்தப்பணத்தைப் பெற தயக்கம் காட்டினான். ஆனால் யோகி மீண்டும், “நீ என் தந்தையின் பணியை செய்கிறாய்“ எனக்கூறி இந்த சாதுவின் கரங்களைப் பிடித்து சில நிமிடங்கள் தியானித்தார். “இந்தப் பிச்சைக்காரன் உன்னை அனுப்பி வைக்கிறான். நீ சென்று என் தந்தையின் பணியை செய்“ எனக் கட்டளையிட்டார். இந்த சாது பகவானிடம் தான் அவரது தேவைக்காக ஒரு காரினை கொண்டு வந்திருப்பதாக சொன்னான். பகவான் சாதுவிடம், “அது அவசியமில்லை. இந்தப்பிச்சைக்காரன் எங்கும் செல்லப்போவதில்லை“ என்றார். இந்த சாது தன்னை மாலைவரை தங்க அனுமதிக்குமாறு கூறினார். பகவான் இந்த சாதுவிற்கு ஒரு அதிர்ச்சியை தந்தார். சென்னையில் அன்று மாலை ஒரு கூட்டத்தில் இந்த சாது பேச வேண்டியிருப்பதை நினைவு கூர்ந்தார். இந்த சாது சென்னை பெரியார் நகரின் விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவில் பேச வேண்டியிருந்தது. பகவானுக்கு அது பற்றிய செய்தி முன்னமேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சாது பகவானிடம், தான் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் நிகழ்வில் தன்னால் கலந்து கொள்ள முடியாத நிலைமை பற்றி தெரிவித்ததாகவும், அவர்களிடம் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள சொன்னதையும் பகிர்ந்தான். பகவான் சாதுவின் நிகழ்ச்சி ரத்தாவதை ஏற்கவில்லை. மேலும் யோகி மீண்டும் வலியுறுத்தி, ”உனது நேரம் அரிதானது. நீ எனது தந்தையின் பணியை செய்ய வேண்டும். நீ தேவையின்றி உனது நேரத்தை இங்கே வீணாக்கக்கூடாது. இந்தப்பிச்சைக்காரன் மிக நன்றாக இருக்கிறான். என் தந்தை என்னை கவனித்துக் கொள்கிறார். நீ இப்பொழுதே சென்னைக்கு போகலாம், எனது தந்தையின் பணியை தொடரலாம் “ என்றார். 

ரெஜினா சாரா ராயன்  என்ற ஆசிரியர் எழுதிய, “Only God – A Biography of Yogi Ramsuratkumar” (ஒரே கடவுள் – யோகி ராம்சுரத்குமார் சரிதம்) எனும் நூலில் இந்த நிகழ்வை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

பணத்தை திரும்ப பெற மறுத்த யோகி தனது பக்தரிடம், “ரங்கராஜா நீ அந்த கூட்டத்தில் இன்று மாலை உரையாற்ற வேண்டும். அது இந்த பிச்சைக்காரனின் உத்தரவு. நேரம் இப்பொழுது என்ன? “ 

“ஒன்பது மணி பகவான்,“ ரங்கராஜன் பதிலளித்தார். 

“ நீ இப்பொழுது கிளம்பினால் சென்னைக்கு உரிய நேரத்திற்கு திரும்பிவிடலாம். சென்னை அடைய எவ்வளவு மணி நேரம் தேவை?“ 

“கார் மூலமாக சென்றால் மூன்று மணி நேரம்.“ ரங்கராஜன் கூறியதோடு, “நான் எனது மதிய உணவை முடித்துவிட்டு கிளம்புகிறேன்.“ 

யோகி ராம்சுரத்குமார் உடனடியான செயலை கேட்டார்: “இல்லை, இல்லை, இல்லை. நீ இப்பொழுதே கிளம்பு. நீ சென்னைக்கு செல். கூட்டத்தில் கலந்து கொள். அது என் தந்தையின் பணி. என் தந்தை அனைவரையும் பார்த்துக் கொள்வார்“ என்றார்.

எனவே ரங்கராஜன் சென்னைக்கு கிளம்பினான். அந்த கூட்டத்தில் உரையாற்றினான். அது ஆகஸ்ட் 22 , 1990. சாது ஆச்சரியப்படும் வகையில் அந்த விழா அமைப்பாளர்கள் அவருக்கு பதிலாக எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருந்ததே குருவின் கருணை. சரியான நேரத்திற்கு கூட்டத்திற்கு சென்று முக்கிய உரை ஆற்றப்பட்டது. 

இன்னொரு பக்தர்,  ரங்கராஜன் கடவுளின் குழந்தையை ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் விட்டுசென்றதை குறித்து சீற்றம் கொண்டார். ரங்கராஜன் அந்த பக்தரின் எதிர்வினையை கொண்டு ஒரு வேறுபாட்டை உணர்த்துகிறார். “நீ ஒரு பக்தன் “ என்று சாது அந்த மனிதனை குறிப்பிட்டு, “நீ குருவிற்காக எதையும் செய்யலாம். அவர் வாயில் உணவைத் திணிக்கலாம். நீ அவருடனான உனது நடத்தையில் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் ஒரு சீடன் அப்படி இருக்க முடியாது. அவன் முழுமையாக தனது குருவிற்கு கீழ்படியவேண்டும்.” 

பகவானிடம் இருந்து கிளம்பும் முன் இந்த சாது பகவான் ஜெயந்திக்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் ராம்நாம் ஒருங்கிணைப்பாளர்களின் ஆகஸ்ட் – 25 ஆம் தேதி கூட்டம் பற்றி குறிப்பிட்டான். “உங்கள் அனைவருக்கும் என் தந்தையின் ஆசீர்வாதங்கள்“ என்றார்  பகவான். இந்த சாது தனது விரதம் சுமுகமாக முன்னேறுவது பற்றி குறிப்பிட, “என் தந்தை உன்னைப் பார்த்துக் கொள்வார்“ என்றார் யோகி. நிவேதிதா மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பிற பணியாளர்கள் குறித்தும் விசாரித்த யோகி தனது ஆசியை இளையராஜா அவர்களுக்கும் தெரிவிக்கச் சொன்னார். சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை கையில் எடுத்து ஆசீர்வதித்ததோடு, சாது மற்றும் விவேக்கை வழி அனுப்பினார்.

வீடு திரும்பியதும், பல பக்தர்கள் சாதுவிடம் யோகியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். இளையராஜா சாதுவிடம், சாது பகவானின் அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என்று கூற, அதற்கு சாது பதிலளித்தார். இளையராஜா பகவானின் பக்தர் அவர் யோகியை கெஞ்சலாம், பகவானை வற்புறுத்தி உணவை உண்ணவைக்கலாம், சிகிச்சைக்கு வற்புறுத்தலாம். ஆனால் இந்த சாது ஒரு சீடன், அவன் குருவின் உத்தரவுக்கு ஒரு இராணுவ வீரனைப்போல் கீழ்படிதல் வேண்டும். ஒரு குரு, “திரும்பி நட“ என உத்தரவிட்டால் சீடன் அதை பின்பற்ற வேண்டும் என்று கூற, இளையராஜா அதனை ஏற்று, திருவண்ணாமலைக்கு உடனே புறப்படுகிறேன் என்றார். 

ஆகஸ்ட் 24 ஆம் தேதி ராம்நாம் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்திற்கு முன்பு சாதுவிற்கு ஒரு சேதி கிடைத்தது. இளையராஜா பகவானின் இல்லத்திற்கு சென்றார் என்றும், பகவான் “க்ருபா” என்ற துவாரகநாத் ரெட்டி இல்லத்திற்கு ஓய்விற்கும், சிகிச்சைக்கும் ஆக மாற்றப்பட்டார் என்பதும் அந்த சேதி. ராம்நாம் பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. அனைத்து முக்கிய பணியாளர்களும் அதில் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் – 31 அன்று இந்த சாது பகவானுக்கு ஒரு விரிவான கடிதம் ஒன்றை எழுதினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

ஆகஸ்ட் 25 அன்று அகில உலக ராம்நாம் யக்ஞத்தின் அமைப்பாளர்கள் கூட்டம் உங்கள் கருணையாலும், ஆசியாலும் வெற்றிகரமாக நடைப்பெற்றது. நாங்கள் பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் இலக்கினை துரிதமாக அடைய எங்கள் அகில உலக பிரச்சாரத்தை விரிவாக்கம் செய்யவும், பிரச்சாரத்தை விரைவாக்கவும் சில முக்கிய முடிவுகளை எடுத்தோம். நாங்கள் ஒவ்வொரு மாகாணத்தின் ராம்நாம் பிரச்சார மையத்திற்கும் ஒரு இலக்கினை நிர்ணயித்து அதனை கண்காணிப்பதை ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அத்துடன் ஒவ்வொரு தனித்தனி நபர்களுக்கும் நாங்கள் ஒரு வேண்டுகோளை அனுப்பியிருக்கிறோம். அதில் ராமநாமத்தை அனைவரையும் அதிகரிக்கும்படி கூறியிருக்கிறோம். அதன்மூலம் 40 கோடி இலக்கை பிரதி மாதம் அடையலாம் என்று முடிவு செய்தோம். இறுதியாக பிரச்சாரத்திற்குரிய துண்டுப்பிரசுரம் மற்றும் பிராந்திய மொழிகளில் பிரச்சாரத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்வது குறித்து முடிவு செய்தோம். உங்கள் கருணையால் எங்களது முயற்சிகள் வெற்றியடையும் என்றே நம்புகிறோம். 

லக்னோவின் சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டான் இந்த சாதுவை ராம் தீர்த்தா ஜெயந்தி விழாவில் பேச இந்த வருடம் அக்டோபர் 21, 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் அழைத்திருக்கின்றனர். நாங்கள் உங்கள் அனுமதியையும், ஆசியையும் இந்த விழாவில் பங்குபெற கோருகிறோம். ப்ரதிஷ்டானின் நிர்வாகிகளும், பக்தர்களும் நமது ராம்நாம் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த பயணம் எங்களுக்கு வட இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவும் நமது பணியை வட இந்தியாவில் பரப்பவும் வாய்ப்பாக அமையும். 

டிசம்பர் 1 முதல் 3 வரை யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி சென்னையில் கொண்டாட ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்படுகின்றன. ஹோமம், பூஜைகள், சொற்பொழிவுகள் போன்றவை முதல் நாளிலும், வேதங்களைப் பற்றிய கருத்தரங்கு இரண்டாம் நாளிலும், அகில உலக ராம்நாம் மாநாடு மூன்றாவது நாளிலும் நடைபெறும். திருச்சூரைச் சேர்ந்த டாக்டர். T.I. ராதாகிருஷ்ணன் இரண்டாம் நாளில் பங்குப்பெற்று வேதச்சடங்குகளின் அறிவியல் முக்கியத்துவம் குறித்த விவாதங்களை அவர் மேற்கொள்வார். கொண்டாட்டங்கள் ராம்நாம் பிரச்சாரத்தை பெரிய அளவில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விரிவாக்கம் செய்ய ஒரு வாய்ப்பைத் தரும். 

திரு. பிரேமானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த குமாரி ஜீனா ரோஜர்ஸ் தங்களின் ஆசிகளையும் வாழ்த்தையும் ஆசிரமத்தின் முதலாமாண்டு விழாவிற்கு கேட்டிருக்கின்றனர். உங்கள் சார்பில் நாங்கள் ஓர் பதிலை அனுப்பியிருக்கிறோம். அவர்களின் கடிதம் மற்றும் பதிலின் நகலை இத்துடன் இணைத்துள்ளோம். 

பிரான்ஸை சேர்ந்த திரு. கிருஷ்ணா கார்ஸலே சோவாசிங், மலேசியாவின் திரு. பத்மநாதா மற்றும் மும்பையைச் சேர்ந்த செல்வி. ரஜினி பாக்வே போன்றோர் தங்களின் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

நாங்கள் திரு. T.P.M. ஞானப்பிரகாசத்தை மீண்டும் எங்களை செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திக்குமாறு கடிதம் எழுதியிருக்கிறோம். அவரிடம் இதுவரை கிடைத்த விற்பனைத் தொகையை மற்றும் நூலின் பிரதிகளை கொடுப்போம். அவரை சந்தித்தப்பின் உங்களுக்கு எழுதுகிறோம். 

சத்சங்கத்தில் தினமும் ஆரத்தியுடன் நிறைவடையும்போது உங்கள் புனிதமான பாதங்களில் நாங்கள் வைக்கும் ஒரே பிரார்த்தனை தங்களின் கருணையானது எப்போதும் எங்களுக்கு வேண்டும் என்பதாகும் நாங்கள் எடுத்து செய்கின்ற செயல்களின் மீது உங்கள் ஆசியும், கருணையும், வழிக்காட்டுதல்களும் தேவை. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்க கூறினர். சிரஞ்சீவி. விவேக், குமாரி  நிவேதிதா மற்றும் திருமதி பாரதி தங்கள் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி. “

செப்டம்பர் – 5 அன்று பரிமேலழகன் இந்த சாதுவை தொலைபேசியில் அழைத்து பகவான் தனது சன்னதி தெரு இல்லத்திற்கு  திரும்பி வந்து விட்டதாக கூறினார். ஜஸ்டிஸ் கோவிந்தராஜன் அவர்களும் தொலைபேசியில் அழைத்தார். செப்டம்பர் – 14 அன்று A.V. ராமமூர்த்தியின் நண்பரான கிருஷ்ணன் என்பவர் காந்தம் பொருத்தப்பட்ட யோகியின் புகைப்பட வட்டத்தகடுகள்  ராம்நாம் சொல்லும் பக்தர்களுக்கு வழங்க கொண்டுவந்தார். சென்னை பெசன்ட் நகரில் 16 ஆம் தேதி போதேந்திர சுவாமி அவர்களின் ஆராதனா விழாவில், ராம்நாம் தாரக மந்திரத்தின் சிறப்புகளைப்பற்றி இந்த சாது பேசினார். செப்டம்பரில் 18 ல் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் ஜெயந்தி அகண்ட ராமநாம ஜபத்தோடு நடைப்பெற்றது பெருமளவில் பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர். அடுத்தநாள் இந்த சாது பூஜ்ய மாதாஜி ஞானேஸ்வரி அவர்களின் 60 – வது பிறந்தநாள் விழாவிற்கு தனது மரியாதையை ஒரு சேதி மூலம் அனுப்பினான். பல இடங்களில் சிறப்பு சத்சங்கங்கள் நடைபெற்றன. காணிமடத்தின் யோகி ராம்சுரத்குமார் மந்திராலாயத்தின் பொன். காமராஜ், சுவாமி தபஸ்யானந்தா உடன், சாதுவை காண வந்தார். செப்டம்பர் 26 ல் சாது மீண்டும் தனது குருவிற்கு கடிதம் ஒன்றை  எழுதி, தனது 55 நாள் விரதம் விஜயதசமி அன்று முடிவடையும் பொழுது ஆசி வேண்டினான்:  

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்களின் குறைவற்ற ஆசியாலும், கருணையாலும் இந்த சாது தனது 55 வது நாள் உபவாஸத்தை விஜயதசமி நாளில் 29-09-1990 ல் முடிக்கிறான். எனது வாழ்வில் எந்த ஒரு கணமும் உங்கள் நாமத்தையோ, உருவத்தையோ மறக்காமல் இந்த தாழ்மையான வேலைக்காரன் இதயத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்ற வரத்தை நீங்கள் தந்து ஆசீர்வதியுங்கள். 

திரு. T.P.M. ஞானப்பிரகாசம் என்னை நேற்று  சந்தித்தார். அவருக்கு இன்னொரு 300 ரூபாய் மற்றும் 10 பிரதிகள் புத்தகமும் கொடுத்தோம். அவர் தனது நாளை எங்களோடு செலவழித்தார். நாங்கள் அவருக்கு எங்களாலான உதவிகளை செய்ய முயற்சிக்கிறோம். 

ராம் தீர்த்தா ப்ரதிஷ்டான், இந்த சாது, சுவாமி ராம் தீர்த்தா ஜெயந்தி விழாவில் அக்டோபர் 21, 22 மற்றும் 23 அன்று பங்கேற்பதற்கான  தங்களது அழைப்பை உறுதி செய்துவிட்டனர். பல ராம் நாம் பக்தர்கள், சாதுக்கள், மஹாத்மாக்கள் இதில் பங்கு பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்வது நமது ராமநாம மகாயக்ஞத்தில் பெருமளவில் உதவும் என்பதே விழா அமைப்பாளர்களின் எண்ணம். உங்கள் ஆசியோடும், அனுமதியோடும் இந்த சாது இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள விரும்புகிறான். இந்த பயணத்துடன் சில முக்கிய இடங்களான பனாரஸ், பிரயாக், மற்றும் பிற வட இந்திய பகுதிகளுக்கும் செல்ல இந்த சாது விரும்புகிறான். 

தீவிரமாக செயல்பட்டு, டிசம்பர் 1 முதல் 3 வரை நடக்க இருக்கும்  மூன்றுநாள் யோகி ராம்சுரத்குமார்  ஜெயந்தி விழாவிற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த சுவாமி சச்சிதானந்தர் எங்களின் ராம்நாம் யக்ஞத்தின் பிரச்சார மையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடப்பதை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். உங்களைக் குறித்தும் அவர் விசாரித்து இருக்கிறார். லக்னோவின் ராம்தீர்த்தா ப்ரதிஷ்டான் தலைவர் திரு. அயோத்யா நாத் மற்றும் செயலாளர் திரு. ஆர்.கே.லால், புதுடெல்லியில் பாரத் சேவாஸ்ரம் சங்கத்தின் சுவாமி கேசவானந்த்ஜி ஆகியோர் தங்களின் புனிதமான ஆசியை வேண்டி தங்களின் வணக்கங்களை தெரிவித்துள்ளனர். 

விவேக், நிவேதிதா , பாரதி, மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களின் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்”

செப்டம்பர் 29 அன்று மங்களகரமான விஜயதசமி நாளில் சாது தனது 55 வது நாள் விரதத்தை பகவானின் பிரார்த்தனையுடன் முடித்தார். சௌ. விஜயலட்சுமி IRS என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அக்டோபர் – 1 அன்று திருவண்ணாமலை செல்ல இருப்பதாக கூறினார். அவர், அக்டோபர் – 1 அன்று, விவேக் மற்றுமொரு பக்தர் ஜெயராமன் ஆகியோருடன் பகவானின் இல்லத்திற்கு காலையில் சென்றனர். விவேக் பகவானிடம் சாதுவின் லக்னோ பயணம் குறித்து பேசினான். பகவான் தனது அனுமதியையும், ஆசியையும் வழங்கினார். விவேக் திரும்பி வந்தவுடன், சாதுவின் லக்னோ பயணத்திற்கு அக்டோபர் 15 – க்கான பயணச்சீட்டினை பதிவு செய்தான். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினர் யோகியின் திருவுருவப்படத்தை திருவல்லிக்கேணியின் வீதிகளில் உலா வர ஏற்பாடு செய்தனர். இளையராஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டு யோகி ராம்சுரத்குமார் இல்லத்திற்கு சென்றிருந்தது குறித்து கூறினார். இந்த சாது அக்டோபர் 10 அன்று, பகவானுக்கு, தனது வடநாட்டு பயணத்திற்கு அனுமதி தந்ததற்கு நன்றி தெரிவித்தும், தனது பிற நிகழ்ச்சிகள் குறித்தும், மற்றும் பகவானின் இல்லத்திற்கு சாது அக்டோபர் 13 அன்று வர இருப்பது குறித்தும் கடிதம் எழுதினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

21 முதல் 23 – 10 – 1990 வரை லக்னோவில் நடக்க இருக்கும்  ராம் தீர்த்த ப்ரதிஷ்டான் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ள இந்த சாதுவிற்கு உங்கள் அனுமதியையும், ஆசியையும் வழங்கியமைக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். 15-10-1990 அன்று இரவு 11.50 மணிக்கு சென்னையில் இருந்து லக்னோ கிளம்பும் லக்னோ எக்ஸ்பிரஸில் எனது பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழா முடிந்தப்பின் இந்த சாது ப்ரயாக், காசி, மற்றும் பிற இடங்களுக்கு பயணித்து விட்டு, ஜாம்ஷெட்பூர் பயணிப்பான். ஜாம்ஷெட்பூர்  கத்மாவில் இருக்கும் ஸ்ரீ ராம பாதுகா ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளரான திரு. T. முத்துக்கிருஷ்ணன் சில காலங்களுக்கு முன், 1008 கோடி லிகித ராமநாமத்தை அவர்களின், ‘ஸ்ரீ சஹஸ்ரகோடி ஸ்ரீ ராமநாம பாதுகா ப்ரதிஷ்டா’ வைபவத்திற்கு பெற்று செல்ல சென்னைக்கு வந்திருந்தார்.                                   மேலும் ராமநாம பிரச்சாரத்தை கிழக்கில் நடத்த முழு ஒத்துழைப்பை தர உறுதியும் அளித்தார். இந்த சாதுவும் சென்னை திரும்பும் முன் கல்கத்தா செல்ல விருப்பம் கொண்டுள்ளான், தமிழ்நாட்டில் இந்த சாதுவின் சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடவேண்டும். 

“ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” மூன்றாவது பதிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் தயார் ஆகும். இது லக்னோவின் பக்தர்களுக்கு தீபாவளி நாளில் பரிசளிக்கப்படும். இந்த தாழ்மையான சீடன் 13 – 10 – 1990 அன்று புத்தகத்தின் முதல் பிரதியை தங்களின் பாதங்களில் வைக்கவும், உங்களின் குறைவற்ற ஆசியை இந்த சாதுவின் வடக்கு நோக்கிய பயணத்திற்கு பெறவும் தங்களை காண வருகிறேன். இந்த தாழ்மையான வேலைக்காரனை தயை கூர்ந்து ஆசீர்வதியுங்கள். யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியை பெரும் கொண்ட்டமாக  டிசம்பர் 1 முதல் 3 வரை 1990 ல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்”

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் என்ற நூலின் பிரதிகள் அக்டோபர் 13 ஆம் தேதி மதியம் அச்சகத்தில் இருந்து வந்து சேர்ந்தது. இந்த சாது திருவண்ணாமலைக்கு மாலையில் விவேக் மற்றும் நிவேதிதா உடன் கிளம்பி இரவு 10 மணிக்கு பகவானின் இல்லத்தை அடைந்தான். பகவான் வராண்டாவில் படுத்து இருந்தார். பகவானின் உதவியாளர் பகவானை எழுப்பி, “சுவாமி சாது ரங்கராஜன் வந்து இருக்கிறார்“ என்று கூறினார். பகவான் எழுந்து எங்களை உள்ளே வரச்சொன்னார். இந்த சாது பகவானிடம் இரவில் நேரம் தவறி யோகியை தொந்தரவு செய்தமைக்கு மன்னிக்குமாறு கோரினான். அச்சகத்தில் இருந்து புத்தகம் தாமதமாக வந்தமையால் தாங்கள் இந்த நேரத்தில் வந்ததாக கூறினான். ஆனால் யோகி அது குறித்து கவலை கொள்ளாமல் எங்களை அவர்முன் அமரச்சொன்னார். பின்னர் அவர் எழுந்து உள்ளே சென்று பெரியசாமி தூரன் அவர்களின் பாடல்கள் அடங்கிய புத்தகத்தின் இரண்டு பிரதிகளை  கொண்டுவந்தார். பகவான் சாதுவிடம் இந்த புத்தகம் உனக்கு கிடைத்ததா என்று கேட்டார். சாது இல்லையென பதில் அளித்தான். யோகி சாதுவிற்கும், நிவேதிதாவிற்கும் ஒரு புத்தகத்தை பரிசளித்தார். அவர் யோகி ராம்சுரத்குமார் நாமத்தை பாடத்துவங்கினார். நாங்கள் அவரோடு இணைந்தோம். சிறிதுநேரம் கழித்து அவர் தரையில் படுத்து ஒய்வெடுக்கத் துவங்கினார். இந்த சாது உதவியாளர் இடமிருந்து விசிறியை வாங்கி அவருக்கு விசிறிவிடத்துவங்கினான். அவர் 11 மணிக்கு ஒருமுறை எழுந்தார். மீண்டும் தூங்கத்துவங்கினார். மீண்டும் அவர் சிறிது நேரம் கழித்து எழுந்து எங்களிடம் நேரம் என்னவென்று கேட்டார். நாங்கள் பதிலளித்தபோது, அவர் ஆச்சரியத்துடன், “ஓ ! இது 12.10 ( A.M)“ என்றார் .இந்த சாது பல விஷயங்களை பேச வந்ததாகவும் அவன் காலையில் வருவதாகவும் கூறினான். யோகி யாரோ காலையில் வர இருப்பதாகவும் அதனால் நாம் இப்போதே பேசுவோம் என்றும் கூறினார். 

சாது யோகியிடம் தான் 15 ஆம் தேதி லக்னோ கிளம்ப இருப்பதாக கூறினான். பகவான் பயணத் திட்டம் குறித்து கேட்டார். சாது அதற்கு பதிலளித்தார்.  இந்த சாது “லக்னோவில் இருந்து நான் பிரயாகைக்கு செல்ல இருக்கிறேன். அங்கே எனது அன்னையின் அஸ்தியை கரைக்க இருக்கிறேன்“ என்றான். பிரயாகைக்கு பிறகு தான் பனாரஸ், ஜாம்ஷெட்பூர் மற்றும் கல்கத்தாவில் ராம்நாம் பணிக்கு செல்ல இருப்பதாக கூறினான். யோகி ராம் தீர்த்த ப்ரதிஷ்டான் நிகழ்ச்சி குறித்து கேட்டார். மற்றும் ஜாம்ஷெட்பூர், கல்கத்தாவின் அமைப்பாளர்கள் குறித்து கேட்டார். இந்த சாது,  ஜாம்ஷெட்பூர் பாதுகா ஆசிரமம் குறித்தும், கல்கத்தாவின் கணேசன் குறித்தும் குறிப்பிட்டார். யோகி பயண நிகழ்ச்சியை ஆசீர்வதித்தார். இந்த சாது பகவானிடம் தான் அயோத்யா பயணிக்கலாமா எனக்கேட்டார் . யோகி அதற்கு, “அவ்வப்போது தேவைகள் ஏற்படுகையில் தந்தை உனக்கு வழிகாட்டுவார். உனது பயணம் பெரும் வெற்றியடையும்” என்றார். யோகி தனது ஆசியை அயோத்யாநாத், R.K.லால் மற்றும் சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானுக்கும் வழங்கினார். சாது யோகியிடம் ஆவடியில் CVRDE ல் பக்தர்கள் பகவானின் ஜெயந்திக்கு செய்திருந்த ஏற்பாடுகளை குறித்து கூறினான். யோகி, “ டிசம்பர் 1 முதல் 3 வரையான ஜெயந்தி கொண்டாட்டங்கள் பெரியதாக உனக்கு அமையும்“  என்றார். பின்னர் சாது பகவானிடம் ராம்நாம் பிரச்சார பயணத்தை சென்னை முதல் கன்னியாக்குமரி வரை,  திரு.ARPN. ராஜமாணிக்கம் அவர்களின் உதவியோடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும், அவரும் இதில் இணைவார் என எதிர்பார்ப்பதாகவும், ஓம்பிரகாஷ் யோகினி குமாரக்கோவிலுக்கு அழைத்த அழைப்பிதழ் குறித்தும் சாது யோகியிடம் குறிப்பிட்டார். யோகி ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர், “நீ சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். நீ அனைத்து இடங்களுக்கும் செல்லலாம். ஆனால் நீ திருவண்ணாமலையை சுற்றுப்பயணத்தில்  இருந்து விட்டுவிட வேண்டும். நீ இங்கு தனியாக, சுற்றுப்பயணத்திற்குப் பின்னர், வரலாம். சுற்றுப்பயணத்தில் அல்ல“ எனக்கூறி பகவான் தன் ஆசியை ராம்நாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் பொழிந்தார். பின்னர் யோகி, “நாம் சிறந்த முறையில் நேரத்தை செலவழித்தோம். எனவே நாளை காலை மீண்டும் வரவேண்டிய அவசியமில்லை“ எனக்கூறி சாதுவை அவரது பயண நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் நிவேதிதா பெற்றதுபோல் விவேக் ஒரு புத்தக பிரதியை பெறவில்லை என்றார். பகவான் உள்ளே சென்று பார்த்தார். சிறிது நேரம் யோசித்து, “உங்களிடம் இரண்டு இருக்கிறது. ஒன்றை விவேக் இடம் பகிரலாம்“ என்றார். பின்னர் நாங்கள் அனைவரும் எழுந்தோம். பகவான் விவேக், நிவேதிதாவை ஆசீர்வதித்து அவர்களது தேர்வு குறித்து விசாரித்தார். யோகி அவர்களிடம் நீங்கள் தேர்வினை சிறப்பாக செய்வீர்கள் என்றார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷாப்பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து அவரிடம் கொடுத்தார். வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். நாங்கள் அவரது இல்லத்தை விட்டு வெளியே வந்து முக்கிய சாலையை அடையும் போது, பின்னிரவு பேருந்து புறப்பட தயாராக இருந்தது. நாங்கள் அந்த பேருந்தைப் பிடித்து சென்னைக்கு அதிகாலை 5.30 க்கு வந்து சேர்ந்தோம். 

அத்தியாயம் 2.21 

உ.பி.யின்  தீயில் இருந்து சீடனை பாதுகாத்த குரு

குருவின் இல்லத்தில் இருந்து அதிகாலையில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 14 1990 ல் திரும்பிய சாது தனது குருவின் சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்திற்கு செல்வதற்கான பயண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான். இந்த சாது யோகியின் முக்கியமான பக்தர்களான திரு. இளையராஜா, விஜயலட்சுமி IRS, மற்றும் திரு. ராஜமாணிக்கம் நாடார் ஆகியோரிடம் இந்த சாதுவின் வடக்கிந்திய பயணம் குறித்து கூறினார். சாது சுவாமி சச்சிதானந்தர்க்கும் அவரது ஆசியை வேண்டி கடிதம் எழுதினார். ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கடிதம் எழுதியதோடு, ராம்நாம் இயக்கத்தின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி துண்டுப்பிரசுரங்கள் அவசரமாக தயாரிக்கப்பட்டன. அக்டோபர் 15 அன்று மாலையில் லக்னோ எக்ஸ்பிரஸ் மூலம் லக்னோ செல்லும் சாதுவை, யோகியின் பக்தர்கள் பார்த்து வழியனுப்பினா். இந்த சாது ரயிலில், அன்னை மாயி யோகி ராம்சுரத்குமார், மற்றும் நமது பணிகள் பற்றி அறிய ஆவல் கொண்ட சில புதிய பக்தர்களை சந்தித்தார். அந்தப்பயணமே யோகியின் கருணையின் விளையாடலாகவே அமைந்தது. அக்டோபர் 17 ஆம் தேதி இந்த சாது போபால் ரயில் நிலையத்தில் தனது தண்டம் மற்றும் பிச்சை பாத்திரத்துடன் இறங்கி காபி சாப்பிட ப்ளாட்பார்மில் உள்ள டீக்கடைக்கு சென்றான். அங்கே அன்னை மாயியை போன்ற ஒரு வயதான பெண்மணி அனைவரிடமும் கையில் பிச்சைப்பாத்திரத்துடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்த சாது 20 பைசாவை தனது பர்ஸில் இருந்து எடுத்து அவளது பாத்திரத்தில் போட்டான். அவள் இந்த சாதுவின் முகத்தை பார்த்துவிட்டு தனது பாத்திரத்தில் இருந்து 25 பைசாவை எடுத்து இந்த சாது கரங்களில்! வைத்திருந்த பாத்திரத்தில் போட்டுவிட்டு, ஹம் சந்த் லோகோன் ஸே பைசா நஹி லேதே, ஆசீர்வாத் மாங்தே – “நாங்கள் சாதுக்களிடம் இருந்து காசை பெறுவதில்லை. நாங்கள் அவர்களின் ஆசீர்வாதங்களையே பிச்சையாக பெறுவோம்” என்று கூறிவிட்டு நடந்து சென்றார். 

திருமதி. டிசோசா என்ற ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணி எங்களோடு கான்பூர் வரை பயணித்தார். தனது இடத்தில் இறங்கும் முன் இந்த சாதுவை  அடிபணிந்து வணங்கினார். லக்னோவை அடைந்தப்பின் இந்த சாதுவை திரு. சிங்கால் என்ற சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் வரவேற்று அவர்கள் மார்வாரி காலி என்ற இடத்தில் இருக்கும் ப்ரதிஷ்டானின் கார்யலயத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அக்டோபர் 19 வெள்ளிக்கிழமை அன்று சுவாமி ராம் தீர்த்தா அவர்களின் ஜெயந்தி விழாவை ஒட்டி சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி ராம் தீர்த்தா அவர்களுக்கு அஞ்சலியை செலுத்திவிட்டு, யோகி ராம்சுரத்குமார் குறித்தும் பேசினேன். “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற சிறப்பு பதிப்பு அந்த கூட்டத்தில் குருவின் ஆசியோடு வெளியிடப்பட்டது. கூட்டத்தில் இருந்த பலர் இந்த சாதுவுடன் நள்ளிரவு வரை பேசி, உலக அமைதிக்கான ராம்நாம் இயக்கத்தை முன்னெடுத்து பரப்ப முன்வந்தனர். சுவாமி ராம் தீர்த்தரின் பல முக்கிய பக்தர்கள், விருந்தினர்களாக வந்திருந்த பெரும் துறவியர்கள் மற்றும் ப்ரதிஷ்டானின் தலைவர் திரு. அயோத்யாநாத்ஜி அடுத்த சில நாட்கள் எங்களோடு தங்கினர். திரு. அயோத்யாநாத்ஜி அவர்கள் பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்தும் அவரது சொந்த கிராமம் குறித்தும் அறிந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 20 அன்று இந்த சாது ஒரு பொதுக் கூட்டத்தில்                                                  ஹிந்துத்துவத்தின் பெருமை, ஹிந்து ராஷ்டிரம், மற்றும் பகவான் குறித்தும் பேசினேன். இந்திய அரசின் முன்னாள் கல்வித்துறை ராஜாங்க அமைச்சர் மற்றும் கான்பூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான திரு. பக்த் தர்சன்,, இந்த சாதுவின் ஆங்கில உரையை ஹிந்தியில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் நன்மைக்காக மொழிப்பெயர்ப்பு செய்தார்.. இது அவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திங்கள்கிழமை அன்று காலையில் ஒரு கலந்துரையாடல்  “ஞானம், பக்தி மற்றும் கர்மா“ என்பது பற்றி நடந்தது. இந்த சாது அதன் முடிவில் யோகி ராம்சுரத்குமார் குறித்து குறிப்பிட்டு அனைவரையும் ஈர்த்தான். சாது, 22 – 10 – 1990 அன்று, பகவானுக்கு இந்த நிகழ்வுகள் குறித்து விவரித்து கடிதம் ஒன்றை எழுதினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்களின் ஆசியாலும் , கருணையாலும் ராம தீர்த்தா ஜெயந்தி கொண்டாட்டங்கள் பெரிய அளவில் துவங்கின. பல பக்தர்களும், சாதுக்களும் வடஇந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்டனர். சென்ற மாலையில் இந்த சாது ஹிந்து பாரம்பர்யம் மற்றும் ஆன்மீக தேசியம் மற்றும் உங்கள் புனிதத்தன்மை குறித்து பேசினான். இந்த உயர்ந்த பார்வையாளர்கள் ஆழமான ஆவலோடு கேட்டனர். அவர்களின் நன்மைக்காக எனது ஆங்கில உரையை, இந்திய அரசின் முன்னால் கல்வித்துறை  ராஜாங்க அமைச்சர் மற்றும் கான்பூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், திரு. பக்த் தர்சன், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்தார். நமது பணிகள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் பார்வையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. மேலும் காலையில் ஒரு தனித்த கலந்துரையாடல் நடக்க இருப்பதும் அங்கே அறிவிக்கப்பட்டது. 

காலையில் கலந்துரையாடலின் தலைமை இந்த சாதுவால் ஏற்கப்பட்டது.. பல சாதுக்களும், பக்தர்களும் இதில் பங்கு கொண்டனர். இறுதியாக கலந்துரையாடலை நிறைவு செய்யும் விதமாக, மையக்கருத்தான “ஞானம், பக்தி மற்றும் கர்மாவின் தொகுப்பு“ பற்றி பேசுகையில் நான் தங்களின் மகிமை மிக்க வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாகவும், தத்துவார்த்தமாகவும் அங்கே பேசினேன். அது பங்குப்பெற்ற பலரால் பாராட்டப்பட்டது. இப்பொழுது அவர்கள் என்னை அவர்களின் சொந்த ஊர்களுக்கு வரச்சொல்லி உங்களின் சேதியான ராம்நாம் ஜபம் குறித்து பரப்ப வேண்டுகின்றனர். 

விழா முடிந்தவுடன் உடனடியாக இந்த சாது பிரயாகைக்கு கிளம்புகிறான். என்னோடு ப்ரதிஷ்டானின் பொது செயலாளர், திரு. R.K. லால், வருகின்றார். நாங்கள் பனாரஸிற்கும் செல்ல இருக்கிறோம். இந்த சாது, ஜாம்ஷெட்பூர் மற்றும் கல்கத்தா நிகழ்ச்சி குறித்த எந்த உறுதியான தகவலையும் பெறவில்லை. மேலும் பீகாரைச் சேர்ந்த நண்பர்கள் இங்கே ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் இருந்தால் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம் என்கின்றனர். அவர்களுக்கு யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி டிசம்பரில் முடிந்த பின்னரே நேரத்தை என்னால் ஒதுக்க இயலும். எப்படியும் ஒரிரு நாட்களில் எனது அடுத்த நிகழ்ச்சிகள்  குறித்து முடிவு செய்து விடுவேன். ஆங்கில நாட்காட்டியின்படி இன்று எனக்கு பிறந்தநாள் .எனக்கு ஐம்பது வயது நிறைகிறது. நான் உங்களின் ஆசியை வேண்டுகிறேன். 

அன்புடன், 

சாது ரங்கராஜன்.” 

ராம் தீர்த்தா ஜெயந்தியின் இரண்டாம் நாளான 22 ஆம் தேதி மாலையில் இந்த சாது “நாட்டின் விழிப்புணர்வு“ என்ற உரையை ஆற்றினான். அது ஹிந்தியில் திரு. பக்த் தர்சன் என்பவரால் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. பிற முக்கிய சாதுக்களும் அந்த விழாவில் பங்கு பெற்றனர். 23 ஆம் தேதி மாலையில் இந்த சாது  “ஹிந்து வாழ்க்கை வழிமுறையும் சேவையின் லட்சியமும்“ என்ற உரை நிகழ்த்தினார். அதையும் திரு. பக்த் தர்சன் மொழிபெயர்த்தார். உரைக்குப்பின் சுவாமி ராம் தீர்த்தரின் உரைகளை நாங்கள் ஒரு சிறிய புத்தகமாக பார்வையாளர்களுக்கு பிரசாதமாக வழங்கினோம். 24 ஆம் தேதி மாலை சிறப்பு ராம்நாம் சத்சங்கம் ஒரு பக்தரின் வீட்டில் நடைப்பெற்றது. 

பகவான் நம்ப முடியாத வழிகளில் தனது லீலையை புரிவார். அக்டோபர் 26 அன்று காலையில் இந்த சாது திரு. R.K. லால் உடன் பிரயாகைக்கு பஸ் பிடித்தார். அந்த நேரத்தில் மொத்த உத்திர பிரதேசமும் பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்தது. முதலமைச்சர் முலயாம் சிங் யாதவ் தலைமையிலான அரசு சாதுக்கள், துறவிகள் மற்றும் முனிவர்கள் மீது வன்முறை தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்களும் சந்நியாசிகளும் பஞ்சகோஷி பரிக்ரமாவை அயோத்தியில் நடத்த கரசேவகர்களாக உ.பி.யில் குவிந்திருந்தனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் ராமஜென்ம பூமி ரதயாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து இறுதியாக உ.பி.யில் நுழைந்தது. பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான திரு. எல்.கே. அத்வானி உ.பி யில் நுழைந்த உடன் அவரை போலீஸ் தடுத்து நிறுத்தி தங்களது காவலில் எடுத்தனர். உ.பி. யின் பல்வேறு இடங்களில் சாதுக்கள், முனிவர்கள், துறவிகள் அயோத்தியை நோக்கி  பேருந்துகள், ரயில்கள், மற்றும் பிற வாகனங்கள் மூலம் பயணிக்கும் அனைவரும் ஆங்காங்கே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சாது பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ரே பரேலி அருகே வரும்போது காவல்துறை பேருந்தை நிறுத்தி சோதனை செய்து, அதில் காவி உடையில் இருந்த இந்த சாதுவை காவலில் எடுத்தனர். அரசு உத்தரவின்படி அந்த மாநிலத்தில் நுழையும் எந்த சாதுவும், சன்னியாசியும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் பணியாக இருந்தது. திரு. R.K.லால் உ.பி அரசின் ஒரு முன்னாள் அதிகாரியாக இருந்தமையால் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் இந்த சாது தமிழ்நாட்டில் இருந்து சுவாமி ராம் தீர்த்தா அவர்களின் ஜெயந்தி விழாவிற்காக தங்களின் அழைப்பின் பேரில் வந்திருப்பதாகவும், மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் எந்த நிகழ்விற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார். மேலும் இந்த சாதுவை கைது செய்யக்கூடாது என சக பயணிகளும் காவல் அதிகாரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப, காவல் அதிகாரி கையறுநிலையில் பேருந்து பிரயாகையை அடைந்தவுடன் இந்த சாது கைது செய்யப்படுவார் என்று எச்சரித்தார். பேருந்து பிரயாகைக்குள் நுழைந்தபோது வலது பக்கத்தில் ஒரு பங்களா முன் நிறுத்தப்பட்டது. அந்த பங்களா ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு்.T.S. சின்ஹா அவர்களுடையதாகும். திரு. சின்ஹா, திரு. லால் அவர்களின் மகன் திரு.விரேந்திராவின்  மாமனார் ஆவார். அவர் எங்களை அன்போடு வரவேற்றார். சின்ஹா போலீஸ்காரனிடம் சாதுவை தனது பாதுகாப்பில் விட்டுவிட்டு செல்லுமாறு கூறினார். போலீஸ்காரன் அதனை ஏற்று கிளம்பினார். பின்னர் சின்ஹா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சாதுவின் பாதங்களில் பணிந்தனர். அவர் நகைச்சுவையாக “உங்களை போலீஸ் பாதுகாப்பில் வைத்திருப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் என்னுடைய பாதுகாப்பில் வைத்திருப்பேன்” என்றார். வெளியே இயல்பு நிலை திரும்பும் வரை என்னை அவர் தனது பங்களாவில் விருந்தினராக தங்க வைக்க விரும்பினார். இந்த சாது அவரிடம் ராம்நாம் யக்ஞம் குறித்தும் தனது குரு பற்றியும் குறிப்பிட்டார். சின்ஹா இந்த சாதுவிடம் தான் ராம்நாம் பரப்ப முழுமையாக ஒத்துழைப்பதாக உறுதியளித்தார். அந்த பங்களாவின் நான்கு சுவற்றுக்குள் ராம்நாம் சத்சங்கம் சின்ஹாவின் உறவினர்கள் சூழ,  வெளிச்சூழல் சரியாகும் வரை, சிறப்பாக நடந்தது. 

இந்த சாது திரு. சின்ஹாவிடம் தான் தனது தாயாரின் அஸ்தியை கொண்டு வந்திருப்பதாகவும் அதனை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க இருப்பதாகவும், தனது தந்தைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் இவ்விதமாக செய்ததாகவும் கூறினார். திரு. சின்ஹா இந்த சாதுவை திரிவேணி சங்கமத்திற்கு இந்த புனிதப்பணிக்கு அழைத்துச் செல்வதாக கூறினார். அக்டோபர் 27 , 1990 ல் இந்த சாது, திரு. லால், திரு. சின்ஹா , சின்ஹாவின் மகன், மருமகன், பேரன் அனைவரும் சாதுவுடன் திரிவேணி சங்கமம் சென்றனர். அங்கே சென்று அஸ்தியை கரைக்க ஒரு படகை அமர்த்திக் கொண்டோம். சாதுவின் தாயார் கங்கா, யமுனா, சரஸ்வதியில் சங்கமம் ஆனார். பெற்றோர்களுக்கு தர்ப்பணம் செய்தபிறகு பிரயாகை கோட்டை மற்றும் ஹனுமான் கோயிலுக்குச் சென்றுவிட்டு நாங்கள் சின்ஹாவின் இல்லத்திற்கு திரும்பினோம். அந்த முழுநாளும் நாங்கள் அவரோடும், அவர் குடும்பத்தினரோடும் பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்தும், ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசி கழித்தோம். 

திரு. சின்ஹா அடுத்தநாள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தனது வீட்டில் நடக்க இருக்கும் ராம்நாம் சத்சங்கத்திற்கு அழைத்தார். சிறந்த அளவில் கூடிய அந்தக் கூட்டத்தில் இந்த சாது யோகி ராம்சுரத்குமார் குறித்தும், ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசினான். திரு. சின்ஹா அவர்களே முன்னின்று ராம்நாம் இயக்கத்தை தனது மாநிலத்தில்! நடத்தவும், சாதுவின் அடுத்தப்பயணத்தின் போது  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். சாது அனைவருக்கும் பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட, காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தில் இருந்து கொண்டு வந்திருந்த, ஜபமாலைகளை வழங்கி  அவர்களின் ஜப யக்ஞத்தை துவக்கி வைத்தான்.  

அக்டோபர் 29 ல் இந்த சாது சின்ஹா குடும்பத்தினரிடமிருந்து விடைப்பெற்றான். சின்ஹா மற்றும் அவரது மகன், சாதுவையும் திரு லால் அவர்களையும் பத்திரமாக ப்ரயாகை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து லக்னோவிற்கு வழியனுப்பினர். இடையே, ராஜன் நகர் ரயில் நிலையத்தில் சாது போலீசாரால் சோதனை செய்யப்பட்டு பிறகு யாத்திரை தொடர அனுமதிக்கப்பட்டான். லக்னோவில் சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் பக்தர்கள் எங்களை வரவேற்று பத்திரமாக ப்ரதிஷ்டானின் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அக்டோபர் 30 , 1990 ல் ராம் பக்தர்களான கரசேவகர்கள் அயோத்யா ராம் மந்திரில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அனைத்து பேருந்து, ரயில்கள் ரத்து செய்யப்பட்ட போதும் கிடைத்த அனைத்துவிதமான வாகனங்கள் மூலமாக அந்த கோயில் நகரத்திற்கு வந்து சேர்ந்தனர். கர சேவகர்கள் காலையில் மந்திரில் இருக்கையில் இந்த சாது ப்ரதிஷ்டானில் அமர்ந்து பக்தர்களோடு ராமநாமத்தை செய்தவண்ணம் இருந்தார். மதியம் செய்தியாக ஆயுதமற்ற கர சேவகர்களை போலீஸார் கடுமையான முறையில் லத்தி சார்ஜ் செய்ததும், துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த சேதியும் கிடைத்தது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் திரு. அசோக் சிங்கால் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது, அயோத்தி ராமர் கோவிலின் உள்ளேயும் வெளியேயும் இருந்த பல ராம பக்தர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பல கரசேவகர்கள் கொல்லப்பட்டதோடு, ராம பக்தர்கள் மற்றும் கரசேவகர்களின் உடல்கள் சரயு ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டன. இந்த செய்தி அறிந்து மொத்த இந்தியாவும் அதிர்ச்சிக்குள்ளானது, உலகின் பல செய்தித் தாள்கள் இது குறித்தும் எழுதின, இந்துக்களின் மீது அயோத்தியில் நடந்து படுகொலை தாக்குதல்கள் பலரை உலுக்கின. செய்தி சானல்கள் இந்த தாக்குதல் குறித்த வீடியோ பதிவுகளை வெளியிட்டன. ஜெயின் ஸ்டுடியோஸ் இது குறித்த விவரமான ஒரு ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறது அது இன்றும் யூ ட்யூப்பில் ( https://youtu.be/xD60F8DsaC4 ) உள்ளது.  எங்கும் சோகமும், குழப்பமும் உ.பி முழுக்க நிலவியது. அடுத்த நாள் ப்ரதிஷ்டானை சுற்றியுள்ள வெறிபிடித்த முஸ்லிம்கள் ப்ரதிஷ்டானின் உள்ளே இருப்பவர்களை தாக்க முயற்சித்தனர். அருகாமையிலிருந்த இந்துக்கள் ப்ரதிஷ்டானை பாதுகாக்க துப்பாக்கி, கத்தி மற்றும் லத்திகளை தங்கள் கைகளில் ஏந்தினர். இந்த சாது சென்னைக்கான முன்பதிவு டிக்கெட்டை, ரயில்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, ரத்து செய்தான். 

நவம்பர் 1 அன்று சிறப்பு ராம்நாம் சத்சங்கம் ஹனுமன் சாலிஸாவுடன் ப்ரதிஷ்டானில் ராமஜென்ம்பூமி போராட்டத்தில் உயிர் இழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைப்பெற்றது. சிறப்பு சத்சங்கம் பல பக்தர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. இந்த சாது யோகி ராம்சுரத்குமார் அவர்களின் புகைப்படத்தை பலருக்கு வினியோகம் செய்து ராம்நாம் ஜபத்தை ஊக்குவித்தான். வேறு ஒரு டிக்கெட் சென்னை திரும்புவதற்கு லக்னோவில் பெறப்பட்டன. செவ்வாய்க்கிழமை நவம்பர் 6 அன்று, பக்தர்கள் சாதுவை லக்னோ ரயில் நிலையம் வந்து வழி அனுப்பினர். ரயிலில் சக பயணிகளுக்கு யோகி ராம்சுரத்குமார் குறித்த நூல்கள், படங்கள் போன்றவற்றை இந்த சாது தந்தான். சென்னைக்கு வியாழக்கிழமை அன்று இந்த சாது வந்து சேர்ந்தான். அடுத்தநாளே நவம்பர் 9 அன்று இந்த சாது வட இந்தியாவில் நடந்தவைகள் குறித்து ஒரு விரிவான கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்களின் குறைவற்ற கருணையால் இந்த சாது சென்னைக்கு நேற்று மதியம் மிகுந்த பாதுகாப்புடன் வந்து சேர்ந்தான். வெற்றிகரமாகவும், ஆனால் பரபரப்பாகவும் இந்த உ.பி பயணம் அமைந்தது. 

லக்னோவில் ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானில் நடந்த மூன்று நாள், 21 முதல் 23 – 10 – 1990 வரையிலான, விழா மூன்றுநாட்களிலும் பெரும் வெற்றியை பெற்றது. அனைத்து நாட்களிலும் எனது உரைகளை ஹிந்தியில் திரு. பக்த தர்சன் மொழிபெயர்த்தார். அவர் மத்திய அரசின் முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சர் மற்றும் கான்பூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் ஆவார். அவர் எனது பேச்சினால் ஈர்க்கப்பட்டு விரைவில் திருவண்ணாமலை வந்து உங்கள் தரிசனத்தை பெற விரும்புகிறார். பல முக்கிய நபர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து இங்கு கலந்து கொண்ட அவர்கள் எனது உரையை கேட்டுவிட்டு விரைவில் உங்களை திருவண்ணாமலை வந்து தரிசிக்க ஆவல் கொண்டுள்ளனர்

லக்னோவிலிருந்து அலஹாபாத் செல்லும்போது ரே பரேலியில் நான் உ.பி போலீஸின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டேன். அரசின் உத்தரவுபடி காவி உடை அணிந்த அனைத்து சாதுக்களும், சன்னியாசிகளும் கைது செய்யப்பட்டனர். ஆனால் ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் பொது செயலாளர் ஆன திரு. R.K. லால் உ.பி. அரசின், ஓய்வுபெற்ற, கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் ஆவர். அவரும் என்னுடன் அரசின் விரைவுப்பேருந்தில்  பயணித்தவர்களும் தங்கள் போராட்டத்தையும் குரலையும் எழுப்பி இந்த சாது தேவையற்று துன்புறுத்தப்படுத்தக்கூடாது என்று போராடினர். போலீஸ் அந்த பேருந்தை ஒரு எச்சரிக்கையோடு பயணிக்க அனுமதித்தனர். இந்த பேருந்து அலஹாபாத் அடைந்தவுடன் இந்த சாது கைது செய்யப்படுவார் என்று கூறினர். அலஹாபாத்தை பேருந்து நெருங்கும் போது நானும், திரு. லால் அவர்களும் , அலகாபாத்தின் ஒய்வுபெற்ற இணை  ஆட்சியாளர், திரு. T.S. சின்ஹா அவர்களின் பங்களாவின் முன் இறங்கினோம். அவர் எனக்குரிய பாதுகாப்பை அளித்து, அடுத்த மூன்று நாட்களுக்கு என்னை விருந்தினராக நடத்தினார். அவர் தனது காரில் அன்போடு என்னை திரிவேணி சங்கமத்திற்கு அழைத்துச் சென்றதோடு அங்கே எனது அன்னையின் அஸ்தியை கரைக்கவும் உதவி செய்தார். அவரது பங்களாவில் ராம்நாம் சத்சங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார். பலதரப்பட்ட மக்கள் அதில் கலந்து கொண்டதோடு அவர்கள் தங்களையும், ராம்நாம் ஜப யக்ஞத்தையும்  குறித்து அறிய ஆவல் கொண்டனர். திரு. சின்ஹா அவர்களே இந்த ராமநாம யக்ஞத்தை நடத்த தன்னை ஒருங்கிணைப்பாளராக்கி கொள்வதாகவும் கூறியதோடு, டிசம்பரில் தமிழ்நாட்டிற்கு பயணம் செய்து தங்கள் தரிசனத்தை பெற விரும்புவதாகவும் கூறினர். 

உ.பி. மற்றும் பீஹாரின்  பல்வேறு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அனைத்து பஸ் மற்றும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே இந்த சாது வாரணாசி, ஜாம்ஷெட்பூர் போக இயலாமல் லக்னோவிற்கே திரும்பினான். திரும்பி வருகையில் காவல்துறையினரின் துன்புறுத்தல்கள் இருப்பினும் தவறாக ஏதும் நிகழவில்லை. ஆனால், கருணையற்ற படுகொலைகள் மூலம் நூற்றுக்கணக்கான ராம் பக்தர்கள் அயோத்தியில் அக்டோபர் 30 அன்று கொல்லப்பட்டனர். இந்த சாதுவும் ஒரு அசாதாரண சூழலை சந்தித்தான். 31-10- 1990 அன்று முஸ்லிம்கள் நான் தங்கியிருந்த ப்ரதிஷ்டானை தாக்க முயன்றனர். கணிசமான அளவில் ஹிந்துக்கள் இணைந்து பதில் தாக்குதல் நடத்த தயாரானார்கள். அனைத்து நேரங்களிலும் நான் தங்கள் பெயரையும் , ராம்நாமத்தையும் உச்சரித்து வந்தேன். அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு படையினர் அவ்விடத்திற்கு வந்து, மோசமான சீரழிவு நிலை தடுக்கப்பட்டது. ஒரு காவல்துறை நபர் எங்களுக்கு பாதுகாப்பிற்கு போடப்பட்டார். கார்த்திகை பௌர்ணமி அன்று நான் கோம்தியில் புனித நீராடவில்லை, ஏனெனில் ஆயிரக்கணக்கான ராம பக்தர்கள் அயோத்தியில் கருணையற்று கொல்லப்பட்டனர். அயோத்தியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் அப்பாவி சாதுக்களையும், துறவிகளையும் தாக்கியதில் இருந்து, ராம்நாம் ப்ரதிஷ்டானில் நான் தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் ராமநாமத்தை உச்சரித்தேன். அமைதி திரும்பவும், நாங்கள் தினமும் மாலையில் ராம்நாம் சத்சங்கத்தை மேற்கொண்டோம். சென்னைக்கான ரயில்சேவை மீண்டும் துவக்கமான 6 ஆம் தேதியே  நான் நகரத்தை விட்டு பயணப்பட்டேன். எனது பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், இந்த சாது பல பக்தர்களை நாட்டின் பலபகுதியில் இருந்து இந்த ஜெயந்தி விழாவின் போது சந்தித்தேன். இப்போது நம்மால் உ.பி மற்றும் பீகாரில் ராம்நாம் யக்ஞத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க முடிந்துள்ளது. மேலும் டெல்லி, பீகார், பெங்காள் மாநிலத்தின் பக்தர்களும் தங்களின் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைத்தனர். இந்த சாது அவர்களிடம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி முடிந்தப்பின் வருவதாக வாக்களித்திருக்கிறான். 

எனது தாமதமான திரும்புதல் எனது தமிழக சுற்றுப்பயணத்தை பாதித்துள்ளது. இருப்பினும் இந்த சாதுவின் சுற்றுப்பயணம் மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில்  18 – 11 – 1990 முதல் 25 – 11 – 1990 வரை நடைபெறும். நாங்கள் நல்ல கூட்டத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜெயந்தி விழாவிற்கு எதிர்பார்க்கிறோம். எங்களின் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலர்கள் இந்த பெரும் கொண்டாட்டத்திற்கு தயார் செய்வதில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். சுவாமி சச்சிதானந்தர் ஒரு சிறப்பு வாழ்த்தினை எங்களின் ராம்நாம் பிரச்சாரத்திற்கு தெரிவித்துள்ளார். 

நமது கேரளா மையம் மலையாளத்தில் ஒரு ராம்நாம் துண்டுபிரசுரத்தை தயார் செய்துள்ளனர். அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். பாலக்காட்டைச் சேர்ந்த திரு. E.S. சிவராமகிருஷ்ண அய்யர், கேரள மையத்தின் ஒருங்கிணைப்பாளர், தங்களின் முயற்சிகளின் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டி பிரார்த்திப்பதாக  கூறினார்,

இந்த சாதுவின் இதயம் நன்றியுணர்வில் நிரம்பியிருக்கிறது குருதேவ், நீங்களே எனது அருகில் நின்று அனைத்து சூழல்களிலும் என்னை பாதுக்காக்கிறீர்கள். 

எங்கள் அனைவரின் நமஸ்காரங்களும், வணங்குதல்களும், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”. 

யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய் !

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.15 – 2.18

அத்தியாயம் 2.15 

ஹிந்துயிசம் டுடேயோகி ராம்சுரத்குமாரின் நேர்காணல்

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி டிசம்பர் – 1 , 1989 ல் முடிந்தவுடன், இந்த சாது டிசம்பர் – 8, 1989 ல் ‘ஹிந்துயிசம் டுடே’ பத்திரிகைக்கு அவர்கள் யோகிராம்சுரத்குமார் அவர்களிடம் கேட்க விரும்பிய கேள்விகள் கொண்ட கடிதத்திற்கான பதில் மற்றும் அவர்களின் கேள்விகளுக்கு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பதில்களோடு எனது குருவை குறித்த ஒரு கட்டுரையும், பகவானிடம் நவம்பர் 20 , 1989 ல் வாசிக்கப்பெற்று, யோகியின் ஒப்புதலோடு அனுப்பப்பட்டது. 

ஹிந்துயிசம் டுடே வில் இருந்து வந்த கடிதம் :

ஓம் சிவமயம்

ஹிந்துயிசம் டுடே 

எடிட்டோரியல் ஆஃபீஸஸ்

போஸ்ட் பாக்ஸ் 157 

ஹனாமௌலு, ஹவாய் 96715 *யு௭ஸ்ஏ

தொலைபேசி : ( 808 ) 822 – 7032 , ஃபேக்ஸ் : ( 808 ) 822 – 4351 

சனிக்கிழமை , செப்டம்பர் 30 , 1989 

பெறுநர் 

பேராசியர் . V. ரங்கராஜன்

சகோதரி நிவேதிதா அகாடமி

திருவல்லிக்கேணி , சென்னை – 600005 

இந்தியா 

பொருள் : யோகி ராம்சுரத்குமார் 

வணக்கம் , பேராசிரியர். ரங்கராஜன், 

மஹா கணபதியின் தாமரை பாதங்களுக்கு வணக்கங்கள்! 

நாங்கள் உங்களின் யோகி ராம்சுரத்குமார் உடனான அனுபவத்தை 1988 நவம்பர் ‘தத்துவ தர்சனா’ இதழில் படித்தோம். மேலும் ஸ்ரீ லங்காவை சேர்ந்த திருமதி. நவரத்தினம் அவர்கள் அருணாச்சலத்தில் தங்கியிருந்த போது யோகி ராம்சுரத்குமார் உடன் பெற்ற அனுபவத்தையும் இன்னொரு அறிக்கை மூலம் கிடைக்கப்பெற்றோம். யோகி ராம்சுரத்குமார் குறித்து ‘ஹிந்துயிசம் டுடே’ வில் எழுத இருக்கிறோம். எங்களுக்கு “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற புத்தகத்தையும் அனுப்பவும். 

உங்கள் நூல் மற்றும் ‘தத்துவ தர்சனா’ இதழில் இருக்கும் விவரங்களுக்கு மேலாக, நீங்கள் எங்களின் சார்பாக யோகி ராம்சுரத்குமார் அவர்களை நேர்காணல் செய்வது மிகுந்த பாராட்டுதலுக்குரிய ஒன்றாக இருக்கும். அவரிடம் நாங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன. 

1. இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன? 

2. இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்துக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன? 

3. இந்துக்கள் இன்று சந்திக்கும் பெரிய பிரச்சனை என்ன, 1990 களில் எது அவர்களுக்கான பெரும் சவாலாக இருக்கும்? 

4. பெரும்பான்மையான இந்துக்களை சைவ உணவிற்கு எப்படி ஊக்குவிப்பது? 

5. ஒரு மனிதன் வைத்திருக்க வேண்டிய பெரும் ஆன்மீக தரம் என்ன? 

6. உங்களின் புனிதமான ஆன்மீக பணியில் எது பெரும் சவால், எது பெரும் பரிசு? 

7. உங்களின். பெரும் ஏமாற்றம் என்ன? 

8. உங்களின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து ஏதேனும் பகிர இயலுமா? உங்களை இன்றைய பாதைக்கு கொண்டுவந்தது என்ன? 

9. நீங்கள் உங்களின் ஆழமான ஆன்மீக அனுபவங்களை பகிர முடியுமா? 

10. உங்களின் புனிதமான வாழ்க்கையில் மிகுந்த தாக்கம் தந்த முனிவர்கள் யார்? 

11. அருணாச்சலத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்வதின் பயன் என்ன? 

12. தங்களுடைய சம்பிரதாயம் என்ன? இஷ்ட தெய்வம்  ஏது? 

13. குழந்தைகளை வளர்ப்பது குறித்து தங்களின் பரிந்துரைகள் என்ன? 

14. கோயில் வழிப்பாட்டின் மதிப்பு என்ன? 

பேராசிரியர் அவர்களே, நீங்கள் பிற பக்தர்களின் யோகியுடனான அனுபவங்களையும் அவர்களின் வாழ்க்கையில் யோகி தந்த மாற்றங்கள் குறித்த தகவல்களையும் அனுப்பலாம். 

யோகி ராம்சுரத்குமார் அவர்களின் முகவரியையும் சேர்த்து அனுப்பவும். 

இறுதியாக, யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 4 அல்லது ஐந்து நல்ல புகைப்படங்களை அனுப்புங்கள், ஒரு அட்டையில் HH Sri Yogi Ramsuratkumar, The God Child என்று குறிப்பிடப்பட்டிருக்கும் படம் மிகவும் நன்றாக உள்ளது. அதன் மூலப்படிவம் கிடைத்தால் சிறப்பு. அந்த அச்சிடப்பட்ட படத்தில் சிகப்பு வண்ணம் அதிகமாக இருப்பதால் அதனை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய இயலாது.

இந்த நேர்காணலுக்கான தங்களின் உதவி பெரும் பாராட்டுதலுக்கு உரியது.  இத்தகைய யோகிகள் வெகு சிலரே இந்த உலகில் உள்ளனர். எங்களின் வாசகர்கள் இவரைப்பற்றி அறிய வேண்டும் என நினைக்கிறோம்.

உங்களின் தர்ம சேவையில் , 

‘ஹிந்துயிசம் டுடே’, 

சுவாமி ஆறுமுகம் கதிர் 

நிர்வாக எடிட்டர் 

சாது  ரங்கராஜனின் பதில்:

08.12.1989 

சுவாமி ஆறுமுகம் கதிர்

‘ஹிந்துயிசம் டுடே’ 

போஸ்ட் ஆபிஸ் பாக்ஸ் 157 

ஹனாமௌலு, ஹவாய் 96715, யு௭ஸ்ஏ

மதிப்பிற்குரிய சுவாமிஜி, 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! ஓம் மஹா கணபதயே நமஹ! எனது தாழ்மையான வணக்கங்களை பரம பூஜ்ய சுவாமி சிவசுப்பிரமணியம் அவர்களுக்கும், உங்களுக்கும், அங்கிருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய சுவாமிஜிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் ! 

இந்த சாது தனது மிகுந்த நன்றியை உங்களின் செப்டம்பர் 30, 1989 தேதியிட்ட கடிதத்திற்கு தெரிவித்துக் கொள்கிறான். எங்களின் குரு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 71 வது ஜெயந்திவிழாவை சென்னையிலும் பிற இடங்களிலும்  டிசம்பர் – 1 அன்று கொண்டாடும் பணிகளில் தீவிரமாக இருந்தமையால் உங்களுக்கு உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை. அதற்காக எங்களது மன்னிப்பை கோருகிறோம். 

‘தத்துவ தர்சனா’ வில் எனது குரு யோகி ராம்சுரத்குமார் குறித்த கட்டுரை தங்களை கவர்ந்தமைக்கு எனது மகிழ்ச்சியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் ‘ஹிந்துயிசம் டுடே’ பத்திரிகையில் வெளியிட எனது குருவைப்பற்றிய விசேஷ கட்டுரையை கேட்டமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஹிந்துயிசம் டுடே’ மற்றும் அதன் வாசகர்களுக்கு எனது குருநாதரின் ஆசிகளுடன் யோகி ராம்சுரத்குமார் குறித்த கட்டுரையை தங்களுக்கு அனுப்பி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இத்துடன் எனது குருவின் சில படங்களை எனது கட்டுரையோடு இணைத்துள்ளேன். இவைகள் தங்கள் ஒப்புதலைப் பெற்று தங்களின் மேலான இதழில் வெளியாகும் என நம்புகிறேன். …..

நாங்கள் தனித்த விமான தபால் மூலம் பின்வரும் புத்தகங்களை அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்:

1. “ஓர் யோகியின் அற்புத தரிசனங்கள்” – சாது. பேராசிரியர் வே. ரங்கராஜன்.

2. “யோகி ராம்சுரத்குமார் – கடவுளின் குழந்தை , திருவண்ணாமலை” – ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன்.

3. “யோகி ராம்சுரத்குமார் உடனான அனுபவங்கள்” – ஹரகோபால் சேபுரி

4. ‘தத்துவ தர்சனா’ இதழ்கள் –  தொகுதி – 5 , 1 முதல் 4 மற்றும் தொகுதி – 6 , 1 முதல் 3 

5. “ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்” வெளியிட்ட யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா குறித்த செய்தி தொகுப்புகள். 

அரிசோனாவின், ஹோஹம் கம்யூனிட்டியின் லீ லோசோவிக் உங்களுக்கு “தாவாகோட்டோ” எனும் இதழின் பிரதியை அனுப்பியிருக்கிறார்.

இவையனைத்தும்  தங்களுக்கு கிடைத்தவுடன் தயை கூர்ந்து தங்கள் ஒப்புகையை தெரிவியுங்கள். 

அமைதியாக ஆன்மீக புரட்சியை உருவாக்கி, இந்த மனிதகுலத்தை இறைத்தன்மையை நோக்கி உயர்த்திவரும் பெரிய மஹான்கள் பற்றி ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஹிந்து மத பாரம்பர்யத்தை பகிர்கின்ற தங்களுக்கும் “ஹிந்துயிசம் டுடே” பத்திரிகைக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் புனித பணிகளுக்கான தேவைகளுக்கு நீங்கள் தேவையெழும் போதெல்லாம் தயவு கூர்ந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள். 

அங்கிருக்கும் அனைத்து ஆச்சார்யர்களுக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள், 

இறைசேவையில் உங்களின் ,

சாது பேராசியர். வே. ரங்கராஜன். 

இணைப்பு: மேலே குறிப்பிட்டபடி.” 

யோகி ராம்சுரத்குமார் குறித்த கட்டுரை : 

யோகி ராம்சுரத்குமார்

திருவண்ணாமலையின் தெய்வீக ஒளி

–சாது பேராசியர் வே. ரங்கராஜன்

“புண்யபூமி என்று அழைக்கப்பட தகுதியுடைய ஒரு நிலம், ஆன்மாக்கள் கர்மங்களின் கணக்கு தீர்க்க வந்து பிறக்க வேண்டிய இடம், கடவுளை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் தனது இறுதி வீடு பெறுவதற்கு வந்தடைய வேண்டிய பூமி, மனித இனம் பெருந்தன்மை. தாராளத் தன்மை தூய்மை மற்றும் அமைதி ஆகியவற்றில் உயர்ந்த நிலையை அடைந்துள்ள இடம், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் நிலம் என்ற ஒன்று இருந்தாள் அதுதான் பாரதம்” என கூறுகிறார் பாரதத்தின் தேசப்பற்று மிக்க துறவியான சுவாமி விவேகானந்தர். பரிணாம வளர்ச்சியில் மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்த கடவுளர்கள் அவதரிக்கும் பூமியாக இது இருந்துள்ளது. இந்த நிலம் மிகச்சரியாக பாரதவர்ஷா — ஒளியின் நிலம் — எனப்படுகிறது. எண்ணற்ற முனிவர்கள், ஞானிகள் வேத காலத்திலிருந்நு, நவீன காலம் வரை தொடர்ச்சியாக இந்த மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளனர். ஆகையினால் இந்த நாடு ‘ரத்னக்ர்பா’ – விலைமதிக்க முடியாத  ராஜரிஷிகளையும், ப்ரம்ம ரிஷிகளையும் தனது கர்ப்பத்தில் சுமந்துள்ள நாடு என அழைக்கப்படுகிறது. 

இந்த புனித பூமியின் பெரும் ஞானிகள். மற்றும் முனிவர்களின் வரிசையில் இன்று நம்மிடையே இருப்பவர் யோகி ராம்சுரத்குமார் மஹராஜ், திருவண்ணாமலையின் கடவுளின் குழந்தை ஆவார். இந்த யோகி மூன்று ஆன்மீக பெரியவர்களான ஸ்ரீ அரவிந்தர், மகரிஷி ரமணா, சுவாமி ராம்தாஸ் ஆகியோரால் வார்க்கப்படும் வாய்ப்பினை பெற்றவராவார். யோகியே இதனைப்பற்றி குறிப்பிடும் போது, “பெரும்பான்மையான மனிதர்கள் தனக்கு மூன்று தந்தைகள் என்று கூறுவதை விரும்புவதில்லை. ஆனால் இந்தப் பிச்சைக்காரனுக்கு மூன்று தந்தைகள். இந்த பிச்சைக்காரனுக்கு நிறைய வேலைகளை இவர்கள் செய்திருக்கிறார்கள். அரவிந்தர் துவக்கினார். ரமணர் சிறிது செய்தார் . ராம்தாஸ் முடித்தார்.“ என்பார். ஸ்ரீ அரவிந்தர் அவருக்கு சத்தியத்தை தேடும் ஞானம் தந்தார், ஸ்ரீ ரமணர் அவரை தபஸ் என்னும் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ஸ்ரீ ராம்தாஸ் அவருக்கு பக்தியை தந்து தெய்வீக பரவசம் என்ற சாம்ராஜ்யத்திற்குள் உயரவும் வழிவகுத்தனர். 

அருணா என்றால் சூரியன் என்ற ஒரு நிறை ஆற்றலின் தொடர் அசைவு, அசலா என்றால் மலை, அது ஒருபோதும் நகராத ஒன்று. ‘அருணாச்சலா’ என்பது மிகச்சிறந்த கருத்தாக்கம், அது நிலையான பிரம்மம் – பரம்பொருள்– மற்றும் இயக்கம் ஆகிய விழிப்புணர்வு ஆற்றலின் ஒருங்கிணைப்பு, சிவ-சக்தி கலப்பு, ஆகும். அருணாச்சலம் ஒரு முக்கியமான ஜ்யோதிர்லிங்க க்ஷேத்ரம் அல்லது சிவனின் எல்லையற்ற ஒளியின் கோவில். பல அற்புதமான சித்தர்கள் மற்றும் ஆன்மாவை உணர்ந்தவர்களின் இல்லம். இன்று இந்த இடம் மேலும் புனிதமாக, இந்த புனிதப்பயண தலத்தில் இருப்பவரே யோகி ராம்சுரத்குமார். 

யோகி ராம்சுரத்குமார் தன்னை ஒருபோதும் ஞானி என்றோ, யோகி என்றோ, கடவுள் தன்மை கொண்ட மனிதர் என்றோ அழைத்துக் கொண்டதில்லை. அவர் தன்னை பிச்சைக்காரன் என்றழைத்துக் கொள்வதோடு அவ்விதமாகவே இருப்பவர். அவர் எப்போதும் மிக அழுக்கடைந்த உடைகளையும், சீராக இல்லாத தாடியையும், அழுக்கான தலைப்பாகையும் அணிந்து, இரண்டு பனை ஓலை விசிறியை ஒன்றாக கட்டி அத்துடன் ஒரு தேங்காய் சட்டையையும் தனது ஒரு கையில் வைத்திருப்பார்.  ராமநாமத்தை உதடுகள் உச்சரிக்கையில் இன்னொரு கை விரல்களை ஜபமாலையை உருட்டுவதை போல் உருட்டிக் கொண்டிருப்பார். அவர் நடப்பது, பேசுவது, மக்களை சந்திப்பது, அவர்களை அணுகுவது அனைத்தும் அவரது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தி ஈர்க்க வல்லதாக இருக்கும், அவரைப் பற்றி அறிந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு அவர் ஒரு பித்தன் போல் காட்சியளிப்பார்.

யோகி, மஹாபாரதத்தின் பீஷ்ம பிதாமகரை நினைவுறுத்துவதைப் போல் இருப்பார், இருவரும் அன்னை கங்கையின் புதல்வர்களே. யோகி கங்கைக்கரையின் பனாரஸ் அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர் ஆவார். அவர் கிராம சூழ்நிலையில் வளர்ந்தார். மதம், கலாச்சாரம் போன்றவற்றில் பக்தி நிறைந்தவராக இருந்தார். அன்றைய நாளில் நாட்டில் வீசிய தேசிய உணர்வு அலையில் அவரது தேசப்பற்றும் தேசியத்துடன் அவர் கொண்ட ஆர்வமும் சிறுவயதிலேயே உருவானது. இச்சிறுவனுக்கு சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுடனான தொடர்பு அதிகமாக இருந்தது. ஒருநாள் இந்த சிறுவன் கிணற்றில் இருந்து நீரை இறைக்கும் போது, கயிற்றின் மறுமுனையை எதிர்ப்பக்கம் வீச, அது கிணற்றின் மதில் மேல் அமர்ந்திருந்த ஒரு பறவை மீது பட்டு, அந்த பறவை உணர்ச்சியற்று கீழே விழுந்தது அந்த பறவை மரித்துபோனது. கவலைமிகுந்த அந்த சிறுவன் அந்த பறவையை கங்கையின் கரையில் புதைத்தான். அதன்பின் அந்த சிறுவன் மனதில் அமைதி இல்லாமல், சத்தியத்தின் இருப்பை தேடத்துவங்கினான். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில், அவனது தொடர்ச்சியான சாதுக்களுடனான தொடர்பு, அவனுக்குள் ஒரு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் ஆன்மீக அனுபவம் பெற அவனுக்குள் ஏற்பட்ட தாகம் அச்சிறுவனை தனது இல்லத்தை விட்டு வெளியேறி ஒரு குருவை நோக்கி பயணப்படவும், தேடவும் வைத்தது. 1947 ன் ஒரு இரவில் இந்த இளைய சாதகன் கங்கைக் கரையில் இருந்த ஒரு மகாத்மாவிடம், மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர் என்ற தேசப்பற்று மிக்க ஒரு துறவி பாண்டிச்சேரியில் இருப்பதையும் அவரிடம் தான் செல்ல விரும்புவதையும் கூறினான். 

ராம்சுரத்குமாருக்கு பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு நவம்பர் 1947 ல் வந்து சேர்ந்தார். பாண்டிச்சேரியில் வாழ்ந்து கொண்டிருந்த அரவிந்தரின் முன்னிலையில் ராம்சுரத்குமார் ஞானம் பெற்ற போதிலும், அவர் தன்னை தனிப்பட்ட முறையில் வழிநடத்தக்கூடிய ஒரு குருவைத் தேடினார். அரவிந்தர் தனது உலகத் தொடர்புகளை முழுவதும் துண்டித்து இருந்தமையால் யோகி ராம்சுரத்குமார் விரும்பிய தனிப்பட்ட கவனத்தை அவருக்கு அளிக்க இயலவில்லை, தென்னாட்டிற்கு கிளம்புவதற்கு முன் வாரணாசியில் யோகி சந்தித்துப் பேசிய அந்த சாது குறிப்பிட்ட இன்னொருவரை யோகி ராம்சுரத்குமார் நினைவு கூர்ந்தார்.  அவர் அருணாச்சலத்தை சேர்ந்த மகரிஷி ரமணர் ஆவார்.

ராம்சுரத்குமார் மகரிஷி ரமணரின் இருப்பிடத்தை அடைந்தார். அவரின் அருகாமை ராம்சுரத்குமாருக்கு தேவையான தபஸ் மற்றும் சாதனாவிற்கான வழிக்காட்டுதல்களை தந்தது. ஆனால் சுய விசாரத்தில் தனது அடையாளத்தை முற்றிலும் இழக்க அந்த இளமையான சாதகனுக்கு இன்னமும் நேரம் கூடவில்லை. அவர் ஞானம் அடையும் முன் பக்தி யோகத்தில் கரைய வேண்டியிருந்தது. எனவே அவரது விதி இன்னொரு அற்புத ஞானியான, வடக்கு கேரளாவின், காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த, சுவாமி ராம்தாஸ் அவர்களை நோக்கி நகர்த்தியது. 

ஸ்ரீ அரவிந்தர், மகரிஷி ரமணர் போல் அல்லாமல், சுவாமி ராம்தாஸ் ராம்சுரத்குமாரை முதல் பார்வையில் ஈர்க்கவில்லை. ராம்சுரத்குமார் காசிக்கு திரும்பி சென்றார். ஆனால் 1948 ல் மூன்று குருமார்களையும் சந்திக்க யோகி ராம்சுரத்குமார் மீண்டும் பயணித்தார். இந்த முறை மகரிஷி ரமணரின் பார்வை யோகிராம்சுரத்குமார் மீது தீவிரமாக விழுந்து அவருள் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த கணத்தில் இருந்து ராம்சுரத்குமாரின் வாழ்வு துறவிலும், சுய விசாரத்திலும் நங்கூரமிட்டது. அதே வருடத்தில் ராம்சுரத்குமார் மீண்டும் ஒருமுறை சுவாமி ராம்தாஸ் அவர்களை சந்திக்க அவரது ஆசிரமத்திற்கு சென்றார். இந்த முறையும் ராம்சுரத்குமார் ராம்தாஸ் உடன் நல்லுறவு கொள்வதை ஏதோவொன்று தடுத்தது. ராம்சுரத்குமார் மீண்டும் வட இந்தியாவிற்கு சென்று ஹிமாலயம் வரை அலைந்து திரியலானார். பனிமலையில் சுற்றித்திரிந்த காலத்தில், 1950-ம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ ரமணர் இருவரும் மஹாசமாதி அடைந்த சேதியை கேட்டு ராம்சுரத்குமார் தனது வாழ்வில் பொன்னான வாய்ப்புகளை இழந்துவிட்டதாக பெரிதும் வருந்தினார். இருக்கும் இன்னொரு வாய்ப்பினையும் நழுவ விட விரும்பாத ராம்சுரத்குமார் காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு விரைந்தார். இந்தமுறை சுவாமி ராம்தாஸ் முற்றிலும் வேறுபட்ட மனிதராக ராம்சுரத்குமாருக்கு தோன்றினார். ”ராம்தாஸ் இந்த பிச்சைக்காரனின் தந்தை“ என்று அறிந்து கொண்டார். இந்த ராம்சுரத்குமாரின் மூன்றாவது பயணத்தில் அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு ஏற்பட்டது, அவருக்கு மிக உயர்ந்த மந்திரமான, “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்“மந்திரத்தின் தீக்ஷை ராமதாஸரால் தரப்பட்டது. குரு சீடனிடம் ஏதேனும் ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை இருபத்துநான்கு மணிநேரமும் உச்சரிக்கச் சொன்னார். ராம்சுரத்குமார் பல நாட்கள் இறை உணர்வோடு இருந்தார். 1952 ல் இந்த முக்கியமான நிகழ்வு நடைப்பெற்றது. 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது சீடன் நரேந்திரன் எப்போதும் நிர்விகல்ப சமாதியில் மூழ்கியிருப்பதை விரும்பவில்லை. அதைப்போலவே சுவாமி ராம்தாஸ் அவர்களும் தனது சீடன் செயல் உலகிற்கு சென்று, அங்குள்ள குழப்பங்கள் அவரை புடம் போட்டு, ஒரு சிறந்த கருவியாக மாற்றி, பல ஆயிரம் ஆன்மாக்களை வழிநடத்தி அவர்களை ஆன்மீக தேடுதலை நோக்கி நகர்த்த வேண்டும் என முடிவு செய்தார். ராம்தாஸ் ராம்சுரத்குமாரை ஆசிரமத்தை விட்டு வெளியேறும்படி கூறினார். ராம்சுரத்குமார் அதனை நிறைவேற்ற முயன்றபோது ராம்தாஸ் நீ எங்கே போகப்போகிறாய் எனக் கேட்டார். சீடன், “திருவண்ணாமலைக்கு“ என்றார். ஆனால் இறையின் வழிமுறைகள் விவரிக்க முடியாதவையாக இருந்தன. சிறிதும் பணம் வைத்திராத ராம்சுரத்குமார் காஞ்சன்காட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வர ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்த நாட்டின் நீள, அகலம் முழுவதும் அவர் பயணித்து, 1959 வசந்த காலத்தில் அவர் திருவண்ணாமலை வந்தடைந்து அற்புத அருணாச்சல மலையின் காலடியில் அவர் நிரந்தரமாக தங்க துவங்கினார். 

அருணாச்சலேஸ்வரரிடம் அடைக்கலம் ஆகிய அந்த இளம் துறவியின் வாழ்க்கை அவ்வளவு சுகமானதாக ஆரம்பத்தில் இருக்கவில்லை. ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு புன்னை மரத்தடியின் கீழே தங்கினார், சில சமயம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில், சில சமயம் இடுகாட்டில், சிலசமயம். கோயிலின் மண்டபத்தில், என பல இடங்களில் இயற்கையோடு ஒன்றிணைந்து இருந்தார். அவரது பிச்சைக்கார உடை இவருக்கு சமூக விரோதிகளால் சிற்சில பெரிய அளவிலான தொல்லைகளை ஈர்த்தன. ஒரு கூடையில் அவர் சுமந்த நிறைய செய்தித்தாள்கள், உதட்டில் சிகர்ரெட், அழுக்கான தலைப்பாகை, தலையை சுற்றி மலர் மாலைகள் போன்றவற்றுடன் அவர் சாதாரண மக்களுக்கு ஒரு  வேடிக்கையான உருவத்தினராக இருந்தார். 

அவர் திருக்கோயிலூர் ஞானானந்தகிரி சுவாமிகளுக்கு நெருக்கமானவராக இருந்தார். சுவாமிகளுடைய பக்தர்களின் கண் பார்வையிலிருந்து யோகியினுள்  மறைந்திருந்த ஆன்மீகப் பெருமகனார் தப்ப இயலவில்லை. ரமணாச்சரமத்திற்கு கீழை மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து பயணித்து வரும் பக்தர்கள் சிலரும் பிச்சைக்காரன் உருவில் இருந்த இவருக்குள் ஒரு பெரும் ஞானியை  அடையாளம் கண்டு கொண்டனர். விரைவில், கவிஞர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், உயர் அதிகாரிகள் என பலதுறைகளை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அவரை அணுகி தங்களின் ஆன்மீக வாழ்க்கைக்குரிய வழிக்காட்டுதல்களை வேண்டினர். தான் ஒரு மகான் அல்ல, சாதாரண பிச்சைக்காரன் தான் என்று அவர் கூறியது பலனளிக்கவில்லை.

அறிஞர்களில் பலர் அவரைப்பற்றி எழுதத் துவங்கியவுடன் யோகி ராம்சுரத்குமார் புகழ்பெற்றவரானார். தமிழின் முன்னணி அறிஞர்களான திரு. கி.வா.ஜெகன்னாதன், திரு.தெ.பொ.மீனாட்சிசுந்தர்ரனார் , மற்றும் திரு. பெரியசாமி தூரன் அவரை பார்த்த மாத்திரத்திலேயே பல கவிதைகளைப் புனைந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் என்ற, அத்வைத வேதாந்தத்தை பின்பற்றும் பக்தர், யோகி ராம்சுரத்குமார் அவர்களின் சரிதமான, “யோகி ராம்சுரத்குமார் – கடவுளின் குழந்தை, திருவண்ணாமலை“ என்ற நூலை எழுதினார் அது பல ஆன்மீக தேடல் மிக்க மேற்கத்தியர்களை ஈர்த்தது. ஹில்டா சார்ல்ட்டன், லீ லோசோவிக், ஆர்தர் ஹில்கோட் மற்றும் பலர் தங்களது பக்தியையும், மரியாதையையும் தங்களின் எழுத்தில் வெளிப்படுத்தினார்கள். 

இந்த எழுத்தாளர் (சாது பேரா. வே. ரங்கராஜன்) கன்னியாக்குமரியை சேர்ந்த அன்னை மாயி என்பவர் மூலம் யோகி ராம்சுரத்குமாரிடம் வழி நடத்தப்பட்டவர். அன்னை மாயி ஒரு பைத்தியக்கார பிச்சைக்கார  பெண்மணியைப் போல் காட்சியளிப்பார். அவர் எப்போதும் நாற்பது ஐம்பது நாய்கள் சூழ இருப்பார். மூன்று கடல்களும் இடைவிடாது இந்தியாவின் பாதங்களை கழுவிவிடும் கன்னியாக்குமரியில் அவர் இருந்தார். குருவின் அளவற்ற கருணையினால் இந்த எழுத்தாளர் குருவின் சரிதமான, “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்“ என்ற நூலை எழுதினான். அது கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பல பக்தர்களையும், சாதகர்களையும், ஈர்த்தது. இந்த எளிய தொண்டனை, குரு தன் பெரும் கருணையால், திருவண்ணாமலை மலைமீது சுவாமி ராம்தாஸ் அமர்ந்து தவம் செய்த ஆலமர குகையில், ராம்தாஸ் அவர்களின் ஜெயந்தி நாளான ஏப்ரல் 26 , 1988 ல், மந்திர தீக்ஷை அளித்து ஒரு சாதுவாக மாற்றினார். மேலும் அளவற்ற கருணையால் இந்த சாதுவை, மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்கள் உலக அமைதிக்காக, “ஒம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்“ என்ற தாரக மந்திரத்தை 15,500 கோடி எண்ணிக்கை ஜெபிப்பது என்று துவங்கிய மாபெரும் ஜெப யக்ஞத்திற்காக, உலக ராம்நாம் இயக்கத்தை நடத்தும் பொறுப்பினை தந்து, அந்த பணியில் ஈடுபட யோகி ராம்சுரத்குமார் வழிகாட்டினார். இந்த இலக்கு குருவின் இதயத்திற்கு நெருக்கமானதும் கூட. 

குருவின் சேதிகளும், அவரது இலக்கும், “ஹிந்துயிசம் டுடே” என்ற பத்திரிகையின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்து சுருக்கமாக தெளிவாகின்றன.

கே: இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன ? 

ப: இந்தியாவில் வாழும் இந்துக்கள் தங்களின் தேசம் மற்றும் கலாச்சாரம் குறித்து பெருமை கொள்ளலாம். அவர்கள் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் தர்மத்தின் படி வாழ வேண்டும். ராமநாம ஜபத்தை ஆன்மீக மற்றும் சமூக சேவையாக மேற்கொள்ள வேண்டும். 

கே: இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்துக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன? 

ப: உங்களின் கலாச்சார அடையாளத்தை இழக்காமல் உங்களின் கடமையை செய்யுங்கள். ராமநாம ஜபத்தை சொல்லி உவ்களைச்சுற்றி அமைதியை வளர்த்துங்கள். 

கே: இந்துக்கள் இன்று சந்திக்கும் பெரிய பிரச்சனை என்ன? 1990 – களில் எது அவர்களுக்கான பெரும் சவாலாக இருக்கும் ? 

ப: இந்தியாவின் சூழ்நிலைகளுக்கு பொருந்தாத, பொய்யான, வாழ்க்கை மூல்யங்களை பின்பற்றுதல்.

கே : பெரும்பான்மையான இந்துக்களை சைவ உணவிற்கு எப்படி ஊக்குவிப்பது ? 

ப : இந்த கேள்வி எந்த தனிப்பட்ட மதத்திற்கும் உரியதன்று. கல்வியும், விளம்பரமும் சைவ உணவை பரப்புவதற்கான முறையான வழிகள். தனிப்பட்ட மனிதரின் வாழ்வை நீட்டிப்பதற்கும் நல்ல உடல் நலத்திற்கும் சைவ உணவு மிகவும் ஏற்றது. சைவ உணவை உண்பவர்களுக்கு உயிரியல் நிலையில், நிதானம் மற்றும் எல்லா வடிவத்திலும் உள்ள உயிரினங்கள் இடத்திலும் மரியாதை உணர்வு ஆகியவற்றை ஊட்டவல்லது.

கே: ஒரு மனிதன் வைத்திருக்க வேண்டிய பெரும் ஆன்மீக தரம் என்ன ? 

ப: பணிவு, பிறரை மதிக்கும் தன்மை, சுயநலமின்றி கடமைகளை செய்தல். 

கே: உங்களின் புனிதமான ஆன்மீக பணியில் எது பெரும் சவால், எது பெரும் பரிசு? 

ப : உலக அமைதி மற்றும் வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் ஆன்மீக மூல்யங்களை போதித்தல். 

கே : உங்களின். பெரும் ஏமாற்றம் என்ன ? 

ப : அதர்மம். 

கே: உங்களின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து ஏதேனும் பகிர இயலுமா? உங்களை இன்றைய பாதைக்கு கொண்டுவந்தது என்ன? 

ப: ஓர் இறந்த பறவையின் மீதான இரக்கமே திருப்புமுனை, அதனைத் தொடர்ந்து கங்கைகரையோரத்து சாதுக்களுடனான தொடர்பு. 

கே: நீங்கள் உங்களின் ஆழமான இறை உணர்வு அனுபவங்களை பகிர முடியுமா? 

ப: இறை உணர்வு அனுபவங்களை கேட்பவரும் தேவையான முதிர்ச்சியை அடைந்தால் மட்டுமே பகிர இயலும், அனுபவத்தை பகிர்வது குறித்து எந்த அறிவிப்பும் கிடையாது, ஏனெனில் பகிர்தல் என்பதே ஆன்மீக நிலையில் ஒரு அனுபவமே. 

கே: உங்களின் புனிதமான வாழ்க்கையில் மிகுந்த தாக்கம் தந்த முனிவர்கள் யார்? 

ப: ஸ்ரீ அரவிந்தர், பகவான் ரமண மகரிஷி, மற்றும் சுவாமி ராம்தாஸ் போன்றவர்கள் நேரடியாகவும், கபீர்தாஸ், சூர்தாஸ், துளசிதாஸ், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சா, சுவாமி விவேகானந்தா, மற்றும் தெய்வீக அன்னை சாரதாதேவி போன்றவர்கள் மறைமுகமாகவும் தாக்கத்தை அளித்துள்ளனர்.

கே: அருணாச்சலத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்வதின் பயன் என்ன ? 

ப: இது அனுபவிக்கப்பட வேண்டியது. இது அருணாச்சலா ரயில் நிலைய கவுண்டர்களிலோ அல்லது வேறு இடத்திலோ விற்கப்படுவதன்று. 

கே: தங்களுடைய சம்பிரதாயம் என்ன? இஷ்ட தெய்வம் எது? 

ப: அனைத்திலிருந்தும் விடுபட்ட ஒருவனுக்கு சம்பிரதாயங்கள் தேவையில்லை. சிவன், ராமன், கிருஷ்ணன் போன்றோர் கலியுகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வங்கள்.

கே: குழந்தைகளை வளர்ப்பதற்கான தங்களுடைய பரிந்துரைகள் என்ன? 

ப: அவர்கள் சரியான முறையில் மனதளவிலும், உடலளவிலும் வளர்க்கப்பட்டால் எந்த ஒரு கலாச்சாரத்திற்கும் குழந்தைகளே சிறந்த சொத்துக்கள். 

கே : கோயில் வழிப்பாட்டின் மதிப்பு என்ன ? 

ப: பிண்டத்திற்கும் அண்டத்திற்கும் இடையிலான ஒருமைத்தன்மையை மனமானது உணர உதவுகிறது. இந்தியக் கோயில்கள் கலை, சமூக தொடர்புகள் மற்றும் ஆன்மீக மதிப்புக்களை உள்ளடக்கிய புதையல் இல்லங்கள். 

“ஹிந்துயிசம் டுடே” பின்வரும் கட்டுரையை தனது இதழில் பிரசுரித்தது : 

உலகத்தை சொந்தமாக்கிய ஓர் பிச்சைக்காரன்

அவர் தொடர்ந்து புகைபிடிப்பார், ஒரு கீறல் விழுந்த தேங்காய் சிரட்டையில் உணவை உட்கொள்வார், பனையோலை விசிறியை வீசுவார், கடை வராண்டா, கோயில் பிரகாரம் அல்லது நட்சத்திரம் நிறைந்த வானத்தின் கீழ் தனது படுக்கையை மேற்கொள்வார். ஆனால் யோகி ராம்சுரத்குமார் பயனற்ற நாடோடி அல்ல, அவர் இந்தியாவின் மூன்று அற்புதமான ஸ்ரீ அரவிந்தர், ரமண மகரிஷி, மற்றும் ஸ்ரீ ராம்தாஸ் என்ற  பெரிய பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டங்களை பெற்றவர். ஆனால் 71 வயதில் அந்த மாணவர் இப்போது ஒரு ஆசிரியரும் கூட, அவரது மாணவர்கள் தமிழின் கற்றறிந்தவர் முதல் சாதாரண வேலைக்காரர்கள் என பல வகைகளில் இருப்பார்கள். சில பொன்னான தருணங்களுக்காக அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்து வெகுதூரம் அவரை நோக்கி சிலர் பயணிப்பர். அவரது பாடங்கள் எளிய, வாழ்நாளுக்கான, பாடங்கள், “தந்தையின் இருப்பை உங்கள் உள்ளும், உங்களை சுற்றியும் உணருங்கள், தெய்வீக வழிக்காட்டுதல்களை எல்லா செயல்களிலும் உணருங்கள். கடவுள் வெகு தொலைவில் இல்லை, அவர் இங்கே நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கிறார்.” 

தென் இந்தியாவில் திருவண்ணாமலை என்ற நகரத்தில், எங்கே சிவன் ஒளிவடிவமாக தோன்றினாரோ அந்த அருணாச்சல மலையின் பாதங்களில் அவர் இருக்கிறார். அவர் காலை வேளையில் காகங்களின் கரைசல் அல்லது பசியோடு இருக்கும் தெருநாய்கள் அவரிடம் உணவு கேட்டு எழுப்பும் குரல் கேட்டு எழுந்திருப்பார். அவைகளுக்கு தேவையானது கிடைக்கவும் செய்யும். பக்தர்கள் அவரை விடியலில் துவங்கி, இரவு வெகு நேரம் வரை தேடி வருவார்கள். அனைவரிடமும் ஒரே மாதிரியாக “ஏன் என்னிடம் வந்தீர்கள். நானொரு பிச்சைக்காரன், நான் என்ன உங்களுக்கு தர இயலும்?“ என்று வினவிய பின்னும் அங்கேயே இருப்பவர்களை பார்த்து சிரித்தவாறே அவர்களின் நம்பிக்கையை கண்டு ஆசீர்வதிப்பார். 

அவரை பார்ப்பது உத்தரவாதமானதல்ல. இன்றைய நாட்களில் அவர் தங்கியிருக்கும் எளிய அறையின் வெளியே உள்ள இரும்பு கதவின் கம்பிகளின் வழியே அவர் உங்களுக்கு அழைப்பு விட வேண்டும். முதன்முறையாக அங்கு வருபவர்களுக்கு அந்த வாசற்படி தெரு முனையில் உள்ள நாலடுக்கு  கோவில் கோபுரத்தை விட கவர்ச்சிமிக்கதாக தெரியும்.  அவர் அங்கு வீட்டினுள்ளே இல்லை என்று நீங்கள் நினைக்கும் பொழுது அல்லது அவரை காண நீங்கள் தகுதியில்லாதவர் என்று உங்களுக்கு அச்சம் நேரிடும் பொழுது அவர் தோன்றுவார். உங்கள் முன் ஒரு கையில் விசிறியோடு நின்று, இன்னொரு கையால் நீங்கள் ரகசியமாக கொண்டு சென்ற சுமைகளை தூர அனுப்புவது போல காற்றில் வீசி, பின்னர் அவர் சிரித்து உங்களை வழி அனுப்புவார் அல்லது உங்களை உள்ளே அழைப்பார். 

ஆசிரியர் மா நவரத்னம் மற்றும் அவர் கணவர் திரு இத்தகைய அதிர்ஷ்டத்தை பெற்று இந்த குறிப்புகளை வழங்கியுள்ளார்கள். “புன்னை மரத்தின் கீழே, செய்திதாள்களின் மூட்டைகள், உலர்ந்த கிளைகள், பழுத்த இலைகள், அழுகிய குப்பைகள் ஆகியவற்றுக்கு இடையே அவரை நாங்கள் முதன்முறை சந்தித்தோம். அவரது விரல்கள் ஜபமாலையை உருட்டுவது போல் விளையாடிக் கொண்டிருந்தன. உதடுகள், “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்“ என்று முணுமுணுத்தவண்ணம் இருந்தது. அவரது முன்னிலையில் நாங்கள் பெரிய ஆனந்த அலை எங்கள் மீது அடிப்பதையும், ஒளிரும் நிஜம் எங்கள் உள்ளுணர்வுகளை தொடுவதையும் உணர்ந்தோம். யோகி சிரித்தார், நகைச்சுவையாக பேசினார், புகை பிடிப்பதை ஆனந்தமாக தொடர்ந்தார், அவரது சந்தோஷமான சுதந்திரம் எங்களையும் எங்களது ஆசையின் பிடிப்புகள், தேவைகள், பயம், மன அழுத்தம் மற்றும் பலவீனத்தில் இருந்து விடுவித்தது.” 

இரண்டு வழி உரையாடல் என்பது எப்போதாவது நிகழ்வது எனினும், குமாரி நிவேதிதா ஒருநாள் வெகுளித்தனமாக அவரது நுண்ணிய உணர்வுகளைத் தொட்டு அவரது பிச்சைக்கார அடையாளத்தை சந்தேகப்பட்டார். “ஆக, நீ என்னை நான் பிச்சைக்காரன் என்பதை நம்பமாட்டாய்!“ என அவர் சவாலிட்டார். “நீங்கள் கூறினீர்கள் என்றால்“ என அவள் உடனடியாக முணுமுணுத்தாள். “பின்னர் என்னவென்று நீ நினைத்தாய்?“ “நான் உங்களை ஓர் மகா யோகி என நினைக்கிறேன.” என அவள் அடித்துக் கூறினாள். “யோகி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?“ என அவர் கேட்டார்.  “நீங்கள் இன்பம், வலி, புகழ்ச்சி, கண்டனம் என எதனாலும் பாதிக்கப்படாதவர்….” என அவள் கீதையில் இருந்து மேற்கோள் காட்டினாள். “ஆனால் இந்த கல்லும் அதைப்போலவே இருக்கிறது. அப்போது இதுவும் யோகியா?“, அவர் கேட்டார். “நீங்கள். கல் அல்ல, ஒரு சுத்தியை கொண்டு அடித்தால் கல்லானது உடைந்துவிடும்,“ அவள் வலியுறித்தினாள். “அதுபோலத்தான் என் காலும்“, அவர் பதிலளித்தார். “இல்லை.“ அவள் விவாதித்தாள். “நீங்கள் உடல் அல்ல. அதனால் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள்“ . “ஆனால் நீ எப்படி நான் அத்தகைய யோகி என்று அறிந்தாய்?” அவர் தூண்டினார். “நீங்கள் டாக்டர். ராதாகிருஷ்ணன் இடம்,. யாரெல்லாம் எவ்விதம் உங்களை நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமே தோன்றுவேன் என்று கூறினீர்கள்.  அதைப்போலவே நான் உங்களை ஒரு மகா யோகியாக நினைக்கிறேன், எனவே நீங்கள் எனக்கு அற்புத யோகியாக தோன்றுகிறீர்கள்” என்றாள் அவள். அவர் விட்டுக்கொடுத்துவிட்டு சிரித்தார். 

பறவையின் மரணம் திருப்புமுனை

யோகி ராம்சுரத்குமார் 1918 ல் கங்கையின் கரையோர கிராமத்தில் பனாரஸ் அருகே பிறந்தார். சிறுவனாக இருந்தபோதிலும் அவனது ஓய்வு நேரங்களை முனிவர்கள், தவசிகள், சாதுக்கள் என பலரோடு கழிப்பதிலும், பல இரவுகள் துனி முன்னால் அமர்ந்து அவர்கள் கூறும் தெய்வீக அனுபங்களையும், கதைகளையும் கேட்பது வழக்கம். காலை நேரங்களில் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து உணவளிப்பது அவரது விருப்பமாக இருந்தது. 

ஒருநாள் கிணற்றடியில் அவன் தண்ணீர் இறைக்கும் போது அங்கே இருந்த ஒரு சிறுபறவையை தனது கரத்தில் இருந்த கயிற்றின் மறுமுனையால் தாக்க அந்த பறவை இறந்து போனது. அதனைக்கண்ட அவர் நொறுங்கி போனார். கண்களில் நீர் வழிய அதை கங்கைக் கரையோரம் கொண்டு சென்று அங்கே அதற்கு இறுதிச் சடங்கை செய்து கங்கை நீரில் ஒழுக்க விட்டு பின்பும் அவரது கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. இரக்கமே அவரது வாழ்க்கையின் வழிகாட்டி ஆக இருக்கும் என்று உறுதி பூண்டார்

அவர் கல்லூரியில் நல்ல கல்வியை பெற்றிருந்த போதிலும் அதில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. கங்கைகரையோர சாதுக்களிடமே அவர் மீண்டும் வந்தடைந்தார். ஒருநாள் இரவு அவர்கள் தென்னிந்தியாவின் இரண்டு சாதுக்களான ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரமணமகரிஷி பற்றி குறிப்பிட இந்த இளம் சாதகன் அவர்களை தேடி புறப்பட்டான். அவர்களை  அடைந்து அவர்களிடமிருந்து மிகுந்த விழிப்புணர்வு பெற்றான். 1950 களில் பனிபடர்ந்த இமயமலைக்கு பயணம் மேற்கொண்ட போது இவ்விரு குருமார்களும் மஹாசமாதி அடைந்த சேதி கேட்டு, அவர் உடனடியாக மூன்றாவது குருவின் ஆசிரமத்திற்கு விரைந்தார், அவர் ராம்தாஸ் எனும் மஹாத்மா ஆவார். ஏற்கனவே இரண்டுமுறை ராமதாஸரின் ஆசிரமத்தின் படிகளை மிதித்திருந்த ராம்சுரத்குமார், அங்கிருந்து அவசரப்பட்டு கிளம்பி சென்றிருந்தார். அவசரப்பட்டு கிளம்பி சென்றிருந்தார், “அந்த மகா குருவின் அருகாமையில் இருப்பதற்கான  பொன்னான வாய்ப்பினை” இன்னொருமுறை  தவறவிடக்கூடாது என்று அவர் உறுதியாக இருந்தார். ராம்தாஸ் அவரை வரவேற்று அவருக்கு ராமநாம மந்திரத்தின் தீக்ஷை அளித்து, சில காலம் கழித்து அவரை இறைப்பணிக்காக அங்கிருந்து அவருடைய ஆசியுடன் அனுப்பி வைத்தார். இந்தியா முழுவதும் ஏழு ஆண்டுகள். அலைந்து திரிந்து , தன் உள்ளேயும் வெளியேயும் அந்தப் பேரொளியை காணும் சாதனாவை மேற்கொண்ட அவர் இறுதியாக 1959 ல் எங்கே அவரது குரு ரமணர் பல பத்து ஆண்டுகள் தியானம் செய்தாரோ அந்த திருவண்ணாமலையை வந்தடைந்தார். 

வலியத் தாக்கும் ஹிந்து மதம்

யோகி ராம்சுரத்குமாருக்கு எந்த அமைப்பும் இல்லாத போதும் அவரது குரல்,  அவரிடம் தீக்ஷை பெற்ற ஒரே சீடர், சாது பேராசிரியர் ரங்கராஜன் அவர்கள் நிறுவிய, சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிடும் “தத்துவ தரிசனம்” என்ற காலாண்டு இதழில் தொடர்ந்து எதிரொலிக்கிறது. அகாடமியின் பெருமைமிக்க அமைப்பான யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், யோகியால் செல்லமாக கடிந்துக்கொள்ளப்பட்டதும் உண்டு: “நமது உண்மையான வேலை பொறியாளர்களை மற்றும் கணிணி அறிவியலாளர்களை உருவாக்குவதன்று, நமது இலக்கு உயர்வானது. மனிதன் கணிணியைச் சார்ந்து இருப்பானெனில் அவனது மனம் சேதமடையும்,” என்பார் அவர். 

“ஹிந்துயிசம் டுடே” , பேராசிரியர் ரங்கராஜன் மூலமாக யோகியின் சில தெளிவான எண்ணங்களை பதிவு செய்துள்ளது: “இந்திய சூழ்நிலைக்கு பொருந்தாத தவறான வாழ்க்கை மூல்யங்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவதே” இன்றைய ஹிந்துத்துவத்திற்கு பெரும் சவால். பாரம்பரியத்தை எதிரொலிக்கும் வகையில் அவர், “ பணிவு, சுயநலமற்றதன்மை, அடுத்தவரை மதிக்கும் பண்பு, போன்றவற்றை கடமையை ஆற்றும் பொழுது கடைபிடித்தல் என்பதே மிக உயர்ந்த ஆன்மீக பண்பு. பிள்ளைகளை மனதளவிலும், உடலளவிலும் முறையான விதத்தில் வளர்த்தால் அவர்களே எந்த கலாச்சாரத்திற்கும் பெரும் பொக்கிஷம் ஆவார்கள்”, என்கிறார். அவர் தோல் சுருங்கினாலும், தலைமுடி வெண்மையானபோதும், அவர் கண்களில் தீப்பிழம்பு தெரிகிறது. “இந்த காலத்தின் தேவை வலியோர் தாக்கும் ஹிந்து மதம் தான்”, என்று அவர் முழங்கும் பொழுது, இது இந்தப்பிச்சைக்காரன் பிச்சை கேட்பதல்ல, இது அரச கட்டளை“, என்று நீங்கள் உணர்வீர்கள்.

நன்றி : ஹிந்துயிசம் டுடே, ஹவாய்

(“தத்துவ தர்சனா”, ஆகஸ்ட் 1990 – ஜனவரி 1991, தொகுதி 7, எண் 3 & 4 )

அத்தியாயம் 2.16 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முதலாமாண்டு விழா

யோகி ஜெயந்தி விழா மற்றும் ராம்நாம் சப்தாஹம் டிசம்பர் – 1, 1989 ல் நிறைவடைந்தப்பின் அது பல யோகி ராம்சுரத்குமார் பக்தர்களின் மனதில் நல்ல தாக்கத்தை தந்திருந்தது. திரு நாகபூஷணம் ரெட்டி திருவண்ணாமலையில் இருந்து யோகி ஜெயந்தி அன்று ரமணாச்ரமத்தில் நடந்த கோடி அர்ச்சனை குறித்து தெரிவித்தார். பின்லாந்தை சேர்ந்த ஒரு பக்தர் திரு. மேயோ இந்த சாதுவை டிசம்பர் – 2 ஆம் தேதி சந்தித்தார். குமாரி விஜயலட்சுமி (தற்பொழுது யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் மாதாஜி விஜயலட்சுமி) தொலைபேசியில் அழைத்து திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்தார். இந்த சாது குருவிற்கு டிசம்பர் – 5 அன்று ஒரு கடிதம் எழுதினார். 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

தங்களின் அளவற்ற கருணையாலும் ஆசியாலும் ராமநாம சப்தாஹம் 25- 11 – 1989 முதல்    1- 12 – 1989 வரை சிறப்பாக நிறைவுற்றது. அதனை தொடர்ந்து நடந்த உங்களின் ஜெயந்தி விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த சப்தாஹம் மற்றும் ஜெயந்தி கொண்டாட்டங்களில் அகண்ட ராம்நாம் சொல்லப்பட்டது. 

நாளை குமாரகோவில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் என்னை பேச அழைத்திருக்கிறார்கள். நான் இன்று மாலை திருநெல்வேலிக்கு எக்ஸ்பிரஸ் மூலமாக கிளம்புகிறேன். நான் 7 அல்லது 8 ஆம் தேதி காலையில் திரும்பி வருவேன். நான் உங்கள் சேதிகளை சரியாகவும், திறம்படவும் குமாரகோவிலில் கூடுகின்ற நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு தெளிவாக உரைக்க உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன். 

நாங்கள் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முதலாமாண்டு விழாவை சென்னையில் 14 ஆம் தேதி டிசம்பர் அன்று கொண்டாட நினைத்திருக்கிறோம். திரு. C. சின்னசாமி, வழக்கறிஞர் மற்றும் திரு. பெரியசாமி தூரன் அவர்களின் மருமகன், மற்றும் திரு. லீ லோசோவிக் அன்றைய கூட்டத்தில் பேச இருக்கின்றனர். அழைப்பிதழின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

நான் அங்கே 9 ஆம் தேதி டிசம்பர் 1989 அன்று மதியம் நேரில் வந்து தங்களிடம் ஆசி பெறுவேன். நான் அங்கு, குமாரி . R. விஜயலட்சுமி , IRS, இயக்குனர் வருமான வரித்துறை, அவர்களுடன் வருகிறேன்.  நாங்கள் உங்கள் தரிசனத்தையும் ஆசியையும் பெற விரும்புகிறோம்.

விவேகானந்தா கேந்திராவின் “யுவபாரதி” என்ற மாத இதழ், ஹரகோபால் சேபுரியின், “யோகியுடனான எனது அனுபவங்கள்‘ என்ற புத்தகம் குறித்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. அந்த விமர்சனத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். 

டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன் , சிரஞ்சீவி. விவேகானந்தன், குமாரி. நிவேதிதா , திருமதி. பாரதி மற்றும் எனது அன்னை தங்களது நமஸ்காரங்களை தங்களிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

வே. ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டப்படி”

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா, குமாரகோவில் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் பெரிய நிகழ்வாக நடைப்பெற்றது. சாது அங்கே டிசம்பர் 6 ஆம் தேதி புதன்கிழமை காலையில் சென்றடைந்தான். லீ லோசோவிக் ஏற்கனவே அங்கு வந்திருந்தார். சாது குருதேவரின் பாதுகைக்கு பூஜைகள் செய்தார். பின்னர் பொன்.காமராஜ் அவர்களின் பஜன் மற்றும் அன்னையர்கள் நடத்தும் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றான். சுவாமி அம்பிகானந்தா தலைமையேற்ற கூட்டத்தில் இந்த சாது உரையாற்றினான். திரு. G.சங்கர்ராஜூலு, திரு. ARPN.செண்பக நாடார் மற்றும் பிற பகவானின் முக்கிய பக்தர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். பின்னர் சாது அவர்களோடு மதுரைக்கு சென்று அடுத்தநாள் சென்னைக்கு திரும்பினான். 

டிசம்பர் 9 சனிக்கிழமை காலையில் சிரஞ்சீவி. விவேகானந்தன், குமாரி.நிவேதிதா மற்றும் குமாரி. விஜயலட்சுமி உடன் சாது திருவண்ணாமலைக்கு கிளம்பினான். யோகியின் இல்லத்திற்கு மதியம் வந்தடைந்தோம். தேவகி மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுஜாதா போன்றவர்கள் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் வெளியே சென்றிருந்தமையால் அங்கே காத்திருந்தனர். சாதுவின் சகோதரர் லட்சுமி காந்தன் மற்றும் மைத்துனி சாரநாயகி போன்றோரும் அங்கே வந்திருந்தனர். பகவான் மாலை 6 மணிக்கு கணேசன் அவர்களோடு வந்தார். காரைவிட்டு அவர் இறங்கியவுடன், இந்த சாதுவிடம் யோகி, “நீ இந்தப்பிச்சைக்காரனை மன்னிக்க வேண்டும்.” என கூறிவிட்டு எனது கையை பிடித்து அவரது இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். நாங்கள் அனைவரும் அவருடன் இரவு 11.00 மணிவரை இருந்தோம். யோகி, தான் லீ லோசோவிக் மற்றும் பிற வெளிநாட்டு பக்தர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலையாக இருந்ததாகவும், தன்னுடைய கால்களை நீட்டி மடக்கவோ, அவ்வளவு ஏன், மூச்சுவிடக்கூட தனக்கு நேரமில்லை என்றார். யோகி ராம்சுரத்குமார் தனது வாசலில் திரிந்தவாறு இருந்த பக்தர்களை செல்லுமாறு கூறினார். இரண்டு பொறியாளர்களான பக்தர்கள் கல்பாக்கத்தில் இருந்தும், மூன்று பக்தர்கள் சிவகாசியிலிருந்தும் எங்களோடு இணைந்தனர். குரு தனது இடத்தில் அமர்ந்தப்பின் வழக்கம்போல் நிவேதிதாவை கிண்டல் செய்ய துவங்கினார். அவர் “நானொரு பிச்சைக்காரன் என்பது உனக்கு தெரியுமா” என வினவினார். நிவேதிதா அவரை “மகா பிச்சைக்காரன் அத்தோடு மகா யோகி” என்று கூறினாள். அவர் நிவேதிதாவிடம், “தெ.பொ.மீனாட்சிசுந்தரம் என்னை மகா பிச்சைக்காரன் என்கிறார். உனது தந்தை என்னை மகா யோகி என்கிறார். இவற்றில் எது உண்மை?“ என வினவினார். நிவேதிதா, “இரண்டும் உண்மை“ என்றாள். யோகிஜி தன்னிடம் இருந்த குச்சியை நிவேதிதாவிடம் காட்டி சிரித்தவாறே,  “நிவேதிதா தன் தந்தை இதைவிட பெரிய குச்சியை வைத்திருப்பதாக கூறுகிறாள்.” தேவகி யோகிக்கு டிபன் தர முற்பட்டபோது யோகி அவரை கடுமையாக கடிந்து கொண்டார். நிவேதிதா வருத்தப்பட்டார். யோகி சிரித்தவாறே, “நிவேதிதா தேவகியிடம் ஒட்டிக்கொண்டு விட்டாள்” என்று கூற, இந்த சாது யோகியிடம் தேவகி எப்போதும் நிவேதிதாவிற்கே கடிதம் எழுதுவார் என்றார். லீலாவதி என்ற பக்தர் தனக்கு நெல்லிக்காய் சில தொந்தரவுகளை தந்ததாக கூறினார். இந்த சாது, டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு யோகி ராம்சுரத்குமார் கூறியது போல் நெல்லிக்காய் ஒரு சஞ்சீவினி ஆக இருந்தது  என்றும் விவேக்கிடம் தேன் அருந்தும்படி யோகி கூறியபோது அது அவனுக்கு சஞ்சீவினி ஆக இருந்தது என்றும் கூறினான். யோகி மீண்டும் விவேக்கிடம் இரத்த தானம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றார். விவேக் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அடுத்த செயல் திட்டங்களை யோகியிடம் விளக்கினான். பகவான் சாதுவின் கரங்களைப் பற்றி அதனை அழுத்தி ஆன்மீக அதிர்வுகளை செலுத்த துவங்கினார். சாது யோகியிடம் காஷ்மீர் குறித்த நிலவரங்களை விளக்கினான். பிறகு, ஸ்ரீ அரவிந்தரின் சொற்பொழிவின் சில நகல்களை தந்தான். பகவான் அதனை அங்கிருந்த அனைவருக்கும் விநியோகம் செய்தார். ஒருவர், மாலைகள் போடப்பட்டு யோகி ஒரு சாமியார் போல் காட்சியளிக்கிறார் என்று கூற, உடனடியாக பகவான் தனது கழுத்தில் இருந்து சில மாலைகளை எடுத்து இந்த சாதுவின் கழுத்தில் இட்டு, “இந்தப்பிச்சைக்காரன் ரங்கராஜனை ஒரு சாமியாரைப் போல பார்க்க விரும்புகிறான்“ என்று கூறிவிட்டு உரக்க சிரித்தார். திருப்பனந்தாள் சுவாமி அங்கு வந்தார். பகவான் சகோதரி நிவேதிதா பதிப்பகத்தின் நூல்களை அவரிடம் கொடுத்தார். லீ யோகியின் முன் வந்து ஒரு கடிதம் ஒன்றை வைத்தார். பகவான் வீட்டிற்குள் இருந்து லீ முன்பு எழுதிய கடிதங்களைக் கொண்டு வந்து அவைகளை சாதுவிடம் தந்து படிக்குமாறு கூறினார். பின்னர் அவைகள் அனைத்தையும் நிவேதிதா பதிப்பகத்திற்கு கொடுத்தார். பகவானை குறித்து நாராயணன் எழுதிய புத்தகம் ஒன்றை யோகி ராம்சுரத்குமார் திரும்பக் கொடுத்தார். இரண்டு அன்னையர்கள் யோகியிடம் ஆசிபெற வந்துவிட்டு சென்றனர். யோகி ராம்சுரத்குமார் நிவேதிதாவிடம் திரும்பி, “உனது தந்தையின் பணியினால் பலர் இங்கே கூட்டமாக வருகின்றனர். இது உனது தந்தையின் வேலை. இந்தப்பிச்சைக்காரனுக்கு இப்போது ஓய்வு என்பதே இல்லை”. தேவகி தனக்கு தெரிந்த மாணவர்களை யோகியின் தரிசனத்திற்கு அழைத்துவர அனுமதி கேட்டார். யோகி சரி என்று பதிலளித்தார். மேலும் அவர், “இந்தப்பிச்சைக்காரன் ஏற்கனவே அதிக அழுத்தத்தில் இருக்கிறான். இவர் மேலும் சில மக்களை அழைத்து வர இருக்கிறார், பாருங்கள்“ என்றார். யோகி அனைவரையும் விடைபெறும் முன் ஆசீர்வதித்தார். வழக்கம் போல் சாதுவின் தண்டத்தை எடுத்து ஆசீர்வதித்து அவரிடமே திருப்பி கொடுத்தார். சாது மற்றும் அவருடன் இருந்தவர்கள் அருகில் இருந்த ஒருவரின் இல்லத்தில் இரவு தங்கியிருந்தனர். அதிகாலையில் நிவேதிதாவும், தேவகியும் வெளியே வந்தபோது பகவானும் அவரது இல்லத்தில் இருந்து வெளியே வந்து, “நாம் மிக நன்றாக சந்தித்தோம்“ எனக்கூறி அவர்களை ஆசீர்வதித்து விட்டு நடந்தார். சாதுவும் அவர்களோடு இருந்தவர்களும் நல் அனுபவங்களோடு சென்னை திரும்பினர். 

டிசம்பர் 12 அதிகாலையில் லீ லோசோவிக் மற்றும் அவரது குழுவினர் வந்தடைந்தனர். சாது அவர்களுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்தார். பிறகு அவர்களுடனும் விவேக் உடனும் சாது திருமுல்லைவாயில் வைஷ்ணவி கோயிலுக்கு சென்றார். அன்னை வசந்தி மற்றும் சுவாமி தேவானந்தா அவர்களை வரவேற்றனர். அடுத்தநாள் அவர்களை சாது கபாலி கோயிலுக்கு அழைத்துச் சென்றேன் அங்கே விஸ்வநாத சிவாச்சாரியார் எங்களை வரவேற்று கோயிலில் மரியாதைகள் செய்தார். பின்னர் அவர்கள் சுவாமி ஹரிதாஸ் கிரியை சந்தித்தனர். அவர்கள் பாரதீய வித்யா பவனுக்கு சென்று விட்டு பின்னர் சகோதரி நிவேதிதா அகாடமிக்கு வந்தனர். 

டிசம்பர் 14 அன்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முதலாமாண்டு கொண்டாடப்பட்டது. ப்ரேமா நடராஜன் அவர்களின் பிரார்த்தனை பாடலுடன் விழா துவங்கப்பட்டது. டாக்டர். ராதாகிருஷ்ணன் கூட்டத்தினரை வரவேற்றார். இந்த சாதுவுடன் புகழ்பெற்ற வர்த்தக யூனியன் தலைவரான திரு. T.V.ஆனந்தன், மற்றும் திரு. C. சின்னசாமி ஆகியோர் இந்த கூட்டத்தில் உரையாற்றி பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர். விவேகானந்தன் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். 

வெள்ளிக்கிழமை , டிசம்பர் 15 , 1989 அன்று சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒரு மங்களகரமான நாளாக ஆனது. இந்த அகாடமி ஒரு தொண்டு நிறுவனமாக சென்னையில் பதிவாளர் மூலம் பதிவு செய்யப்பட்டது. திரு. பொன்ராஜ் அவர் தயாரித்த பத்திரம் யோகி ராம்சுரத்குமார் இடம் வாசிக்கப்பட்டு முன்பே ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. இரவு உணவை திரு. நாகபூஷணரெட்டி ஏற்பாடு செய்து இந்த சாது, லீ மற்றும் நண்பர்களை மகிழ்வித்தார். டிசம்பர் – 16 அன்று பக்தர்கள் ஒரு மாதத்திற்கு நீளும் ராம்நாம் ஜபத்தை தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 வரை திருவல்லிக்கேணி பாண்டுரங்கன் கோயிலில் மங்களகரமான மார்கழி மாதத்தில் நடத்தினர். மொரீஷியஸில் இருந்து வந்த ஒரு பக்தர் சாதுவை சந்தித்தார். டிசம்பர் 19 அன்று வைஷ்ணவி கோயிலைச் சேர்ந்த அன்னை வசந்தி அவர்களுக்காக, யோகி ராம்சுரத்குமார் குறித்த புத்தகங்களை வாங்க, சுவாமி தேவானந்த சரஸ்வதி அவர்கள் இந்த சாதுவின் இல்லத்திற்கு வந்திருந்தார். அவர் தனது கனவில் சாது யோகி ராம்சுரத்குமார் கரங்களைப்பற்றியவாறு யோகியின் இல்லத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு இன்னொரு கரத்தால் ஆசீர்வதிப்பதைப்போல் கனவு கண்டதாகவும், சில சமயம் கனவு நிஜமாக கூடும் என்றும் கூறினார், எதிர்காலத்தில் யோகியின் இலக்குகளை பரப்பும் பணியில் சாது இருப்பதற்கான முன்னறிவிப்பாகவும் இது இருக்க கூடும். 

ஜனவரி 12, 1990 அன்று சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட அனைத்து தயாரிப்புகளும் முழு வேகத்தில் துவங்கப்பட்டன. டிசம்பர் 23 , 1989 ல் நானும், விவேக்கும் ஒரு முன்னணி வழக்கறிஞர் மற்றும் கல்வியாளரான திரு. N.C.ராகவாச்சாரி அவர்களை சந்தித்தோம். அவர், சுவாமி விவேகானந்தர் குறித்து நடத்தப்படும் பேச்சு போட்டியில் சிறந்த  பேச்சாளரை உருவாக்கும் பள்ளிக்கு ஒரு சுழல் பரிசு கேடயத்தை வழங்க மிக மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். வீட்டிற்கு திரும்பிய சாதுவிற்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இருந்து இந்த சாருவிற்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. இளையராஜா யோகியின் ஒரு பக்தரும் ஆவார். அடுத்தநாள் நானும், விவேக்கும் திரு. இளையராஜா அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். அவரும் அவரது மனைவியும் இந்த சாதுவை அன்போடு வரவேற்றனர். அவர் இந்த சாது , விவேக் மற்றும் நிவேதிதா குறித்து பகவான் மூலம் அறிந்திருந்தார். இது சாது அவரின் இல்லத்தில் இருந்த பூஜை அறைக்குச் சென்று சென்று பூஜை செய்துவிட்டு, அவரையும், அவர் மனைவியையும் ஆசீர்வதித்தான். அவர் யோகி ராம்சுரத்குமாரின் படம் அச்சிடப்பட்ட 500 அழகிய காலண்டர்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய தந்தார். இந்த சாதுவையும், விவேக்கையும் அவர் தனது காரில் திருப்பி அனுப்பி வைத்தார். இதுவொரு பகவானின் லீலையே. இந்த சாது பகவானுக்கு டிசம்பர் 26 அன்று கடிதம் ஒன்றை எழுதி, யோகியின் பக்தர்களான ப்ரீதா மற்றும் அவரது பிள்ளைகள் யோகியின் இல்லத்திற்கு விஜயம் செய்யும் போது அவர்களிடம் கொடுத்தனுப்பினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த தாழ்மையான வேலைக்காரன் மிக்க மகிழ்வோடு, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முதலாமாண்டு விழா சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் டிசம்பர் 14 அன்று நடந்தேறியது என்பதை, தெரிவித்துக் கொள்கிறேன். திரு.T.V.ஆனந்தன் மற்றும் திரு. லீ லோசோவிக் இதில் பங்கு பெற்றனர். 

திரு.N.C.ராகவாச்சாரி என்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் காலம் சென்ற திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் உயிலை செயல்படுத்தும் பொறுப்பு உடையவர், யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம் ஒன்றை சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளான தேசிய இளைஞர் தினத்தில்,  யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால் நடத்தப்படும், பள்ளிகளுக்கு இடையேயான, சுவாமி விவேகானந்தர் பற்றிய, பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த பேச்சாளருக்கு தருவதாக கூறியிருக்கிறார். இந்த போட்டி 6 ஆம் தேதி ஜனவரி 1990 அன்று நடைபெறும் , ஜூனியர் பிரிவில் ஆரம்பநிலை, இரண்டாம்நிலை பள்ளிக்கூட பிள்ளைகளுக்கும், சீனியர் பிரிவில் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கூட பிள்ளைகளுக்கும் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாவது, மற்றும் மூன்றாவது பரிசுகள் வழங்கப்படும். சீனியர் பிரிவில் சிறந்த பேச்சாளருக்கு சுழல் கேடயம் வழங்கப்படும். பரிசளிப்பு விழா சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, ஜனவரி 12 ஆம் தேதி, நடைபெறும், அதில் திரு. T.V. ஆனந்தன், மற்றும் திரு. N.C. ராகவாச்சாரி கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்துடன் சென்னை மாநகரின் 300 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்குவதற்கான அச்சுப்பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

திரு. இளையராஜா உங்கள் படம் போடப்பட்ட, 1990 ஆம் வருட காலண்டர்கள் 500 தந்துள்ளார். அவைகளை நாங்கள் ராம்நாம் லிகித ஜபம் மற்றும் ஜப யக்ஞத்தில் பங்கு பெறுபவர்களுக்கு அன்பளிப்பாக தருகிறோம். எங்களின் தினசரி சத்சங்கம் பாண்டுரங்கன் கோயிலில் சிறப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. பல பக்தர்கள் கலந்து கொண்டு குழுவாக ராமநாமத்தை உச்சரிக்கின்றனர். 

சகோதரி நிவேதிதா அகாடமி ஒரு பொது தர்ம டிரஸ்டாக டிசம்பர் 15 அன்று பதிவு செய்யப்பட்டது. சகோதரி நிவேதிதா அகாடமிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வருமான வரிவிலக்கு 80 G படிவத்தின் கீழ் பெற  நாங்கள் விண்ணப்பித்திருக்கிறோம். உங்கள் ஆசிகளை நாங்கள் வேண்டுகிறோம். 

அகில இந்திய வானொலி நிலையம், சென்னை – A, “சுவாமி விவேகானந்தரும், அவரது சமூக சேவை நற்செய்திகளும்“ என்ற தலைப்பில் எனது உரையினை விவேகானந்தர் ஜெயந்தி நாளன்று, வெள்ளிக்கிழமை , ஜனவரி 12 , 1990 காலை 8.30 க்கு ஒலிபரப்பும். இதன் ஒலிப்பதிவு நிகழ்ச்சி ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும், நான் அதற்கு முன் அங்கே வந்து உங்கள் ஆசியை பெற விரும்புகிறேன். 

பம்பாய் உயர்நீதி மன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர், சௌ. ரஜினி பாக்வே, எங்களோடு பம்பாய் பணிகளில் தீவிரமாக இணைந்து பணியாற்றுகிறார். அவர் உங்கள் ஆசியைப் பெற சென்னைக்கு டிசம்பர் 29 ஆம் தேதி வருகிறார். அவர் என்னோடு திருவண்ணாமலைக்கு டிசம்பர் 30 அன்று வருவார். நாங்கள் பகலில் அங்கு வந்து சேர்வோம். 

டாக்டர் ராதாகிருஷ்ணன், சிரஞ்சீவி. விவேகானந்தன், குமாரி நிவேதிதா, திருமதி. பாரதி, எனது வயதான அன்னை அனைவரும் தங்களின் நமஸ்காரத்தை தங்களிடம் தெரிவிக்க சொன்னார்கள். நாங்கள் அனைவரும் எங்களின் தாழ்மையான பணிகளில் வெற்றிபெற உங்கள் ஆசிகளை வேண்டுகிறோம்.

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.” 

புதன்கிழமை , டிசம்பர் 27 , 1989 ஹனுமந் ஜெயந்தி பாண்டுரங்கன் கோயிலில் சத்சங்கத்தினரால் கொண்டாடப்பட்டது. பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கையில் இந்த சாதுவிற்கு படத்தில் மஹாவீர் ஹனுமனே காட்சியளித்தார். அடுத்தநாளே திருமதி. புஷ்பா ரோகிணி கார்டனில் இருந்து இந்த சாதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பார்வையில் ஹனுமானாக யோகி ராம்சுரத்குமார் படத்தில் காட்சியளித்ததாக கூறினார். 29 ஆம் தேதி பகவானை பார்த்துவிட்டு வந்த ப்ரீதா, தான் யோகிக்கு ஆரத்தி எடுத்த தட்டில் யோகியின் உருவம் தெரிந்ததாக கூறினார். 

மும்பையில் இருந்து வந்த சௌ. ரஜினி பாக்வே, டயானா போன்றோர், விவேக், நிவேதிதா மற்றும் கீதா ஆகியோருடன் இந்த சாது சனிக்கிழமை, டிசம்பர் 30, 1989 அன்று காலையில் கிளம்பி திருவண்ணாமலை யோகியின் இல்லத்திற்கு மதியம் சென்றடைந்தோம். யோகியின் முன்னர் பெரிய கூட்டம் ஒன்று இருந்தது. இருப்பினும் யோகி என்னையும் என் உடன் இருந்தவர்களையும் அன்போடு வரவேற்றார். மதுரையைச் சேர்ந்த திரு. சங்கர்ராஜூலுவும் அங்கே அமர்ந்திருந்தார். யோகி என்னிடம் அவரை அறிவாயா என வினவினார். இந்த சாது அவரை நன்றாகவே அறிவேன் என்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் குறித்து அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்றும் பதிலளித்தான்.  ரஜினி மற்றும் டயானாவை, சாது, யோகியிடம் அறிமுகப்படுத்தினான். பகவான் அவர்களிடம் கணேஷ்புரியில் உள்ள நித்யானந்தா ஆசிரமம் சென்றிருக்கிறீர்களா என வினவினார். மேலும் இந்த சாதுவிடமும் அடுத்தமுறை மும்பை செல்லும்போது கணேஷ்புரி போகும்படி கூறினார். நிச்சயம் செல்வதாக இந்த சாதுவும் உறுதியளித்தான். ரஜினியிடம் யோகி நகைச்சுவையாக ஒரு வழக்கறிஞர் ( Lawyer ) க்கும் ஒரு பொய்யன் ( Liar ) க்கும் உள்ள வேறுபாடு என்னவென்று கேட்டதோடு, வழக்கறிஞர்களும், வியாபாரிகளும் தங்கள் தொழிலில் நேர்மையாக இருக்க முடியாது என்று கூற ரஜினி அதனை ஏற்றதோடு, ஒரு அப்பாவியான மனிதனை காப்பாற்றவும் ஒருவன் பொய்களை கூறவேண்டும் என்று கூறினார். யோகிஜி நிவேதிதாவிடம் நீ வழக்கறிஞராக விரும்புகிறாயா என கேட்டார். இல்லை என நிவேதிதா பதிலளித்தார். யோகி சிரித்தவாறே அன்று அவள் ஒருநாளும் உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக ஆக முடியாது என்றார். விவேக்கிடம் நமது அகாடமி நிவேதிதாவின் பெயரில் இருப்பதில் உனக்கேதும் பொறாமை உண்டா என வினவினார். இந்த சாது உடனடியாக நாங்கள் விவேகானந்தர் ஜெயந்தியையும் கொண்டாடுகிறோம் என்றேன், அதற்கு யோகி, “ஆனாலும் அகாடமி நிவேதிதாவின் பெயரில் தானே உள்ளது” எனக்கூறி உரக்க சிரித்தார். பின்னர் இந்த சாது விவேகானந்தர் ஜெயந்தியின் போட்டி மற்றும் பரிசு குறித்து யோகியிடம் பகிர்ந்தார். யோகி எங்களது முயற்சிகளை ஆசீர்வதித்ததோடு, அந்த பரிசுகளை தரும் முன் அவைகளை தன்னிடம் எடுத்து வரச்சொன்னார். இந்த சாது,  ராஜேஸ்வரி என்கிற அன்னை ராமநாமத்தால் குணமானதை கூறினார். யோகிஜி சங்கர்ராஜூலுவிடம் திரும்பி நகைச்சுவையாக, “ரங்கராஜன் அற்புதங்களை புரிகிறான்“ என்றார். இவையனைத்தும் அவரின் கருணை, ஆசி என இந்த சாது கூற, பகவான் அனைத்தும் தந்தையின் ஆசி, கருணை என்றார். யோகி, ராமாயணத்தில் வரும் சம்பாதியின் சிறகுகள், குரங்குகள் ராம நாமத்தை ஜெபிப்பதை கேட்டதாலேயே, வளர்ந்த நிகழ்வை குறிப்பிட்டார். சாது, பகவானிடம் தான் அகில இந்திய வானொலியில் விவேகானந்தர் ஜெயந்தி அன்று உரை நிகழ்த்த இருப்பதை குறிப்பிட்டார். 

ரஜினி, யோகிக்கு மாலையணிவிக்க விரும்பினார். யோகி அதனை அனுமதித்தார். யோகி அவரோடும், டயானா உடனும் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார். யோகி, ஜெத்மலானி குறித்து கேட்டார். அவர்கள் அவர் உச்சநீதி மன்றத்தில் பணிபுரிவதாகவும், சிலசமயம் மட்டும் உயர்நீதிமன்றம் வருவதாகவும் கூறினார்கள். யோகி அவர்களிடம் நீங்கள் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறீர்களா என கேட்க, ஆம் என்று பதிலளித்தனர். ரஜினியை பகவான் தன்னுடைய புகைப்படம் எடுக்க அனுமதித்தார். 

புத்தாண்டிற்கான ஆசியை பகவானிடம் நாங்கள் பெற்றுக்கொண்டு அவரிடம் இருந்து விடைப்பெற்றோம். நாங்கள் ரமணாச்ரமம் சென்றோம். தேவகி மற்றும் சுஜாதாவை கிருபாவில் சந்தித்தோம். நாங்கள் ஆலமர குகைக்கு சென்றோம் அங்கே சுந்தரம் சுவாமி எங்களை வரவேற்றார். திரு. ஸ்ரீதர குருக்கள் எங்களை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரவேற்றார் அங்கே இறைவனையும், இறைவியையும் தரிசித்து விட்டு நாங்கள் சென்னை கிளம்பினோம்

அத்தியாயம் 2.17 

சாதுவின் அன்னையின் நித்திய உறக்கம்

“சுவாமி விவேகானந்தரும், அவரது சமூகசேவை நற்செய்திகளும்“ என்ற தலைப்பில் இந்த சாதுவின்  வானொலி உரை, விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜனவரி 12, 1990 அன்று ஒலிப்பரப்பானது. அதன் ஒலிப்பதிவு ஜனவரி 5 அன்று நடைப்பெற்றது. இந்த சாது தனது தீக்ஷா குரு யோகி ராம்சுரத்குமார், விவேகானந்தர் ஜெயந்தி நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட அரசு முடிவு செய்த அறிவிப்பின் போது அடைந்த பரவசத்தை நினைவு கூர்ந்தார்:

“சர்வதேச இளைஞர்கள் ஆண்டில், ஜனவரி 12 , 1985 ல், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற நேரத்தில், இரண்டு தென் ஆப்பிரிக்கா பக்தர்கள் எனது குருநாதர் யோகி ராம்சுரத்குமார் அவர்களை திருவண்ணாமலையில் சந்தித்தனர். விவேகானந்தர் ஜெயந்தியை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற பாரத அரசின் உத்தரவை கேள்விப்பட்டு யோகி மகிழ்வோடு துள்ளி குதித்ததை கண்டார்கள்.  ‘ஓ! என் விவேகானந்தா, சுவாமி விவேகானந்தா“ என்று வியந்து கூறியதோடு, ‘விவேகானந்தர் நமக்கு மிகச்சிறந்த செயல்முறை வேதாந்தம் என்பதை வழங்கி, ஒட்டுமொத்த மனித குலத்தின் மீட்சிக்கு வழிவகுத்தார்’ என்று முழங்கினார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம், யோகி, வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொருத்தர் உடைய இல்லத்திற்கும் சேவை மற்றும் தியாகம் குறித்த விவேகானந்தரின் செய்தியை கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியதோடு, ‘இந்த உலகத்திற்கு இந்தியா தருகின்ற அற்புதமான பரிசு இதுவாகவே இருக்கும்’ என்றார். எனது குருவின் கருத்துப்படி பாரத நாட்டின் இலட்சியம் விவேகானந்தர் போன்ற தேசபக்த துறவிகளை உருவாக்குவதே ஆகும். அத்தகையோர் தங்களது சுய விடுதலைக்கு அல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீட்சிக்கும் காரணமாக அமைவார்கள். நமது தேசத்தின் வருங்காலத்தை உருவாக்க நமது எளிய முறைகளில் நாம் முயற்சி செய்வோமாக. உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோதத — எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை அயராது உழைமின்! வந்தே மாதரம்!” 

இந்த சாது வானொலி நிலையத்திற்கு ஒலிப்பதிவு செய்ய சென்ற போது வீணை வித்வான், டாக்டர். S. பாலசந்தர், மற்றும் இசையமைப்பாளர், டாக்டர். S. ராமனாதன், ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றான். அவர்களுக்கு இந்த சாது “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்“ பாகம் – 1 மற்றும் சில ‘தத்துவ தர்சனா’ இதழ்களையும் பரிசாக வழங்கினான். ஜனவரி 6 ஆம் தேதி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, பிரபல வழக்கறிஞர் திரு என். சி. ராகவாச்சாரி அவர்கள் நன்கொடையாக அளித்த யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம், மற்றும் யோகி ராம்சுரத்குமார் பரிசுகளுக்கான பேச்சுப்போட்டி, ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் நடைப்பெற்றது. இந்த போட்டி திருவல்லிக்கேணி இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் நடைப்பெற்றது, மாநகரின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கான பரிசு யோகி ராம்சுரத்குமார் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டு  ஜனவரி 12 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த விருந்தினர்கள், திரு. N.C. நாயுடு மற்றும் டாக்டர் மஹேந்திர நாயுடு, போட்டியின் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

ஜனவரி 7 ஆம் தேதி சங்கத்தின் அலுவலக உறுப்பினர்களான டாக்டர். ராதாகிருஷ்ணன், விவேகானந்தன் மற்றும் நிவேதிதா ஆகியோருடன் டாக்டர். மஹேந்திராவும் திருவண்ணாமலைக்கு பகவானின் ஆசியைப்பெற உடன் சென்றார். பகவானின் பல  பக்தர்களும் திரு. ஃபிரிக் மற்றும் திருமதி. யானா போன்ற வெளிநாட்டு பக்தர்களும் சாதுவின் இல்லத்திற்கு விஜயம் செய்தனர். திருவண்ணாமலை சென்றவர்களின் அனுபவத்தை நிவேதிதா விவரிக்கிறார்:

“யோகியை நாங்கள் காலையில் சந்தித்தோம். எங்களை மாலையில் நாலு மணிக்கு வருமாறு கூறினார். அதுவரை நேரம் கழிக்க, நாங்கள் அருணாச்சல மலை மீது ஏற துவங்கினோம். அங்கே நரிக்குட்டி சுவாமியை சந்தித்துவிட்டு, மலையில் கீழே இறங்கும் போது பெரும் மழையில் மாட்டிக்கொண்டோம். பகவானை அவர் குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் நாங்கள் மழையில் நனைந்தவாறே ஈர ஆடையுடன் பகவானின் இல்லத்தை அடைந்தோம். பகவான் வந்து கதவைத் திறந்தார். விவேக் குளிரினால் நடுங்கத்துவங்கினான். விவேக்கின் நிலையைக் கண்ட பகவான் மிகுந்த கவலை கொண்டு விவேக், நிவேதிதாவிடம், “ரங்கராஜன் என்ன நினைப்பான்? அவன் உங்களை இந்தப்பிச்சைக்காரனை தரிசிக்க அனுப்பி வைத்தான். ஆனால் இந்தப்பிச்சைக்காரன் உங்களை காக்கவைத்து, மழையில் நனைய வைத்து விட்டான்” என்று நினைப்பான். அவர் உள்ளே சென்று ஆளுக்கொரு சால்வையை கொண்டு வந்து தந்தார். சால்வையை பயன்படுத்திக் கொண்ட பின்னும் விவேக நடுங்கிக் கொண்டே இருந்தான். பின்னர் யோகி தன்னுடன் எங்களை வருமாறு கூறி உடுப்பி பிருந்தாவன் ஓட்டலுக்கு சென்றார். அங்கே தனது பக்தரும் அந்த ஓட்டலின் உரிமையாளருமான திரு. ராமசந்திர உபாத்யாயாவிடம் அவரது மகன் மற்றும் மகளின் ஆடைகள் விவேக் மற்றும் நிவேதிதா விற்கு பொருந்துமா என கேட்டார். அவைகள் அவர்களுக்கு பொருந்தும் என்று கூறி ராமச்சந்திர உபாத்யாயா அவரது வீட்டிலிருந்து குழந்தைகளின் ஆடைகளை வரவழைத்தார். திரு. ராமசந்திர உபாத்யாயா தனது பிள்ளைகளின் ஆடைகளை எனக்கும் விவேக்கிற்கும் தந்ததோடு, தனது வேட்டிகளை திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் மஹேந்திரா அவர்களுக்கும் தந்தார். யோகி எங்களை ஓட்டலின் அறை ஒன்றில் சிறிது நேரம் இருக்க வைத்து, சூடான பால் குடிக்க வழங்கினார். நாங்கள் இயல்பான நிலைக்கு திரும்பிவிட்டோம் என்று கண்ட பின்னரே யோகி அவ்விடத்தில் இருந்து நகர்ந்து தன் இடத்திற்கு போனார். நாங்கள் நனைந்ததை தன்னுடைய தவறாகவே அவர் கருதினார். நாங்கள் நலம் ஆகிவிட்டோம் என்று தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள அவர் விரும்பினார், எங்களுக்கு  உணவுகளை ஆர்டர் செய்து, எங்கள் அனைவரையும் இரவு தங்குமாறு கூறினார். கிருஷ்ணர் தனது அன்பிற்குரிய யாதவர் குடும்பங்களை பெரும் மழையில் இருந்து  பாதுகாக்க கோவர்த்தன மலையை குடையாக பிடிக்கவில்லையா? அதுபோல் போல் எங்களையும் மழையில் இருந்து யோகி ராம்சுரத்குமார் காத்தார்.”

 அடுத்த நாள் காலையில் பகவானின் தரிசனத்தை பெற்ற அவர்கள் பகவான் அளித்த தாராளமான பிரசாத பொருட்களுடனும் விவேகானந்த ஜெயந்தி சிறப்பாக நடைபெற பகவானின் ஆசிகளுட னும் அவர்கள் சென்னைக்கு திரும்பினர்.

ஜனவரி 11 , ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு முந்தையநாள்  மாலையில் பகவானின் பக்தரான புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, இந்த சாதுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது திருவண்ணாமலை பயணம் குறித்தும், யோகியை தரிசித்தது குறித்தும், தனது வாழ்த்தை விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கும் தெரிவித்தார்.  ஜனவரி 12 ஆம் தேதி காலை சென்னை வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பப்பட்ட சாதுவின் விவேகானந்தர் பற்றிய சொற்பொழிவை பக்தர்கள் கேட்டனர். யோகி ஒரு டிரான்ஸிஸ்டர் மூலம் சாதுவின் உரையை கேட்டார். விவேகானந்தர் ஜெயந்தி விழா சிறப்பாக இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. யோகியின் பக்தர் மற்றும் தொழிற்சங்க தலைவர், திரு. T.V.ஆனந்தன், தலைமை தாங்கினார். தென்னாப்பிரிக்காவின் நேட்டால் தமிழ் வேத சொஸைட்டியின் தலைவர் திரு. N.C. நாயுடு சிறப்பு பேச்சாளராக இருந்தார். விவேகானந்தன் விருந்தினர்களை வரவேற்றார், சுரேஷ் ராஜ்புரோகித் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சுழல் கேடயம் மற்றும் பரிசுகள் வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. விழா முடிந்தப்பின் விவேக், நிவேதிதா , திருமதி. பாரதி ரங்கராஜன் மற்றும் இன்னொரு பக்தரான வசந்தி, யோகியை காண திருவண்ணாமலைக்கு சென்று அவரிடம் விரிவான தகவல்களை வழங்க நினைத்தனர். அவர்கள் ஜனவரி 13 அன்று சென்று யோகியிடம் விவரங்களை தந்துவிட்டு அன்றிரவே திரும்பி வந்தனர். தேவகி 15 ஆம் தேதி இந்த சாதுவின் இல்லத்திற்கு வந்தார். அவருக்கு, சாது, இளையராஜா வழங்கிய யோகியின் படம் அச்சிடப்பட்ட காலண்டர்  பரிசாக அளித்தார். விவேக் மீண்டும் 16 ஆம் தேதி காலை சீனிவாசனுடன் திருவண்ணாமலை சென்றார் . இந்த சாது  , திரு. ARPN. ராஜமாணிக்கம் நாடார் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்கு வழங்கிய பகவான் திருவுருவப் படத்திற்கு கண்ணாடி பெட்டி தயார் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தான். விவேக் மற்றும் சீனிவாசன் யோகியை சந்தித்து வேதபாடசாலை துவக்கும் திட்டம் குறித்து பேசினர். பகவான் விவேக்கிடம் அவனது பொறியியல் படிப்பில் முழு கவனம் செலுத்துமாறு கூறினார். சீனிவாசனிடம் யோகி, இந்த சிந்தனை உயர்ந்ததாக இருப்பினும்,  சாதுவிடம் பேசி வேதபாடசாலை ஆரம்பிப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அறிந்து கொள்ளுமாறு கூறினார். 

19 ஆம் தேதி பகவானை காணச் சென்ற ப்ரீதா மற்றும் புஷ்பா பகவானின் உருவத்தை அவர்களின் டிபன்பாக்ஸ் மூடி மீது பகவானுக்கு ஆரத்தி எடுக்கையில் பெற்றனர். அந்த டிபன் பாக்ஸ் மூடி சாதுவின் ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது. நிவேதிதா அது குறித்து விவரிக்கிறார். 

திருமதி. ப்ரீதா பொன்ராஜ் , திரு.பொன்ராஜ் அவர்களது பிள்ளைகளான நிவேதிதா, மற்றும் அர்ஜூன் உடன் திருவண்ணாமலைக்கு யோகி ராம்சுரத்குமார் தரிசனம் பெற சென்றனர். சாதாரண உரையாடலின் போது, நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் குமாரி நிவேதிதா யோகி ராம்சுரத்குமாரிடம் தனது கான்வென்ட்டில் ஒரு டீச்சர், “ஜீசஸ் மட்டுமே அற்புதங்களை செய்வார்” என தன்னிடம் கூறியதாக கூறினார். யோகி அதனை கேட்டு, “ ஓ! இதைத்தான் உனது பள்ளியில் உன்னிடம் கூறுகிறார்களா?“ என்று கேட்டுவிட்டு அவர் எந்த பதிலும் கூறவில்லை. திருமதி. சிவசங்கரி என்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் மற்ற பக்தர்களும் அங்கே இருந்தனர். இந்த பக்தர்கள் யோகி ராம்சுரத்குமார் நாமத்தை கூறி முடிக்கையில் அவருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் உடையவர்கள். நிவேதிதாவின் பாட்டி திருமதி. ருக்மணி ஆரத்தி எடுத்தார். அவர்கள் கற்பூரத்தை எரித்து ஆரத்தி காட்ட அவர் யோகிக்கு உணவு கொண்டுவந்திருந்த டிபன் பாக்ஸ் மூடியையே பயன்படுத்தினர். அவர் பெரிய கற்பூரத்தை பயன்படுத்தியதால் அந்த மூடி மிகவும் சூடாக இருந்தது. ஆரத்தி முடிந்தவுடன், யோகி அதனை தன் அருகே வைத்துவிட்டு போகுமாறு கூறினார். சிறிது நேரம் கழித்து யோகிஜி நிவேதிதாவிடம் “ஜீசஸ் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்துபவர் அல்ல” என்றார். அவர் டிபன்பாக்ஸின் மூடியை பார்க்குமாறு கூறினார் அதில் கற்பூரம் எரிந்த தடங்களில் அனைவரும் ஆச்சர்யம் கொள்ளும் வகையில் யோகிஜியின் உருவத்தை அந்த மூடியில் கண்டனர். யோகிஜி தலைப்பாகை மற்றும் சால்வை அணிந்தவாறு அதில் காட்சியளித்தார். யோகிஜி மனம்விட்டு இறையின் லீலையை சந்தோஷத்துடன் சிரித்து அனுபவித்தார். ஜீசஸ் மட்டுமல்ல இந்து கடவுள்களும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என்று கூறி சிறுமி நிவேதிதாவை ஆசீர்வதித்தார்.

20 ஆம் தேதி, ஒரு அழகிய கண்ணாடி பெட்டி, அதன் அடியில் ஒரு மர இழுப்பறையோடு, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் துணைத்தலைவர் திரு. K.N. வெங்கடராமன் மூலம் வழங்கப்பட்டது. அது இந்த சாதுவின் வீட்டிற்கு வந்தவுடன் அதில் யோகியின் ஆளுயர படம் வைக்கப்பட்டது. ப்ரீதா மற்றும் புஷ்பா தந்த டிபன் பாக்ஸ் மூடி, யோகி தந்த மற்ற பொருட்களுடன் இழுப்பறையில் வைக்கப்பட்டது. மறுபடியும் 26 ஆம் தேதி விவேக், நிவேதிதா, ப்ரீதா மற்றும் பொன்ராஜ் யோகி ராம்சுரத்குமார் அவர்களை காணச் சென்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்க விழாவின் புகைப்பட ஆல்பத்தை காட்டினர். யோகி, அவரது ஆளுயர படத்தை வைக்க, திரு. K.N. வெங்கடராமன் தந்த கண்ணாடி பெட்டி குறித்தும் விசாரித்தார். அனைத்து சென்னை பக்தர்களுக்கும் வினியோகம் செய்ய பிரசாதங்களை யோகி தந்தார். 

சாதுவின் இல்லத்திற்கு அடுத்த சில நாட்களில் ஜீனா ரோஜர்ஸ், சுவாமி தேவானந்தா மற்றும் லொரைன் ஷாப்பிரோ போன்ற பக்தர்கள் விஜயம் செய்தனர். பிப்ரவரி 2, 1990 அன்று மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் மஹாசமாதி நாள் கொண்டாட பட்டது. காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்ச்சிகளில் பகவானின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அடுத்தநாள் நிவேதிதா, அவளது தோழிகளான காயத்ரி, மாலினி போன்றோர் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர். பகவானிடம் இந்த விழா குறித்து தெரிவித்து அவருடைய ஆசிகளையும் பெற்றனர். பகவான் இந்த சாதுவின் அன்னையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பிப்ரவரி 5 ஆம் தேதி சுவாமி தேவானந்தா சாதுவின் இல்லத்திற்கு வந்தார். பின்னர், பெர்ரி டேப்மன் மற்றும் ஜோசியா, ஹில்டா சார்ல்டனின் “செயின்ட்ஸ் அலைவ்” என்ற நூலோடு வந்தார்கள். அந்த நூலில் சமகாலத்து புனிதர்களின் சரிதங்கள் தொகுக்கப்பட்டிருந்தன. அதில் யோகி ராம்சுரத்குமாரும் இருந்தார். டேப்மன் திருவண்ணாமலைக்கு பிப்ரவரி 12 அன்று போனார். அவரிடம் சாது ஒரு கடிதம் ஒன்றை எழுதி யோகி ராம்சுரத்குமாரிடம் தரச் சொன்னார். அதில் தனது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் தனது அன்னைக்கான ஆசியை வேண்டுவதாகவும் சாது குறிப்பிட்டிருந்தார். பகவானின் சித்தப்படி எல்லாம் நடக்கட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 19 ஆம் தேதி ராம்நாம் குழுவினர் நீலகிரியில் இருந்து விஜயம் செய்தனர். 

சாது ரங்கராஜனின் பெற்றோர்களான திரு. S.R. வேணுகோபாலன் மற்றும் திருமதி. ஜானகி அம்மாள் ராமசந்திர மூர்த்தியின் பெரும் பக்தர்கள் ஆவார்கள். அவர்கள். எர்ணாகுளத்தில் இருந்த காலம் முதலே இதுவே வழக்கம். திரு. வேணுகோபாலன் கொச்சி துறைமுகத்தில் ஒரு மரைன் சர்வேயராக இருந்தபோதே ஓவ்வொரு ஏகாதசி அன்றும் அவர்கள் வீட்டில், தியாகராஜ சுவாமிகளுக்கு ராமர், சீதை, பரதர், லஷ்மணன், சத்ருக்னன் மற்றும் அனுமன் தரிசனம் அளிப்பதை போன்ற ஒரு படத்தின் முன் அமர்ந்து, அனைத்து தியாகராஜ கீர்த்தனைகளையும் பல மணிநேரங்கள் இரவில் பாடலை பொழிவார்கள். சாதுஜியும் அவரோடு உடன் பிறந்தவர்களும் இந்த ஆன்மாவைக் கிளறும் பாடல்களை கேட்டுக்கொண்டே வளர்ந்தனர். பிற்காலத்தில் பிள்ளைகளோடு சென்னையில் குடியேறிய அன்னை, சாதுஜி யோகியிடம் ராமநாம தீக்ஷை பெற்றது குறித்து பெரிதும் சந்தோஷப்பட்டார். அவர் திருவண்ணாமலைக்கு சென்றபோது பகவானிடம் தனக்கும் தீக்ஷையளிக்க முடியுமா என கேட்டார். பகவான் சிரித்தவாறே அவருக்கு பதிலளித்தார்: “சாஸ்திரங்களின் படி ஒருவன் சன்னியாச தீக்ஷை பெற்றுவிட்டால், அவனது முந்திய தலைமுறை அறுபதும், பிந்திய தலைமுறை அறுபதும் ஆசீர்வதிக்கப்படும். ரங்கராஜன் தீக்ஷை பெற்றதன் காரணமாக, அவர் செய்யும் தவங்களும், அதன் பலனான கனியும் தானாகவே உங்களை வந்தடையும். எனவே தயவு செய்து அவரோடு இணைந்து ராமநாம ஜபம் செய்யுங்கள்.“ அன்னையும் மகிழ்வோடு அந்த அறிவுரையை ஏற்று காலை முதல் இரவு வரை ராமநாமத்தை சொல்வதை தவிர்த்து வேறெந்த வேலையும் செய்யவில்லை, அவர் வாய்மூலமாக ராமநாமத்தை சொல்லி துளசிமாலையை  உருட்டி ராமநாமத்தை எண்ணுவார். அல்லது ராமநாமத்தை லிகித ஜெபமாக எழுதுவார். அவர் மிகுந்த ஆர்வமும், ஊக்கமும் மிக்க ஒருவராக உலக ராமநாம இயக்கத்தில் பங்குபெற்றார். சாதுவின் வீட்டிற்கு வரும் அனைவரும் பெரும்பாலும் அம்மாவை ராமநாமத்தை கூறி துளசி மாலையை உருட்டியவாறோ, அல்லது லிகித நாம ஜெபத்தை எழுதியவாறு இருப்பதைத்தான் பார்த்திருப்பார்கள். ஒரு முறை அவர் குளியறையில் வழுக்கி விழுந்து அவரது வலது முழங்கையில் ஒரு பிசகல் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போதிலும் அவரால் கைகளை மடக்குவதும், உணவை உட்கொளவதும் சிரமமான விஷயமாகவே இருந்தது. அவர் தனது இடது கையையே பயன்படுத்துவார். இருப்பினும் அவர் வலது கையினால் லிகித நாமஜெபம் எழுதுவதை நிறுத்தவில்லை. ஆகஸ்ட் 17 , 1989 ல் நாங்கள் யோகியை சந்திக்க சென்றபோது,  ஜானகி அம்மாள் தினமும் லிகித நாம ஜபம் செய்கிறாள் என்றேன். அவள் கீழே விழுந்தமையால் அவளது வலது கை முழங்கை மடக்க இயலாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். யோகி அவரது கைகளை சில நிமிடங்கள் கவனித்தார். பின்னர் இந்த சாதுவின் சகோதரியை அழைத்து, உள்ளே சென்று தேங்காய் சிரட்டையில் சிறிதளவு தண்ணீரை கொண்டுவருமாறு கூறினார். அவர் அந்த தண்ணீரை தனது உள்ளங்கையில் ஊற்றி, அம்மாவின் வலது  முழங்கையின் அடியே வைத்து, சிறிது நேரம் தியானித்தார். பின்னர் அவர் கைகளை மடக்குமாறு கூறினார். ஆனால் அம்மாவோ தனக்கு மடக்குவதற்கு சிரமமாகவும், வலி மிகுந்தும் இருக்கும் என்று கூறினார். யோகி சிரித்தவாறே, “இல்லையம்மா உனது கரங்கள் இப்போது சரியாகிவிட்டது” என்றார். அவரே முழங்கையை மடக்கினார். தெய்வீக மருத்துவம் டாக்டர்கள் செய்ய முடியாதவைகளை செய்யும். பின்னர் அவர் அம்மாவிடம், “அடுத்த ஆறு மாதங்களை நீ நாம ஜபம் மட்டுமே செய்யலாம். லிகித ஜபம் செய்ய வேண்டியதில்லை.” என்று ஒரு முக்கிய அறிவுரையை கூறினார். இந்த அறிவுரை ஒரு தீர்க்கமான முன்னறிவிப்பாகும். 

1990 களின் துவக்கத்திலிருந்தே அம்மாவின் உடல்நிலை வேகமாக மோசமடைய துவங்கியது. பிப்ரவரி இரண்டாவது வாரம் ‘தத்துவ தர்சனா’ இதழ் வழக்கம் போல் பகவானின் கரங்களால் வெளியிட தயாராகிய நேரத்தில், இந்த சாது பரிமேலழகன் மூலம் பகவானுக்கு ஒரு சேதி அனுப்பினார். தான் மூன்றாவது வாரம் இந்த இதழின் பிரதிகளோடு அவரை சந்திக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால் பகவான் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், பரிமேலழகனிடம், “ரங்கராஜனால் வர இயலாது போகலாம்“ என்று கூற, அவர் நிச்சயம் புத்தகங்களோடு வருவார் என பக்தர் கூறியிருக்கிறார். பிப்ரவரி 10 ஆம் தேதி இந்த சாதுவின் தாயார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மோசமாகி ஆபத்தான நிலையை அடைந்தது. பிப்ரவரி 19 – 20 நள்ளிரவில் அவரது இறுதி குறித்த முன்னுணர்வு கிடைக்க, அவர் எழுந்து தனது கட்டிலுக்கு அருகே படுத்திருந்த சாதுவின் சகோதரியை எழுப்பி, அவளை யோகி ராம்சுரத்குமார் பெயரைச் சொல்லி அழைக்கச் சொன்னாள். அவளும் அன்னையின் உத்தரவை ஏற்று, “யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், ஜெய குருராயா“ என கூறி கொண்டிருக்க, திடீரென அம்மா “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்“ என்று உச்சரித்து அவரது படுக்கையில் சாய்ந்தார். அவரது கடைசி மூச்சு 1.30 A.M க்கு முடிந்தது. 

பரிமேலழகன் பகவானுக்கு தந்திமூலம் அம்மாவின் நித்திய ஓய்வு குறித்து  தெரிவித்தார். பக்தர்கள் அவரது இறுதி ஊர்வலத்திற்கு திரண்டு வந்து ராமநாமத்தை உச்சரித்தனர். அனைத்தும் முடிந்தவுடன் பரிமேலழகன் யோகியை சந்திக்க சென்றார். பகவான் அவரிடம், “அன்னை இந்தப்பிச்சைக்காரனை அழைத்தார், அவர் இந்த மரண உலகத்தில் இருந்து கிளம்பும் போது இவன் அவளருகே இருந்தான்.” என்றிருக்கிறார். 

பிப்ரவரி 24 அன்று, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமி நித்யசத்வானந்தா ஒரு பக்தருடன் எங்கள் இல்லம் வந்தார். அவர் யோகி ராம்சுரத்குமார் குரல், ஹனுமன் சாலிஸா மற்றும் வீணா லட்சுமண் என்ற தென் ஆப்பிரிக்க பக்தரின் பாடல்கள் போன்றவற்றை பதிவு செய்து கொண்டு சென்றார். ‘தி ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனலி’ல் சாதுவின் தாயார் மறைவு குறித்தும் தகவல் வெளிவந்திருந்த்து. இசையமைப்பாளர் இளையராஜா அவர்களிடம் இருந்து எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சாதுவும் நிவேதிதாவும் அவரது இல்லத்திற்கு சென்றனர். யோகி ராம்சுரத்குமார் தன்னிடம் ஒரு தாராளமான பங்களிப்பை தருமாறு கூறியதாகவும், மேலும் பகவானது அளவற்ற ஆசியையும் பகிர சொன்னதாகவும் கூறினார். இளையராஜா சாதுவிற்கு சிறந்த விருந்தோம்பலை அளித்ததோடு, தனது இல்லத்தில் இருக்கும் கோயிலுக்கும் அழைத்துச் சென்றார். அங்கே இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்காகவும் இந்த சாது பிரார்த்தனை செய்தான். இளையராஜா அவரது கார்மூலம் எங்களது இல்லத்திற்கு எங்களை திருப்பி அனுப்பி வைத்தார். 

25 ஆம் தேதி மெஹர் பாபாவின் பக்தர்கள் ஒரு சிறப்பு சத்சங்கத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் இந்த சாது பேசினார். குமாரி. தேவகி என்னை மார்ச் 2 ஆம் தேதி தொடர்பு கொண்டார். மார்ச் 5 ஆம் தேதி இந்த சாதுபகவானுக்கு ஒரு கடிதம் எழுதி, பகவானின் இல்லத்திற்கு மார்ச் 7 ஆம் தேதி புதன்கிழமை வருவதாக தெரிவித்தார், அவ்விதமே அவர் டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது பிள்ளை பாஸ்கர் உடன் யோகியின் இல்லத்திற்கு காலையில் சென்றடைந்தார். யோகி இந்த சாதுவை வரவேற்று கருணையோடு, “அன்னை ஜானகி அம்மாள் குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். அவர் என் தந்தையோடு கலந்து விட்டார். அவர் எனது தந்தையின் பெயரை இறுதிவரை உச்சரித்தார். அவர் கிளம்பும் முன் அவரது உதட்டில் தந்தையின் பெயர் இருந்தது.“ யோகி சாதுவிடம் அவரது அஸ்தியை ப்ரயாகை அல்லது வாரணாசியில், கங்கை நதியில், கரைக்குமாறு அறிவுறுத்தினார். 

பகவான் பின்னர் எங்களது பணி பற்றி விசாரித்தார். இந்த சாதுவிடம் யோகி, திருச்சூர் டாக்டர். T.I. ராதாகிருஷ்ணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு, அவர் திருச்சூரில் ஏற்பாடு செய்துள்ள அதிராத்ர சோம யாகம் குறித்து தகவலறிந்து, அதனைப்பற்றி ‘தத்துவ தர்சனா’வில் எழுதுமாறும், நமது செய்தி பிரிவான ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல் இதழிலும் எழுதுமாறும் கூறினார். இந்த சாதுவிடம் லீ லோசோவிக் அவர்களின் பாடல்களை முழுமையாக ‘தத்துவ தர்சனா’வில் வெளியிடுமாறு கூறினார். மேலும் “கல்கி” தீபாவளி மலர் 1979 மற்றும் 1980 போன்றவற்றை தந்து அதில் ராஜாஜி எழுதிய கதைகளை படிக்குமாறு கூறினார். மேலும் அவர் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அறியவும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். 

எங்கள் பேச்சு சகோதரி நிவேதிதா அகாடமியின் முன்னேற்றம் குறித்து மாறியது. யோகி, இளையராஜா மற்றும் ARPN. ராஜமாணிக்க நாடார் அவர்களின் பங்களிப்பு குறித்து விசாரித்தார். “நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய். நிவேதிதா அகாடமி வளர்ந்து அதன் சொந்த இடத்தில் அமையும்“ என்றார். தனக்கு ரூ.116 அனுப்பிய S.V.N. ராவ் அவர்களுக்கு கடிதம் எழுதுமாறு கூறினார். பின்னர் யோகி ராதாகிருஷ்ணன் இடம் அவரது ப்ளாட் பிரச்சனை குறித்து விசாரித்தார். அவரது மகனிடம் வேலை குறித்தும் விசாரித்தார். பிறகு எங்களை அடுத்த நாள் சந்திக்கலாம் என்று கூறி விடை கொடுத்தார். நாங்கள் ஓய்வு எடுக்க செல்லும்  முன், ரமணாச்ரமம், சேஷாத்ரி சுவாமி ஆசிரமம் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயில் போன்ற இடங்களுக்கு சென்றோம். அடுத்தநாள் யோகியின் பக்தரான துவாரகநாத் ரெட்டி மற்றும் சந்தியாவை சந்தித்தோம். பகவான் சாதுவிற்கு தீக்ஷை வழங்கியபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்டியையும் சந்தித்தோம். பின்னர் அருணாச்சல மலை ஏறி ஆலமர குகை, விருபாக்‌ஷ குகை, ஸ்கந்தாஸ்ரமம் மற்றும் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றோம். பிறகு நாங்கள் யோகியின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தோம். யோகி ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு ‘தத்துவ தர்சனா’ பிரதிகளை வழங்கினோம். யோகி என்னிடம் ஏன் விவேக் நிவேதிதா எங்களோடு வரவில்லை என்று வினவினார், அவர்கள் தங்கள் படிப்பின் காரணமாக வரவில்லை என பதிலளித்தேன். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார் . யோகி சாதுவிடம் வேறு ஏதேனும் குறிப்பாக கேட்க வேண்டியிருக்கிறதா என கேட்டார். சாது, “எங்களது முயற்சிகளுக்கான உங்கள் ஆசிகள்“ என்று கூறினார். பகவான் உடனடியாக, “அதை நீ கேட்க வேண்டியதில்லை. நீ என்னுள் இருக்கிறாய், இந்தப்பிச்சைக்காரன் உன்னுள் இருக்கிறான். நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய் அது உறுதியாக வெற்றி பெற கூடியது.” என்று கூறினார் நாங்கள் அவரிடம் விடைப்பெற்று சென்னை திரும்பினோம். 

யோகியின் கருணை மற்றும் ஆசியால் சிறப்பு அகண்ட ராம்நாம் ஜப யக்ஞம் திருமதி. ஜானகி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சனிக்கிழமை மார்ச் 10 , 1990 ல் நடைப்பெற்றது. அதில் பல பக்தர்கள் கலந்து கொண்டனர். திரு. வெங்கடேஷ் மற்றும் திரு. முகுந்தன் போன்றோர் ராமேஸ்வரம் சுவாமி விவேகானந்தர் குடிலில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் மூலமாக பகவானுக்கு ஒரு கடிதம் எழுதி அவர்கள் நடத்தும் அனாதை இல்லம் விஷயமாக அவர்கள் லண்டன் மாநகர் செல்ல இருப்பதாகவும் அவர்களுக்கு ஆசி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். சாது பகவானிடம் இந்த அகண்ட நாமத்திற்கு சுவாமி சச்சிதானந்தர் இடமிருந்தும் ஆசிக்கள் வந்ததை தெரிவித்து சுவாமிகளிடம் இருந்து வந்திருந்த கடிதத்தின் நகலையும் அனுப்பினான். இந்த சாது பகவான் சொன்னதைப்போல்  T.I. ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அதிராத்ர சோம யாகம் மற்றும் வேத கண்காட்சி திருச்சூர் வடக்குந்தன் ஆலயத்தில் நடைபெறுவதை குறித்து விசாரித்து கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டிருந்தான். 

குரு மஹிமா, குரு மஹிமா, அபார மகிமா குரு மஹிமா !

பகவான் ஆசிரம இடத்தை பார்வையிடுகிறார்

அத்தியாயம் 2.18 

யோகி ராம்சுரத்குமார் நற்செய்திகள்

யோகி ராம்சுரத்குமார் கருணையாலும் ஆசியாலும் அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் பல பக்தர்கள் இந்த சாதுவின் இல்லத்திற்கு தினந்தோறும் சத்சங்கத்தில் பங்கு பெறவும், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியில் இணையவும் வந்தவண்ணமிருந்தனர். இளைஞர் சங்கத்தின் மூலம் நகரத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான சத்சங்கம் மற்றும் ராம்நாம் ஜபம் நடைப்பெற்ற வண்ணம் இருந்தது. சுவீடனில் இருந்து வந்த திரு. ஆந்த்ரே அகாடமியின் இணை உறுப்பினர் ஆனார். குருவின் மீதும் அகாடமி குறித்தும் எழுதப்பட்ட கட்டுரை அவரைப்போன்ற பலரை ஈர்த்தது. மார்ச் 25 , 1989 ல் குமாரி. தேவகி எங்கள் இல்லத்திற்கு யோகியின் புதிய படங்களோடும், அவரது கல்லூரியை சேர்ந்த பட்டு என்பவருக்கான அகாடமியின் வாழ்நாள் சந்தாவையும் கொண்டுவந்திருந்தார். விவேக், நிவேதிதா மற்றும் பாரதி மார்ச் 27 ஆம் தேதி அன்று அகாடமி மற்றும் சங்கம் குறித்து பகவானிடம் பேச திருவண்ணாமலை சென்றிருந்தனர். முன்னாள் காவல்துறை டி.ஜி.பி திரு. ரவீந்திரன் ஐ.பி.எஸ். ஏப்ரல் 3 தேதி சத்சங்கத்தில் கலந்து கொண்டார். ஏப்ரல் 9 ஆம் தேதி ஹனுமந் ஜெயந்தி மற்றும் ராம்தாஸ் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு சிறப்பு சத்சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

குரு என்னிடம் திரு. தெ.பொ.மீ அவர்களின் மகனான T.P.M. ஞானபிரகாசம் எழுதிய, “திருவண்ணாமலையில் ஒரு குழந்தை“ என்ற நூலின் அச்சுப்பணிகளை மேற்கொள்ளுமாறு கூறினார். திரு. ஆர்.கே. ஆழ்வார் குருவின் புகைப்படத்தின் சில நெகட்டிவ்களை அனுப்பினார். திருவண்ணாமலையை சேர்ந்த திரு.ஸ்ரீதர குருக்கள் தனது தந்தையோடு ஏப்ரல் 17 ஆம் தேதி எங்கள் இல்லம் வந்து யோகியின் ஆசிகளை தெரிவித்தார். அடுத்தநாள் பேரா. தேவகி பகவானின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை எங்களுக்கு பரிசளித்தார். சென்னை கே.கே.நகரில் ஒரு பெரிய ராம்நாம் சங்கீர்த்தனம் இளைஞர் சங்கத்தால் ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்டது. அக்‌ஷய திரிதியை நாள் சகோதரி நிவேதிதா அகாடமியால் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. அதில் இந்த சாது பாரதமாதாவின் வழிபாடு குறித்து பேசினான். மொரீஷியஸின் ஹிந்து சுயம்சேவக் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திரு. மாதவ் பன்ஹட்டி இந்த சாதுவை தொடர்பு கொண்டு தனது யோகி ராம்சுரத்குமார் அவர்களை சந்திக்கும் ஆவலை வெளிப்படுத்தினார். சாது யோகி ராம்சுரத்குமாருக்கு ஒரு விரிவான கடிதம் ஒன்றை ஏப்ரல் 30 , 1990 அன்று பணியின் முன்னேற்றங்கள் குறித்து எழுதினார்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த தாழ்மையான வேலைக்காரனின், “இன்றைய சமூகத்தில் மனித மூல்யங்கள்“ என்ற வானொலி உரை, சென்னை – A ல் , மே – 4 , 1990 காலை 8.20 அன்று ஒலிபரப்பாகிறது. உங்கள் வழிகாட்டுதல்படி, வேதத்தின் மூல்யங்கள் மற்றும் அவற்றின் இன்றைய முக்கியத்துவம் பற்றியும், வேதங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து தங்களுடைய கருத்துக்களை பற்றியும், பேச இருக்கிறேன். இதன் ஒலிப்பதிவு மே – 2 அன்று காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதற்கு உங்கள் ஆசியை வேண்டுகிறேன். நீங்களும் எனது உரையை மே – 4 காலை 8. 20 மணிக்கு கேட்பீர்கள் என நம்புகிறேன். 

திரு. பரிமேலழகன், திரு. T.P.M. ஞானப்பிரகாசம் அவர்களின் கையெழுத்துப்பிரதியை என்னிடம் தந்த்தோடு தங்களின் உத்தரவையும் என்னிடம் கூறினார். அந்த கையெழுத்துப்பிரதியை பேரா. A.S. ராமமூர்த்தி என்ற ராமகிருஷ்ணா மிஷனின் தமிழ்த்துறை தலைவர் சரிபார்த்து வருகிறார். அவர் ஒரு பன்மொழி பேராசிரியர் மற்றும் ஆன்மீக சாதகரும் ஆவார். எங்கள் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சேவகரும் ஆவார். அவர் தன் பணியை முடித்தப்பின் நாங்கள் அதனை தங்களிடம் கொண்டு வருகிறோம். 

திரு. T.I. ராதாகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து எந்த அழைப்பிதழும் வராத காரணத்தால், டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்த சாதுவும் அதிரத்ரா சோம யக்ஞத்தில் பங்குபெற செல்லவில்லை. இருப்பினும் நாங்கள் அந்த யாகம் குறித்த தகவல்களையும், அறிவியல் குறிப்புகளையும் திரட்டி அவர்கள் அனுமதித்தால் வெளியிட தயாராக இருக்கிறோம். 

பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் எங்களின் ராமநாம யக்ஞத்தின் முன்னேற்றத்தில் மகிழ்வோடு இருக்கிறார். இருப்பினும் அவரது சமீபத்து “விஷன்” இதழில், ராம்நாம் ஜெபம் சம்பந்தமான அறிக்கைகள் மிக மந்தமாக வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். நான் இத்துடன் அவரது கடிதத்தை  இணைத்துள்ளேன். 

நாங்கள் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலமாக நடத்தப்படும் ராமநாம சங்கீர்த்தன மகோத்ஸவம் 21 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தினோம். பல பாடகர்கள் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் பிற பக்தி பாடல்களைப் பாடினர். பின்னர் ஒரு சிறப்பு சத்சங்கம் நடந்தது. அக்‌ஷய திரிதியை முன்னிட்டு 28 ஆம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பலர் ராம்நாம் இயக்கத்தில் கலந்து கொள்கிறார்கள். நாங்கள் ராம்நாம் இயக்கத்தை பெருமளவில் வளர்த்து, ஜப எண்ணிக்கையை உயர்த்த முழுமூச்சுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 

பாண்டிச்சேரியில் புத்தபூர்ணிமா நாளான மே 9 , 1990 அன்று தியானம் குறித்து உரையாற்ற இந்த சாதுவை சுவாமி ஓம்காரனந்தா அழைத்திருக்கிறார். சென்னை சுந்தரம் வளாகத்தில் மே – 14 , 1990 ல்  சத்யசாய் அமைப்பினர், என்னை, “இந்திய கலாச்சாரத்தின் புவியியல் பின்னணி“ என்ற தலைப்பில் உரையாற்ற அழைத்திருக்கின்றனர். இவ்விரு நிகழ்ச்சிக்கும் தங்கள் ஆசியை நான் வேண்டுகிறேன். 

மும்பையில் இருக்கும் நமது ராம்நாம் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்ரீராம் நாயக் என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர், இன்னொரு பக்தரான திரு. மவ்லங்கர்  என்பவருடன் தங்கள் தரிசனத்தை பெற மே – 17 , 1990 வியாழக்கிழமை வருகின்றனர். நாங்கள் அவர்களின் வருகையை மறுபடியும் தெரிவிக்கிறோம். 

எனது சகோதரியான சௌ. அலமேலு சீனிவாசன் அவர்களின் மகனான திரு. S. தேசிகன் தங்களின் தரிசனத்தை சிலகாலங்களுக்கு முன் பெற்றிருந்தான். அவனுக்கு உங்கள் கருணையால் விஜயவாடாவில் ஒரு என்ஜினியரிங் பிசனஸ் ப்ரோமோட்டர் ஆக வேலை கிடைத்திருக்கிறது. அவன் மே – 4 அன்று கிளம்புகிறான். அவன் பெஸ்வாடா மோட்டார் ஸ்டோர்ஸ், டிரக் & ஃபார்ம் எக்விப்மெண்ட்ஸ் ( டாஃபே ), ஹைதராபாத், என்ற நிறுவனத்தில் புரிய இருக்கும் பணியில் வெற்றிபெற உங்கள் ஆசியை வேண்டி, தங்களிடம் தன் பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறான்.. 

சிரஞ்சீவி. விவேகானந்தன், மற்றும் குமாரி. நிவேதிதா தங்களது தேர்வுகளை எழுதும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். உங்கள் கருணையால் இன்றுவரை அவர்கள் எழுதிய அனைத்து தேர்வுகளிலும் திறம்பட எழுதியிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அனைத்து தேர்வுகளும் முடித்தப்பின் அங்கே வருவார்கள். அவர்களும், சௌ.பாரதி, டாக்டர்.C.V.R மற்றும் நமது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை சேர்ந்த அனைத்து சேவகர்களும் தங்களது மரியாதையான வணக்கத்தை தங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது.ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி. “

சாதுவின் வானொலி உரையான “இன்றைய சமூகத்தில் மனித மூல்யங்கள்“ என்ற உரை பல பக்தர்களை கவர்ந்து, அவர்களில் பலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். திரு. ரவீந்திரன் ஐ.பி.எஸ், சாதுவை மீண்டும் சந்தித்து அந்த உரையை அவரது இதழில் வெளியிட விருப்பம் தெரிவித்தார். பகவானின் மிக நெருக்கமான பக்தர், திரு. சிவராமகிருஷ்ண அய்யர், மே 6 ல் திருக்கோயிலூர் தபோவனத்தில் இருந்து வருகை தந்தார். மே – 9 ல் இந்த சாது பாண்டிச்சேரிக்கு விவேக் உடன் சென்றேன். அரவிந்தர் ஆசிரமம் சென்று ஸ்ரீ அரவிந்தரின் அறையை தரிசித்துவிட்டு, திரு. M.P. பண்டிட் அவர்களை சந்தித்தேன். பகவானின் மற்றொரு பக்தை டாக்டர். சுஜாதா விஜயராகவன்             அவர்களையும் சாது சந்தித்தார். அவர் எழுதிய, “இந்தியாவில் ஆன்மீக மறுமலர்ச்சி” என்ற நூல் நவீன இந்தியாவில் ஆன்மீக மறுமலர்ச்சியில் குருமார்களின் பங்கினை குறிப்பிட்டிருந்தது. அதில் அற்புத ஆன்மீக குருவான யோகி ராம்சுரத்குமார் அவர்கள் பற்றியும் எழுதி இருந்ததோடு அந்த நூலை பகவானுக்கு சமர்ப்பித்திருந்தார். அவரும் ஓம்காரனந்தா ஆசிரமத்தில் அன்று மாலை சாது நிகழ்த்திய உரையை கேட்டு மகிழ்ந்தார்.

மே – 12 ஆம் தேதி விவேக் ஒரு ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தார். இந்த சாது விவேக்கிடம் இது குருவின் கட்டளைக்கு எதிரான செயல் என்று கடிந்துகொண்டான்.  திருவண்ணாமலையில் அமர்ந்திருக்கும் குரு தனது பக்தர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வருகிறார் என்பதை விவேக் அறிந்து கொள்ளும் காலமும் விரைவில் வந்தது. மே – 15 , 1990 அன்று ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் மற்றும் சங்கீர்த்தன கொண்டாட்டம் திருவல்லிக்கேணி பாண்டுரங்கன் கோயிலில் நடந்தது. பக்தர்களின் இசைக் கச்சேரி மற்றும் பஜனைகள் மட்டுமல்லாது மும்பையை சேர்ந்த, ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான, திரு .ஸ்ரீராம் நாயக் அவர்களுடைய சொற்பொழிவும் நடைபெற்றது. அன்றைய தினம் சாது பகவானுக்கு எழுதிய கடிதத்தில், அந்த நிகழ்ச்சி பற்றியும், தன்னுடைய அகில இந்திய வானொலி சொற்பொழிவு, ஓம்காரனந்தா ஆசிரமத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு மற்றும் சத்திய சாயி கேந்திரத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு ஆகியவை வெற்றி அடைந்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இந்த சாது மே – 17 அன்று விவேக், திரு ஸ்ரீராம் நாயக், மற்றும் மும்பையைச் சார்ந்த இன்னொரு பக்தர் திரு மவ்லங்கர் உடன் பயணித்து, திருவண்ணாமலையை அடைந்து, ஹோட்டல் பிருந்தாவனில் தங்கினா். பின்னர் நாங்கள் பகவானின் இல்லத்தை அடைந்தோம். யோகி எங்களை வரவேற்று எங்களிடம் இரண்டுமணி நேரம் செலவழித்தார். முதலில் யோகி விவேக்கை தன் அருகே அமரவைத்து அவனை சிறிது நேரம் தனக்கு விசிறி விடுமாறு சொன்னார்.  பின்னர் யோகி ஒரு கற்பூரத்தை கொண்டு வந்து அதனை கொளுத்த சொன்னார். நாங்கள் அனைவரும் யோகி ஏன் இவ்விதம் செய்கிறார் என எண்ணிக்கொண்டிருக்கையில், பகவான் விவேக் இடம் மிக குளுமையாக, “நிறைய ரத்தம் கொடுத்தமையால் நீ களைப்பாக இருப்பாய், எனவே விசிறியை ராதாகிருஷ்ணன் இடம் கொடு“ என்றார். விவேக்கை பார்த்த முதல் பார்வையிலேயே யோகி ரத்தம் கொடுத்ததை உணர்ந்து கொண்டார் என்பதை இந்த சாது உணர்ந்தான். யோகி, விவேக்கை அதற்கான பிராயச்சித்தம் செய்யவும் வைத்து விட்டார். குருவின் பார்வையில் இருந்து எதுவும் தப்ப இயலாது. பகவான் விவேக்கின் விதிமீறலுக்கு பெரிதும் ஏதும் கூறாமல் பிராயச்சித்தம் செய்ய வைத்தது இந்த சாதுவிற்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்தது. 

யோகிஜி சாதுவை தனது அருகில் அமரவைத்து அவரது கரங்களைப் பற்றி ஆழ்ந்த தியானத்திற்கு அரைமணி நேரத்திற்கும் மேலாக சென்றார். அதன் பிறகு அவர் இரண்டு வாழைப்பழங்களை ஒன்றன்பின் ஒன்றாக உரித்து சாதுவிடம் உண்ண கொடுத்தார். சில பக்தர்கள் அனுப்பியிருந்த சில உலர் கொட்டைகளை உண்ணக் கொடுத்தார். டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன் இடம் அவர் திரும்பி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். சாது ஸ்ரீராம் நாயக் மற்றும் மவ்லங்கர் போன்றவர்களை யோகியிடம் அறிமுகப்படுத்தினார். நாங்கள்  மும்பையில் நடக்கும் ராம்நாம் குறித்து பேசினோம். யோகி, லீ லோசோவிக் எழுதிய கடிதங்களை சாதுவிடம் தந்தார், விஜயாவிடம் எந்த புத்தகத்தையும் வெளியிட வேண்டாம் என்று கடிதம் எழுதச் சொன்னார். சாதுவின் கடிதம் தாமதமாக வந்தமையால் தான் சாதுவின் ரேடியோ உரையை தவறவிட்டுவிட்டதாக கூறினார். இரண்டு மணிநேரங்கள் யோகியுடன் இருந்துவிட்டு நாங்கள் அறைக்கு திரும்பி ஓய்வெடுத்தோம். அதற்கு முன் யோகியை தரிசிக்க வந்திருந்த பேரா. தேவகியின் சகோதரி வசந்தா மற்றும் அவரது மகளை நாங்கள் சந்தித்தோம். அன்று மாலை நாங்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் அருணாச்சல மலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை குறித்து கோயிலின் நிர்வாக அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். பின்னர் நாங்கள் ரமணாச்ரமம், சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று கிரிவலமும் வந்தோம். 

வெள்ளிக்கிழமை , மே – 18 அன்று நாங்கள் மீண்டும் குருவை காலையில் தரிசித்தோம். மவ்லங்கர் யோகியிடம் தனது கழுத்துவலி குறித்து கூற, யோகி சில ஆன்மீக குணமாக்கலை மேற்கொண்டார். யோகி, திருக்கோயிலூரை சேர்ந்த திரு. சிவராமகிருஷ்ண அய்யர் இடம் இருந்து ஒரு கடிதம் ஒன்றை பெற்றார். அதை சாதுவிடம் வாசிக்கச் சொன்னார். இந்த சாது யோகியிடம் கேரளாவில் நடந்த அதிராத்ரா சோம யக்ஞத்தில் கலந்து கொள்ள முடியாமை குறித்து கூறினான். பகவான் சாதுவிடம் அழைப்பிதழை எதிர்பாராமல் சென்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டார். சாதுவிடம் யோகி திருவண்ணாமலையில் 20 ஆம் தேதி வரை தங்க இயலுமா என கேட்டார். இந்த சாது யோகியின் கோரிக்கையின் பின் ஏதேனும் காரணம் இருக்கும் என முடிவு செய்து உடனே அதனை ஏற்றார். பகவான் மற்றவர்கள் சென்னை திரும்பலாம் என்றும் அவர்கள் சாதுவிற்காக காத்திருக்க வேண்டியதில்லை என்றும் கூறினார். விவேக் சாதுவுடன் இருக்க விரும்பினான், யோகி சிரித்தவாறே தான் சாதுவைத்தான் இருக்க சொன்னதாக கூறினார். விவேக் உணர்ச்சிவசப்பட்டான். யோகி அவனை அருகில் அழைத்து எட்டு அணாக்களை தந்து, நீ சந்தோஷமாக வீட்டிற்கு போகலாம் என்றார். பக்தர்கள் அனைவரும் சென்றவுடன் யோகி சாதுவுடன் சிறிது நேரம் செலவழித்தார். 

மாலையில் சாது பக்தர்களை ரமணாச்ரமம் அழைத்துச் சென்றார். அங்கே அவர்கள் இரவு உணவை முடித்தனர். யோகி சாதுவை பாலும் , பழங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு சொன்னதால் கணேசன் அதனையே ஏற்பாடு செய்தார். சாது துவாரகநாத், சந்தியா, பேரா. தேவகி, ரோஸோரா மற்றும் அனைத்து பகவானின் பக்தர்களையும் சந்தித்தார். தேவகி சேலத்தில் இருந்து ராமநாம எண்ணிக்கையை கொண்டு வந்திருந்தார். சாது கிறிஸ்டி மற்றும் பத்மா போன்றவர்களை மித்ரா நிலையத்தில் சந்தித்தார். ஆசிரமத்தில் இருந்து வந்தப்பின் அவர் மீண்டும் யோகியின் இல்லத்திற்கு வந்தார். பக்தர்கள் வெளியே காத்திருந்தனர். யோகியின் உதவியாளரான சிவா உள்ளே சென்று யோகியிடம் சாதுவின் வருகையை கூறினார். யோகி எங்களை வெளியே வந்து வரவேற்றார். நாங்கள் இரண்டு மணி நேரம் யோகியின் நாமத்தை கூறி செலவழித்தோம். இந்த சாது பின்னர் தனது அறைக்கு திரும்பினார். 

அடுத்தநாள் காலை இந்த சாது, ஸ்ரீராம் நாயக் மற்றும் மவ்லங்கர் போன்றோர் யோகியின் இல்லத்திற்கு வந்தனர். யோகி தேரடி மண்டபத்தின் மேலே அமர்ந்திருந்தார். இவர்களை பார்த்தவுடன் கீழே இறங்கி வந்தார். எங்களை இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து நாகலட்சுமி, பார்வதி மற்றும் அவரது அன்னை போன்றோர் எங்களோடு இணைந்தனர். பெண்கள் பெரியசாமி தூரன், தெ.பொ.மீ , கி.வா.ஜ ஆகியோரின் பாடல்களைப் பாடினர். யோகி எங்களுக்கு பால் மற்றும் டீ போன்றவற்றை ஆர்டர் செய்தார். இந்த சாது யோகியை பார்த்து ‘எனது நல்லதிர்ஷ்டமே தங்களை குருவாக பெற்றிருக்கிறேன்’ என நினைத்தார். இந்த சாதுவின் எண்ணத்தை படித்த யோகி, பார்வதியின் பக்கம் திரும்பி தனது உரையாடலை துவக்கினார். 

“இங்கே பார், பார்வதி, ரங்கராஜன் ஒரு சன்னியாசி. ஆனால் இந்தப்பிச்சைக்காரனை தனது குரு என்கிறார். எப்படி இந்த அழுக்குப்பிச்சைக்காரன் அவரின் குரு ஆக முடியும்? இது குறித்து நீ ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்புகிறாயா? இது சரியா? “ என்று கூறிவிட்டு சிரிக்கத் தொடங்கினார். பார்வதி பதிலளித்தார். 

“ அவர் மிகச்சரி, சுவாமி. “ 

பகவான் சிரித்தவாறே மீண்டும் கேட்டார். 

“எப்படி ஒரு அழுக்குப்பிச்சைக்காரன் ஒரு சன்னியாசியை சீடனாக கொள்ள முடியும்?“ 

“நீங்கள் சாதாரண பிச்சைக்காரனல்ல. நீங்கள் பிரத்யேகமான பிச்சைக்காரன்“ என்ற அவளின் பதிலைக் கேட்ட யோகி சாதுவின் முதுகிலும், தொடையிலும் கைகளால் தட்டி சிரித்தார். 

நாங்கள் பஜனையை தொடர்ந்தோம். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பக்தரான கிருஷ்ணசாமி அவரது குடும்பத்துடன் வந்திருந்தார். அவர்கள் ஒரு பிஸ்கெட் பொட்டலத்தை குருவின் முன் வைத்தனர். குரு மூன்று பிஸ்கெட்களை எடுத்தார். அதில் இரண்டை சாதுவிடம் கொடுத்தார். சிவராமகிருஷ்ண அய்யர் எங்களோடு இணைந்தார். ஸ்ரீராம் நாயக் மற்றும் மவ்லங்கர் இருவரும் காஞ்சன்காடு செல்ல இருந்தனர். அவர்களிடம் இந்த சாது, பூஜ்ய சச்சிதானந்த சுவாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். சிவராமகிருஷ்ண அய்யர் மற்றும் கண்ணன் இந்த சாதுவை அவரது அறையில் சந்தித்தனர். மாலையில் சாது மீண்டும் குருவிடம் சென்றார். ரோஸாரா மற்றும் சில பக்தர்கள் அங்கே காத்திருந்தனர். ரமணாச்ரமத்தை சேர்ந்த T.R. ஸ்ரீனிவாசன், ”மவுண்டன் பாத்” ஆசிரியர் திரு. கணேசன் வெளிநாடு செல்வது குறித்து கூறி பகவானிடம் ஆசி பெற வந்திருந்தார். குரு சில தகவல்களையும், ஆசியையும் ஸ்ரீனிவாசன் மூலம் கூறினார். நாங்கள் யோகியின் நாமத்தை கூறத்துவங்கினோம். பார்வதி மற்றும் அவரது தாயார் மற்றும் கிறிஸ்டி எங்களோடு இணைந்தனர். திடீரென குரு இந்த சாதுவின் பக்கம் திரும்பி  வினவினார்: 

“என் தந்தை என்னை ராமநாமத்தை உச்சரிக்கச் சொன்னார். ஆனால் இந்த பிச்சைக்காரன் அனைவரிடமும் தனது பெயரை உச்சரிக்கச் சொல்கிறான். அவன் பைத்தியம் தானே? “ 

“இல்லை“, இந்த சாது பதிலளித்தார். 

பார்வதி இணைந்து, “ராம் உங்கள் பெயரில் இருக்கிறது“ என்றார். குரு மீண்டும் சிரித்தார். 

குரு உள்ளே சென்று அவருக்கு வந்த சில கடிதங்களை கொண்டு வந்தார். அவைகளை சாதுவிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் இருந்து ஒரு கடிதம் ஒன்றை எடுத்து தனது சார்பில் அதற்கு சாதுவை பதிலளிக்கச் சொன்னார். சாது அதனை ஏற்றுக் கொண்டார். நாங்கள் தொடர்ந்து நாமஜெபம் உச்சரித்தோம். குரு எங்கள் அனைவருக்கும் பால் ஆர்டர் செய்திருந்தார். திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய துவங்கியது. மின்சாரம் தடைப்பட்டு விளக்குகள் அணைந்தன. பகவான் பார்வதியிடம் திரும்பி, “பார், மழை வந்தால் ஒளியில்லை. பார்வதியின் தந்தை கவலைப்படுவார். நீங்கள் இந்தப் பிச்சைக்காரனிடம் வந்ததால் மழையில் நனைந்து, இருளினால் பீடிக்கப்பட்டீர்கள் என்று நினைத்து மீண்டும் இங்கு வர யோசிப்பீர்கள்” என்றார். 

பார்வதி பதிலளித்தார், “இல்லை சுவாமி. நாங்கள் வருவோம்“ அவளது தாயார் சுந்தரி, “உங்கள் பெயரால் ஒருவன் சம்சார சாகரத்தை கடப்பான் எனில் மழை, இருள் குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது?“ 

குரு ரங்கராஜனிடம் திரும்பி, “என்ன ரங்கராஜா? அவர்கள் இந்தப்பிச்சைக்காரனின் பெயர் அவர்களை காக்கும் என்கிறார். நீ அப்படி நினைக்கிறாயா? 

“இது குறித்த சந்தேகமே இல்லை“ என இந்த சாது பதிலளித்தார். 

சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்து விளக்கு எரிந்தது. பகவான் இந்த சாதுவிடம் திரும்பி தனது உரையாடலை தொடர்ந்தார்: “எண்ணற்ற பல புனிதர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் ராமாயணமும், மகாபாரதமும் நினைவில் வைத்திருக்கப்படுகிறது. இந்தப் பிச்சைக்காரன் தனது பித்துநிலையில், ராமாயணமும், மகாபாரதமும் தனது லீலைகள் என்கிறான். நீ அதை சரி என்று நினைக்கிறாயா?“ 

“மஹராஜ், உங்களின் விஸ்வரூபத்தை கண்டவர்கள் நீங்கள் கூறுவதை புரிந்து கொள்வார்கள்“ என்று இந்த சாது பதிலளித்தான். 

“ ஓ! என் தந்தை ராம்தாஸ் தனது விஸ்வரூபத்தை காட்டினார், ஆனால் இந்தப் பிச்சைக்காரனால் அதை செய்ய முடியாது“ என குறிப்பிட்டார். 

“மஹராஜ், உங்கள் கருணையால், எங்களுக்கு அந்த காட்சியை காண தகுதி வரவேண்டும்“ என இந்த சாது பதிலளித்தார். குரு இந்த சாதுவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தார். இந்த சாதுவின் மனதில் எல்லாம் அவரே என்ற எண்ணம் தோன்றியபோது, “ரங்கராஜா, என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறெதுவும் இல்லை, வேறெவரும் இல்லை. இந்தப் பிச்சைக்காரன் சுவாமி ராம்தாஸ் அவர்களின் பாதங்களில் 1952 ல் மரித்துவிட்டான். இப்பொழுது அவர் மட்டிலுமே இருக்கிறார்.“ அவர் மீண்டும் சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்து பிறகு தொடர்ந்தார்: “தந்தையே ரங்கராஜனில் இருக்கிறார். ரங்கராஜனே தந்தையுள் இருக்கிறார். என் தந்தை மட்டுமே இருக்கிறார். அனைத்தும் தந்தையே“. அங்கு கிடந்த சிகரெட் துண்டுகள், எரிந்த சிகரெட் ஆகியவைகளை காட்டி யோகி ராம்சுரத்குமார் மீண்டும் கூறினார்: “அனைத்தும் என் தந்தையே“ 

ஒரே நேரத்தில் சாது அதன் பொருளையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டார். யோகி குப்பைக்கு கூட கொடுக்கும் மரியாதையை புரிந்து கொண்டார். பகவான் எங்களிடம் அவரது பெயரைப் பாடுவது எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லையா என வினவினார். அனைவரும் இல்லை என்றே பதிலளித்தோம். யோகி கூறினார், இந்த பாடலை சுவர்கள் கூட எதிரொலிப்பதை நான் தூங்கும்போதும் கேட்கிறேன். இந்த சுவர்கள் இந்த பாடலை உள்வாங்கி பின்னர் உமிழ்கின்றது. யோகி பின்னர் கிறிஸ்டியிடம் ராமநாம தாரக மந்திரத்தை காஞ்சன்காடு ஆசிரமத்தின் நடையில் பாடச் சொன்னார் . 

இந்த சாது அவரது பெயர் மிகப்பெரிய விளைவை தருவதாகவும், ஒவ்வொரு வானொலி உரையின் போதும் இந்த சாது இந்த பெயரை வேண்டியே துவங்குவான் என்றார். 

! நீங்கள் இந்தப்பிச்சைக்காரனின் பெயரை நம்பினால், இந்த பெயர் உங்களுக்கு வலிமையைத் தரும். இது தந்தையின் கருணை! நம்பிக்கை தரும் வலிமை! என குறிப்பிட்டதோடு, “ நாம் நமக்கு புலன்கள், அறிவு போன்றவை இருக்கின்றன என்கிறோம். இவைகள் மூலம் நாம் தந்தையை நாம் பார்க்க இயலுமா?“ 

“சரணாகதி மூலமாக மட்டிலுமே மஹராஜ்“, இந்த சாது பதிலளித்தார். 

நம்பிக்கை! அதுவே தேவை. இந்தப்பிச்சைக்காரன் தனது குருவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்திருந்தான். அவன் அவனது தந்தையை கண்டதில்லை. ஆனால் இந்தப்பிச்சைக்காரன் எனது குரு ராம்தாஸ் அவர்களின் வார்த்தையில் நம்பிக்கை வைத்திருந்தான் என்று பகவான் அடித்துக் கூறினார். 

ஒரு நாய் பகவானின் இல்லத்தின் அருகே வந்தது, பகவான் அதற்கு பாலை ஊற்றினார். இந்த நாய்க்கு கோயிலில் உணவு கிடைக்கவில்லை, அதனால் இங்கு வந்துள்ளது என்று பகவான் கூறினார். இந்த சாதுவின் மனதில் நாமும் இந்த நாயைப்போல் அல்லவோ இருக்கிறோம் என்று தோன்றியது. 

குரு தன்னை அனுப்பிய பிறகு, இந்த சாது அவனது அறைக்கு வந்து சேர்ந்தான். ஓட்டலுக்கு வந்த சாது சென்னை ஆசிரமத்துடன் தொலைபேசியில் பேசிய போது, பத்மநாபன் என்கிற மலேசிய பக்தர் ஒரு கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதியிருந்தார் என்ற தகவல் கிடைத்தது. 

அடுத்த நாள், மே 20, இந்த சாதுவிற்கு ஒரு முக்கிய நாள். இந்த சாதுவை அன்றுவரையே திருவண்ணாமலையில் யோகி தங்குமாறு கூறியிருந்தார். விடியற்காலையில் சாது பகவானை சந்தித்து அவருடைய பெயருக்கு ஒரு கடிதம் சென்னை ஆசிரமத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தான். அதனை சென்னை சென்றபிறகு படிக்கலாம் என்றும், அதற்கு தேவைப்பட்டால் பதில் எழுதிவிட்டு தனக்கு பதிலின் ஒரு நகலை அனுப்புமாறும் யோகி கூறினார். பின்னர் சாது தனது உதவியாளரான ஜெயராமன் என்பவரை தனது இல்லத்தில் இருக்குமாறு கூறிவிட்டு, எனது கரங்களைப் பற்றி நடந்து சென்றார். நாங்கள் சிவகாசி நாடார் லாட்ஜ் சென்றோம். முத்து என்ற உதவியாளர் எங்களை வரவேற்றார். ஒரு திருமணம் தரைதளத்தில் நடந்து கொண்டிருந்தது. யோகியின் வருகையை அறிந்த சிலர் அவரது ஆசியை பெற வந்தனர். அங்கே யோகி நான்கு மணிநேரம் சாதுவோடு செலவழித்தார். அங்கே தொடர்ச்சியாக யோகி, “தந்தை மட்டுமே இருக்கிறார்!“ என்று கூறியவண்ணம் இருந்தார். அவர் பகவத்கீதையின் பாடல்களை திரும்பத் திரும்ப கூறினார். 

அநந்யசேதா  ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ | 

தஸ்யாஹம் ஸூலப பார்த நித்யயுக்தஸ்ய யோகிந ||

நித்திய யோகத்திசைந்து , பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் அகப்படுவேன், பார்த்தா. ( பகவத்கீதை 8 – 14 ) 

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே | 

தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் || 

வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன். ( பகவத்கீதை 9 – 22 ) 

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத் | 

தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே ஸாந்திமாப்நோதி காமகாமீ ||

கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது அசையாமல் இருப்பவன் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான். (  பகவத்கீதை 2 – 70 ) 

இதுவே ராம்தாஸ் எனக்கு கற்று தந்தது என்றார் யோகி ராம்சுரத்குமார். 

அவர் பாடினார்:

யுக் யுக் ஸே  ஆர்ஜித  ராஷ்ட்ர  தன் ஹை ராம் நாம், ராம் நாம்; 

யுக் யுக் ஸே  பூஜித  தேஷ் தன் ஹை கிருஷ்ண நாம், கிருஷ்ண நாம் ; 

யுக் யுக் ஸே  சேவித  ஜாதி தன் ஹை சிவ நாம், சிவ நாம்; 

யுக் யுக் ஸே  பூஜித  ராஷ்ட்ர  தன் ஹை ராம்  கிருஷ்ண  சிவ நாம், ராம் கிருஷ்ண  சிவ நாம் ! 

இந்த தேசத்தின்  செல்வமாக பல்லாண்டுகளாக சேர்த்தது ‘ராமநாமம்’; இந்த தேசத்தின் செல்வமாக பல்லாண்டு காலமாக வணங்கப்பட்டது  ‘கிருஷ்ணநாமம்’; இந்த தேசத்தின் செல்வமாக பல்லாண்டு காலமாக சமூகத்தால் போற்றப்பட்டது ‘சிவநாமம்’; இந்த தேசத்தின் செல்வமாக பல்லாண்டு காலமாக வணங்கப்பட்டது , ‘ராம – கிருஷ்ண – சிவ நாமம்’. 

அவர் மேலும் யோகி தொடர்ந்து பாடினார். 

ஜெய் ஜெய் பாரத ஜனனி, ஜெய் ஜெய் பாரத மாதா ; 

ஜெய் ஜெய் மாத்ரு பூமி , ஜெய் ஜெய் பித்ரு பூமி ; 

ஜெய் ஜெய் தேவ பூமி , ஜெய் , ஜெய், ஜெய் ! 

அன்னை பாரதத்திற்கு வெற்றி , அன்னை பாரதத்திற்கு வெற்றி ; தந்தை நாட்டிற்கு வெற்றி ; கடவுளின் நிலத்திற்கு வெற்றி , வெற்றி வெற்றி அவளுக்கு வெற்றி ! 

இந்த சாது பகவானிடம் தனது கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் ) புதுப்பிக்க விண்ணப்பித்திருப்பதாக கூறினார். எனது தந்தை அதனை புதுப்பித்து தருவார் என்று கூறி, எந்த நாடுகளுக்கு சாது செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக கேட்டார். திரு. மகேந்திரா இந்த சாது தென்ஆப்பரிக்காவிற்கு மீண்டும் வரவேண்டும் என்று விரும்புவதாக கூறினார். லண்டனில் இருக்கும் சில நண்பர்களும் அவர் வரவை விரும்புவதாக கூறினார். யோகி சாதுவை வெற்றிகரமான அயல்நாட்டு பயணத்திற்கு ஆசீர்வதித்தார். 

பகவான் ஒரு சிறிய தூக்கத்திற்கு சென்ற போது, இந்த சாது தனது 108 காயத்ரி ஜபம், யோகி ராம்சுரத்குமார் நாம ஜெபம் மற்றும் ராம்நாம் தாரக மந்திர ஜபம் ஆகியவற்றை செய்தார். 

காலை 10 மணிக்கு ஒரு டாக்டர் குடும்பம் வந்தது. பின்னர் கேரளாவின்  டாக்டர். T.I. ராதாகிருஷ்ணன் அவர்களை ஜெயராமன் அழைத்து வந்தார். யோகி சாதுவை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சாது அவர்களிடம் தான் அதிராத்ரா சோம யாகத்தை தவறவிட்டுவிட்டதையும் தனக்கு அழைப்பிதழ் வராததையும் கூறினார். டாக்டர். ராதாகிருஷ்ணனும் தனக்கு ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனலிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று கூறினார். பகவான் ஜெயராமன் இடம் “மவுண்டன் பாத்” ஆசிரியர் கணேசனை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். நாங்கள் பகவான் முன் அமர்ந்து இருந்த பொழுது அவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது ஆன்மீக ஆற்றலை செலுத்திக் கொண்டிருந்தார். சாதுவின் அருகில் இருந்த குழந்தை ஒன்று தரையில் இருந்த தானியங்களை எடுத்து, சாதுவின் நீட்டிய கரங்களில் போட்டது, பகவான் இதன்மூலம் தொல்லைப்படுத்தப்பட்டதாக நினைத்த சாது கரங்களை எடுத்துக்கொண்டார். பகவான் தான் அந்த குழந்தை மூலமாக சில உதவிகள் பெற நினைத்ததாகவும் ஆனால் இந்த சாது இடைமறித்து விட்டதாகவும் கூறினார். 

சிறிது நேரம் கழித்து பகவான், டாக்டர். T.I ராதாகிருஷ்ணன், கணேசன், ஜெயராமன் மற்றும் இந்த சாது அனைவரும் டாக்டரின் காரில் கணேசன் அவர்களின் ஆனந்தரமணா இல்லத்திற்கு சென்றோம். அங்கே மீதமிருந்த நாளை அதிராத்ரா யக்ஞம் பற்றி பேசி செலவழித்தோம். குரு புகை பிடிக்க விரும்பி டாக்டர். T.I. ராதாகிருஷ்ணன் அவர்களின் அனுமதியை கேட்டார். டாக்டர் சிரித்தவாறே, ஒரு டாக்டராக நான் மக்களை சிகரெட் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்துவேன். ஆனால் குரு புகைபிடிக்க விரும்பினால் தனக்கு எதிர்ப்புக்கள் ஏதுமில்ல என்றார். மேலும் டாக்டர் தனது சகோதரனின் உடல்நிலையை சீர்செய்ய அவன் புகைப்பிடிப்பதை தான் எவ்விதம் நிறுத்தினேன் என்று விளக்கினார். பகவான் சிரித்துக்கொண்டே டாக்டரிடம் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் நீங்கள் எனக்கு வைத்தியம் பார்ப்பீர்களா என வினவ, டாக்டர், “நிச்சயமாக நான் திருச்சூரில் இருந்து வந்து உங்களை கவனித்துக் கொள்வேன் “ என்று பதிலளித்தார். 

குரு, டாக்டரிடம், காலையில் நாடார் சத்திரத்தில் அமர்ந்திருந்த போது, தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்று ரங்கராஜனிடம் விளக்கியது குறித்து பேசினார். யோகி, “பப்பா ராம்தாஸ் எனக்கு தீக்ஷை அளித்து ஒரு வாரம் கழித்தே இந்தப்பிச்சைக்காரனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் அவன் பித்து நிலையை அடைந்தபோது வந்தது“ என்றார்.  மேலும் யோகி, “முன்பெல்லாம் யாராவது இந்தப்பிச்சைக்காரன் அருகில் அமர்ந்து புகைப்பிடித்தால் அவனுக்கு தலைவலி வந்துவிடும்“ என்றார். டாக்டர் யோகியிடம் பகவானிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட்டுக்கள் பிடிக்கிறீர்கள் என கேட்க, “ இந்தப்பிச்சைக்காரனைச்சுற்றி மக்கள் இருக்கையில் அவன் புகைபிடிப்பான். அவன் தனியாக இருக்கும் போது அல்ல,“ என்று யோகி பதிலளித்தார். டாக்டர் குருவிடம் தனது மன்னிப்பை கோரி ஒரு பெரும் இலக்கியவாதியான ஜான்சன் அவர்களின் சிகரெட் குறித்த ஒரு துணுக்கை கூறினார்: “நெருப்பு ஒரு முனையில்,  மற்றொரு முனையில் ஓர் முட்டாள்“ குரு உட்பட நாங்கள் அனைவரும் வெடிச்சிரிப்பை உதிர்த்தோம். 

கணேசன் அதிராத்ர  சோம யாகம் குறித்து டாக்டரிடம் விசாரித்தார். டாக்டர் தனக்கு அரசிடமிருந்து, விஞ்ஞானத் துறை அமைச்சகத்தில் இருந்து, அல்லது சமயத் துறையைச் சார்ந்த தலைவர்களிடம் இருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றார். ஆன்மீக துறையை சேர்ந்த சுவாமி சின்மயானந்தா, சுவாமி விஷ்ணு தேவானந்தா போன்ற ஒரு சிலர் மட்டுமே இந்த யாகத்திற்கு ஆதரவு அளித்தனர் என்றும் கூறினார். “ஆனால் யோகி ராம்சுரத்குமார் மட்டுமே எங்களுக்கான ஊக்கத்தையும், வலிமையையும் யக்ஞம் நடத்துவதற்கு தந்தார். நாங்கள் 15 லட்சம் ரூபாய் செலவு செய்தோம். இந்த யாகம் ஒரு மகத்தான வெற்றி அடைய பகவான் தனது கருணையும் ஆசிகளையும் வழங்கினார். அதனாலேயே அவருக்கு எங்களது நன்றியறிவித்தலை தெரிவிக்க நான் நேரடியாகவே வந்தேன்,” என்றார் டாக்டர். யோகியின் கருணையை குறித்து மேலும் சில விவரங்களை பகிர்ந்தார். யாகத்தின் கடைசிநாள் அன்று பெரும் மழைபொழிவும், கருடனின் தரிசனமும் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் இருந்த சுவாமி விஷ்ணுதேவானந்தா கடைசிநாள் அன்று எழுந்து ஒரு நண்பரின் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார் என்று கூறினார். இந்த சாதுவிற்கு சுவாமி சின்மயானந்தா உடன் இருந்த தொடர்பை பகவான் மூலம் அறிந்த டாக்டர் தனது மகிழ்வை வெளிப்படுத்தினார். இந்த சாது டாக்டரிடம் தனது இளமை காலத்தில் தான் சுவாமிஜியால் புடம் போடப்பட்டதாக கூறினார். 

கணேசனின் தாயார் எங்களுக்கு மதிய உணவை கொண்டு வந்தார். மாலையில் டிபன் எடுத்து வந்தார். டாக்டர் T.I. ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் பகவானின் கருணையால் யக்ஞம் வெற்றி அடைந்தது என்றார். ஆனால் பகவான் பணிவோடு அதனை மிகைப்படுத்துதல் என்றார். டாக்டர் T.I.R தான் நிதர்சனமான உண்மையை கூறுவதாக சொன்னார். பகவானை பொருத்தவரை அனைத்தும் தந்தையின் லீலையே. ஒரு ஜெர்மன் டாக்டர் வந்திருந்தார். அவரை டாக்டர் T.I.R இடம் அறிமுகப்படுத்தினர். டாக்டர் T.I.R கணேசனின் தாயார் உடல்நிலை குறித்து விசாரித்தார். 

பகவான் மிகுந்த களைப்பாகவும், ஓய்வற்ற தன்மையிலும் காணப்பட்டார். அவர் சிறிதுநேரம் சாய்ந்து ஓய்வெடுத்து கொண்டார். பின்னர் அவர் எழுந்து டாக்டர் T.I.R இடம் தன்னை தனது இல்லத்திற்கு திரும்ப அழைத்து செல்லுமாறு கூறினார். நாங்கள் அனைவரும் யோகிஜியின் இல்லத்திற்கு திரும்பி வந்தோம். அங்கே பல பக்தர்கள் காத்திருந்தனர். டாக்டர்.T.I.R யோகியிடம் இருந்து விடைப்பெற்றார். சாதுவும் டாக்டரின் பாதுகாப்பான திருச்சூர் பயணத்திற்கு வாழ்த்தினான். பகவான் சாதுவிடம் லாட்ஜுக்கு சென்று ஓய்வு எடுத்து விட்டு வருமாறு கூறினார். இந்த சாது லாட்ஜ் அறைக்கு வந்து அந்த நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்தான், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அற்புத பக்தரான மகேந்திரநாத் குப்தா பதிவு செய்து எழுதிய, “ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்“ என்ற நூலையே இந்த சாது நினைவில் கொண்டான். அனைத்தையும் எழுதி முடித்தப்பின் இந்த சாது கோயிலுக்கு சென்று தெய்வீக அன்னையின். அலங்காரத்தை பார்த்தான். பின்னர் அவன் பகவானின் இல்லத்திற்கு சென்று அவர் ஓய்வெடுப்பதை பார்த்தான். சாது ஜெயராமனிடம் குரு ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் தான் காலையில் வருவதாக கூறினான். அங்கிருந்த மற்ற பக்தர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். 

அடுத்தநாள் காலை இந்த சாது சீக்கிரமாக எழுந்து, தனது ஜப சாதனாக்களை முடித்துவிட்டு பகவானின் இல்லத்திற்கு சென்றான். பகவான் வராண்டாவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். தஞ்சாவூரை சேர்ந்த ராம்தாஸ் என்கிற, ஒரு பள்ளியின் மேலாளர், மற்றும் அவரது இரு நண்பர்களும் யோகியிடம் வந்திருந்தனர். குரு இந்த சாதுவிடம் தான் ஏன் வராண்டாவிற்கு வந்தேன் என விளக்கினார்: “இந்தப்பிச்சைக்காரனை அவ்வப்போது பல மனிதர்கள் பார்க்க வருகிறார்கள், ஒவ்வொரு முறையும் வெளியே வந்து கதவை திறப்பதும், பிறகு உள்ளே போவதும் இந்தப் பிச்சைக்காரனுக்கு சிரமமாக இருப்பதால் இங்கேயே ஓய்வெடுக்கத் துவங்கிவிட்டேன்.” குரு என்னிடம் “நீ சென்னை போக விரும்புகிறாயா?”  எனக்கேட்டார். இந்த சாது நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதை செய்கிறேன் என்றான். யோகி டாக்டர்  T.I.R அவர்களை சந்திக்கவே சாதுவை இருக்கச்சொன்னதாகவும், அந்த வேலை முடிந்ததன் காரணமாக அவன் எப்போது வேண்டுமானாலும் கிளம்பலாம் என்றும் கூறினார். யோகி உள்ளே சென்று ஒரு பை நிறைய பிரசாதங்களை சென்னை பக்தர்களுக்கு விநியோகிக்க கொடுத்தார். சாது யோகி இடம் ‘தத்துவ தர்சனா’ இதழ் தயாரானவுடன் வழக்கம்போல் அதனை வெளியிட தான் வருவேன் என்று கூறினான். சாது யோகியிடம் அவருக்கு வந்த கடிதங்களுங்கு அவரின் உத்தரவின்படி பதிலளித்து விடுவதாக கூறினான். அந்த பதில் கடிதங்களை நிவேதிதா அவரது தரிசனத்திற்கு வருகையில் தந்து அனுப்புவதாக இந்த சாது கூறினான். குரு, சாதுவின் தண்டத்தை கையில் எடுத்து அதனை சக்தியூட்டி அவனிடமே தந்தார். சாதுவின் சிரட்டையையும் ஆசீர்வதித்து அவனிடமே தந்தார். கதவருகே நின்று கைகளை உயர்த்தி சாதுவின் உருவம் மறையும் வரை ஆசீர்வதித்து நின்றார்.

அந்த வாரம் முழுவதும் சாது பகவானின் பக்தர்களை வரவேற்பதிலும், அவர்களை பார்த்து அனுப்புவதிலுமே செலவழித்தார். ஸ்ரீராம் நாயக் மற்றும் மவ்லங்கர் மும்பைக்கு திரும்பினர். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த திரு. A.V. ராமமூர்த்தி சாதுவைப் பார்க்க வந்தார். சாது,  இசையமைப்பாளர் இளையராஜாவிடம், தொலைபேசியில், பகவான் அவரிடம் சொல்ல சொன்ன சேதியை சொன்னார். மே 28 , 1990 ல் இந்த சாது பகவானுக்கு ஒரு கடிதம் எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ், 

 வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த தாழ்மையான சீடன் இன்னமும் தங்களின் புனிதமான இருப்பின் முன்னிலையில், திருவண்ணாமலையில் தங்கி இருந்த நான்கு நாட்களின் நினைவுகளோடே இருக்கிறான். நமது பம்பாய் நண்பர்கள் காஞ்சன்காட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு இங்கே திரும்பி வந்து, இன்று காலை பம்பாய் கிளம்பினர். 

இந்த சாது திரு. இளையராஜாவிடம் திரு. ஞானப்பிரகாசத்தின் புத்தகத்தின் பதிப்பு குறித்து பேசினான். அவர் எங்களை புத்தகத்தின் அச்சுப்பணிகளை ஏற்பாடு செய்யுமாறும், அதன் செலவு எவ்வளவு ஆகும் என்று தனக்குத் தெரிவிக்குமாறும் கூறினார். நாங்கள் அப்படியே செய்வோம்.

நீங்கள் உத்தரவிட்டப்படி நாங்கள் கடிதங்களுக்கு பதில் கடிதங்களை எழுதிவிட்டோம். அந்த பதில் கடிதங்களின் நகல்களையும், தங்களுக்கு விலாசமிடப்பட்ட கடிதங்களையும், குமாரி நிவேதிதா உங்களை சந்திக்க வியாழக்கிழமை 31 – 5 – 1990 அன்று அங்கே வருகையில் அவளிடம் தந்து அனுப்புகிறோம்.

திரு. K.P. சிவக்குமார், “மேக் ஹிஸ்டரி”யின் எடிட்டர், தனது மகன் கார்த்திக் உடன் வருகிறார். கார்த்திக் உயநயனம் 20 – 05 – 1990 அன்று நடைப்பெற்றப்பின், நீங்கள் விரும்பியபடி, தங்களை காண வருகிறார்கள். சிவக்குமாரின் மகள் காயத்ரி, மற்றும் நமது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பக்திநிறைந்த சேவகர்களின் ஒருவர்,. குமாரி லதாவும், குமாரி நிவேதிதா உடன் வருகிறார்கள். நமது காரணங்களுக்காக பக்தியோடு பணிபுரியும் அவர்களுக்கு தயை கூர்ந்து உங்கள் தரிசனத்தை வழங்கவும். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் தங்களது வேத வகுப்புகளை காயத்ரி ஜெயந்தியான 2-6-90 ல் துவக்குகின்றனர். அன்றே ஒரு சிறப்பு சத்சங்கத்தையும் நடத்த இருக்கின்றனர். அதன் அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் உங்களின் ஆசியையும், கருணையையும் வேண்டுகிறோம். சிரஞ்சீவி. விவேக் தனிப்பட்ட முறையில் உங்களிடம் 01-06-90 அன்று நேரில் வந்து உங்கள் ஆசியை வேத வகுப்புகளின் துவக்கத்திற்கு பெறுவார். 

தாழ்மையான வணக்கத்துடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி.” 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.9 – 2.14

அத்தியாயம் 2.9 

உலக ராம்நாம் இயக்கத்தின் தோற்றம்

தெய்வீக கங்கை கங்கோத்ரியில் ஸ்ரீ ஹரியின் பாதங்களில் சிற்றோடையாக துவங்கி, பெரும் நதியாக வடிவெடுத்து பல மலைகள் கடந்து, சமதளத்தில் பாய்ந்து அன்னை பூமியை வளமாக்கி, வளர்த்து வருகிறது. வயல்களை அது புன்னகைக்க வைக்கிறது. பழத்தோட்டங்களையும், அடர்த்தியான காடுகளையும், கட்டப்பட்ட பெரு நகரங்களையும், சாம்ராஜ்யங்களையும், பேரரசுகளையும் கடந்து இறுதியாக இந்த பூமியை புனிதப்படுத்தி ஆழமான கங்காசாகர். கடலுக்குள் புகுகிறது

ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களால் துவக்கப்பட்ட நாம ஜப யக்ஞ இலக்கை தொலைதூர நிலங்களிலும் பரவச் செய்யும் இந்த சாதுவின் எதிர்கால பணிக்காக, ஆழமான தொலைநோக்குடன், ராமநாம தாரக மந்திரமான, ‘ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற மந்திரத்தில் எனக்கு யோகி தீக்ஷை அளித்தது 1988 ஆம் ஆண்டு பப்பா ராம்தாஸ் ஜெயந்தி விழா அன்று, மாதாஜி மஹா சமாதி ஆவதற்கு பத்து மாதங்களுக்கு முன்னதாகவே நடந்தது. உலக ராம்நாம் இயக்கத்தின் விதை இந்த சாதுவிற்குள், குருவால் மார்ச் 6, 1989 அன்று அவரை சந்தித்தப்போது ஆழமாக என் இதயத்தில் விதைக்கப்பட்டது. இருப்பினும் யோகி இந்த சாதுவிடம், காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தை மாதாஜிக்குப்பின் நிர்வகித்து வரும் பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களை தொடர்பு கொண்டு அவரது ஒப்புதலையும் , ஆசியையும் பெற்றுவிட்டே இந்த பிரச்சாரத்தை துவக்க வேண்டும் என்றார். குருவின் ஆசியால் அடுத்த நாளே சாது சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வழி நீலகிரிக்கு புறப்பட்டான். நீலகிரியில் தாங்காடு கிராமத்தில் மார்ச் 13, 1989, அன்று வடுகா சகோதரர்கள் நடத்த இருந்த தீமிதி விழாவில் தலைமை தாங்க இந்த சாது அழைக்கப்பட்டிருந்தார். மார்ச் 9 அன்று இந்த சாது , பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு நீலகிரி தீமிதி விழா முடிந்த உடனேயே காஞ்சங்காடு வருவது குறித்து ஒரு கடிதம் ஒன்றை எழுதினான். அதில் தனது காஞ்சன்காடு பயணத்தின் நோக்கம் ராமநாம ஜப யக்ஞம் விரைவாக துவக்குவதே என்று எழுதியிருந்தான்.

உண்மையில் சாது பகவானிடம் தீக்ஷை பெற்ற உடனேயே ராமநாம பிரசாரத்தை துவக்கி இருந்தார். 1988 ஜூன் மாதம் நீலகிரி தங்காடு கிராமத்தில் ஒரு சிறிய கூட்டத்தில் ராமநாம ஜப இயக்கத்தை திரு. மோகன் என்பவர் தலைமையில் துவக்கி, அவர்களிடம் நாம ஜப எண்ணிக்கையை பெற்று தனக்கு அனுப்பும் பணியை இந்த சாது தந்திருந்தார். அந்த கிராம மக்கள் சீரிய முறையில் இந்த ஜெப சாதனையை துவக்கி இருந்தார்கள். தமிழகத்தில் பல குடும்பங்கள், குடும்பத்தினர் நடத்தும் சத்சங்கங்கள் போன்றவை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தில் இணைந்திருக்கின்றன. அகில உலக ராமநாம இயக்கத்தை துவங்கும் எண்ணம் இந்த சாதுவின் உள்ளத்தில், குருநாதரை, தீமிதி விழாவிற்கு முன் சந்தித்தபொழுது, உதயமாகியது. தங்காடு கிராமத்தவர்கள் உலக ராம்நாம் இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு அந்த இயக்கத்தை தங்கள் நீலகிரி மலையில் துவக்கவேண்டும் என்றும் எப்படி கங்கையானது தனது பயணத்தை கங்கோத்ரியில் இருந்து துவங்குகிறதோ , அவ்விதமாக இந்த நிகழ்வு நீலகிரியில் துவங்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். இந்த சாது அவர்களின் கோரிக்கையை ஒப்புக்கொண்டு மோகன் என்பவரை என்னுடன் காஞ்சன்காடு வந்து பூஜ்ய சுவாமி சச்சிதானந்தாவிடம் ஒரு முறையான ஒப்புதலை பெற்றுவிட்டு பின்னர் இந்த இயக்கத்தின் துவக்கம் குறித்து அறிவிக்கலாம் என்றேன். 

இந்த சாது தங்காடு கிராமத்தில் உள்ள கோயிலின் சமூக பிரார்த்தனை கூடத்தில் பக்தி யோகா குறித்த உரையை மார்ச் 7 1989 ல் துவக்கினான். ஐப யக்ஞத்தின் முக்கியத்துவத்தை இந்த விரிவுரைகளில் அழுத்தமாக பதிவு செய்தேன். ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெயராம் என்ற தாரக மந்திரத்தை ஏற்கனவே லிகித ஜபமாக எழுதிய பிள்ளைகள் தங்களின் நோட்டு புத்தகங்களோடு வந்தனர். அவர்களுக்கு ‘தத்துவ தர்சனா’ இதழை நாங்கள் பரிசளித்தோம். மார்ச் 10 தேதி அந்த கிராமத்தின் மூத்தவர்கள் தீமிதி திருவிழாவிற்கான மரங்களை கொண்டுவர காட்டுக்கு சென்றபோது இந்த சாதுவும் அவர்களோடு கலந்து கொண்டான். மார்ச் 11 ஆம் தேதி பக்தி யோகம் குறித்த எனது இறுதி உரையை முடித்தேன், பக்தர்கள் தங்களின் நாம ஜப எண்ணிக்கை 30,000 என்பதை முன் வந்து அறிவித்தனர். தங்காடு மோகன் தங்கள் கிராமத்து மக்களின் இலக்கு ஒரு கோடி நாம ஜபம் என அறிவித்தார். அடுத்தநாள் ஒரு அன்னையை நாங்கள் அந்த கிராமத்தில் சந்தித்தோம். அவர் தனது கனவில் ஒரு சன்னியாசி தோன்றியதாகவும் அவர் தன்னை ராமநாம ஜப சாதனாவில் ஈடுபடும்படி கூறியதாகவும் பகிர்ந்தார். கிருத்திகை பூஜை அந்த கிராமத்தின் கோயிலில் மாலை  நடைபெற்றது, அந்த கிராமத்தின் தலைவரான திரு. கணபதி இந்த சாதுவை கௌரவித்தார். மார்ச் 13 , 1989 அன்று காலையில் நீலகிரியை சேர்ந்த பல மக்கள் அந்த கிராமத்திற்கு தீமிதி திருவிழாவை காண வந்திருந்தனர். இரவு முழுவதும் பல மரத்துண்டங்கள் எரிக்கப்பட்டு, நெருப்பு கங்குகள் மண்ணின் வைரங்களாக மின்னின. அந்த கடும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் பலர் அந்த குண்டத்தில் தீ மிதிக்க தயாரானார்கள். அந்த தீ மிதி, ‘பூ மிதி’ என்று அழைக்கப்படும் மக்கள் பூவினை மிதிப்பது போல் தீயினை பக்தியோடு மிதித்து நடப்பார்கள். இந்த சாது அந்த குண்டத்தின் தலைப்பகுதியில் நின்று கொண்டிருக்க, பக்தர்கள் வந்து வணங்கி ஒருவர்பின் ஒருவராக தீ மிதிக்க இறங்கினர். அவர்கள் கையில் ஒவ்வொருவரும் புனிதமாக கருதப்பட்ட ஒரு பிரம்பை வைத்திருந்தனர். இந்த சாது 1985-ல், இந்திய பெருங்கடலில் மொரீஷியஸ் அருகில் உள்ள ரீயூனியன் தீவுகளுக்கு சென்றபொழுது அந்த தீவுகளில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் இருந்து சென்ற புலம் பெயர்ந்த மக்கள், பூ குண்டம் என்ற நிகழ்வில் அங்கே அந்த தீ மிதியை நடத்துவதை அறிந்தான். நம்பிக்கை மலையை அசைக்கும்,  நெருப்பை மலராக்கும், அறிவியலும், காரணங்களும் ஆழமான நம்பிக்கை மற்றும் பக்தியின் முன் ஊமையாகி போகும். அடுத்தநாள் அந்த கிராம மக்களிடம் விடைபெறும் முன் அந்த கிராமத்தின் மூத்தவரான யோகி சுவாமி என்பவர் வந்து இந்த சாதுவிடம் குண்டம் மிதியில் பயன்படுத்தப்பட்ட பிரம்பை மிக மரியாதையோடு தந்தார். நான் அதை பக்தியுடன் பெற்றுக் கொண்டேன். நான் மோகனோடு நீலகிரியில் இருந்து கோயம்புத்தூர் வந்து அங்கிருந்த விஸவநாத் என்ற ஒரு பக்தரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு இரவு கேரளாவில் உள்ள காஞ்சன்காட்டிற்கு சென்றோம். 

இந்த சாதுவும், மோகனும் ஆனந்தாஸ்ரமத்தில் மார்ச் 15 , 1989 ல் அன்போடு வரவேற்கப்பட்டோம். பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் நாங்கள் தங்குவதற்கு ஒரு குடிலை ஏற்பாடு செய்தார். காலை கடமைகளுக்குப்பின், பிரார்த்தனை மற்றும் காலை உணவிற்குப்பின், இந்த சாது சுவாமி சச்சிதானந்தர் உடன் பூஜ்ய மாதாஜியின் சமாதி மந்திர்க்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இணைந்தான். அடுத்தநாள் நாங்கள் ஆனந்தாஸ்ரமத்திலிருந்து யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினோம். அதன்பின் நாங்கள் சுவாமி சச்சிதானந்தர் உடன் அமர்ந்து உலக ராமநாம் இயக்கத்தை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மூலம் ஆரம்பிக்க இருப்பது குறித்து பேசினோம். சுவாமி சச்சிதானந்தர் அதனை ஆசீர்வதித்ததோடு மட்டுமல்லாமல் தினமும் குறைந்தபட்சம் 108 முறை லிகித ஜபம் வாய்மொழியான ஜபத்தோடு செய்வதற்கு பக்தர்களிடம் கூற வேண்டும் என்றும் கூறினார். அடுத்தநாள் காலை நாங்கள் பூஜ்ய மாதாஜி அவர்களின் அறைக்கு சென்று அவரது படத்துக்கு முன் எங்களின் முயற்சிகள் வெற்றிபெற ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்தோம். நாங்கள் மேலும் சிறிது நேரம் சுவாமி சச்சிதானந்தர் உடன் செலவழித்து விவரமான திட்டங்களை பேசினோம். யோகியிடம் நான் தீக்ஷை பெற்ற ஆலமரத்து குகை நிகழ்வின் போது உடனிருந்த பின்லாந்தை சேர்ந்த கிறிஸ்டி ( சிவப்ரியா ) நாங்கள் காஞ்சன்காட்டில் இருந்தபோது அங்கே வந்திருந்தார். சனிக்கிழமை நாங்கள் கிளம்பும் முன் இந்த சாதுவும், மோகனும் சுவாமிஜியால் அழைக்கப்பட்டு, அவர் ஒரு கட்டு துளசி மாலைகளையும், புகைப்பட கட்டுக்களையும் ராமநாம பிரசாரத்தின் போது பயன்படுத்த எங்களிடம் வழங்கினார். அவர் நாங்கள் திரும்புவதற்கான ரயில் டிக்கெட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் நாங்கள் பணம் தர முயன்றபோது அதனை அவர் வாங்க மறுத்தார். அன்று மாலை நாங்கள் ஹோம மந்திர், மாதாஜியின் சமாதி மற்றும் பிரார்த்தனை கூடத்திற்குச் சென்று வழிபட்ட பிறகு சுவாமிஜியை சந்தித்து விடைபெற்றோம். அவரிடம் இந்த சாது சேலத்தில் கன்னியாக்குமரி மாயம்மாவையும் பிறகு திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் அவர்களையும் சந்திக்க இருப்பதாக கூறினோம். சுவாமிஜி எங்களுக்கு இரண்டு பிரசாத பைகளை தந்ததோடு, அன்னை மாயி மற்றும் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கும் பிரசாத பைகளை தந்தார். 

நாங்கள் காஞ்சன்காட்டில் இருந்து சேலம் வந்து அங்கே இருக்கும் சாரதா கல்லூரியின் பேராசிரியர்களான தேவகி மற்றும் கமலா என்ற யோகி ராம்சுரத்குமார் பக்தர்களை சந்தித்தோம். அவர்கள் இருவரும் எங்களின் ராமநாம ஜப சாதனாவில் இருப்பவர்கள். பேராசிரியர் கமலா எங்களோடு ஏற்காடு மலையடிவாரத்தில் இருக்கும் மாயம்மாவின் இருப்பிடத்திற்கு வந்தார். நாங்கள் மதிய நேரத்தை அன்னை மாயி உடன் செலவழித்து அவரிடம் ஆனந்தாஸ்ரம பிரசாதங்களை தந்தோம். பின்னர் அவரின் பிரசாதங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்று கிளம்பினோம். பேராசிரியர் தேவகி மற்றும் பேராசிரியர் கமலா எங்களுக்காக மதிய உணவை அவர்களது கல்லூரியின் தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்திருந்தனர். மதிய உணவிற்கு பிறகு அவர்களிடம் விடைப்பெற்று நாங்கள் திருவண்ணாமலைக்கு பயணித்தோம். 

நாங்கள் பகவான் யோகி ராம்சுரத்குமார் இல்லத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்தடைந்தோம். பகவான் எங்களை அன்போடும், கருணையோடும் வரவேற்றார், ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவருடன் நாங்கள் செலவழித்தோம். இந்த சாது நீலகிரி தீமிதி திருவிழா மற்றும் காஞ்சன்காடு பயணம் குறித்து யோகியிடம் விவரித்தான். யோகி என்னிடம் சுவாமி சச்சிதானந்தர் உடன் நடந்த பேச்சின் விவரங்களை கேட்டறிந்தார். யோகி, சுவாமி சச்சிதானந்தர் உலக ராம்நாம் இயக்கத்தை ஆசீர்வதித்தது குறித்தும், துளசி மாலைகள் மற்றும் படங்களை பிரசாரத்தின் போது விநியோகிக்க  தந்தது குறித்தும் பெரு மகிழ்ச்சி கொண்டார். நாங்கள் யோகியின் முன்னர் ஆனந்தாஸ்ரம பிரசாதங்களையும், தீமிதி திருவிழாவிற்குப்பின் நான் பெற்ற புனிதமான பிரம்பினையும் வைத்தோம். பகவான் தனது குருவின் ஆசிரமத்தில் இருந்து பிரசாதம் பெற்றமைக்கு மகிழ்ந்தார். அவர் தனது உள்ளங்கைகளில் பிரம்பினை எடுத்து மேலும் கீழும் நகர்த்தி, அதனை சக்தியேற்றம் செய்தார். அதன் பின் யோகி தனது இடது கரத்தால் எனது கைகளை பிடித்துக் கொண்டு, வலது கரத்தில் பிரம்பினை உயரே தூக்கி பிடித்தார். அவர் தனது கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்றார். பின்னர் அந்த பிரம்பினை சாதுவிடம் தந்த யோகி அதனை அவர் எனக்கு அளித்த பிக்ஷா பாத்திரத்துடன் சேர்த்து யக்ஞ தண்டமாக நான் ராம நாம பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எல்லாம் கொண்டு செல்ல உத்தரவிட்டார். யோகி தொடர்ந்து எனது கரங்களைப் பிடித்து எதிர்காலங்களில் நான் செய்ய இருக்கும் செயல்களுக்கு தேவையான ஆற்றலை சக்தியேற்றமாக செய்தார். உலக அமைதிக்கான மாதாஜியின் 15,500 கோடி நாம ஜப யக்ஞத்தை பரப்பும் பணியை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டமைக்காக எங்களை பாராட்டினார். நாங்கள் கிளம்பும் நேரத்தில் அங்கே வந்த நிவேதிதா மற்றும் விவேகானந்தனை ஆசீர்வதித்ததோடு, அவர்களை தொடர்ந்து யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பணிகளை தொடருமாறு கூறினார். எங்களை மீண்டும் அடுத்த நாள் கலையில் வருமாறு கூறினார். 

திங்கள்கிழமை , மார்ச் 20, 1989 ன் விடியல் வழக்கத்திற்கு மாறாக பிரகாசமாக இருந்தது. இந்த சாதுவின் வாழ்க்கையில் அவன் புரிய இருக்கும் பெரும் சாதனையின் விடியலாக அது இருந்தது. காலைக்கடமைகளை முடித்துவிட்டு நாங்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். அங்கே இருந்த அர்ச்சகர் எங்களை கருவறைக்கு அழைத்துச் சென்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்தார். அங்கிருந்து பின்னர் இந்த சாது யோகியின் இல்லத்திற்கு சென்றான். அங்கே யோகி என்னை எதிர்கொண்டு அழைத்து தன் அருகில் அமரவைத்துக் கொண்டு எனது கரங்களை பற்றிக் கொண்டார். அனைத்து பக்தர்களும் யோகியிடம் பேசிக் கொண்டிருந்த போதும் எனது கரங்களை பற்றியவாறே இருந்தார். உலக ராம்நாம் இயக்கத்தை துவக்குவது மிகச்சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்று யோகி முன்மொழிந்தார். “யாரெல்லாம் இந்த யக்ஞத்தில் பங்குகொள்கிறார்களோ அவர்கள் எனது தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மேலும் அது பப்பா ராம்தாஸ் அவர்களிடமிருந்து தீக்ஷை  பெறுவதற்கு இணையான ஒன்றாகும்.” பின்னர் அவர் துளசிதாசரின் ராமசரித மானஸ் காவியத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார். 

ராம நாம மனி தீப தரு ஜீஹ தேஹரீம் த்வார் | 

துளஸீ பீதர் பாஹேரஹும்  ஜௌம் சாஹஸி உஜியார்  ||

( பாலகாண்டம் , தோஹா 21 ) 

பின்னர் அவரே அதன் பொருளையும்  கூறினார். துளசிதாசர் கூறுகிறார் , நீ உள்ளும், புறமும் வெளிச்சம் பெற விரும்பினால், உன் வாய் என்ற வாசற்படியில், நாக்கு என்ற இடைகழியில் ராம நாமம் என்ற ரத்ன தீபத்தை வைத்துவிடு. பின்னர் அவர் ‘ஏக ஸ்லோகி ராமாயண‘த்தைப் பாடினார். 

அதௌ ராம தபோ வனாதி கமனம் ஹத்துவா ம்ரிகம் காஞ்சனம் 

வைதேகி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரிவ சம்பாஷணம் | 

வாலி நிக்ரஹணம் சமுத்ரதரணம் லங்காபுரீதாஹனம் 

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம் ||” 

“ராமனின் வனவாசம், பொன்மானை கொல்லுதல், வைதேகியின் கடத்தல், ஜடாயுவின் மரணம், சுக்ரீவனுடன் பேச்சு, வாலியை நிர்மூலமாக்கல், கடலினை கடப்பது, லங்காபுரி எரித்தல், அதன்பின் ராவணனையும் கும்பகர்ணனையும் அழித்தல் — இதுவே ராமாயணம்.” 

பகவான் பகவத்கீதையின், ““யக்ஞானானம் ஜப யக்ஞோஸ்மி என்ற ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார். யோகி விவேக் மற்றும் நிவேதிதாவிடம், “மாதாஜி உலக அமைதிக்கான தனது இலக்கான 15,500 கோடி நாம ஜபத்தில்  பத்தில் ஒரு பங்கை

முடிக்க 26 வருடங்கள் ஆகியுள்ளது. இந்த வேகத்தில் இதை முடிக்க 200 வருடங்கள் தேவைப்படும். இப்பொழுது ரங்கராஜன் இந்த யக்ஞத்தை நடத்த ஒரு இயக்கத்தை உலகமெங்கும் தொடங்கியிருக்கிறார். எனவே இன்னும் 20 வருடங்களில் இது முடியலாம். விவேக்கின் இளைஞர் சங்கம் அவருக்கு உதவ இருக்கிறது. என் தந்தை ரங்கராஜன் இந்த பணியை முடிப்பதை பார்ப்பார். எதை அடைய முடியுமோ, அது சிறப்பாய் இருக்கும்.” 

பகவான் இந்த சாதுவிடம் எனது மும்பை பயணம் குறித்தும், அங்கே ராமநாம ஜப யக்ஞத்தை துவக்குவது குறித்தும் கேட்டார். இந்த சாது, ”ஓர் யோகியின் அற்புத தரிசனங்கள்“ என்ற நூலை அச்சிட்ட திரு. A.R. ராவ் என்பவர் மும்பையில் எனது வருகைக்காக காத்திருக்கிறார் என பதிலளித்தேன். 

யோகிஜி, வஜ்ரேஸவரியைச் சேர்ந்த சுவாமி நித்யானந்தா எழுதிய ,’வாய்ஸ் ஆஃப் தி செல்ஃப்’ என்ற புத்தகத்தை நிவேதிதாவிடம் தந்து , ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து அதனை படிக்குமாறு கூறினார். நிவேதிதா அந்த புத்தகத்தை திறந்ததும் அதில் ஜபம் பற்றிய மேற்கோள் ஒன்றை கண்டு அதை வாசித்தார். அதில் ஜபம் குறித்து எழுதப்பட்டிருந்தது. “ஜபம் என்பது கைகளாலோ, வாயாலோ செய்யப்படுவதன்று. சிவம் என்பது மனதால் அறியப்படுவதன்று. கர்மா என்பது

கைகளாலோ, கால்களாலோ செய்யப்படுவதன்று. ஓ மனமே, ஆசையற்ற தன்மையுடன் செயல்படு. ஆசையற்ற தன்மையை பெற்று பிற அனைத்தையும் கருத்தில் கொள்.” பகவான் எங்கள் அனைவரையும் ஆளுக்கொரு மேற்கோளினை படிக்கச் சொன்னார். பகவான் எங்களிடம் துவாரகநாத் ரெட்டி மற்றும் சுஜாதா எனும் இரண்டு பக்தர்களின் வருகை குறித்து கூறினார், துவாரகநாத் மற்றும் அவரது மகளான சந்தியா இருவரும் ரமணரின் பக்தர்கள் ஆவார்கள். இந்த சாது யோகியிடம் தனது சென்னை இல்லத்திற்கு பேராசிரியைகள் தேவகி மற்றும் சுஜாதா ஆகியோர் வந்திருந்தார்கள் என்றும், தானும் மோகனும் சேலம் சென்றபோது சாரதா கல்லூரியின் விடுதியில் தங்களுக்கு மதிய உணவை தேவகி வழங்கினார் என்றும் கூறினார். யோகி தனது கரங்களில் சுவாமி சச்சிதானந்தர் வழங்கிய மாலை, மற்றும் படங்களை எடுத்து ஆசீர்வதித்து சாதுவிடம் தந்தார். யோகி திரு. மோகன் அவர்களுக்கும் ஆசி வழங்கி நீலகிரியில் ராமநாம பிரச்சாரத்தை துவங்க சொன்னார். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள், அதன் தலைவர் டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன், மிகுந்த தீவிரத்தோடு நாமஜபம் மற்றும் லிகித ஜபத்தை மேற்கொண்ட இந்த சாதுவின் அன்னை ஜானகி அம்மாள், பாரதி ரங்கராஜன் மற்றும் சாதுவின் சகோதரி அலமேலு என அனைவருக்கும் தனது ஆசியை பொழிந்தார். யோகி இந்த சாதுவிடம் எனது அன்னை மற்றும் சகோதரியை அழைத்துவரச் சொன்னார். 

எனது குருவிடமிருந்து விடைபெறுகையில் நான் அந்த நாளை ஒரு அற்புத நாளாக நினைத்தேன். மகா யோகி என்னை எனது வாழ்க்கையில் ஒரு பெரும் இலக்குடன் வெளியே அனுப்பியதாக உணர்ந்தேன். அருணாச்சலத்தை விட்டு புறப்படும் முன் நாங்கள் உண்ணாமலை அம்மன் சன்னதிக்கும் சென்றோம். மோகன் நீலகிரி செல்ல சேலம் நோக்கி பயணம் மேற்கொண்டார். இந்த சாதுவும் பிள்ளைகளும் சென்னை திரும்பினோம். 

உலக ராம்நாம் இயக்கத்தின் வேலைகள் முழு வேகத்துடன் துவங்கப்பட்டன, நாங்கள் பிரச்சாரத்திற்கு தேவையான துண்டுப்பிரசுரங்களை தயார் செய்தோம். சாதுஜி துவக்கப்பட்ட வேலைகள் குறித்து இந்த பின்வரும் கடிதத்தை மார்ச் 28 , 1989 ல் யோகிக்கு எழுதினார் : 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் ! 

இன்று காலை, எனது இளைய சகோதரி திருமதி. அலமேலு சீனிவாசன் அவர்களுக்கு, பொது சுகாதார மையத்தின் மருத்துவர்களால் மிகப்பெரிய மற்றும் சிக்கலான கருப்பை நீக்க அறுவை சிகிச்சை, தங்களின் அளவற்ற கருணையாலும், ஆசியாலும், வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அவள் தற்சமயம் தேறி வருகிறாள். எங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் அன்பான கருணைக்கு, எங்கள் நன்றியோடு கூடிய நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறோம். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் ராமநாம யக்ஞத்தின் பணிகளை துவக்கி விட்டார்கள். சனிக்கிழமை அன்று ஒரு சிறப்பு சத்சங்கம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் டாக்டர்.C.V. ராதாகிருஷ்ணன் தாங்கள் அளித்த பிரசாதங்களை அன்று கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சில பக்தர்களுக்கும் வழங்கினார். லிகித நாம ஜபம் எழுத நோட்டு புத்தகங்களும், மவுனமான மந்திரஜபத்திற்கு துளசிமாலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

‘மேக் ஹிஸ்டரி’ என்ற காலாண்டு இதழில் அகில உலக ராம்நாம் பிரசாரம் குறித்து வந்த ஒரு சேதியை வெளியிடுகின்றது. அதை துண்டுப்பிரசுரமாகவும் அடித்து இந்தியா முழுமைக்கும் மற்றும் அகில உலக அளவிலும் வழங்க நமது இளைஞர்கள் தயாராக உள்ளனர். அதன் பிரதி ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய வானொலி, நேற்று, ‘அறிவியலும், ஆன்மீகமும்’ என்ற தலைப்பில் எனது உரையை ஒலிப்பதிவு செய்தது. இது முன்னாள் ராஷ்டிரபதி டாக்டர். S.ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளன்று, ஏப்ரல் 17, 1989 அன்று, சென்னை – A நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு ஒலிபரப்பாகும். உங்களது தெய்வீக பெயரோடு துவங்கிய  எனது  பேச்சு, பாரதத்தின் இலக்கான ‘மனிதர்களை உருவாக்கும் பொறியியல்’ குறித்த தங்களது கருத்துக்களுடன் நிறைவேறியது. நான் எனது உரையின் எழுத்து வடிவத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன். ஏப்ரல் 17 அன்று எனது உரையை நீங்கள் கேட்டு இந்த தாழ்மையான சீடனை ஆசீர்வதிப்பீர்கள் என நம்புகிறேன். 

நான் பம்பாய்க்கு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை பயணம் செய்ய பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளேன் நான் அது உறுதியாவதற்கு காத்திருக்கிறேன். திரு. A.R. ராவ் எனது வருகைக்காக தேவையான ஏற்பாடுகளை செய்து மும்பையில் ராம்நாம் பிரசாரம் செய்ய காத்திருக்கிறார். நாங்கள் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இங்கே திரும்புவோம். நாங்கள் திரும்பிய பிறகு, நான் தங்களை சந்தித்து முன்னேற்றங்கள் குறித்து விளக்குகிறேன். எங்களது முயற்சிகளின் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

தாழ்மையான வணக்கங்களுடன்,

உங்கள் மிக்க கீழ்படிந்த சீடன், 

V. ரங்கராஜன்

இணைப்புக்கள் : மேற்குறிப்பிட்ட படி”

ராமநாமத்திற்கு ஓர் உலக இயக்கம்

ராமநாமம் பஜரே மானஸா!” – “ஓ மனமே, புனிதமான ராமநாமத்தை உச்சரி“ என்று நாத உபாசக துறவி தியாகராஜர் கூறுகிறார்.“ அவர் அறைகூவல் விடுக்கின்றார்: “இந்த அரிய மனித உடலை பெற்றுள்ளதால், சந்தேகங்களை அகற்றி, நீங்கள் முக்தி மூலம் ஆசீர்வதிக்கப்பட பிரார்த்தனை செய்யவும். வைதேஹியின் பாக்கியம் என அழைத்து அவர் பெயரை ஜபியுங்கள்.” 

உடல், மனம் மற்றும் அறிவின் நோய்கள் தீர பல்லாண்டு காலமாக ராமநாமமே ஆன்மீக ஆற்றல் வழங்கும் அமுதமாக திகழ்கிறது. ஈசன் பார்வதியுடனான  தனது தெய்வீக உரையாடலில் ராமனின் பெயர் ஆயிரம் விஷ்ணுவின் நாமங்களுக்கு இணை என்கிறார். வெறுமனே அதனை கூறியதோடு அல்லாமல், அவரே மஹாவீர ஆஞ்சனேயராக அவதரித்து ராமநாமத்தின் திறனை வலிமையை கடலினை ஒரே ஒரு தாண்டுதலில் கடந்தும், மலையை ஒரு கையில் தூக்கியும் நமக்கு காட்டியிருக்கிறார். யாரெல்லாம் ராமனுக்கு சேவை செய்தார்களோ அவர்கள் அனைவரும் அவருடன் வைகுண்டத்திற்கு செல்ல விரும்பியபோது ராமாயணத்தின் பெரும் வீரனான ஹனுமான் மட்டும் சிரஞ்சீவியாக உலகிலேயே இருந்து ராமநாமத்தை பரப்ப முடிவெடுத்தார்,

எண்ணற்ற முனிவர்களும், துறவிகளும் இந்த பாரத தேசத்தில் ஆன்மீக சூழலை ராம நாமத்தின் அதிர்வுகள் மூலம் பல்லாண்டுகளாக பரப்பி வருகின்றனர்.. சத்ரபதி சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாசர் “ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்” என்ற ராமநாம தாரகத்தை உபதேசித்து, இந்து சமூகத்தில் ஒரு மின்சார பாய்ச்சலை ஏற்படுத்தி,. அந்நிய சக்திகளை விரட்டி இந்து சாம்ராஜயத்தை நிறுவியது.  நவீன காலத்தில் சமுதாயத்தில் விழிப்பு ஏற்படுத்தவும் தியாக உணர்வு உருவாக்கவும் ராமநாமத்தை பயன்படுத்தி அதன் ஆற்றலை நிரூபித்தவர் மகாத்மா காந்தி. “உங்கள் இதயம் நிறைந்த ராமநாமத்தை கூறுவதென்பது , ஒரு ஒப்பில்லாத சக்தியிடம் இருந்து சக்தியை பெறுவதைப் போன்றதாகும். அணுசக்தியும் இதனோடு ஒப்பிட முடியாத ஒன்று. இந்த சக்தி அனைத்து வலிகளையும் நீக்கவல்ல சக்தி கொண்டது“ என காந்திஜி அறிவிக்கிறார். 

பெரும் துறவியான, காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த, சுவாமி ராம்தாஸ் ராமநாமத்தை உலகங்கும் பரப்பினார். காஞ்சன்காடு ஆசிரமம் எப்போதும், இரவும், பகலும் , உலகமெங்கிலும் இருந்துவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் “ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்” என்ற நாம ஜபத்தில் மூழ்கியிருக்கும். சுவாமி ராம்தாஸ் அடுத்த தலைமுறைக்கு தந்த விலைமதிப்பற்ற மரபு இது. பிப்ரவரி 12 , 1989 ல் மஹாசமாதி ஆன, சுவாமி ராம்தாஸ் அவர்களின் சிஷ்யை ஆன மாதாஜி கிருஷ்ணாபாய் இந்த உலகமே ராமநாம ஒலியில் திளைக்க வேண்டுமென்று சங்கல்பம் எடுத்தார், இந்த உலகத்தின் அமைதிக்காக 15,500 கோடி ராமநாம தாரகத்தை உலகமெங்கும் மக்கள் உச்சரிக்க வேண்டும் என நினைத்தார். அவரது வாழ்நாளில் 1757 கோடி நாமம் நிறைவேறிவிட்டது. 

திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் சுவாமி ராம்தாஸின் சீடர், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் பக்தர். அவர் தனது குரு ராம்தாஸ் மூலம் தீக்ஷை பெற்றது முதல் தனது ஒவ்வொரு உள் மூச்சு, வெளி மூச்சிலும் தெய்வீக மந்திரமான ராமநாமத்தையே மூன்று தசாப்தமாக சுவாசித்து வருகிறார். இன்று அவரது கனவு இந்த தலைமுறைக்குள்ளாகவே மாதாஜியின் 15,500 கோடி ராம நாம ஜபமானது பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதாகும்.. இது உலகளாவிய பிரச்சாரத்தின் மூலமே சாத்தியப்படும். ஹிந்து சமூகத்தின் ஒவ்வொரு நபரும், அவர் உலகின் எந்த பகுதியை சேர்ந்தவராக இருப்பினும், இதில் பங்கு கொண்டால் மட்டுமே இது சாத்தியம். இந்த லட்சியத்துடன் அவர் தனது சிஷ்யனான சாது ரங்கராஜனை நாடு முழுதும் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த நாம ஜப இயக்கத்தை பரப்ப முயற்சி எடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார். ‘தத்துவ தர்சனா’, சகோதரி நிவேதிதா அகாடமி, மற்றும் நமது வலிமையான இளைஞர் பிரிவான, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், என அனைத்தும் இந்த இலக்கை நிறைவேற்ற முடுக்கி விடப்பட்டுள்ளன. ராமசந்திர பிரபு பெரும் காரியமான சேது பந்தனம் செய்யும் போது ஏளிய அணிலும் அதற்கு உதவியது போல், யோகி ராம்சுரத்குமாரின் இந்த புனிதமான பணிக்கு குருநாதன் காலடியில் எங்களை சமர்ப்பித்து கொள்கிறோம். குருவின் கருணையால் பாரத தேசத்திற்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் உள்ள பாரத அன்னையின் புதல்வர்கள் உதவியை பெற விழைகிறோம். ராமசந்திரபிரபுவின் மகிமை பொருந்திய இந்த மந்திரமான ,’ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ நம்மை இணைக்கட்டும். 

யக்ஞானானம் ஜப யக்ஞோஸ்மி – “யக்ஞங்களில் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன்” — என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் உரைக்கிறார். ராமநாமத்தை ஜபிப்பதே பெரும் வேள்வி. இந்த மகாயக்ஞத்தில் கலந்து கொள்வது எனது குரு சுவாமி ராம்தாஸிடம்  இருந்து நேரடியாக தீக்ஷை பெறுவதைப் போன்றதாகும். என் தந்தை இந்த மகாயக்ஞத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் எல்லா வளங்களும் வந்து சேரும் என ஆசீர்வதிக்கிறார்.“

யோகி ராம்சுரத்குமார்

பங்கு பெறுபவர்களுக்கான வழிக்காட்டுதல்கள்

சர்வதேச ராம்நாம் மகாயக்ஞத்தில் பங்குபெறுபவர்களுக்கான வழிக்காட்டுதல்கள் : 

1. ‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற மந்திரத்தை உங்களுக்கு வசதியான எந்த மொழியிலும் எழுதலாம். குறைந்தபட்சமாக 108 முறையாவது தினமும் எழுத முயலுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உச்சரியுங்கள். 

2. நீங்கள் எழுதிய லிகித ஜபம் மற்றும் தினமும் உச்சரித்த ஜபத்தின் எண்ணிக்கையை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்கு உங்கள் முழு பெயர் மற்றும் விலாசத்துடன் அனுப்புங்கள். 

3. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகண்ட ராமநாம ஜப யக்ஞத்தை (குழுவாக ராம நாம ஜபத்தை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை கூறல்) ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் உங்களால் இயன்றவரை பக்தர்களை ஊக்கப்படுத்தி இந்த புனிதமான யக்ஞத்தில் இணைக்க வையுங்கள். 

வந்தே மாதரம் !

சென்னையிலிருந்து வெளிவரும் நாளிதழ் “இந்தியன் எக்ஸ்பிரஸ்”, வெள்ளிக்கிழமை , ஏப்ரல் 14 , 1989 அன்று இந்த ராமநாம மஹாயக்ஞம் குறித்து செய்தி வெளியிட்டது: 

சர்வதேச ராம்நாம் மகாயக்ஞம் என்பது கேரளா, காஞ்சன்காடு , ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த காலமான அன்னை கிருஷ்ணாபாய் அவர்களால் உலக அமைதிக்காக துவக்கப்பட்டது. இதன் இலக்கு 15,500 கோடி ராமநாமத்தை (அதாவது , ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்) சேகரித்தல். பிப்ரவரி 10 வரை 1757 கோடி நாம ஜபம் முடிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலையைச் சேர்ந்த சுவாமி ராம்தாஸ் அவர்களின் சீடனும், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் பக்தனுமான யோகி ராம்சுரத்குமார், இப்பொழுது தனது சீடனான சகோதரி நிவேதிதா அகாடமியின் சாது பேராசிரியர் வே. ரங்கராஜன் (118, பெரிய தெரு, திருவல்லிக்கேணி , சென்னை – 5) அவர்களிடம் இந்த மகாயக்ஞம் குறித்த ஒரு உலகளாவிய பிரசாரத்தை மேற்கொள்ளும்படி ஆணையிட்டுள்ளார். இந்த ஆணைப்படி, சாது ரங்கராஜன், தற்போதைய காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தின் தலைவரான சுவாமி சச்சிதானந்தர் அவர்களின் ஆசியோடு  இந்தப் பணியை துவக்கியிருக்கிறார்.

திருவண்ணாமலை , ஓயா மடத்தில் ஜனவரி 1 மற்றும் 2 ஆம் தேதி 1994 ஆம் ஆண்டு யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அகண்ட ராமநாம யக்ஞத்தில் யோகி ராம்சுரத்குமார்.  

அத்தியாயம் 2.10 

ராம்நாம் எனும் சுடரின் பரவல்

பூஜ்யபாத குருதேவ் அவர்களின் ஆசி மற்றும் கருணையால் இந்த சாது மும்பைக்கு ஏப்ரல் 1 முதல் 7 ஆம் தேதி வரை 1989 ல் பயணம் மேற்கொண்டு ராம்நாம் இயக்கத்தை அங்கே பெரும் வெற்றியோடு துவக்கினான். உடனடியாக அங்கேயிருந்து திரும்பியபின் ஏப்ரல் 11 அன்று 1989 ல் இந்த சாது ஒரு விரிவான கடிதம் ஒன்றை தனது மும்பை பயணம் குறித்து எழுதினான்:

பூஜய ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும், ஆசியாலும் அறுவை சிகிச்சைக்கு ஆட்பட்ட எனது சகோதரி திருமதி. அலமேலு சீனிவாசன் உடல்நிலை தேறி, இன்று காலை மருத்தவனையில் இருந்து திரும்பி வந்தார். அவர் சிறிது காலம் படுக்கையில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனது தாயாரும், சகோதரியும் நீண்ட காலமாக தங்களின் தரிசனத்தை பெற ஆவல் கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் என் சகோதரி பயணிக்க தயார் ஆனவுடன் திருவண்ணாமலைக்கு வருவார்கள். 

தங்களின் ஆசியால் எனது மும்பை மற்றும் புனே பயணங்கள் பெறும் வெற்றியடைந்தன. நாங்கள் அங்கே பலதரப்பட்ட வாழ்க்கையை வாழும் மக்களிடையே ராமநாமத்தை பரப்பி, அவர்கள் நாம ஜபம் மற்றும் லிகித ஜபம் செய்ய தேவையான உட்கருவை உருவாக்கினோம். அவர்கள் மீண்டும் ஜூலை மாதம் என்னை அங்கே அகண்ட ராமநாம ஜபம் வெவ்வேறு குழுக்களால் நடத்தப்பெறும் போது வரச்சொன்னார்கள். உயர்நீதிமன்ற வழக்கறிஞரான திரு. ஸ்ரீராம் நாயக், மற்றும் திரு. V.V. நாராயணசுவாமி என்ற முன்னாள் சிறப்பு எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்ரேட் போன்றோர் யக்ஞத்தை மும்பையில் ஏற்பாடு செய்தனர்.  பேராசிரியர். G.C. அஸ்னானி புனேயில் நாம ஜெப யக்ஞத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் அவர்கள் அனைவரும் திருவண்ணாமலைக்கு வந்து தங்கள் தரிசனத்தை பெற ஆவலாக இருக்கின்றனர், அது விரைவில் நிறைவேறும் என்றே நம்புகிறேன். மனோரமா பிரஸ்ஸை சேர்ந்த திரு. A.R. ராவ் தற்சமயம் மும்பையில் இருக்கிறார். அவர்களின் குடும்பம் எனக்கு சிறப்பானதொரு விருந்தோம்பலை தந்தனர். திரு.ராவ் எனக்காக ஜீப் ஓட்டி எனது பயணத்தை இலகுவாக மாற்றினார். அவரும் அவரது குடும்பமும் 16 – 4 – 1989 ல் சென்னை வருகின்றனர். பின்னர் அவர்கள் தங்கள் தரிசனத்திற்கும் வருவார்கள். 

டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கமும் தினமும் ராமநாம பிரச்சாரம் மற்றும் சத்சங்களை நடத்தி வருகின்றனர். அவர்களும் தங்களை திருவண்ணாமலை வந்து தரிசிக்க திட்டமிட்டுள்ளனர். 

“மேக் ஹிஸ்டரி” என்ற இதழில் ராம்நாம் மகாயக்ஞம் குறித்த ஒரு கட்டுரை, லீ லோசோவிக் அவர்களின் நேர்காணல், மற்றும் எனது மகாத்மா காந்தி குறித்த உரையின் எழுத்து வடிவம் என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பிரதி தங்களின் ஆசிக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனது இன்னொரு வானொலி உரையான “அறிவியலும், ஆன்மீகமும்” , ஏப்ரல் 17 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சென்னை நிலையம் – A வில் ஒலிப்பரப்பு ஆகிறது. அதனை நீங்கள் கேட்டு ஆசீர்வதிக்க வேண்டும். 

‘தத்துவ தர்சனா’ வின் இதழ் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தற்சமயம் அச்சில் உள்ளது, அது வெளிவந்தவுடன் தங்களை தொடர்பு கொள்கிறேன். 

நிவேதிதா, விவேக், பாரதி, எனது தாயார் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் உறுப்பினர்கள் தங்கள் நமஸ்காரத்தை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க வணக்கங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். 

ஏப்ரல் 13, 1989 அன்று இந்த சாது ஒரு இனிய ஆச்சர்யத்தை சந்தித்தான். யோகி “ராம்சுரத்குமார் கடவுளின் குழந்தை திருவண்ணாமலை” என்ற யோகி குறித்த முதல் நூலை எழுதிய அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் அவர் தனக்கு “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற நூல் மற்றும் ‘தத்துவ தர்சனாவின்’ பிரதிகள் தனக்கு வேண்டும் என்று கோரியிருந்தார். யோகியின் மூலம் எனக்கு தீக்ஷை அளிக்கப்பட்டது குறித்து அவர் தன் மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார், மேலும் தனது வணக்கத்தை எங்களது குருவிற்கு வழங்கியிருந்தார். 

அந்தவாரம் முழுவதும், “யோகி ராம்சுரத்குமாருடனான அனுபவங்கள்” என்ற நூலின் ஆசிரியரும், இன்னொரு பக்தருமான ஹரகோபால் சேபுரி அவர்களின் நூல் அச்சிடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தேன். அந்த நூலை சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிட்டது. திரு. யோகன் என்ற ஜெர்மனியை சேர்ந்த பக்தர் யோகிஜியின் தரிசனத்தை திருவண்ணாமலையில் பெற்று இந்த சாதுவை காண ஏப்ரல் 17 அன்று வந்தார். அதே நாளில் வானொலியில் எனது உரையான அறிவியலும், ஆன்மீகமும் ஒலிபரப்பானது. அடுத்தநாள் பகவானின் பக்தரான E.R.நாராயணன் என்பவர் இந்த சாதுவின் உரையை சென்னை பெரியார் நகரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தார். அங்கே இந்த சாது யோகி ராம்சுரத்குமார் குறித்து பேசி அங்கிருந்தவர்களின் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினான். 

ஏப்ரல் 19, 1989 , சேலம் , சாரதா கல்லூரியின் பேராசிரியை ஆன தேவகி எனது இல்லத்திற்கு தங்களது ராமநாமங்களை சமர்ப்பிக்க குருவின் வழிகாட்டுதலின் படி வந்திருந்தனர். அவர், அவர்களோடு பணிபுரிந்தவர்கள், மற்றும் அவர்களின் மாணவர்கள் எழுதிய நாமங்களை பெற்றுக்கொண்டோம். அடுத்தநாள் இன்னொரு பக்தரான சென்னையைச் சேர்ந்த செல்லைய்யா தேவர் என்பவர் எனது இல்லத்திற்கு வந்து யோகியின் வண்ணப்படங்களை ராம்நாம் பிரச்சாரத்தின் போது விநியோகம் செய்ய உதவுவதாக கூறினார். 

ஏப்ரல் 24, 1989 ல் இந்த சாது ஹரகோபால் சேபுரியின் புத்தகத்தை அனுப்பி, பகவானுக்கு ஒரு கடிதம் ஒன்றையும் அனுப்பினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

இன்று நாங்கள் புத்தக தபால் மூலம் “யோகி ராம்சுரத்குமாருடனான அனுபவங்கள்” என்ற, ஹரகோபால் சேபுரியின், நூலை அனுப்பியுள்ளோம். வண்ண அட்டைப்படத்துடன் அந்த நூலை வெளியிட்டிருக்கிறோம். திரு.ஹரகோபால் இங்கு நேற்று வந்திருந்தார். சென்ற வாரம் குமாரி தேவகி எங்கள் இல்லத்திற்கு வந்து சேலத்தில் அவர் பெற்ற ராமநாம எண்ணிக்கையை தந்துவிட்டு சென்றார். அன்பிற்குரிய திரு.ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் டெக்சாஸில் இருந்து எழுதிய கடிதம் ஒன்றில் தன்னுடைய வணக்கத்தை உங்களுக்கு தெரிவித்தார். அவர் எங்களிடம் எங்கள் நூல்கள் மற்றும் பத்திரிகையின் பிரதிகளை அனுப்புமாறு கேட்டிருந்தார். அவைகளை நான் அனுப்பி வைத்திருக்கிறேன். 

தங்கள் எல்லையற்ற கருணையால் ராமநாம பிரச்சாரம் தினமும் நல்ல வேகத்தை பெற்று பலர் இந்த யக்ஞத்தில் இணைத்திருக்கின்றனர். எங்களின் துடிப்பான இளைஞர்கள் தங்களின் விடுமுறையை இந்த யக்ஞத்தின் பணிகளில் செலவழித்து வருகின்றனர். 

இந்த தாழ்மையான சீடனுக்கு தாங்கள் சென்ற வருடம் ஏப்ரல் 26 அன்று தீக்ஷை அளித்தீர்கள் இன்றோடு இந்த சீடன் ஒருவருடத்தை நிறைவு செய்கிறான். நான் இந்த நாளில் உங்களோடு இருப்பதையே பெரிதும் விரும்பினேன். ஆனால் இளைஞர்கள் ராம்தாஸ் ஜெயந்தியை முன்னிட்டு அகண்ட ராமநாமஜபத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 6 மணியிலிருந்து 7 மணிவரை சிறப்பு சத்சங்கத்தையும் .ஏற்பாடு செய்திருக்கின்றனர். நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவ இருப்பதால் என்னால் அங்கு வர இயலவில்லை. நாங்கள் அகண்ட நாமம் சொல்லும்போது நீங்கள் எங்களோடு இருப்பீர்கள். இந்த தாய் மண்ணிற்கு கொண்டாடுவதற்கான எங்களது முயற்சிகளுக்கும், எங்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உங்கள் ஆசிகளை வேண்டி பிரார்த்திக்கிறேன். 

‘தத்துவ தர்சனா’ இதழின் ஐந்தாம் ஆண்டு சிறப்பு மலர் பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அக்ஷய  திரிதியை நாளான மே – 8 அன்று வெளிவர இருக்கிறது. அதற்கான அச்சு வேலைகளை அதற்கு முன் முடித்து, முதல் இதழை உங்களிடம் அந்த மங்களகரமான நாளில் கொண்டு வருவோம் என நம்புகிறோம். 

எனது வயதான தாயார் திருமதி். ஜானகி அம்மாள், திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேக், குமாரி. நிவேதிதா, சகோதரி. திருமதி. அலமேலு சீனிவாசன் மற்றும் அவரது குடும்பம், டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன், மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் நமஸ்காரங்களை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

பப்பா ராம்தாஸ் ஜெயந்தி மற்றும் இந்த சாதுவின் முதல் வருட தீக்ஷை நாள் இரண்டும் ஏப்ரல் 26 , 1989 ல் கொண்டாடப்பட்டப்பின் இந்த சாது பகவானுக்கு அந்த நாளின் நிகழ்வு குறித்த அறிக்கையை அடுத்தநாள் கடிதமாக எழுதினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராய! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

சுவாமி ராம்தாஸ் ஜெயந்தி நேற்று இங்கே அகண்ட ராம நாமத்துடன் நடைப்பெற்றது. பல புதிய பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். பர்மாவை சேர்ந்த சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா என்பவர் தங்களை ஏற்கனவே ஒருமுறை திருவண்ணாமலையில் சந்தித்தவர். தங்கள் சிறப்புக்களையும் , ராமநாம ஜபத்தின் மகிமைகளையும் குறித்து இந்த யக்ஞத்தில் பங்கு கொண்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பேசினார். 

இன்று ஒரு கடிதம் தங்கள் பெயர் குறிப்பிடப்பட்டு குன்னூரில் இருந்து எங்களிடம் வந்தது. அதனை உங்களுக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன். 

சென்னை சத்யசாய் அமைப்பை சேர்ந்த செயலாளரான திரு. வெங்கடேசன் நேற்றைய சத்சங்கத்தில் கலந்து கொண்டார். அவர்கள்  ‘சுந்தரம்’ என்ற, சென்னையின் சத்ய சாய் அமைப்பின் தலைமை இடத்தில்’ இந்த சாதுவை ஹிந்து தர்மம் பற்றி மே – 15 , 1989 அன்று பேச அழைத்திருக்கிறார்கள். நான் உங்கள் ஆசியை வேண்டுகிறேன். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன் 

சாது ரங்கராஜன்

இணைப்பு : ஒரு இன்லேண்ட் கடிதம். “

நீலகிரி குன்னூரை சேர்ந்த நிர்மலா மெஹபூபானி என்பவர் ஒரு கடிதத்தில் தான், பப்பா ராம்தாஸ் மற்றும் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின், சிஷ்யையாக சிறுவயது முதல் இருந்துள்ளதாகவும், தான் உலக ராமநாம இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவதாகவும், பகவானின் ஆசியை வேண்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பாரதி ரங்கராஜன் மற்றும் விவேக் திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 29, 1989 சனிக்கிழமை அன்று சென்றனர். பகவான் விவேக்கிடம் நிர்மலா அனுப்பிய கடிதத்தை திரும்ப தந்து, சாதுவையே தனது சார்பாக பதிலை அனுப்பும்படி சொன்னார். யோகி தனது தந்தை அவரை ஆசீர்வதிப்பதாகவும், உலக ராமநாம இயக்கம் குறித்து மேலும் விவரங்களை அறிய நீலகரியில் உள்ள தங்காடு மோகன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் என்னை பதில் எழுதச் சொன்னார். பகவான் எலுமிச்சம்பழம் மற்றும் மாம்பழங்களை பிரசாதமாக பாரதி மற்றும் விவேக்கிடம் தந்தார், மேலும் அவர்களிடம் ரூ.10 தந்து அவர்களை மதிய உணவை எடுத்துக்கொள்ளுமாறு கூறுனார். குருவின் ஆணைப்படி இந்த சாது நிர்மலாவிற்கு எழுதி அதன் நகலை தங்காடு மோகனுக்கும், எங்கள் பதிப்பகத்தின் சில பிரதிகளை நிர்மலா அவர்களுக்கும் அனுப்பினேன்.  

‘தத்துவ தர்சனா’ ஐந்தாவது ஆண்டிதழ் 1989, மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அக்ஷய திருதியை நாளில் மே 8, 1989–ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.  இந்த சாதுவுடன், நிவேதிதாவும்  திருவண்ணாமலைக்கு செல்ல இணைந்தாள். நாங்கள் காலையில் கிளம்பி அங்கே மதியம் சென்றடைந்தோம். நைஜீரியாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் அங்கே இருந்தனர். நாங்கள் சென்னையிலிருந்து கொண்டு சென்ற சில சாக்லேட்டுக்கள் மற்றும் உலர் திராட்சைகளை யோகியின் முன் வைத்தோம். அவர் ராமநாமத்தை சிறிது நேரம் உச்சரித்த வண்ணம் இருந்தார். பின்னர் அவர் எழுந்து உள்ளே சென்று அரவிந்தர் ஆசிரமத்தின் சில பேப்பர்களை கொண்டு வந்து எங்களிடம் தந்தார். யாரோ சிலர் அந்த பேப்பர்களை அவரிடம் வினியோகம் செய்ய தந்திருக்கின்றனர். பின்னர் நாங்கள் அவரது பாதங்களில் ‘தத்துவ தர்சனா’ ஐந்தாவது ஆண்டிதழ் 1989,  பிரதிகளை வைத்தோம். உலக ராமநாம இயக்கத்தின் துண்டுபிரசுரங்களின் சில பிரதிகள், சென்னை பாரதீய வித்யாபவனின்  ராஜாஜி கல்லூரியின் ஊடகத்துறை மாணவர்கள் உருவாக்கிய ஒரு சிறிய புத்தகம் போன்றவை வைக்கப்பட்டன. இந்த கல்லூரியில் இந்த சாது இந்திய கலாச்சார பாரம்பரியத்தை குறித்து பாடம் நடத்தியிருக்கிறான். அந்த புத்தகத்தில் இந்த சாது “பாரதியம்” என்பது என்ன என்று விளக்கி எழுதியிருந்தான். பகவான் ‘தத்துவ தரிசனம்’ மலரில், தலையங்கம், லக்னோவை சேர்ந்த ராமதீர்த்த பிரதிஷ்டானின் தலைவர் திரு. அயோத்யா நாத் என்பவர் சுவாமி ராம்தீர்த்தர் பற்றி எழுதியிருந்த கட்டுரை, மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் செய்திகள் ஆகியவற்றை படிக்கச் சொன்னார். பகவான் முழங்கினார்: “இதுவே ராமனும் , கிருஷ்ணனும் அவதாரம் எடுக்க வேண்டிய காலம். ராக்ஷஸர்கள்  அறிவியலில் முன்னேற்றம் கண்டு இந்தியாவின் முனிவர்களை விழுங்க முயல்கிறார்கள். இறைவன் உறுதியளித்திருக்கிறார், 

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் | 

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் 

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||’

–‘ஹே பாரத, எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து, அதர்மம் தலை விரித்தாடுகிறதோ அப்பொழுதெல்லாம் அதர்மத்தை பிடுங்கி எறிய நான் எனக்கு உருவம் அளித்து  கொள்கிறேன். சாதுக்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்.’ ஒருவேளை நமது பிரார்த்னைகள் உண்மையானதாக இல்லையோ என்னவோ! அதனால்தான் அவதாரங்கள் இன்னமும் வரவில்லை போலும். ஆனால் அவர் எப்பொழுது நிலைமை மோசமடைகிறதோ அப்போது வருவார்.” 

பகவானின் உதவியாளரான ஜெயராமன் வந்தார். பகவான் அவரிடம் எலுமிச்சை சாற்றினை தேனோடு கலந்து எங்கள் அனைவருக்கும் தருமாறு கூறினார். யோகி, டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் குறித்து விசாரித்தார். இந்த சாது யோகியிடம் அவர் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்க பணிகளில் மூழ்கி இருப்பதாகவும், அதன் வேலைகளில் நடந்த முன்னேற்றங்களையும், தெரிவித்தேன். யோகி எங்களிடம் நீலகிரியில் நடக்கும் பணிகள், எனது வானொலி பேச்சு, மற்றும் பம்பாய் நிகழ்வுகள் குறித்தும் விசாரித்தார். நீலகிரி நிர்மலாவிற்கு அவர் சார்பில் பதில் கடிதம். அனுப்பப்பட்டுவிட்டதா என கேட்டார். விவேக்கின் தேர்வுக்கான தயார்நிலை குறித்தும் விசாரித்த யோகி அவனது தேர்வுகளில் சிறப்பாக அவன் செயல்படுவான் என ஆசீர்வதித்தார். இந்த சாது அனுப்பியிருந்த ஒரு சிறிய புத்தமான பாரத் சேவாஸ்ரம சங்கத்தை சேர்ந்த சுவாமி ப்ரணவானந்தா அவர்களின் நூலை படித்ததாக கூறி அவரைப்பற்றியும் விசாரித்தார் . பின்னர் அவர் எங்கள் அனைவரையும், “ யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் , யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா” என பாடச்சொன்னார். அவர் அங்கிருந்த அனைவருக்கும் ‘தத்துவ தர்சனா’ இதழ்களையும், உலக ராமநாம இயக்கத்தின் துண்டுபிரசுரங்களையும் விநியோகித்தார். இந்த சாது, நாடு முழுக்க யார் லிகித ஜபத்தையும், வாய்மொழி ஜபத்தையும் செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் விநியோகிக்க, ராமநாமத்தை எழுத நோட்டு புத்தகங்களையும், யோகியின் படத்தையும் அச்சிடப்போவதாக கூறினான்.  யோகி அந்த திட்டத்தை ஆசீர்வதித்தார். எங்களைத் தவிர அங்கிருக்கும் அனைவரையும் யோகி அனுப்பி வைத்தார் . பின்னர் அவர் சில ‘தத்துவ தர்சனா’ பிரதிகளை எடுத்து அவைகளின் முதல் பக்கத்தில் தனது கையொப்பத்தை இட்டார். அவர் எப்போதெல்லாம் ‘தத்துவ தரிசனம்’ இதழின் அச்சிடப்பட்ட முதல் பிரதி அவர் முன் வைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இவ்விதம் கையொப்பம் இட்டு அவரது கரங்களில் அந்த நூலை வெளியிடுவார். யோகி, பாரதீய வித்யா பவன் மாணவர்களின் சிறு புத்தகத்திலும் தனது கையொப்பங்களை இட்டார். நாங்கள் அவரிடமிருந்து விடைபெறும் முன் அவர் எங்களுக்கு கற்கண்டு, திராட்சை, மாம்பழம் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினார். எங்கள் இதயங்களில் நாங்கள், குரு மஹிமா , குரு மஹிமா, அபார மஹிமா குரு மஹிமா என உச்சரித்தோம். 

அத்தியாயம் 2.11 

இறங்கி வந்த தெய்வீக கருணை

குருவின் தெய்வீக கருணை சீடனை நோக்கி இறங்கி வருகையில் அது மிக கனமான மழையாக பொழியும். எப்படி புனித கங்கை இமாலயத்திலிருந்து இறங்கி மலைகளின் வழியே வந்து சமதள பரப்புகளில் வாழ்க்கையை வளர்த்து, ஊட்டம் அளிக்கிறதோ, கங்கையில் மூழ்கி எழுகின்ற பக்தி கொண்ட ஆன்மாவானது  ஆனந்தமயமான கடலில் திளைக்கின்றதோ அதுபோலவே குருவின் கருணையானது சிஷ்யனை ஆனந்த நிலையின்   உச்சத்திற்கும் பெரும் வெற்றிக்கும் அழைத்துச் செல்லும். யோகி ராம்சுரத்குமாரின் இளைஞர் சங்கத்தை துவக்கியதும், உலக ராமநாம இயக்கத்தை துவக்கியதும் இந்த சாதுவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை நிகழ்வு என்பது மட்டுமல்லாது, இந்த சாது மூலம் துவக்கப்பட்ட சகோதரி நிவேதிதா அகாடமியின் வரலாற்றிலும் ஒரு முக்கியமான நிகழ்வு. இந்த சாதுவின் செயல்பாடுகளில் மிகவும் மகிழ்வோடு ஈர்க்கப்பட்டு உலகத்தின் பல மூலை முடுக்குகளிலிருந்தும் பலர் இந்த இந்த இயக்கத்தில் வந்து இணைந்தனர். இந்த தாழ்மையான, எளிமையான சாதுவின் இல்லம் ஒரு வாடகை வீடு,. இந்த 118, பெரியதெரு, திருவல்லிக்கேணி, சென்னை–5 என்ற விலாசம் உடைய வீட்டின் மேல்மாடியின் பின்புறமாக அமைந்த இரண்டு அறைகள் கொண்டது. குருநாதரின் கட்டளையை ஏற்று அவரது வழிகாட்டுதலின்படி இந்த சாது மேற்கொண்ட புனிதப் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள ஏராளமான பார்வையாளர்கள், காலையிலும், இரவிலும் மிகத் தொலைவில் இருந்து இந்த சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்தனர். பலதரப்பட்ட வாழ்க்கைகளை கொண்ட மக்களான, மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.௭ஸ், மற்றும் ஐ.ஆர்.எஸ் அலுவலர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணியாற்றுபவர்கள் இந்த இடத்திற்கு வந்தனர். அரிசோனாவைச் சேர்ந்த ஹோஹம் சமூகத்தின் உறுப்பினர்களான திரு. லீ லோசோவிக் மற்றும் மிஸ். கேத்தரின் போன்றோர்களுக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாகும். அவர்கள் மிகவும் குறுகலான தெருக்களின் வழியே நடந்து வந்து , வழியில் சாணியும் , சேற்றையும் மிதித்து இந்த சாதுவின் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் இந்த சங்கடங்கள் குறித்து கவலை கொள்ளவில்லை. இந்த சாதுவின் இல்லத்தில் தினமும் மாலையில் ராமநாமம் ஒலிக்கும், அனைத்து மாதமும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அகண்ட ராம நாம ஜெபம் நடைபெறும். அந்த வீட்டில் விருந்தினர்களாக வரும் பக்தர்கள் எவரானாலும் அவர்கள் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கோரைப்பாய் மீதே அமர்வார்கள். சாமானியர்களுக்கும், உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் இதே விதமான வரவேற்பே நடந்தது, வருபவர்களை அமர வைக்க அங்கு சோஃபா  மற்றும் நாற்காலி ஏதுமில்லை. வருபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து இந்த சாது தனது குருவிடம் புகார் அளிக்கையில், யோகி ராம்சுரத்குமார், “என் தந்தை சரியான நேரத்தில் தேவைகளை பூர்த்தி செய்வார்” என்றார். அந்த நேரத்தில் பகவானுக்கே சன்னதிதெரு வீட்டைத்தவிர வேறு எந்த ஆசிரமும் திருவண்ணாமலையில் இல்லை. அங்கே அவர் பக்தர்களை வரவேற்று வராண்டாவில் அல்லது அருகில் இருக்கும் பாத்திரக்கடை வாசலில் சந்திப்பார். குருவிற்காக தனது அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு எந்த வருமானமும் இன்றி குருவிற்கு சேவை செய்ய முன் வந்த தனது சிஷ்யனிடம், தனது தந்தையின் அருள் கிட்டும் வரை காத்திருக்க அவர் கூறியதில் தவறில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், 

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா : பர்யுபாஸதே | 

தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் ||”

“வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் அன்றாட நலன்களைக் காக்க நானே பொறுப்பாவேன்.” பகவான் யோகி ராம்சுரத்குமார் இந்த வாக்குறுதியை தனது பக்தனின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அக்கறையை மேற்கொண்டு நிரூபித்து வருகிறார். 

சுவாமிஜி ராக்கால் சந்திரா பரமஹம்சா மற்றும் கல்பாக்கம் சித்தர் சுவாமிகள் போன்றோர் இந்த சாதுவின் திருவல்லிக்கேணி வீட்டிற்கு அவ்வப்போது வருவார்கள். பகவானின் பக்தர்கள் மட்டுமன்றி பிற ஆசிரமத்தை, ஆன்மீக குழுக்களை, சேர்ந்தவர்களும் இந்த சாதுவை பார்க்க வந்தார்கள். சத்ய சாய் அமைப்பு , மெஹர் பாபா ஆசிரமம் போன்றவை இந்த சாதுவை விரிவுரையாற்ற அழைத்தனர். இது போன்ற பல வழிகளில் ராம்நாம் இயக்கத்தில் பலர் பங்கு கொண்டனர். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் இந்த சாதுவின் இல்லத்தில் நடைப்பெற்ற ஒவ்வொரு நிகழ்வும் முறையே யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவரது ஆசி கோரப்பட்டது. 

ராம்நாம் இயக்கம் வளர்ந்து வெகுவேகமாக முன்னேற துவங்கியவுடன் அதற்கு தேவையான லிகித நாம ஜப நோட்டுப்புத்தகங்கள், ராமர் படங்கள், பகவான் யோகி ராம்சுரத்குமார் படங்கள் அச்சிடும் தேவை ஏற்பட்டது, ஆனந்தாஸ்ரமத்தில் இருந்து பெறப்பட்ட துளசி மாலைகள் போன்றவைகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. ராமநாமத்தின் முக்கியத்துவம் மற்றும் உலக ராம்நாம் இயக்கம் குறித்த துண்டுப்பிரசுரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. மே 20 , 1989 ல் சேலம் சாரதா கல்லூரியை சேர்ந்த பேராசிரியை தேவகி இந்த சாதுவை சந்தித்து சில துண்டு பிரசுரங்கள், மாலைகள் மற்றும் யோகியின் புகைப்பட நெகட்டிவ் போன்றவற்றை  அவருடைய இடத்தில் பிரச்சாரத்தை நடத்துவதற்காக பெற்றுக்கொண்டார். இந்த சாதுவிடம் இருந்து புத்த பூர்ணிமா நாளில்  தீக்ஷை பெற்ற திரு. ஹேமாத்ரி ராவ் என்ற பக்தர். அவரது தீக்ஷை நாளின் ஆண்டுவிழா அன்று, தனது காணிக்கைகளை தந்தார். அடுத்த நாளே இந்த சாது கடிதம் ஒன்றை ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த சுவாமி சச்சிதானந்தர் மற்றும் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு எழுதினான். அதில் ராம்நாம் இயக்கத்தின் தற்போதைய முன்னேற்றங்களை குறிப்பிட்டிருந்தான்: 

“பூஜ்யபாத யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் , 

90 , சன்னதி தெரு, 

திருவண்ணாமலை – 606 601 

பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான அடிபணிதலும்! 

தங்கள் கருணையாலும், ஆசியாலும் ராம்நாம் ஜபமானது இன்றோடு 23,22,177 (23 லட்சம்) நிறைவடைந்து இருக்கிறது. இன்னமும் நீலகிரி போன்ற இடங்களில் இருந்து தகவல்கள் வரவேண்டியுள்ளது. அங்கேயெல்லாம் ராம்நாம் முழுவீச்சில் சொல்லப்படுகிறது. 

சத்யசாய் அமைப்பில் எனது உரை வெற்றிகரமாக நடந்தது. நான் தங்களின் புனிதத்தன்மை குறித்தும் ராம்நாம் யக்ஞம் பக்தியுள்ள இளைஞர் மற்றும் இளைஞிகளால் துவக்கப்பட்டதையும் பகிர்ந்தேன் பலர் எங்களோடு இணைவதற்கு முன் வந்துள்ளனர். திருமதி. ரங்கநாயகி ஸ்ரீனிவாசன், திரு. ஸ்ரீனிவாசன் , திரு. நாகபூஷண் ரெட்டி ( பிராந்திய மேலாளர், இந்திய உணவுக்கழகம் ) அவரது மகள் குமாரி அனிதா, மற்றும் அவர்களின் உறவினர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், சிரஞ்சீவி. விவேக் என்னுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தான். 

சேலம் சாரதா கல்லூரியின் குமாரி தேவகி நேற்று இங்கே வந்திருந்தார். அவர் ராமநாம யக்ஞத்திற்கு பெரும் பிரச்சாரம் செய்வதோடு அவருடைய தாக்கத்தால் பலர் ராம்நாமத்தை ஜெபமாகும் எழுத்து வடிவிலும் செய்துவருகின்றனர். 

நீலகிரியில் இருந்து எனக்கு கிடைத்த தந்தியின் படி நீலகிரியின் பல்வேறு இடங்களில் ராம்நாம் யக்ஞம் பிரச்சாரத்திற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நாளை காலை நான் நீலகிரிக்கு கோவை எக்ஸ்பிரஸ் மூலம்  செல்கிறேன். என்னுடன் குமாரி நிவேதிதாவும் வருகிறார். ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் நீலகிரியில் இருந்துவிட்டு, நாங்கள் ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்று பூஜ்ய சுவாமி சச்சிதானந்தரிடம் இதுவரை நடந்த முன்னேற்றங்கள் குறித்து விளக்குவோம். ஜூன் முதல் வாரத்தில் நாங்கள் சென்னை திரும்புவோம். சென்னை திரும்பிய உடன் திருவண்ணாமலைக்கு பயணித்து உங்களிடம் அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க நினைத்துள்ளோம். 

திரு.நாகபூஷண் ரெட்டி மற்றும் குடும்பம் திருவண்ணாமலைக்கு உங்கள் தரிசனத்தை பெற 26-05-1989 வருகின்றனர். அவர்கள் நீலகிரியில் எங்களை 29-05-1989 ல் திங்கள்கிழமை அன்று சந்திப்பார்கள். 

சிரஞ்சீவி. விவேக், குமாரி. நிவேதிதா, திருமதி.பாரதி, எனது அன்னை ஜானகி அம்மாள், டாக்டர்.C.V.ராதாகிருஷ்ணன், திரு.A.R.ராவ் என அனைவரும். தங்களது நமஸ்காரங்களை உங்களுக்கு தெரிவித்தனர். திரு. லீ லோசோவிக் நவம்பர் 25 அன்று இங்கு வருவதாக கடிதம் எழுதியுள்ளார். அவர் திருவண்ணாமலைக்கு டிசம்பர் 7-ல் வருவார். நாங்கள் அவரது நிகழ்ச்சிகளை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் நடத்த விரும்புகிறோம்.

நமஸ்காரங்களுடன்,

உங்கள் சேவையில்,

V.ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

மே 22 , 1989 அன்று இந்த சாது நிவேதிதா உடன் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி சென்று அங்கே மாலையில் சேர்ந்தான். மணியட்டி என்ற கிராமத்தில் ஒரு பெரிய வரவேற்பு ராம்நாம் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமத்து மக்கள் ஆர்வத்தோடு ராம நாமத்தை கூறியதோடு சாதுவை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் நிகழ்ச்சி ஓரணள்ளி  கிராமத்தில் நடைப்பெற்றது. மே 24 அன்று பிரசாரமானது தங்காடு கிராமத்தின் கோயிலில் நடைப்பெற்றது. நிவேதிதாவும் அந்த கூட்டத்தினரிடையே இறையின் பெயர் பற்றி உரையாற்றினார். 26 ஆம் தேதி மணியட்டி கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது, அடுத்த நாள் நாங்கள் கண்ணேரியை அடைந்தோம். மே 28 அன்று நிகழ்ச்சி மண்தனை கிராமத்தில் நடந்தது. நிவேதிதா அங்கும் உரையாற்றினாள். கோத்தகிரியில் உள்ள ஓம்கார் ஆசிரமத்தைச் சார்ந்த திரு குருஸ்வாமி என்பவரிடமிருந்து செய்தி வந்தது. ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடா விலுள்ள  சங்காவரம் என்ற இடத்திலுள்ள ஆசிரமத்தின் தலைமை பீடத்தின் மாதாஜி ஞானேஸ்வரி கோத்தகிரி வந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். சாது அந்த அன்னைக்கு கடிதம் எழுதினார். கோத்துமுடியில் மாலையில் சத்ய சாய் அமைப்பின் மூலம் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே சாது சத்யசாய் பாபா குறித்தும், யோகி ராம்சுரத்குமார் குறித்தும் ஆற்றிய உரையில் அங்கேயிருந்த பக்தர்கள் ஈர்க்கப்பட்டு ராம்நாம் இயக்கத்தில் அவர்களே முன்வந்து இணைந்தனர். 

மே 29 , திங்கள்கிழமை திரு. நாகபூஷண் ரெட்டி எங்களை ஊட்டியில் உள்ள இந்திய உணவுக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் வரவேற்றார். அவர் தனது சேலம் மற்றும் திருவண்ணாமலை பயணம் குறித்து விவரித்தார். சேலத்தில் அவர் மாயம்மாவை தரிசித்த போதும் , அவரால் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமாரை தரிசிக்க இயலவில்லை என்று கூற, இந்த சாது அவரிடம் கோவை புரவிப்பாளையம் கோடி சுவாமிகள் அவர்களை தரிசித்த பின் இன்னொரு முறை திருவண்ணாமலை பயணம் மேற்கொள்ளும் படி கூறினான். பிறகு இந்த  சாதுவும் கூட்டாளிகளும் நுந்தலா விற்கு சென்றனர். அங்கே வீடு வீடாக சென்று ராமநாமத்தை பரப்பினோம். மதியம் கிராமத்தினர் கூடிய ஒரு கூட்டத்தில் திரு. H.M. ராஜூ எம்.எல்.ஏ., இந்த சாது, மற்றும் குமாரி நிவேதிதா உரையாற்றினோம். ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தங்காடு மோகன் எங்களை அறிமுகம் செய்தார். அன்று மாலை காட்டேரி கிராமத்தில் அந்த கிராமத்தின் மணியக்காரர் அரை லட்சம் லிகித ராம நாமத்தை வழங்கினார். அடுத்தநாள் நாங்கள் ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ப்லிம் தொழிற்சாலைக்கு சென்றோம். ஒரு தொழிலதிபரான சரன்தாஸ் என்ற பக்தரும் அவர் மனைவியும்  எங்களை ஓட்டல்  தமிழ்நாட்டில் மதிய உணவு தந்து மகிழ்வித்தனர். 

மே 31 , 1989 அன்று கோத்தகிரியில் உள்ள சுவாமி ஓம்கார் ஆசிரமத்தின் கிளையில் அன்னை ஞானேஸ்வரி என்னையும், ராம்நாம் இயக்கத்தின் மற்றவர்களையும் வரவேற்றார். துறவு, சேவை, மற்றும் எளிமையின் உருவமான மாதாஜி, அவரே பணிவோடு எங்களுக்கு மதிய உணவை பரிமாறினார். இரவு கள்ளக்கோரையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதுவே நீலகிரியில் நடந்த சிறப்பான கூட்டம். அது நள்ளிரவு வரை நடந்தது. இந்த சாதுவின் உரையானது பதிவு செய்யப்பட்டது, உரையில் உபநிஷத்துக்களின் கதைகள் சேர்த்து பேசப்பட்டது. அடுத்த நாள் தங்காடு மற்றும் ஊட்டியை சேர்ந்த பக்தர்களால் அன்போடு நாங்கள் வழியனுப்பி வைக்கப்பட்டோம். அங்கிருந்து கோவைக்கு பேருந்திலும், பின்னர் அங்கிருந்து சென்னைக்கு ரயிலிலும் பயணித்தோம். நாங்கள் வீடு வந்து சேர்ந்ததும் , நிவேதிதாவிற்கு ஒரு சந்தோஷமான சேதி காத்திருந்தது. யோகியின் கருணையால் நிவேதிதா அவளது ப்ளஸ் டூவில் 1200 க்கு 930 மதிப்பெண் பெற்றிருந்தாள். அவள் உடனே பகவானுக்கு அந்த சேதியை தெரிவித்தாள். 

பக்தர்கள் பலர் மாலை சத்சங்கத்திற்கு வரத்தொடங்கினார்கள். எங்கள் இல்லத்திற்கு வந்த விருந்தினர்களில் மதுரை டிவைன் லைஃப் சொஸைட்டியைச் சேர்ந்த சுவாமி விமலானந்தா மற்றும் ரீயூனியன் ஐலண்டை  சார்ந்த பிரம்மச்சாரி அத்வயா ( இப்போது அத்வயானந்தா ) போன்றவர்களும் அடங்குவார்கள். ஓர் அதிசியத்தக்க சம்பவம் ராம்நாம் ஜப யக்ஞத்தில் நடந்தது. ஜூன் 23, 1989 ல் நாங்கள் எங்களின் ராமநாம எண்ணிக்கையை பூஜ்ய ஸ்ரீ சச்சிதானந்தருக்கு அனுப்புகையில் தவறுதலாக 23 லட்சம் நாமஜபம் இரண்டுமுறை கணக்கில் எடுத்துக்கொண்டது கண்டறியப்பட்டது. அதனை நாங்கள் எண்ணிக்கை தகவலை அவருக்கு அனுப்பிய பிறகே கண்டறிந்தோம். நாங்கள் பகவான் யோகி ராம்சுரத்குமாரிடம் எங்கள் தவறுக்கு மன்னிக்குமாறும் இந்த தவறை அடுத்த அறிக்கையில் சரிசெய்து விடுவதாகவும் பிரார்த்தனை செய்தோம். எங்கள் பிரார்த்தனைக்கு உடனே யோகி ராம்சுரத்குமார் செவி சாய்த்தார். பேராசிரியர். தேவகி எங்கள் இல்லத்திற்கு ஜூன் 24 ஆம் தேதி வந்தார். அவர் தன்னோடு சேலம் பக்தர்களின் 23 லட்சம் லிகித நாம ஜபம் மற்றும் வாய்மொழி ஜப எண்ணிக்கையை கொண்டு வந்திருந்தார். இது யோகியின் தெய்வீக லீலைகளில் ஒன்று. 

பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின்  பேராசிரியர் ஆன டாக்டர். சுஜாதா விஜயராகவன் பேராசிரியர். தேவகியின் நெருங்கிய நண்பர் மற்றும் பகவானின் தீவிர பக்தர். அவர் ஜூன் 29 அன்று எங்கள் இல்லத்திற்கு வருகை தந்தார். இந்த சாதுவின் ‘வாழ்க்கை மூலியங்களின் மதிப்பு சார்ந்த கல்வி’ என்ற தலைப்பில் உரை அகில இந்திய வானொலியால் பதிவு செய்யப்பட்டது. இந்த சாது ஒரு நண்பரின் சதாபிக்ஷேகத்திற்காக கொச்சியில் ஒரு பக்தரால் அழைக்கப்பட்டார். ஆனந்தாஸ்ரம பயணமும் முடிவு செய்யப்பட்டது. இந்த சாது பகவானுக்கு ஜூலை 6 1989 ல் ஒரு கடிதம் எழுதினான். 

“பூஜ்யபாத யோகி ராம்சுரத்குமார் மஹராஜ்,

திருவண்ணாமலை. 

பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

தங்களின் அளவற்ற கருணை மற்றும் ஆசியால், குமாரி நிவேதிதா பி.எஸ்.சி. (கணிதம்) உடன் கணிணி அறிவியல் (துணைப்பாடம்) படிப்பில் சென்னை வள்ளியம்மை கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். (பின்னர் அவள் ராணிமேரி கல்லூரிக்கு மாறினாள்). திருமதி ரங்கநாயகி சீனிவாசன் மற்றும் திரு. V.R.சீனிவாசன் இருவரும் அவளை சேர்ப்பதற்காக  அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டனர். இங்கு சென்றவாரம் வந்திருந்த டாக்டர்.சுஜாதா விஜயராகவன் நிவேதிதாவிற்கு தனது அன்பையும், வாழ்த்தையும் வெளிப்படுத்தியதோடு அவளுக்கு தேவையான புத்தகங்களையும் அனுப்பியுள்ளார். அவளது கல்வி வாழ்க்கை வெற்றிபெற உங்கள் ஆசிகளை வேண்டி நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

பேராசிரியர். தேவகி, 15 நாட்களுக்கு முன்பு, இங்கே 23 லட்சம் ராமநாமத்தை எங்களுக்கு அது அவசியமாக தேவைப்பட்ட நேரத்தில் கொண்டு வந்து தந்தார். அதற்கு முந்தைய நாளே நாங்கள் தவறான கணக்கீட்டினால் 23 லட்சம் ராமநாம கணக்கை அதிகமாக சுவாமி சச்சிதானந்தர் இடம் அளித்திருந்தோம். அதனை பின்னரே அறிந்து உங்களிடம் பிரார்த்தனையும் வைத்திருந்தோம். அந்த தவறான கணக்கினால் ஏற்பட்ட குறைப்பாட்டை நேர் செய்ய பேராசிரியர். தேவகி அளித்த 23 லட்சம் லிகித நாம ஜப நோட்டுக்கள் உதவின. உங்களுடைய பெரும் கருணையால் எங்களது தவற்றிலிருந்து நாங்கள் காப்பாற்றப்பட்டோம்.  நமது பக்தர்களால் செய்யப்பட்ட லிகித ஜபமும், நாம ஜபமும் ஒரு கோடியை கடந்துவிட்டன. தற்சமயம் ராமநாம பிரச்சாரம் காட்டுத்தீயை போல் பரவி வருகிறது. நீலகிரியில் திரு.B. மோகன் நடத்தும் இந்த பிரச்சாரம் 20 லட்சம் லிகித ஜபத்தை கடந்துள்ளது. திரு.மோகன் மற்றும் மூன்று பக்தர்கள் நீலகிரியில் இருந்து வருகின்றனர். அவர்கள் என்னுடன் தங்கள் தரிசனத்திற்கும் உங்களிடம் நமது முன்னேற்றங்களை குறிப்பிடவும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 9 ஆம் தேதி ஜூலை 1989 அன்று திருவண்ணாமலை வருகிறார்கள்.

திரு. V.R.சீனிவாசன் மற்றும் நான் கொச்சினுக்கு ஜூலை 10 ஆம் தேதி செல்ல இருக்கிறோம். திரு. V.S.நாராயணசுவாமி ஐயர் அவர்களின் சதாபிஷேகம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் காசர்கோடில் நடக்க இருக்கிறது. காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு 14 அல்லது 15 ஆம் தேதி சென்று சிலநாட்கள் அங்கே தங்கி வருவோம். பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் என்னை அங்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நமது பணியில் பெரு மகிழ்வு கொண்டிருக்கிறார்.

மற்றவை நேரில்.

உங்கள் அன்பான சீடன் ,

சாது ரங்கராஜன்.” 

ஜூலை – 8 ஆம் தேதி ராம்நாம் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நீலகிரியின் பக்தர்கள் உடன் ஒரு கூட்டம் நடைப்பெற்றது. ராமநாம பணியை துரிதமாக்க ஒரு விவரமான திட்டம் உருவாக்கப்பட்டது. பகவானின் பக்தரான திரு. செல்லையா தேவர் யோகியின் புகைப்படத்தை அச்சிட்டு பக்தர்களிடம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தார்.

ஜூலை – 10 , 1989 ல் விவேக், நிவேதிதா, மற்றும் நீலகிரியில் இருந்து வந்த பக்தர்களுடன் அதிகாலையில் இந்த சாது திருவண்ணாமலைக்கு பயணித்தோம். நாங்கள் யோகியின் இல்லத்திற்கு மதியம் சென்று சேர்ந்தோம். நாங்கள் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பகவானுடன் இருந்தோம். நாங்கள் அங்கே சென்றபோது அங்கே ஏழு அல்லது எட்டு பக்தர்கள் யோகியுடன் அமர்ந்நிருந்தனர். நாங்கள் கொண்டு சென்றிருந்த வாழைப்பழங்களை யோகியின் முன் வைத்தோம். நாங்கள் அனைவரும் சிறிது நேரம் ராமநாமத்தை உச்சரித்தோம். பிறகு யோகி சில வாழைப்பழங்களை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிவிட்டு அவர்களை விடைபெறுமாறு கூறி அனுப்பினார். பின்னர் இந்த சாது நீலகிரியில் இருந்து வந்த பக்தர்களை யோகியிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் வேலைகளை அறிந்து கொண்டு யோகி பெருமகிழ்வு கொண்டார். பின்னர் அவர் எங்களை இரு புதிய மந்திரங்களை உச்சரிக்க சொன்னார். “ ஜெயது ஜெயது , ஜெயது ஜெயது ராமசுரதகுமார யோகி, ராமசுரதகுமார யோகி “ மற்றும் “ ராம ராம, ராம ராம, ராம ராம, ராம், ராம ராம, ராம ராம, ராம ராம ராம்”. யோகி ராம்சுரத்குமார் நிவேதிதாவிடம் இதனை தொடர்ந்து பயிற்சி செய்ய கூறினார். இந்த சாது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவரித்தேன். அவர் மகிழ்வோடு அறிக்கையை பெற்றார். இந்த சாது பூஜ்ய சுவாமி சச்சிதானந்தரின் கடிதத்தை படித்தான், யோகி மகிழ்ந்ததோடு அதில் நிவேதிதா “தெய்வீக ஆனந்தத்திற்கு” சுவாமிஜியின் ஆசிகளைப் பெற்றது குறித்து மகிழ்ந்தார். குமாரக்கோவிலில் உள்ள ஓம்பிரகாஷ் யோகினியின் ராம்ஜி ஆசிரமத்திற்கு ராம நாமம் எழுதிய லிகித நாப ஜப நோட்டுக்களை அனுப்புவதற்கு அனுமதி தந்தார். நீலகிரியில் இருந்து வந்த பக்தர்களிடம், “ரங்கராஜன் ராமநாம பிரச்சாரத்தை பெரிய அளவில் எடுத்து செய்கிறார். டிசம்பர் 1999 க்கு முன் மாதாஜி கிருஷ்ணாபாயின் இலக்கில் குறைந்த பட்சம் ¼ பங்கு முடிக்கப்பட வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் நாம் ராம்ராஜ்யத்தை இங்கே காண்போம்.” நாங்கள் பகவானிடம் அவரது உத்தரவை நிறைவேற்ற பாடுபடுவோம் என உறுதியளித்தோம். யோகி தனது கரங்களை உயர்த்தி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் ராமநாமத்தை உச்சரித்தோம். பகவான், நந்தி கிராமத்தில் பதினான்கு வருடங்கள் தங்கியிருந்து ராமநாமத்தை தொடர்ச்சியாக உச்சரித்து ராமனின் தரிசனத்தை பெற்ற பரதன், அசோகவனத்தில் அமர்ந்து தொடர்ச்சியாக ராம நாமத்தை ஜபித்த சீதை, ராமநாமத்தை தொடர்ச்சியாக உச்சரித்த சமர்த்த ராம்தாஸ் மற்றும் பப்பா ராம்தாஸ் போன்றோர் மீது ராமநாமத்தின் தாக்கம் குறித்து பேசினார்.

இந்த சாதுவின் கொச்சின் மற்றும் காஞ்சன்காடு பயணங்கள் யோகியால் ஆசீர்வதிக்கப்பட்டதோடு, அங்கே ஆனந்தாஸ்ரமத்தில் தொடர்ச்சியாக 72 மணிநேரம் தங்குமாறும், வேறு ஏதேனும் நிகழ்ச்சிகள் இடையூறாக இருக்குமெனில் அவைகளை நீக்குமாறும் இந்த சாது அறிவுறுத்தப்பட்டார். அவ்விதமே செய்வதாக இந்த சாது உறுதியளித்தார். அவர் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்தார். விவேக்கை நோக்கி யோகி,  “ விவேக், விஸ்வேஸ்வரய்யா போல், ஒரு அற்புத கட்டிட பொறியாளர் ஆகி கங்கையையும், காவேரியையும் இணைத்து மகாகவி சுப்ரமணிய பாரதியின் கனவை நிறைவேற்றுவான்“ என்றார். அவர் கண்ணி பொறியியல் படிப்பிற்கான இடத்தை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என்றார். யோகி, நிவேதிதாவை ராமானுஜம் போன்ற பெரும் கணிதமேதையாக ஆக ஆசி கூறினார். மேலும் அவர் நிவேதிதாவிடம் ராம நாமத்தை ஆய்வு செய்ய சொன்னார். தனது இல்லத்திற்கு சாதுவின் தாயார் வருவதைக் குறித்து தனக்கு எழுதுமாறும் நிவேதிதாவிடம் கூறினார். மேலும் யோகி இந்த சாதுவிடம் சுவாமி சச்சிதானந்தர் எழுதிய ராம்நாம் குறித்த கடிதத்தை, ‘தி விஷன்’ என்ற இதழில் இருந்து படிக்குமாறு கூறினார். யோகி, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், உலக ராம்நாம் இயக்கம் போன்றவற்றின் கிளைகளை திறக்கவும், லிகித நாம ஜப நோட்டுக்கள், துண்டுப்பிரசுரங்கள், புகைப்படங்கள் போன்றவைகளை அச்சிட்டுக்கொள்ளவும், விநியோகம் செய்யவும்  அனுமதியளித்தார். “மேக் ஹிஸ்டரி” இதழில் வெளியான. ‘நீலகிரியின் படுகர்கள்’ குறித்த இந்த சாதுவின் கட்டுரையை படிக்கச் சொன்னார். அவர் அனைத்து படுகர் இன பக்தர்களையும் ஆசீர்வதித்தார். குறிப்பாக உடல்நலம் சரியில்லாத சுசீலாவை ஆசீர்வதித்தார். அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப, தனது மருந்தான பழங்களையும், தண்ணீரையும் தந்து, அவர் விரைவில் குணமடைவார் என உறுதியளித்தார். அவர் சசீலாவை பதினைந்து நாட்கள் கழித்து தனக்கு கடிதம் எழுதுமாறு கூறினார். 

பகவான் இந்த சாதுவை திரு. அன்பழகன் என்பவரிடம் அறிமுகப்படுத்தினார், இவர் முன்பு யோகியை தரிசிக்க வந்த  கேரளாவின் முன்னாள் கவர்னரான திரு.P. ராமச்சந்திரன் அவர்களின் மருமகன் ஆவார். திரு. அன்பழகன் தான் ஏற்கனவே சாதுவை திருவல்லிக்கேணியில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துவக்கவிழாவில் பார்த்திருப்பதாக கூறினார். சகோதரி நிவேதிதா பதிப்பகத்தின் சில புத்தகங்களோடு, “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்“ என்ற நூலும் யோகியிடம் தரப்பட, யோகி அதனை திரு. ராமச்சந்திரன் அவர்களுக்கு தனது ஆசியுடன் வழங்க தனது ஆசியுடன் வழங்க. அவர்கள் சென்றப்பின் யோகி எங்களோடு சிறிது நேரம் செலவழித்தார். அவர் இந்த சாதுவின் கரங்களை தொடர்ந்து பற்றியிருந்தார். ராமநாம இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய யோகி, பேராசிரியர். தேவகி, டாக்டர். சுஜாதா, டாக்டர். ராதாகிருஷ்ணன், பேராசிரியர். ரங்கநாயகி ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. V.R. ஸ்ரீனிவாசன் போன்றோர் ராமநாம பணியில் ஈடுபடுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த குழு, “உயர் சக்தி கமிட்டி” ஆகும் என்றும் கூறினார். நிவேதிதா, டாக்டர்.சுஜாதா தனக்கு புடவைகளும், புத்தகங்களும் தந்ததை யோகியிடம் குறிப்பிட்டார். யோகி அந்த சகோதரத்துவம் பற்றி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். யோகி குறைந்தபட்சம் மாதாஜி கிருஷ்ணாபாயின்  15,500 கோடி ராம நாமத்தில் ¼ பங்கு இலக்கையாவது முடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த சாது இந்த சேதியை உலகம் எங்கும் கொண்டு சென்று சேர்ப்பார் எனவும், 1999 ல் அமைதி இறங்கி வரும் என்றும் யோகி கூறினார். விவேக்கிடம் திரும்பிய யோகி, “நமக்கு இராணுவ பொறியாளர்கள் தேவையில்லை, மனிதர்களை உருவாக்கும் பொறியாளர்களே தேவை“ என்றார். யோகி விவேக்கிடம். கட்டிட பொறியியலில் கவனம் செலுத்தச் சொன்னார். பின்னர் தேவையெனில் கணிணி அறிவியலை ஏதேனும் நிறுவனத்தில் படிக்கச்சொன்னார். “தந்தை உன்னை அற்புத கட்டிட பொறியாளராகவே விதித்திருக்கிறார்” என்றார் யோகி. 

மூன்று மணியளவில் அவர் எங்கள் அனைவரையும் அனுப்பினார். இந்த சாது அவர் முன்னிலையில் பெரும் அமைதியையும், சந்தோஷத்தையும் உணர்ந்தான். ராமநாம இயக்கம் பெரும் வெற்றி அடைய அவர் ஆசி அளித்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. இந்த சந்திப்பு ராமநாம பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று, அகில உலக ராமநாம இயக்கத்திற்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் அளிக்கக்கூடியதாக இந்த சந்திப்பு அமைந்தது. இந்த சந்திப்பிற்குப்பின் எங்கள் நண்பர் மற்றும் நலம் விரும்பியுமான நரிக்குட்டி சுவாமிகளை சந்தித்து விட்டு நாங்கள் சென்னை திரும்பினோம். 

அத்தியாயம் 2.12 

பகவான் தெய்வீக மருத்துவர்

ஜூலை – 18 , 1989 அன்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் குரு பூஜையை யோகி ராம்சுரத்குமார் க்ருபா என்ற பெயர்கொண்ட, திரு.V.R.ஸ்ரீனிவாசன் மற்றும் திருமதி. ரங்கநாயகி ஸ்ரீனிவாசன் அவர்களின் சென்னை இல்லத்தில், கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதற்குமுன் இந்த சாது எர்ணாகுளம் சென்று V.S.நரசிம்மசுவாமி என்ற பக்தரின் சஷ்டியப்தபூர்த்தியில் கலந்து கொண்டு பின்னர் அங்கிருந்து காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தான். இந்த பயணத்தில் என்னோடு திரு. சீனிவாசன் இணைந்தார். அவரோடு ஜூலை – 10 அன்று கிளம்பி அடுத்தநாள் எர்ணாகுளம் சென்றேன். இந்த சாதுவிற்கு ஒரு தனித்த சிறப்பான வாய்ப்பு, அவன் பிறந்த ஊருக்கு பயணிக்கவும், தனது பிள்ளைப்பருவ நட்புக்களை சந்திக்கவும் இது வாய்ப்பாக அமைந்தது. அந்த இளமைக்கால நண்பர்களும் சாதுவிற்கு சிறப்பான வரவேற்பினை தந்தனர். தங்களது நண்பன் சாதுவாகி யோகி ராம்சுரத்குமார் மூலம் தீக்ஷையளிக்கப்பட்டு இருப்பதை நண்பர்கள் வியந்து பார்த்தனர். இந்த சாது குருவாயூர் கோயிலுக்குச் சென்றான். அஞ்சம் மாதவன் நம்பூதிரி இல்லம், பின்னர் கொடுங்கலூர் பகவதி கோயில், மற்றும் திருவஞ்சிக்குளம் சென்று கொச்சின் திரும்பும் போது ஒரு எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டது. V.R. சீனிவாசனுக்கு கடுமையான நெஞ்சுவலி நாங்கள் பரவூர் என்ற ஊரை நெருங்கும் போது அவருக்கு ஏற்பட்டது. அவரை உடனடியாக ஒரு மருத்துவமனையில் சேர்த்து ஒரு இதய நிபுணர் கண்காணிப்பில் வைத்தோம். அவர் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சலைன் ஏற்றப்பட்டது. இந்த சாது அவரை கவனித்துக்கொள்ளுமாறு யோகி ராம்சுரத்குமாரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு அவரை மருத்தவமனையில் சேர்த்துவிட்டு நான் கொச்சினுக்கு திரு.நாராயணசாமியின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில் காலையில் கலந்து கொள்ள விரைந்தேன். அந்த விழா முடிந்தவுடன் நான் பரவூர் திரும்பினேன். டாக்டர்கள் அவரை சிறிதுகாலம் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியதையும் புறக்கணித்து நான் யோகி ராம்சுரத்குமார் கைகளில் அவரை ஒப்படைத்து விட்டு அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்தேன். பகவானின் கருணை வேலை செய்ய தொடங்கியது. சீனிவாசன் உடல் நலம் தேறி சாதாரண நிலைக்கு வந்தார். இந்த சாது அடுத்தநாளே நண்பர்களின் வீட்டுக்கு பயணப்பட்டான். தனக்கு மிகவும் நெருக்கமான சின்மயா குடும்பத்திற்கும் சென்றான். இந்த சாதுவின் சிக்‌ஷா குருவான சுவாமி சின்மயானந்தரின் சீடரான திருமதி. ஜானகி N. மேனன் என்பவரை மீண்டும் சந்தித்தேன். என் இளமைக்காலத்தில் எனது வீட்டிற்கு சுவாமி சின்மயானந்தாவை அழைத்து வந்திருக்கிறார். அதுவே இந்த சாதுவின் வாழ்வின் திருப்புமுனை. கொச்சின் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு நானும், சீனிவாசனும் காஞ்சன்காடு சென்றோம். எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பும் முன் இந்த சாது யோகி ராம்சுரத்குமாரின் திருவுருவப்படத்தை தனது பள்ளித் தோழனும், தனது இளமைக்காலத்தில் 20 வருடங்கள் இருந்த வீட்டின் உரிமையாளருமான திரு. நாராயணன் என்பவரின் வீட்டில் திறந்து வைத்தான். 

நாங்கள் காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு ஜூலை–14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வந்தடைந்தோம். எங்களை சுவாமி சச்சிதானந்தர் வரவேற்றார். நாங்கள் அவரோடு சிறிது நேரமும், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் அறையில் இருந்த ஒரு பீஹார் சுவாமி மற்றும் இரண்டு பக்தர்கள் உடன் யோகி ராம்சுரத்குமார் தலைமையில் நடத்தப்படும் ராம்நாம் இயக்கம் குறித்து விவாதித்தோம். சுவாமி சச்சிதானந்தர் இந்த இயக்கம் உலகம். எங்கும் பரவ அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என இந்த சாதுவிடம் கூறினார். நாங்கள் இரண்டு நாட்கள் சென்னையிலிருந்து வந்து ஆசிரமத்தில் தங்கியிருந்த பக்தர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு ராமநாமத்தை பரப்ப எடுக்க வேண்டிய திட்டங்களை வகுத்தோம். ஞாயிற்றுக்கிழமை ஜூலை – 16 ஆம் தேதி இந்த சாது பகவான் நித்யானந்தா அவர்களின் குருவனம் என்ற இடத்திற்கு கிறிஸ்டி (சிவப்ரியா) மற்றும் சீனிவாசன் உடன், ஆற்றை ஒரு படகில் கடந்து பகவான் அமர்ந்து தியானம் செய்த இடத்திற்கு சென்றோம். பின்னர் நித்யானந்தா ஆசிரமம் சென்று அங்கே நித்யானந்தா மற்றும் ஞானானந்தா அவர்களின் கோயிலில் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தோம். பின்னர் ஆனந்தாஸ்ரமத்திற்கு திரும்பி பக்தர்களோடு ராம்நாம் இயக்கம் குறித்து உரையாடினோம். திங்கள்கிழமை நாங்கள் கிளம்பும் முன் சுவாமி சச்சிதானந்தரை மாதாஜியின் அறையில் சந்தித்தோம். சுவாமிஜி மாலைகளையும் சிறிய புத்தகங்களையும் ராம்நாம் யக்ஞத்தில் பங்கு பெறுபவர்களுக்கு தருவதற்கு தந்து அனுப்பினார் . நாங்கள் அவரிடம் ராம்நாம் துண்டுபிரசுரங்களை அச்சிடுதல் குறித்து பேசினோம். பின்னர் அவரிடமிருந்து விடைப்பெற்று சென்னை திரும்பினோம். 

நாங்கள் சென்னைக்கு குறித்த நேரத்தில் திரும்பி குருபூஜையை யோகி ராம்சுரத்குமார் க்ருபா இல்லத்தில் ஜூலை–18 அன்று திட்டமிட்டபடி கொண்டாடினோம். அதில் கணிசமான அளவு பக்தர்களும், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரும் கலந்து கொண்டு ராமநாம யக்ஞம் நடத்தினர். 

அரிசோனா, ஹோஹம்  கம்யூனிட்டி தனது ராமநாம எண்ணிக்கையை முதல் முறையாக அனுப்பி கடல்கடந்த நாடுகளின் கணக்கை துவக்கியது. விவேகானந்தன் மற்றும் E.R.நாராயணன் தங்களின் எண்ணமாக ரத்த தான பிரசாரத்தை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மூலம் நடத்த எண்ணம் கொண்டனர். ஏற்கனவே இந்த சங்கத்தினர் மருத்துவமனைகளுக்கு சென்று ராமநாம ஜபத்தை செய்து வந்தனர். நோயாளிகளையும் ராமநாமத்தை சொல்ல ஊக்குவித்தனர். இதற்கிடையில் திருவண்ணாமலை கோயிலின் குருக்கள் மகன் மற்றும் சில பக்தர்கள் பிரபல பாடகரான கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் கச்சேரி கோயிலில் நடக்கிறது என்பதற்காக என்னை அழைக்க வந்தனர் . நான் இதுவரை நடந்த முன்னேற்றங்கள் குறித்தும், குறிப்பாக காஞ்சன்காடு பயணம் குறித்தும் ஒரு கடிதம் ஒன்றை பகவானுக்கு 31 – 07 – 1989 அன்று எழுதினேன்: 

“பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

காஞ்சன்காட்டில் இருந்து திரும்பியபிறகு திரு. V.R. சீனிவாசன் எழுதிய கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். நீங்கள் கூறியபடி நாங்கள் சுவாமி சச்சிதானந்தர் உடன் மூன்று நாட்கள் செலவழித்தோம். அது எங்களுக்கு அன்பான பரிமாறலாக அமைந்தது. திரு. சீனிவாசனுக்கு நாங்கள் கேரளாவில் பயணிக்கும் போது இருதய கோளாறு ஏற்பட்டது ஆனால் உங்கள் கருணையாலும், ஆசியாலும் அவர் முற்றிலும் அதிலிருந்து பன்னிரண்டு மணி நேரத்தில் மீண்டார். அவரை டாக்டர்களின் அறிவுறுத்தலையும் மீறி என்னோடு அழைத்துச் சென்றேன் அவர் எந்த விதமான தொல்லைகளும் இன்றி மீதமுள்ள பயணத்தில் என்னோடு இருந்தது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. 

நேற்று திரு. ராம காசிவிஸ்வேஸ்வரன் மற்றும் திரு. P.T. ரமேஷ் இருவரும் திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்திருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவிழாவின் அழைப்பிதழையும், சுவரொட்டிகளையும் கொடுத்துவிட்டு எனக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எனவே 9 ஆம் தேதி ஆகஸ்ட் அன்று இரவில் நிகழ்ச்சி நடக்க இருப்பதால்  காலை அங்கு வர எண்ணியிருக்கிறேன் அப்போது உங்கள் தரிசனத்தை பெற்றுவிட்டு உங்களிடம் ராம்நாம் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து விவரிக்கிறேன். என்னுடைய வயதான தாயார், டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன், மற்றும் நமது அச்சகத்தார் திரு. A.R.ராவ் தங்களை காண விரும்புவதால் திரு.ராவின் காரில் நாங்கள் உங்கள் தரிசனம் பெற வருவோம். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கமும் அதனுடன் வேறு சில சகோதர சேவை மையங்களுடன் இணைந்து, ஆகஸ்ட்–6 தேதி, நமது தாய்நாட்டின் 42 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஒரு இரத்த தான பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இது குறித்த ஒரு சுற்றறிக்கையின் நகலை உங்களுக்கு அனுப்பி உங்கள் ஆசியை அவர்கள் வேண்டி உள்ளார்கள். 

ராம்நாம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாங்கள் பக்தர்களின் இல்லங்களில் அவ்வப்போது சிறப்பு சத்சங்கங்களை நடத்த துவங்கி உள்ளோம். இது தவிர்த்து எனது இல்லத்தில் தினமும் சத்சங்கமும் நடைபெற்று வருகிறது. கடைசியாக,  குரு பூஜை தினத்தில், திரு. சீனிவாசன் இல்லத்தில் சத்சங்கம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது. அடுத்த சத்சங்கம் மைலாப்பூர் வாழ் பக்தர்களான திருமதி. ப்ரீதா மற்றும் திரு. பொன்ராஜ் என்பவர்களின் வீட்டில் ஆகஸ்ட்– 5 ல் நடைபெற இருக்கிறது. அதன் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் எங்களது காஞ்சன்காடு பயணம் குறித்து அவரது மகிழ்வை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தின் நகல்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர் ஒவ்வொரு மாதமும் செய்கின்ற ஜபத்தின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என விரும்பியிருக்கிறார். தற்சமயம் பெரும்பாலான பக்தர்கள் லிகித நாம ஜபம் செய்வதன் காரணமாக, பிரதி மாத சராசரி 50 லட்சமே வரும். நாங்கள் பக்தர்கள் அதிகமாக நாம ஜபம் சொல்லுமாறு ஊக்குவிக்கிறோம். அதன்மூலம் பிரதிமாதம் ஒரு கோடி இலக்கினை அடுத்தமாதம் முதல் அடைய இயலும். தற்சமயம் இப்பணி காட்டுத்தீயைப் போல் கேரளா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், காஷ்மீர், மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது. K.பாலசந்திரன் என்ற ஓர் பக்தர் தற்சமயம் காஞ்சன்காடு முதல் கன்னியாக்குமரி வரை பாத யாத்திரை மேற்கொண்டு ராமநாம யக்ஞத்தை பரப்பி வருகிறார். அவர் உங்கள் ஆசியை வேண்டுகிறார். நாங்கள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் லிகித நாம ஜபத்தை பெற துவங்கியிருக்கிறோம். 

டிவைன் லைஃப் சொஸைட்டியின் குரலாக ஒலிக்கும் ‘வாய்ஸ் ஆஃப் சிவானந்தா’ பத்திரிகையில் நமது ராமநாம யக்ஞம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. உலகம் முழுவதும் செல்லும் இதன்மூலம் நமது இயக்கத்திற்கு உலகம் எங்கும் பரவி இருக்கும் சிவானந்தா ஆசிரமம் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறேன். திரு. A.V.குப்புசாமி, இந்த இதழின் ஆசிரியர், தங்களுக்கு ஒரு பிரதியை அனுப்புமாறு கூறினார். இந்த கடிதத்துடன் அதனை இணைத்துள்ளேன். நமது இறைபணியில் உதவும் சுவாமி சிவானந்தா பக்தர்களுக்கு தங்கள் ஆசியை வழங்க நான் பிரார்த்திக்கிறேன். 

குமாரி நிவேதிதா தற்சமயம் வீட்டிற்கு மிக அருகில் இருக்கிற ராணி மேரி கல்லூரியில் படிக்கிறாள், எனவே அவளுக்கு ராம்நாம் பிரச்சாரத்திற்கு உதவ நேரம் கிடைக்கிறது. சிரஞ்சீவி விவேகானந்தன் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பணிகளில் தீவிரமாக இருக்கிறான். இளைஞர்கள் இங்கிருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எல்லா வாரமும் சென்று உங்கள் வாழ்த்துக்களை அங்குள்ள நோயாளிகளுக்கு அவர்கள் விரைவில் குணமடைய தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தந்த தகவலின் படி பல நோயாளிகள் ராமநாம பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர். எனவே இந்த இளைஞர்களின் மருத்துவமனை பணிகள் சிறப்பாகவே உள்ளன. 

எனது அன்னை, விவேக், நிவேதிதா, திருமதி பாரதி, மற்ற பக்தர்கள் அனைவரும் தங்கள் நமஸ்காரங்களை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள். 

உங்கள் புனிதமான பாதங்களில் சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன்,

V.ரங்கராஜன்

இணைப்பு : மேற்குறிப்பிட்ட படி”

அடுத்தடுத்த நாட்களில் பிரவாகமாம பக்தர்கள் இந்த சாதுவின் இல்லத்திற்கு ராம்நாம் சத்சங்கத்திற்கு வந்தனர். அந்த பார்வையாளர்களில் முக்கியமானவர்கள் சுவாமி ராக்கால் சந்திரா பரமஹம்சா என்றழைக்கப்படும் பர்மா சுவாமி, குருவால் அனுப்பப்பட்ட ஒரு அமெரிக்க பக்தர் ஹெர்பர்ட், நர்மதா நதிக்கரையில் இருந்து வந்த சுவாமி அர்ஜூன் தேவ் ஆகியோர் ஆவர். ப்ரீதா பொன்ராஜ் இல்லத்தில் ஆகஸ்ட்– 5 ஆம் தேதி நடந்த சிறப்பு சத்சங்கம் சிறப்பான முறையில் பல பக்தர்களின் பங்கெடுப்பால் நன்றாக நடந்தது. ஆகஸ்ட்– 9 அன்று நாங்கள் திருவண்ணாமலை சென்றபோது யோகி என்னையும், விவேகானந்தனையும் அன்போடு வரவேற்றார். நாங்கள் அவரோடு இரண்டு மணிநேரங்கள் செலவழித்து காஞ்சன்காடு பயணம் குறித்து விவரித்தேன். குருவனம் மற்றும் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நான் கிறிஸ்டியுடன் பயணித்தது அவருக்கு மகிழ்வை தந்தது. யோகி சீனிவாசன் உடல்நிலை குறித்தும் விசாரித்தார். மேலும் யோகி என்னிடம் ஆனந்தாஸ்ரமத்தில் ஏதேனும் உரையாற்றினாயா என வினவினார். நான் அவரிடம் நாங்கள் பஜனையில் மட்டுமே ஈடுபட்டோம் என்று பதிலளித்தேன். யோகி அதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். நாங்கள் ப்ரீதா பொன்ராஜ் அவர்களின் இல்லத்தில் நடந்த சிறப்பு குருபூஜை விழா குறித்து அவரிடம் கூறினோம். 

இந்த சாது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மூலம் விவேக் மற்றும் அவனது நண்பர்கள் நடத்திய ரத்த தான பிரச்சாரம் பற்றி குறிப்பிட்டபோது, யோகியிடம் இருந்து எதிர்பாராத ஒரு கருத்து எதிர்நிலை ஏற்பட்டது. விவேக் ரத்த தானம் செய்தான் என்று சாது குறிப்பிட்டவுடன் யோகி விவேக்கை அழைத்து அருகில் அமர வைத்தார். யோகி விவேக்கின் கரங்களைப் பற்றி எந்த இடத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டது என்று வினவி அந்த இடத்தை காட்டுமாறு கூறினார். விவேக் அந்த இடத்தை காட்ட, யோகி தனது உள்ளங்கையை வைத்து அழுத்தி ஆழமான தியானநிலைக்கு சென்றார். பின்னர் யோகி கண்களை திறந்து விவேக்கிடம் தனது பிச்சை பாத்திரத்தை காட்டி, எடுக்கப்பட்ட ரத்தத்தின் அளவு இந்த சிரட்டை நிரம்ப இருக்குமா என வினவினார். விவேக் சிரித்தவாறே இதைவிட மிக குறைவு என்றான். பின்னர் பகவான் பாரத மாதா குறித்த ஒரு பாடலை பாடி, இந்த நிலத்திற்காக உயர்ந்த மனிதர்கள், உயர்ந்த தியாகங்களை செய்துள்ளார்கள். தேவர்களின் ஆசி வேண்டி நடத்தப்பட்டுள்ள விஸ்வஜித் யாகம் மற்றும் இராமபிரானின் யாகங்கள் நடைபெற்றுள்ளன. யோகி விவேக்கிடம் ரத்த தானம் செய்தப்பின் எவ்விதம் உணர்ந்தாய் என கேட்டார். தான் நன்றாக இருந்ததாக கூறினான். யோகி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு விவேக்கிடம், “இனிமேல் ரத்ததானம் செய்யாதே, விவேக்!“ என்றார். விவேக் சற்று அதிர்ச்சியுற,  யோகி மேலும் தொடர்ந்தார், “பல மக்களிடம் நிறைய ரத்தம் எதற்கும் பயனில்லாமல் இருக்கிறது. அவர்கள் இரத்ததானம் செய்யட்டும். இந்தப்பிச்சைக்காரனுக்கு உன்னுடைய இரத்தம், எலும்பு, சதைகள் மற்ற அனைத்தும் உயரிய காரணங்களுக்கு தேவைப்படுகிறது.” என்றார். மேலும் யோகி நிவேதிதா ரத்த தானம் செய்தாளா  என வினவினார். விவேக் இல்லை என பதிலளித்தான். யோகி பேசாமல் பேசிய செய்தி மிகவும் தெளிவானது. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் தனது கவனத்தை வேறெவற்றிலும் செலுத்தக்கூடாது. அதனுடைய முக்கிய நோக்கம் ஆன்மீகம் மற்றும் தேசீயத்தை கட்டமைக்க, உலக ராம்நாம் இயக்கம், விவேகானந்தா ஜெயந்தி போன்றவற்றை கொண்டுதலே. மற்ற மதசார்ப்பற்ற, சமூக சேவைகளை பிற சமூக சேவை நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் போதும் என்பதே யோகி எங்களுக்கு உணர்த்திய சேதி. 

திரு.A.R.ராவ் அவர்களுக்கு சிலமுக்கிய பணிகள் இருப்பதனால் அவரால் எங்களோடு இணைய முடியவில்லை, மற்றும் அவர் வராத காரணமாக எனது அன்னையையும் அழைத்து வரவில்லை என்று பகவானிடம் கூறினேன். திரு.ராவ் தனது அச்சக பணியை சென்னையில் நிறுத்திவிட்டு மும்பை செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் பகவானிடம் இந்த சாது ‘தத்துவ தர்சனா’ துவக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அச்சக பணிகளை செய்து வந்த திரு.ராவ் வேறு இடத்திற்கு செல்வது எனக்கு பெரும் இழப்பு என்று கூறினேன். யோகி, “எனது தந்தை உனது பணிக்கு உதவ இருக்கிறார்“ என்று உறுதியளித்தார். யோகி திடீரென உள்ளே சென்று வெளியே வரும் போது ஒரு கத்தையாக நூறு ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுக்களை கொண்டுவந்து  இந்த சாதுவின் கைகளில் திணித்ததோடு, “இதனை உன்னிடம் வைத்துக்கொள். இதனை எந்த காரணத்திற்கும் பயன்படுத்தலாம்” என்றார். மேலும் யோகி, “தந்தையின் உதவி நமக்கு வருகின்றவரை, நாம் மனிதர்களின் உதவியைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை“ என்றார். இந்த சாது யோகியிடம் வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் பல இடங்களிலிருந்தும், இந்த சாதுவின் இல்லத்திற்கு தினமும் ராம்நாம் சத்சங்கத்திற்கு பலர் வருகிறார்கள் என்றும் கூறினான். ராமநாம இயக்கம் வேகமாக பரவுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக யோகி கூறினார்.

யோகி சாதுவை நோக்கி திருவண்ணாமலை குருக்கள் ஜேசுதாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளாரா என கேட்டார். இந்த சாது யோகியிடம் நாங்கள் இங்கே தங்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? என கேட்டேன். யோகி “ஆம்” என்றார். யோகி பின்னர் எனக்கும், விவேக்கிற்கும் வீட்டிற்குள் இருந்து மோர் எடுத்து வந்து எங்களுக்கு கொடுத்து மகிழ்வித்தார். லீ லோசோவிக் எழுதிய சில பாடல்களையும் கொண்டுவந்து இந்த சாதுவிடம் தந்தார். இந்த சாது லீ லோசோவிக் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகவடிவில் கொண்டுவருவதாக உறுதியளித்தான். யோகி தனது பெரும்பாலான நேரத்தை விவேக்கிடம் செலவழித்து அவனது உடல்நலம் குறித்து விசாரித்தார். பக்தர்களுக்கு விநியோகம் செய்ய சுவாமி சச்சிதானந்தர் தந்த மாலைகளை நாங்கள் யோகியிடம் சமர்ப்பித்தோம். அவைகளை அவர் கரங்களில் எடுத்து ஆசி வழங்கினார். நாங்கள். சுவாமி மதுரானாந்தாவின் பஜனையை ஏற்பாடு செய்திருப்பதாக கூறினோம். யோகி தான் அவரை சந்தித்தது இல்லையென்றும் ஆனால் அவரது பஜனைகள் குறித்து  கேட்டுள்ளதாகவும் கூறினார். 

நாங்கள் அவரிடமிருந்து விடைப்பெற்று சுந்தர குருக்கள் இல்லம் சென்றோம். அவர் எங்களை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் விருந்தினர் இல்லமான அப்பர் இல்லத்திற்கு தங்குவதற்கு அழைத்துச் சென்றார். அங்கே நாங்கள் ஒய்வு எடுத்துக் கொண்டு பின்னர் கோயிலின் முன் இருக்கும் பந்தலுக்கு சென்றோம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் விழாவை முன்னிட்டு அங்கே திரு. K.J. அவர்களின் இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகவான் மேடையில் அமர்ந்திருந்தார். எங்களுக்கு மேடையின் பக்கத்தில் இடம் அளிக்கப்பட்டது. மேடைக்கு வந்த ஜேசுதாஸ் யோகியை வணங்கி தனது இருக்கையில் அமர்ந்தார். அவரைச்சுற்றி மற்ற பக்கவாத்திய நிபுணர்களும் அமர்ந்தனர்.  ஜேசுதாஸ் இசைக்கச்சேரியை துவங்கினார். இந்த நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. விழாவில் எனது குரு யோகி ராம்சுரத்குமார் கௌரவிக்கப்பட்டார். விழா முடிந்தப்பின் இந்த சாது, விவேக் மற்றும் யோகியின் உதவியாளர் ஜெயராமன் உடன் யோகியின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம். பகவான் எங்கள் அனைவருக்கும் பால் வழங்க ஏற்பாடு செய்தார். யோகி மீண்டும் விவேக்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார். நள்ளிரவு ஆகிவிட்டதன் காரணமாக நாங்கள் யோகியிடம் இருந்து விடைப்பெற்றோம். யோகி எங்கே தங்க இருக்கிறீர்கள் என கேட்டார். நாங்கள் அப்பர் ( Appar )  இல்லத்தில் என பதிலளித்தோம். யோகி இந்த அப்பர் என்ற வார்த்தையில் விளையாடினார். ஜேசுதாஸே ஓட்டலில் தங்குகிறார், ஆனால் எங்களது தங்குமிடமோ அப்பர் ( Upper ) இல்லம் என்றார். யோகியிடம் விடைப்பெற்று நாங்கள் அப்பர் இல்லம் வந்தோம். ஆனால் ஏற்கனவே தங்கும் இல்லத்தின் கதவுகள் மூடப்பட்டிருப்பதால், அருகில் இருந்த உண்ணாமலை அம்மன் லாட்ஜை சேர்ந்த திரு. ராஜேந்திரன் எங்களுக்கு தங்க இடம் தந்தார். 

காலையில் எழுந்து குளித்துவிட்டு, சந்தியாவந்தனம் செய்துவிட்டு ராஜேந்திரனிடமிருந்து விடைப்பெற்று யோகியின் இல்லத்திற்கு சென்றோம். யோகி எங்களை வரவேற்று விவேக்கின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் விவேக்கின் கரங்களைப்பற்றி சிறிது நேரம் தியானித்தார். இந்த சாது விவேக்கின் உடல்நிலை குறித்து பகவான் திரும்பத்திரும்ப விசாரிப்பதில் ஏதேனும் ஒரு முக்கியத்துவம் இருக்கும் என நம்பினான். எங்கள் பேச்சு முந்தையநாள் மாலை நிகழ்ந்த இசைக்கச்சேரி குறித்து திரும்பியது. பகவான் குறித்து ஜேசுதாஸ் திருநெல்வேலியில் கேள்விப்பட்டு அங்கிருந்து அவர் திருவண்ணாமலைக்கு தன் தரினத்திற்காக வந்ததாக யோகி கூறினார். மேலும், யோகி ஜேசுதாஸிடம் ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு எப்படி இந்துக் கடவுள்கள் குறித்து பாடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் தனது தந்தையின் காலத்திலிருந்தே அதனை செய்வதாக கூறினார். அவர் பகவானுக்காக சில பாடல்களையும் பாடினார். பொன்.காமராஜ் காணிமடம் மந்திராலயம் கட்ட பொருள் ஈட்ட முயன்றபோது ஜேசுதாஸ் அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு அவரை தொடர்பு கொண்டார். அப்போது ஜேசுதாஸ் பகவானிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார். அருணாச்சலேஸ்வரர் கோயிலின் குருக்கள் ஜேசுதாஸ் அவர்களை இசைக்கச்சேரிக்கு தொடர்பு கொண்டபோதும் , ஜேசுதாஸ் பகவானின் அனுமதியைப் பெற்றிருக்கிறார். யோகி, “நேற்றைய சந்திப்பு எங்களின் மூன்றாவது சந்திப்பு” எனக்கூறினார். 

யோகி இந்த சாதுவிடம் நித்யானந்தா ஆசிரமம் குறித்தும் காஞ்சன்காடு பாலிடெக்னிக் குறித்தும் விசாரித்தார். யோகி சாதுவை ஆலந்திக்கு விஜயம் செய்யும்படி அறிவுரை கூறினார். யோகி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆயிரம் கோடி நாம ஜபத்தை முடிக்க ஆசி வழங்கினார். யோகி, “தவ சுப நாமே காஹே“ என்று பாடி, இந்த சாது ராமநாமத்தை பரப்புவதில் சிறப்பான பணி புரிவதாக கூறினார். இந்த சாது யோகியிடம் சென்றவருடம் போலவே காயத்ரி முதல் விஜயதசமி வரை விரதம் இருக்க அனுமதி கேட்டான். சென்ற வருட விரத அனுபவங்களை நீண்ட நேரம் கேட்டபிறகு யோகி இந்த சாது இந்த வருடமும் விரதம் இருக்க அனுமதித்தார். இந்த சாது அவரிடம் காயத்ரி நாளன்று முன்னரே அறிவித்துவிட்டு தான் வருவதாக யோகியிடம் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை உங்கள் தரிசனத்தை பெற நிவேதிதா வருவார் என இந்த சாது தெரிவித்தான். நாங்கள் அவரிடம் பிரசாதங்களை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினோம் . யோகி பிரசாதங்களை சென்னை பக்தர்களுக்கு விநியோகிக்க கொடுத்தார். 

சனிக்கிழமை, ஆகஸ்ட் 12 , 1989 ல் சுவாமி மதுரானந்தா அவர்களின் பஜனை நிகழ்ச்சி எங்கள் இல்லத்தில் பகவானின் கருணையால் நடைப்பெற்றது. நகரத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து ராம்நாம் கூற இணைந்தனர். பஜன் நள்ளிரவு வரை தொடர்ந்தது, சுவாமி எங்களோடு இரவு உணவை உட்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலையில் நிவேதிதா தனது நண்பர்கள் குழுவோடு திருவண்ணாமலைக்கு பகவானின் தரிசனத்தை பெற சென்றனர். அவர்கள் பகவானுடன் சிறப்பாக நேரத்தை செலவழித்தனர். பின்னர் யோகி லீ லோசோவிக் அவர்களின் வருகை குறித்து யோகி நிவேதிதாவிடம் விசாரித்தார். சாதுவின் மேற்கோளான, “பகவான் ராமநாமத்தையே உள், வெளி மூச்சாக சுவாசிக்கிறார்” என்பதைக் குறிப்பிட்டு உரக்க சிரித்த யோகி , “மிக்க கவித்துவமானது“ என்றார். யோகி ராம்சுரத்குமார் பேட்ஜ் ராம்நாம் பிரசாரத்திற்கு தயாரிக்கப்பட்டதை பாராட்டி ஆசீர்வதித்தார். சிரவண பூர்ணிமா அன்று இந்த சாது யோகியின் அருகில் இருப்பான் என்று உறுதி அளித்த பின் நிவேதிதாவின் குழுவினர் விடைப்பெற்று திங்கள்கிழமை அதிகாலையில் வீடு வந்து சேர்ந்தனர். 

ஆகஸ்ட் – 16 ஆம் தேதி 1989 அன்று சிரவண பௌர்ணமி நாள், இந்த சாது உபாகர்மம், யக்ஞோபவீத தாரணம், தர்ப்பணம் போன்ற சடங்குகளை காலையில் முடித்துவிட்டு திருவண்ணாமலை பயணத்திற்கு தயாரானேன். இந்த சாதுவின் அன்னை ஜானகி அம்மாள், சகோதரி அலமேலு, விவேக் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை சேர்ந்த சில உறுப்பினர்களும் இந்த சாதுவுடன் இணைந்தனர். நாங்கள் மாலை யோகியின் இல்லம் அடைந்தோம். இந்த சாது அனைவரையும் லாட்ஜ்ல் விட்டப்பின் தனியே யோகியை பார்க்கச் சென்றேன். அவர் ஓய்வு எடுக்க சென்றுவிட்டார் என அறிந்து நான் அறைக்கு திரும்பினேன். விவேக்கிற்கு இடைவிடாத இறுமலோடு உடல்நலம் பாதிக்கப்பட்டது. 

அதிகாலையில் நாங்கள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யோகியின் இல்லத்திற்கு சென்றோம். அவர் எங்களை காத்திருந்து அன்போடு வரவேற்றார். அவர் C.V.ராதாகிருஷ்ணன் மற்றும் விவேக்கின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவர் எனது அன்னை மற்றும் சகோதரி மீது ஆசியை பொழிந்தார். அனைத்து நோய்களுக்கும் ஏற்ற சஞ்சீவினி மருந்து ராமநாமம் என்றார். ஒரு பக்தர் ஒரு பெரிய மாலையை கொண்டு வந்து யோகியின் கழுத்தில் போட்டார், யோகி அதனை சிறிது நேரம் தன் கழுத்தில் வைத்திருந்து விட்டு அதனை கழற்றி எனது தாயாருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர் எங்கள் அனைவருக்கும் பால் மற்றும் டீ தந்தார். பின்னர் அவர் எங்களை கோயிலுக்கு செல்லுமாறு கூறினார். அங்கே இந்த சாதுவும், விவேக்கும் காயத்ரி ஜபம் செய்தோம். மற்றவர்கள் கோயிலை வலம் வந்து திரும்பி வருவதற்கு முன் நாங்கள் காயத்ரி ஜெபத்தை முடித்தோம். பின்னர் நாங்கள் மீண்டும் யோகியின் இல்லம் வந்தோம்.  அவர் முன்னிலையில் நாங்கள் ராமநாமத்தை இரண்டு மணிநேரம் உச்சரித்தோம். அவர் ராமநாம இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலைநாடுகளின் உலகாயத சக்திகளின் தாக்குதலால் உலக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து கூறிவிட்டு பாரதம் உயிர்த்தெழ வேண்டிய அவசியம் குறித்து  வற்புறுத்தினார். ஆன்மீகத்திற்கும் உலகியிலுக்கும. இடையே நடக்கும் நேரடி போர் குறித்து குறிப்பிட்டு இந்த போரில் இறுதியாக ஆன்மீகமே வெல்லும் என்றார். 

இந்த சாது பகவானிடம் தனது உடல்நிலை குறைபாட்டிற்கும் இடையே எனது தாயார் ஜானகி அம்மாள் தினமும் லிகிதநாம ஜபம் செய்கிறாள் என்றேன். அவள் கீழே விழுந்தமையால் அவளது வலது கை முழங்கை மடக்க இயலாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். யோகி அவரது கைகளை சில நிமிடங்கள் கவனித்தார். பின்னர் இந்த சாதுவின் சகோதரியை அழைத்து, உள்ளே சென்று தேங்காய் சிரட்டையில் சிறிதளவு தண்ணீரை கொண்டுவருமாறு கூறினார். அவர் அந்த தண்ணீரை தனது உள்ளங்கையில் ஊற்றி, அம்மாவின் வலது  முழங்கையின் கீழே தனது கையை வைத்து சிறிது நேரம் தியானித்தார். பின்னர் அவர் கைகளை மடக்குமாறு கூறினார். ஆனால் அம்மாவோ தனக்கு மடக்குவதற்கு சிரமமாகவும், வலி மிகுந்தும் இருக்கும் என்று கூறினார். யோகி சிரித்தவாறே, “இல்லையம்மா உனது கரங்கள் இப்போது சரியாகிவிட்டது.” என்றார். அவரே முழங்கையை மடக்கினார். தெய்வீக மருத்துவம் டாக்டர்கள் செய்ய முடியாதவைகளை செய்யும். பின்னர் அவர் அம்மாவிடம், “அடுத்த ஆறு மாதங்களில் நீ நாம ஜபம் மட்டுமே செய்யலாம். லிகித ஜபம் செய்ய வேண்டியதில்லை” என்று ஒரு முக்கிய அறிவுரையை கூறினார். 

சாதுவிடம் திரும்பிய யோகி காயத்ரி முதல் விஜயதசமி வரை விரதம் கடைபிடிக்குமாறு கூறினார். நெல்லிக்காய் பொடியை தந்து விரதத்தை துவக்கி வைத்தார். மேலும் சாதுவிடம் தினமும் நெல்லிப்பொடியை எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். ராமநாமத்திற்கு அடுத்து நெல்லிக்காய் அனைத்து நோய்களுக்குமான சிறந்த சஞ்சீவினி என்றும் எனவே அதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு எனது பணிக்கான ஆற்றலை பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார். 

பகவானோடு சிறந்த நேரத்தை செலவழித்து, பக்தர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் பகவானின் ஆசிகளைப் பெற்று நாங்கள் அனைவரும் சென்னை திரும்பினோம். 

அத்தியாயம் 2.13 

சீடனின் பிறந்தநாளில் குருவின் ஆசி

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கிடைத்த குருவின் ஆசியானது அவர்களை ஊக்குவித்து, தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு ராமநாமத்தை சொல்லும் உத்வேகம் அளிக்கச் செய்தது. லீ லோசோவிக் போன்ற அயல்நாட்டு பக்தர்கள் தொடர்பில் இருந்தனர். சகோதரி நிவேதிதா அகாடமி மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் பற்றிய செய்திகள், ஹிந்து உலகத்தில் நிகழும் பல்வேறு சேதிகளை அவர்களுடனும் மற்ற உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஹிந்து சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள, யோகியின் ஆசியோடு “,ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்” என்ற செய்தி தொடர்பு சேவை துவங்க முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 2 , 1989 ல் ரேவதி ரகுநாதன் என்ற பக்தரின் வீட்டில் சிறப்பு சத்சங்கம் நடத்தப்பட்டது. இளைஞர் சங்க உறுப்பினர்களுடன் சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா அவர்களும் அதில் கலந்து கொண்டார். அடுத்தநாளே சென்னை பெரியார் நகரில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

திரு. சங்கர் சாஸ்திரி , ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஒரு மூத்த பிரச்சாரகர். மேலும் அவர் விஸ்வ இந்து பரிஷத்தில் அகில இந்திய செயலாளராகவும், சுவாமி விவேகானந்தர மெடிக்கல் மிஷனில் பொதுச்செயலாளராகவும் இருந்தவர்.  அவர்  யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்தை பெற விரும்பினார். திருமதி. பாரதி ரங்கராஜன் மற்றும் விவேகானந்தன் அவரை திருவண்ணாமலைக்கு செப்டம்பர் 4, 1989 திங்கள்கிழமை அழைத்துச் சென்றனர். வில் ஸுல்கோஸ்கி என்ற அமெரிக்க பக்தர் எங்களது பதிப்பத்தின் பகவான் மீதான நூல்களைக் கேட்டிருந்தார். நூல்களின் மொத்த தொகுப்பையும் அவருக்கு அனுப்ப நாங்கள் ஏற்பாடு செய்தோம். ரொசோரா மற்றும் கிறிஸ்டியுடன் யோகியின் தரிசனத்தை பெற்ற சேக்ரட் ஹார்ட் லெப்ரசி சென்டரை சேர்ந்த மதர் கிறிஸ்டினா இந்த சாதுவை சந்திக்க திருவல்லிக்கேணிக்கு வந்தார். யோகி தன்னை தரிசிக்க வந்த ஒரு தம்பதியினரை, மராட்டி மொழியில் ராமநாம பிரச்சாரத்திற்கான துண்டுப்பிரசுரங்களை சாதுவிடம் சேர்க்க, சாதுவை சந்திக்க அனுப்பினார்.. இந்த சாதுவால் பாரதீய வித்யாபவனின் ராஜாஜி கல்லூரியில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் பற்றி நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவுகள் பல இளைஞர்களை ஈர்த்து அவர்களை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தில் இணைத்து, யோகி ராம்சுரத்குமார் அவர்களை அறியும் ஆவலையும் அவர்கள் உள்ளத்தில் தூண்டின. செப்டம்பர் 28, 1989 ல் இந்த சாது பகவானுக்கு பணிகளில் நடந்திருக்கும் முன்னேற்றங்கள் குறித்து ஒரு கடிதம். எழுதினான்: 

“பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும், ஆசியாலும் எனது விரதம் தொடருகிறது. விஜயதசமி அன்று முடிவடையும், எனது உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எனது பணிகள் எந்த தடையும் இன்றி தொடர்கிறது. மற்ற அனைவரும் நலம். 

சென்னை, ரோகிணி கார்டன்ஸ் விநாயகர் கோவிலில், பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் ஜெயந்தி விழாவையொட்டி, நாளை காலை முதல் மாலை வரை அகண்டநாம ஜபம் திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாம யக்ஞம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்த கடிதத்துடன் அதுபற்றிய ஒரு சுற்றறிக்கையை அனுப்புகின்றோம்.

‘தத்துவ தர்சனா’வின் ராம்நாம் சிறப்பிதழ் ஒன்றை விஜயதசமி அன்று வெளிக்கொண்டுவர இருக்கிறோம். ஆன்மீக, கலாச்சார, மற்றும் மதம் சார்ந்த செய்திகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிப்பதோடு, சர்வதேச ராம்நாம் யக்ஞத்தையும் பற்றி பிரசாரம் செய்யவும் ‘ஹிந்து வாய்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற ஒரு செய்தி பிரிவையும் துவக்குகின்றோம்,. 

இந்த சாது புத்தக தபால் மூலம் ஒரு மலரை அனுப்பியிருக்கிறான். அந்த மலரை இந்த தாழ்மையான சாது,  கணேஷ் சதுர்த்தியை முன்னிட்டு பொது மக்கள் வழிபட திருவல்லிக்கேணியில் நிறுவப்பட்ட 16 அடி விநாயகர் சிலையின் வழிப்பாட்டு விழாவிற்காக வெளியிடப்பட்டது, இந்த சிலை ஊர்வலமாக கடந்த 10 தேதி எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. 

அகில இந்திய வானொலி நிலையம் – ஏ எனது உரையான “தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள்” என்ற உரையை திங்கள்கிழமை, அக்டோபர் 30, 1989 அன்று காலை 8.20 க்கு ஒலிபரப்ப இருக்கிறது. அக்டோபர் 31 அன்று திருமதி இந்திரா காந்தியின் உயிர் துறப்பை நினைவு கூறும் ஒரு வார நிகழ்வின் தொடர்புடைய ஒலிபரப்பு இது. 

இந்த தாழ்மையான சீடனின் உரையை நீங்கள் தயைக்கூரந்து கேட்டு , இந்த அன்னைபூமிக்கு சிறந்த சேவையை தொடர்ந்து புரிய என்னை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும். 

எனது அன்னை, விவேக், திருமதி பாரதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களின் தாழ்மையான நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். எங்களால் தினந்தோறும் நடத்தப்படும் சத்சங்கம் மற்றும் பஜனைகளில் பலர் பங்கு கொள்கின்றனர். நியூயார்க்கைச் சேர்ந்த திரு. வில் ஸுல்கோஸ்கி , அரிசோனா ஹோம் கம்யூனிட்டியைச் சேர்ந்த சௌ. சீதா போன்றோர் தங்கள் வணக்கத்தை உங்களிடம் தெரிவிக்குமாறு எழுதியிருந்தனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்

உங்கள் தாழ்மையான சீடன் 

சாது ரங்கராஜன்

இணைப்பு  : மேலே குறிப்பிட்டபடி”

மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் ஜெயந்தி விழா சிறப்பான முறையில் அகண்ட நாம ஜபத்துடன் பல பக்தர்கள் கலந்து கொள்ள வெற்றிகரமாக நடந்தது. விவேகானந்தன் மற்றும் நாராயணன் இருவரும் காந்தி ஜெயந்தி அக்டோபர் – 2 அன்று திருவண்ணாமலைக்கு சென்றனர். யோகி அவர்களை காந்திசிலையின் அருகில் இருந்து வரவேற்றார். யோகி காந்திசிலைக்கு காலையில் மாலைகள் அணிவிக்கும் நிகழ்வில் பங்குபெற காத்திருந்தார். மதிய நேரத்தில் பக்தர்கள் யோகியை தரிசிக்க வந்தனர் . அப்போது யோகி ராம்சுரத்குமார் நகைச்சுவையாக, “ஏழை மக்களுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பிச்சைக்காரனை விட்டுவிட்டனர்” என்றார். 

அக்டோபர் 10 , 1989 அன்று இந்த சாது தனது 55 ஆவது நாள் உண்ணாவிரதத்தை பார்த்தசாரதி கோயில் பிரசாதத்துடன் முடித்துக் கொண்டான்.  ஃப்ரை கே. குல்மான் என்ற வெளிநாட்டு பக்தர் யோகியை திருவண்ணாமலையில் சந்தித்தார், அவரை எனது இல்லத்திற்கு யோகி ராம்சுரத்குமார் குறித்த புத்தகங்களை பெற எனது வீட்டிற்கு யோகி அனுப்பி வைத்தார். யோகியின் அருளால் எனது, “தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள்” என்ற உரை அக்டோபர் – 13 அன்று அகில இந்திய வானொலி நிலையத்தால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் 16 அன்று ஒரு சிறப்பு சத்சங்கம் சென்னை ரோகிணி கார்டனில் நடைப்பெற்றது அதில் காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த சுவாமி மதுரானந்தா கலந்து கொண்டார். அக்டோபர் 18 அன்று சேலம் சாரதா கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர். தேவகி தனது குழுவினரால் 46 லட்சம் ராம்நாம் ஜெபம் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையை தந்தார். திரு. பொன்ராஜ் என்கிற சார்ட்டட் அக்கவுண்டன்ட் மூலம் சகோதரி நிவேதிதா அகாடமியின் ட்ரஸ்ட் டீட்  தயாரிக்கப்பட்டது. அவரும் பகவானின் பக்தரே. இறுதி வடிவம் பெற்ற அறக்கட்டளை ஆவணத்தை பகவானின் ஆசியை பெறவும், அவரின் ஒப்புதலைப் பெறவும் பகவானுக்கு அக்டோபர் 20 தேதி நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம் : 

“பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும், ஆசியாலும் எனது 55 நாள் உண்ணாவிரதம் வெற்றிகரமாக விஜயதசமி நன்னாளில் அக்டோபர் 10, 1989 அன்று நிறைவடைந்தது.

‘தத்துவ தர்சனா’ ராம்நாம் சிறப்பிதழ் மற்றும் ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல் என்ற செய்தி பத்திரிக்கையின் முதல் பிரதியும் தயாராக உள்ளது. நான் 21 ஆம் தேதி அக்டோபர் சனிக்கிழமை மாலையில் அங்கே வருகிறேன். இந்த இரண்டு இதழ்களின் முதல் பிரதியை உங்கள் பாதங்களில் வைத்து ஆசிபெற விரும்புகிறேன். திரு. பொன்ராஜ் என்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட் எங்கள் பணிகளில் உதவுவதோடு, அவரது இல்லத்தில் இரண்டு சத்சங்கங்களை நடத்த                          யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்கு உதவினார். அவரும், டாக்டர். C.V.ராதாகிருஷ்ணனும் என்னோடு உங்கள் தரிசனம் பெற வருவார்கள். மேலும் சகோதரி நிவேதிதா அகாடமியை ஒரு சேவா டிரஸ்ட் ஆக மாற்றுவது குறித்தும் தங்களிடம் பேச விரும்புகிறோம். 

‘தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள்’ என்ற எனது வானொலி உரை 30 ஆம் தேதி அக்டோபர் காலை 8.20 மணிக்கு, சென்னை – A வில் ஒலிபரப்பு ஆகும். இதில் உங்களுடைய, இந்த தேசத்தின் மீதான அன்பு மற்றும் மக்களின் மீதான அன்பு ஆகியவற்றை குறித்து டாக்டர் சுஜாதா விஜயராகவன் அவர்களின் நூலில் இருந்து மேற்கோள் காட்டி பேசினேன். மேலும் புதிய இந்தியாவை உருவாக்க ஆன்மீக மூல்யங்களின் அவசியம் குறித்து இந்திரா காந்தியின் அழுத்தமான வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி பேசினேன். தாங்கள் இந்த உரையைக் கேட்டு ஆசீர்வதிப்பீர்கள் என்றே நம்புகிறேன். 

“ஹிந்துயிசம் டுடே” என்ற மிக புகழ்பெற்ற அகில உலக மாத இதழ் மொரீஷியஸில் இருந்து வெளிவருகிறது. அமெரிக்காவில் ஹவாய் நகரை தலைமை இடமாக கொண்ட சைவ சித்தாந்த சர்ச் என்ற அமைப்பின் தலைவர் H.H. சுவாமி சிவாய சுப்பிரமணியம் இதை வெளியிடுகிறார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியரிடமிருந்து வந்துள்ள ஒரு கடிதத்தில், உங்களைப் பற்றி ஒரு கட்டுரையும் அத்துடன் உங்கள் புகைப்படம் ஒன்றையும் அனுப்புமாறு வேண்டிக் கொண்டுள்ளார். அத்துடன் தங்களுடைய கருத்துக்கள் குறித்து தங்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளையும் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். இது குறித்து நான் என்ன செய்ய வேண்டும் என்று தங்களுடைய கட்டளையை வேண்டுகிறேன். நேரில் இது குறித்து நான் உங்களிடம் பேசுகிறேன். சுவாமி மதுரானந்தா இங்கே திங்கள்கிழமை அன்று வந்திருந்தார், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் ஒரு இனிமையான பஜனும், சத்சங்கமும் நடைப்பெற்றது. நல்ல கூட்டமும் கூடியது. 

குமாரி நிவேதிதா மற்றும் விவேக்கின் நண்பர்கள் டாக்டர்.C.V.ராதாகிருஷ்ணன் அவர்களின் வழிக்காட்டுதலின் படி மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்கு தங்கள் பிரசாதங்களை தருவதோடு அவர்களை ராம்நாம் சொல்லவும் ஊக்குவிக்கின்றனர். ராம நாம யக்ஞம் துரிதமாகி இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அயல்நாடுகளில் இருந்தும் ராம்நாம் பொழிகிறது. பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் எங்கள் பணி குறித்த மகிழ்ச்சியை கடிதம் மூலம் தெரிவித்தார். தங்களின் ஆசியாலும், கருணையாலுமே நாங்கள் எங்களது தாழ்மையான பணியை இந்த பெரும் இலட்சியத்திற்காக செய்ய முடிகிறது. இந்ந கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த திரு. தியாகராஜன் என்னை தொலைபேசி மூலம் அழைத்து தனது நமஸ்காரத்தை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். மேலும் அவர் அடுத்த வருடம் இந்தியாவிற்கு வந்து தங்கள் தரிசனத்தை பெறுவதாகவும் கூறினார். 

திரு லீ லோசோவிக் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவரும் அவரது நண்பர்களும் சென்னைக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நவம்பர் 26 மதியம் வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நவம்பர் 25 அன்று ராம்நாம் சப்தாஹம் துவங்க இருக்கிறோம், அது தங்கள் பிறந்தநாளான டிசம்பர் – 1 அன்று முடிவடையும். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைவரான திரு. M.P. நாராயணன் சென்னையில் நடக்கும் சப்தாஹத்தில் பங்கு பெறுவதாக கூறியுள்ளார். 

மற்றவை நேரில் 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டப்படி”

இந்த கடிதம் யோகி ராம்சுரத்குமாருக்கு அனுப்பிய அடுத்தநாளே சாதுவின் பயணத்திட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. பாரதீய வித்யா பவனை சேர்ந்த ஒரு மாணவன் சாதுவிடம் 150 மாணவர்களுக்கு ராமாயணம் வகுப்பு அக்டோபர் 21 அன்று எடுக்க வேண்டியிருப்பதை நினைவூட்டினார். இந்த சாது யோகியிடம் அக்டோபர் 22 ஆம் தேதி வருவதாக கூறி மன்றாடினேன். மேலும் அந்த கடிதத்தில், “அக்டோபர் 22 ஆம் தேதி, நான் 49 வயதை முடித்து 50 வது வயதிற்குள் நுழைகிறேன். இது ஆங்கில நாள்காட்டியின் படி, இந்து பஞ்சாங்கத்தின் படி இன்று ஆருத்ரா நட்சத்திரம், எனது ஜென்ம நட்சத்திரம், நான் உங்களது கருணையையும், ஆசியையும் வேண்டி பிரார்த்திக்கிறேன்“  என்று எழுதியிருந்தேன்.

அக்டோபர் 22, 1989 இந்த சாதுவின் ஐம்பதாவது பிறந்தநாள் அன்று, நாங்கள் அதிகாலையில் திருவண்ணாமலைக்கு சென்றோம். விவேகானந்தன், ஆடிட்டர் பொன்ராஜ், டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பாஸ்கர் இந்த சாதுவுடன் இணைந்தனர். திருவண்ணாமலையை அடைந்தபோது, இந்த சாதுவின் மூத்த சகோதரர் லட்சுமிகாந்தன் எங்களோடு இணைந்தார். நாங்கள் அனைவரும் குருவின் இல்லத்திற்கு சென்றோம். அங்கே பெரும் கூட்டம் இருந்தது. குரு எங்கள் அனைவரையும் வரவேற்றார். நாங்கள். அனைவரும் அமர்ந்தோம். இந்த வருகையை குறித்து முன்பே எழுதியிருந்தீர்களா என யோகி விவேக்கிடம் கேட்டார். இந்த சாது யோகியிடம் நாங்கள் இரண்டு கடிதங்கள் அனுப்பியதாக கூறி, கடிதங்களின் உள்ளடக்கத்தையும் விவரித்தான். யோகி இதுவரை தான் எந்த கடிதத்தையும் பெறவில்லையென்றும், பெற்றிருப்பின் எங்களை வரவேற்க தான் தன்னை தயார் படுத்திக்கொண்டிருப்பேன் என்றும் கூறினார். பொன்.காமராஜ் தன்னை சந்திக்க வந்து இருந்ததாக கூறினார். பொன் காமராஜ் தனது இல்லத்திற்கும் வந்திருந்ததாகவும், அவரிடமும் எனது திருவண்ணாமலை பயணம் பற்றி பகிர்ந்ததாகவும் இந்த சாது பகிர்ந்தான். யோகி காலை ஆறு மணியில் இருந்து தான் எதையும் உட்கொள்ளவில்லை என்றும், காலையில் பொன் காமராஜ் வந்தது முதல் இதுவரை தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அங்கிருந்த கஜராஜ் இடம் தனக்கு சில சப்பாத்திகளைத் தருமாறு கூறினார். காலை உணவையே யோகி மதிய நேரத்தில் எடுத்துக் கொண்டார். இந்த சாது தனது சகோதரர் லட்சுமிகாந்தன் உட்பட, தன்னோடு வந்திருந்தவர்களை யோகியிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் சில வருமானவரி துறை அதிகாரிகள் வந்து செல்வி. விஜயலட்சுமி IRS (தற்சமயம் இவர் அன்னை விஜயலட்சுமி ஆக திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் இருக்கிறார்) அவர்கள் தரிசிக்க வருவதாக யோகியிடம் கூறினர். அவர் வந்தபோது யோகி அவர்களை வரவேற்றார். அதன்பின் இந்த சாது, ‘தத்துவ தர்சனா’ ராம்நாம் சிறப்பிதழையும், ‘ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற செய்திப் பத்திரிகையின் முதல் இதழையும் யோகியின் பாதங்களில் சமர்ப்பித்தான். யோகி அதனை ஒரு முறை பார்த்துவிட்டு, யோகி தனக்கு வந்திருந்த, நியூயார்க்கின் வுட்ஸ்டாக்கை சேர்ந்த கோல்டன் க்வெஸ்ட் என்ற பதிப்பகம் வெளியிட்டிருந்த, ஹில்டா சார்ல்ட்டன் எழுதிய, “செயின்ட்ஸ் அலைவ்“ என்ற நூலை சாதுவிடம் காண்பித்தார். சாது அந்த நூலை தன்னோடு வந்திருந்த நண்பர்களிடம் காட்டினார். விஜயலட்சுமி யோகியிடம் ஒரு பரிசு பொட்டலத்தை வழங்கினார், இன்னொரு பரிசு பொட்டலத்தில் மூன்று புடவைகள் இருந்தன அதனையும் யோகியிடம் தந்து அவர் விரும்பும் எவருக்கேனும் விநியோகிக்குமாறு கூறினார். யோகி தனக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை ஏற்றார். பின்னர் அந்த இரண்டாது பொட்டலத்தை ஆசீர்வதித்து அவரிடமே தந்துவிட்டு, “இவைகளை விநியோகம் செய்வது இந்தப்பிச்சைக்காரனின் வேலையல்ல. என் தந்தை இந்தப்பிச்சைக்காரனுக்கு வேறு வேலைகளை தந்திருக்கிறார்“ என்று நகைச்சுவையாக கூறினார். தனக்கு பரிசளிக்கப்படும் எதனையும் ஏற்கும் சுயநலக்காரன் தான் என்றும், ஆனால் அவைகளை பிறர்க்கு ஒருபோதும் தந்ததில்லை என்றும், ஹர்ஷத் பண்டிட் என்பவர் தனக்கு பரிசளித்த சில நூறு ரூபாய் மதிப்புள்ள உடைகளை தான் திருப்பி தந்துவிட்டதாகவும் கூறினார். தனது காலடியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை சுட்டிக்காட்டி இவைகளை ஆசீர்வதித்து திருப்பி தந்துவிடுவேன், எதனையும் நான் விநியோகம் செய்வதில்லை என்றார். தன் முன்னால் தனது படத்தை அச்சடித்த நாட்காட்டிகள் வைக்கப்பட்டதாகவும், அதனை பெறுவதற்கு பெரும் கூட்டம் கூடியதாகவும் அந்த கூட்டத்தை தன்னால் சமாளிக்க இயலவில்லை என்றும் யோகி முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். 

விஜயலட்சுமி குருவிடம் தியானம் செய்யும் போது தன்னால் மனதை ஒருநிலை படுத்த முடியவில்லை என்றும் மனம் அங்கிங்கும் அலைகிறது என்றும் கூற, யோகி பதிலளித்தார், “ மனம் எங்கு வேண்டுமானாலும் ஓடட்டும், நடுக்கடலில் பறக்கும் பறவையானது அங்குமிங்கும் பறந்தாலும் இறுதியில் கப்பலின் கொடிமரத்தை நோக்கியே திரும்பவும் வருவதைப்போலத்தான், இறுதியாக மனம் ராமன் இருக்கும் இதயத்தை நோக்கியே வரவேண்டும், மனம் எங்கு அலைந்தாலும் , எங்கும் கடவுளே இருக்கிறார், நாம் அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம்.” பகவான் சூர்தாஸ் அவர்களின் மேற்கோளை கூறி, “நமது மனம் எங்கு அலைந்தாலும், உதடு மட்டும் இறைவனின் பெயரை இயந்திரத்தனமாக உச்சரித்தவாறே இருக்க வேண்டும்” என்றார். அந்த அம்மையார் நம்பிக்கையை வைத்திருத்தல் கடினம் என்றார். பகவான் கீதையை மேற்கோள் காட்டி, “ஸம்ஸயாத்மா விநஸ்யதி“ என்றார். அந்த அம்மையார் தனக்கு விளங்கவில்லை என்று கூற, இந்த சாது இடைமறித்து, “ஐயத்தை இயல்பாக கொண்டவன் அழிந்து போகிறான்“ என கூற, அவர் தான் ஒருபோதும் சந்தேகப்படுவதில்லை என்றும், ஆனால் பிரச்சனைகள் வருகையில் மனமானது பலவீனமடைகிறது என்றும் கூறினார். இந்த சாது அதனை இதுவே “அர்ஜூன விஷாதயோகம்“ – அர்ஜூனனின் அவநம்பிக்கை என்றான். குருவோ, ஒருவன் எல்லா நேரமும் அறுதியான நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றார். 

விஜயலட்சுமி குருவிடம் இந்த சாது குறித்து தான் தேவகி மூலம் அறிந்ததாக கூறினார். இந்த சாது தனது பதிப்பகத்தின் நூல்களை அவரிடம் தந்தான். அவர் தான் தேவகி மூலமாக, “ஒரு மகா யோகியின் அற்புத தரிசனங்கள்“ என்ற நூலை பெற்றுவிட்டதாக கூறினார். அவர் இந்த சாதுவிற்கு சில காணிக்கைகளை தர விரும்பினார், சாது அதனை பின்னர் தருமாறு கூறினார். யோகி அவரை ராம்நாம் கூறுமாறு சொன்னார். இந்த சாது அவரிடம் பொன்ராஜ், ராதாகிருஷ்ணன், காந்தன் மற்றும் விவேக் போன்றவர்களை அறிமுகப்படுத்தினான். காந்தனை இந்த சாது மூத்த சகோதரர் என அறிமுகப்படுத்தும் போது, யோகி அவர் குறித்த விவரங்களை கேட்டார். இந்த சாது யோகியிடம் காந்தன் திருவண்ணாமலையில் கருவூல அதிகாரி பதவி வகிப்பதாகவும், அவர் தனியே ஒரு அறையில் தங்கியிருப்பதாகவும், அவர் இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்றும கூற, யோகி இப்போது நன்றாக இருக்கிறாரா என்று கேட்டார். அப்போது காந்தன், இப்போதும் சில தொல்லைகள் இருப்பதாக கூறினார். பகவான் அவரை தன் அருகே வரவழைத்து அமரவைத்தார். அவரது கைகளைப் பிடித்த யோகி அவருக்குள் சில வேலைகளை துவங்கினார். காந்தன் யோகியிடம் தான் நடக்கும் போது வலியும், அதிகமான இதயத்துடிப்பும் இருப்பதாக கூறினார். பகவான் அவரை எழுந்து சிறிது தூரம் நடக்கச் சொன்னதோடு, அவரது அதிகமான இதயத்துடிப்பின் காலத்தை கவனிக்குமாறு கூறினார். பின்னர் யோகி காந்தனிடம் தன்னோடு அவ்வப்போது தொடர்பில் இருக்குமாறு கூறினார். காந்தனும் யோகியை மீண்டும் சந்திப்பதாக வாக்குறுதியளித்தார். 

பகவான் ராம்நாம் ஜப யக்ஞத்தின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்த சாது ‘தத்துவ தர்சனா’வின் சிறப்பிதழில் இருந்த தலையங்கத்தை படித்தார். அதில் இருந்த பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களின் செய்தியையும் பகவான் ஆர்வத்துடன் கேட்டார். விஜயலட்சுமி உடன் இருந்த ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் தனது தலையில் இருந்த கட்டியானது யோகியின் கருணையால் நீங்கியது என்றார். ராதாகிருஷ்ணனும், ஈரோட்டை சேர்ந்த பேராசிரியர் பாலசுப்ரமணியன் பகவானின் கருணையால் குணமாகிவிட்டதாக கூறினர். பகவானும் தன் தந்தையின் கருணையை காந்தனும் பெற வேண்டும் என கூறினார். ஆனால் முழுமையான குணமடைய சில காலங்கள் ஆகும் என்றார்.  பகவான் எங்களிடம் விசிறி படம் போட்ட தீப்பெட்டியை காட்டினார். 

இந்த சாது பகவானிடம் ராம்நாம் சப்தாஹம் மற்றும் லீ லோசோவிக் நிகழ்ச்சி குறித்தும் கூறினான். தேவகி மற்றும் சந்தியா அவர்கள் தந்த ராம்நாம் பங்களிப்பு குறித்தும் நாங்கள் கூறினோம். நாங்கள் இந்த சாதுவின் வானொலி உரைகள் பற்றி யோகிடமும், விஜயலட்சுமி அவர்களிடமும் கூறினோம்.

யோகி, விஜயலட்சுமியிடம், வரி என்ற பெயரில் அரசு அனைத்தையும் எடுத்துக் கொண்டால் மக்கள் என்ன செய்வார்கள் என வினவினார். அதற்கு விஜயலட்சுமி மற்றும் பொன்ராஜூம் இந்தியாவில் வரிவிதிப்பு மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிக குறைவே என குறிப்பிட்டனர்.

விஜயலட்சுமி விடைபெறும் முன் ஆடிட்டர் தனக்கு ஒரு பிரதி ‘தத்துவ தர்சனா’ வேண்டுமென கேட்டார், பகவான் அதனை அவரிடம் கொடுத்தார். விஜயலட்சுமி சென்றபின் பகவான் மேலும் சிறிது நேரம் எங்களோடு செலவிட்டார். யோகி எழுந்து காந்தன் முன் அமர்ந்து கொண்டார். பகவான் விவேக்கிடம் இந்த சாதுவின் யக்ஞ தண்டத்தை எடுக்கச் சொன்னார். பகவான் இந்த சாதுவிடம் அதனை தொட வேண்டாம் என்று கூறினார். விவேக் அந்த தண்டத்தை எடுத்து யோகியின் கரங்களில் கொடுத்தார். பகவான், “இது சந்நியாச தண்டம். இந்தப்பிச்சைக்காரன் சந்நியாசி அல்ல, ஆனால் ரங்கராஜன் ஒரு சந்நியாசி அதனால் அவர் இதனை வைத்திருக்கிறார். இந்தப்பிச்சைக்காரன் இதனை கைகளில் வைத்துக்கொண்டிருப்பதாலேயே அவன் சந்நியாசி ஆவதில்லை.” யோகி சிரித்தவாறே இந்த சாதுவிடம் கமண்டலம் இன்னும் வரவில்லை என்றார். இந்த சாது யோகி தந்த கொட்டாங்குச்சியை காட்டினான். யோகி இது கமண்டலம் ஆகாது என்றார்.

பகவான் இந்த சாதுவின் பணியைக் குறித்து பேசினார். எவ்விதம், “ஒரு மகா யோகியின் அற்புத தரிசனங்கள்“ என்ற புத்தகம் பலரை ஈர்த்தது என்று குறிப்பிட்டார். அவர் பாஸ்கரை அழைத்து தன் அருகில் அமரச்சொல்லி உனது தந்தையிடம் நீ தத்துவங்களைக் கற்றுக் கொண்டாயா என வினவினார். பாஸ்கர் தனக்கு வணிகவியல் மற்றும் விளையாட்டில் ஆர்வம் என்றார். இந்த சாது பகவானின் அருளால் மற்றும் ஆசியால், பாஸ்கர் மலேசியாவில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார் என கூறினான் பகவான் பின்னர் விளையாட்டு குறித்து பேசத் தொடங்கினார் . டாக்டர். ராதாகிருஷ்ணன் யோகியிடம் ரக்பி என்ற விளையாட்டு கால்பந்தைவிட மிகவும் முரட்டுத்தனம் மிகுந்த தீவிரமான விளையாட்டு என்றார். யோகி ராம்சுரத்குமார் நகைச்சுவையாக சுவாமி விவேகானந்தர் நம்மை மிகுந்த தாக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கச் சொல்கிறார் என்றார். 

யோகிஜி விவேக் இடம் திரும்பி அவனது உடல்நலம் குறித்து விசாரித்தார். யோகி மேலும் சாதுவின் தாயார், பாரதி மற்றும் நிவேதிதா குறித்து விசாரித்தார். நிவேதிதாவின் படிப்பு குறித்த கேள்விகளை கேட்டார். அவர்கள் ஏற்பாடு செய்த இரத்த தான பிரச்சாரம் குறித்து நினைவு கூர்ந்தார் பகவான். இனி இது போன்ற பிரச்சாரங்கள் இளைஞர் சங்கம் செய்யவேண்டாம் என்றார். இந்த சாது தங்களின் அறிவுரைப்படி இனி ராம்நாம் பிரச்சாரத்தில் மட்டுமே கவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கூறினார். அனைத்து ஆற்றல்களும் ஆன்மீக செயல்களுக்கு தேவை என யோகி கூறினார். அவர் மீண்டும் காந்தனை தனது அருகில் அமரச்சொன்னார், அவரிடம் ஒரு உரித்த வாழைப்பழத்தை தந்தார். அதனை அவரது கைகளில் வைத்து அவருக்காக பிரார்த்தனை செய்தார்.

இந்த சாது யோகியிடம் “ஹிந்துயிசம் டுடே” என்ற பத்திரிகையிலிருந்து வந்த கடிதம் குறித்து பேசினார், அதனை அவரிடம் படித்துக் காட்டினார். அனைத்து கேள்விகளையும் கேட்ட யோகி , சாதுவிடம் அதற்கான பதில்களை தனது சார்பில் தயாரிக்கச் சொல்லி அதனை அனுப்பும் முன் தன்னிடம் காட்டுமாறு கூறினார். மேலும் அவர் ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் எழுதிய “யோகி ராம்சுரத்குமார் – கடவுளின் குழந்தை – திருவண்ணாமலை“  புத்தகத்தின் சில பிரதிகள், பகவானின் புகைப்படங்கள் மற்றும் சில காலம் முன்பு அச்சிடப்பட்ட பகவானின் செய்தி ஆகியவற்றை சாதுவிடம் கொடுத்து அவைகளையும் அந்த இதழிற்கு அனுப்புமாறு கூறினார். ‘தத்துவ தர்சனா’வில் வெளிவந்த சில கட்டுரைகள், லீ லோசோவிக் அவர்களின் சில கவிதைகள், மற்றும் ஹில்டா சார்ல்டன் அவர்களின் நூல் ஆகியவற்றையும் அனுப்பி வைக்குமாறு கூறினார். 

பகவான் பின்னர், சகோதரி நிவேதிதா அகாடமியின் ட்ரஸ்ட் டீட் ஆவணத்தை மிக பொறுமையாக கேட்டார். அதனை பதிவு செய்யும் முன் ஒரு வழக்கறிஞரிடம் சரிபார்க்குமாறு கூறினார்.  சாது விவேக்கை டிரஸ்டியாக நியமிக்கப் போவதாக கூறினார். யோகி விவேக்கிடம் அவனது தந்தை இந்த ட்ரஸ்ட்டை உருவாக்குவதை அவன் ஏற்றுக் கொண்டுள்ளானா என்று கேட்டபோது, தான் முற்றிலும் ஏற்பதாக விவேக் கூறினான். மேலும் சாதுவின் உடமைகள் எதையும் தான் உரிமை கோருவதில்லை என்று கூற யோகி மகிழ்வோடு அவனை ஆசீர்வதித்தார். 

இந்த சாது பகவானிடம் பாரதீய வித்யா பவனின் சென்னை ராஜாஜி கல்லூரியில் சிலர் யோகியை தரிசிக்க விரும்புவதாக கூறினான். யோகி அவர்களை தீபாவளிக்குப்பின் தகவல் தெரிவித்துவிட்டு அழைத்து வருமாறு கூறினார். யோகி இந்த சாது செய்யும் தாழ்மையான பணிகளுக்கு ஆசீர்வாதம் தந்தார். 

கஜராஜ் மற்றும் அவரது பேரன் யோகிராம் இருவரையும் அனுப்பும் முன் யோகி நகைச்சுவையாக கஜராஜ் இடம், கஜராணி எங்கே என வினவினார். யோகி அந்த குடும்பத்தை ஆசீர்வதித்தார். அவர் சிறுவனிடமிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து ஆசீர்வதித்தார். கேரளாவின் முன்னாள் கவர்னர் திரு.P.ராமச்சந்திரன் அவர்களின் மருமகனான அன்பழகன் அங்கே வந்தார். பகவான் இந்த சாதுவிடம் இவரை உனக்கு நினைவில் இருக்கிறதா என கேட்டு முன்னர் நடந்த சந்திப்பை நினைவூட்டினார். 

இந்த சாதுவை வழியனுப்பும் முன், பகவான் ஒரு பெரிய மாலையை எடுத்து இந்த சாதுவின் கழுத்தில் போட்டார். இந்த சாதுவை அவனது பிறந்தநாளில் ஆசீர்வதித்தார். தனது முன்னர் இருந்த அனைத்து பழங்களையும் எடுத்து விவேக் வைத்திருந்த பையில் திணித்து அந்த பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிக்க தந்தார். நாங்கள் அனைவரும் அவரை வணங்கினோம். அவரது ஆசிகளைப் பெற்று கிளம்பினோம். பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நாங்கள் திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி சென்னைக்கு நள்ளிரவிற்கு முன் வந்து சேர்ந்தோம். 

இந்த சாதுவின் ஐம்பதாவது பிறந்தநாள் அன்று முழுமையான ஆனந்தம் மற்றும் தெய்வீக அனுபவத்தைப் பெற்று நான், “யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா“ என உச்சரித்தவாறே  இரவில் எனது படுக்கைக்கு சென்றேன். 

அத்தியாயம் 2.14 

ராம்நாம் சப்தாஹம் மற்றும்

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி

சென்னை, திருவல்லிக்கேணியின் மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் இருக்கும் இரட்டை அறைகள் கொண்ட சாது ரங்கராஜன் அவர்களின் இல்லத்திற்கு, அருகில் இருந்தும் மற்றும் தொலைதூரத்தில் இருந்தும், பல யோகி ராம்சுரத்குமார் பக்தர்களும், பிறரும்  தீவிரமான ராமநாம இயக்கத்தில் பங்கு கொள்ள வந்தவண்ணம் இருந்தனர். பலரின் வருகையால் ஈர்க்கப்பட்டு அக்கம்பக்கம் உள்ளவர்களும் ராம்நாம் யக்ஞத்தில் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் செயல்களில் ஈடுபட்டனர். அக்டோபர் 30, 1989 அன்று இந்த சாது வானொலியில் “தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள்” குறித்து பேசிய உரை ஒலிபரப்பு ஆன அதே நாளில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு எடுத்துச் செல்லப்பட, செங்கல் வடிவுள்ள ராம சீலா என்னும் நீரில் மிதக்கும் கல் இந்த சாதுவின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அந்த சிலைக்கு பூஜை செய்ய பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து சேர்ந்தனர். ராம்நாம் பல இடங்களில் இருந்தும், அயல்நாட்டில் இருந்தும் வந்தது. பிரதிமாதம் 1 கோடி ராம நாம எண்ணிக்கை சேர்ந்தது. ஒவ்வொரு மாதமும் இந்த எண்ணிக்கை பூஜ்ய சுவாமி சச்சிதானந்தருக்கு அனுப்பி, மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்கள் துவக்கிய “உலக அமைதிக்கான நாம ஜப யக்ஞம்“ ஜப எண்ணிக்கையில் இணைக்கப்பட்டது. 

ராம்நாம் சப்தாஹம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கையில், இந்த சாது, நவம்பர் 4 , 1989 அன்று, பணிகள் குறித்த ஒரு விவரமான கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினான்”

”பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

திரு. குருராஜ், அப்யாஸி , சகஜ் மார்க், 85 , முதல் ‘R’ ப்ளாக், ராஜாஜி நகர், பெங்களூர் , 560 010,        என்ற விலாசத்தில் இருந்து, உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட  கடிதம் ஒன்று, எங்கள் முகவரிக்கு வந்திருந்தது. அதனை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.. 

ஹவாயில் இருந்து ‘ஹிந்துயிசம் டுடே’ அனுப்பிய கேள்விகளுக்கு நாங்கள் பதில்களை தயாரித்து வருகிறோம். அதனை அவர்களுக்கு அனுப்பும் முன் உங்களின் ஒப்புதலுக்காக கொண்டுவருவோம். நாங்கள் திரு. லீ இடம் அவரது “தாவோகோடோ” இதழில் தங்களைப்பற்றி எழுதியவைகளையும் “ஹிந்துயிசம் டுடே“ இதழுக்கு அனுப்புமாறும், ஹில்டா சார்ல்டன் புத்தகத்தை எங்களுக்கு கொண்டு வருமாறும் கூறியிருக்கிறோம். 

நாங்கள் 3000 பிரதிகள் யோகி ராம்சுரத்குமார் அருளிச் செய்துள்ள “தெய்வீக நாமம்” என்ற கட்டுரையை அச்சிட்டிருக்கிறோம். இது ‘தத்துவ தர்சனா’வின் ‘நான்காவது ஆண்டு மலர் 1988’ – ல் வெளியான தெய்வீக செய்தியின் மறுபதிப்பு. இதனை நாங்கள் அக்டோபர் 22 ல் அங்கு வரும்போது தங்களிடம் காட்டுகிறோம். இதனை நாங்கள் ராம்நாம் மஹாயக்ஞம் துண்டுப்பிரசுரத்துடன் விநியோகிக்க இருக்கிறோம். 

உங்கள் கருணையால் இந்த பணிகள் விரைவாகவே நடந்து வருகின்றன. அக்டோபரில் நாங்கள் ஒரு கோடியே நான்கு லட்சம் எண்ணிக்கையை ஆனந்தாஸ்ரமத்திற்கு தந்தோம். நவம்பரில் அதனைவிட கூடுதலாகவே தருவோம், ஏனெனில் இந்த மாதம் ஒரு வாரம் முழுக்க அகண்ட ராம்நாம் பிரச்சாரம் இருக்கிறது, இது உங்கள் ஜெயந்தி விழாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்குமுன் உங்களை சந்திக்க வருவோம் என நம்புகிறோம்.

எனது அன்னை, விவேக், திருமதி. பாரதி, டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களின் தாழ்மையான நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் சேவையில், 

சாது ரங்கராஜன். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் கூட்டம் நவம்பர் – 11 ல் நடந்தது. அதில் ராம்நாம் சப்தாஹம் குறித்த நிகழ்ச்சி நிரல்கள் திட்டமிடப்பட்டன. திருவல்லிக்கேணியில் உள்ள பாண்டுரங்க மந்திர் சப்தாஹத்திற்கும், NKT மகளிர் உயர்நிலைப்பள்ளி கலையரங்கம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கும் இடங்களாக நிச்சயிக்கப்பட்டது. இந்த சாது இன்னொரு கடிதம் ஒன்றை நவம்பர் – 17 அன்று யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு எழுதினான். 

“பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

ராம்நாம் சப்தாஹம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை உங்கள் கருணையால் திட்டமிடப்பட்டுள்ளன. திருவல்லிக்கேணியில் உள்ள பாண்டுரங்க மந்திர் சப்தாஹத்திற்கும், NKT மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆடிட்டோரியம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து துறைகளில் இருந்தும் முக்கியமானவர்களை இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள அழைத்திருக்கிறோம். நாங்கள் ராம்நாம் லிகித ஜப போட்டியை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், ராம்நாம் பஜனை போட்டியை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வைத்துள்ளோம். 

நானும் விவேக்கும் அங்கே திங்கள்கிழமை நவம்பர் 20 அன்று பகல் வருவதாக இருக்கிறோம், உங்கள் ஆசிகளை எங்கள் முயற்சிகளுக்கு பெற வருகிறோம். எனது தந்தையின் சிரார்த்தமும் இதே நாளில் வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் செய்ததைப் போல் இந்த ஆண்டும் எனது தாழ்மையான காணிக்கையை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க நினைக்கிறேன். நீங்கள் அதனை ஏற்று இந்த சாதுவை ஆசீர்வதிக்க வேண்டும். 

நாளை நான் 250 ஆசிரியர்களுக்கு உரையாற்ற விவேகானந்தா கல்வி கழகத்தால்  அழைக்கப்பட்டிருக்கிறேன். தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள் குறித்தே பேச இருக்கிறேன். தங்கள் ஆசியை இதற்கு வேண்டுகின்றேன். 

சாந்தி ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜ்ய மாதாஜி ஞானேஸ்வரி எழுதிய கடிதம் ஒன்றில் அவர் உங்களின் புனிதமான வருகை அவரது ஆசிரமத்திற்கு நிகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கிறார். பூஜ்ய சுவாமி சிவானந்தா, பப்பா ராம்தாஸ், மாதாஜி கிருஷ்ணாபாய், மற்றும் சுவாமி சச்சிதானந்தர் போன்றோர் அவரது ஆசிரமத்திற்கு வருகை தந்து புனிதப்படுத்தியிருக்கின்றனர் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே நீங்களும் அவரது இடத்திற்கு வந்து புனிதப்படுத்த வேண்டும் என விரும்புகிறார். அவரது கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் நமது ராமநாம பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். ராம்நாம் சப்தாஹம் மற்றும் ஜெயந்தி விழாவிற்கான ஆசியையும் அவர் தெரிவித்திருக்கிறார். அவரது கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

நான் ‘ஹிந்துயிசம் டுடே’ என்ற இதழின் கேள்விக்கான பதில்களின் வரைவு நகலையும், தங்களைப் பற்றிய ஒரு  கட்டுரையையும் தங்களின் ஒப்புதலை பெறுவதற்கு கொண்டு வருகிறேன். 

மற்றவை நேரில்,

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

நவம்பர் 20 , 1989 ல் இந்த சாது விவேக், நிவேதிதா மற்றும் டாக்டர். ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலைக்கு சென்றோம். அன்று எனது தந்தையின் சிரார்த்தம் என்பதால் சில பழங்களையும், காபியை மட்டும் காலையில் எடுத்துக் கொண்டான். மதியம் திருவண்ணாமலையை அடைந்தோம். பகவான் எங்களை மாலை 4 மணிக்கு வரச்சொன்னார். நாங்கள் கோயிலுக்கு சென்றோம், இந்த சாது கங்கை தீர்த்தத்தில் தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்தான். நாங்கள் கிறிஸ்டி, ஓம், ரொசோர, போன்ற பக்தர்களின் இல்லத்திற்கு சென்றோம். துவாரகநாத் ரெட்டி மற்றும் அவரது மகள் சந்தியா ஆகியோரை சந்தித்தோம். கோயிலில் தரிசனத்தை முடித்தப்பின் யோகியின் இல்லத்திற்குச் சென்றோம். பகவான் எங்களை வரவேற்றார். நாங்கள் வந்து சேர்ந்த பின்னரே எங்கள் கடிதம் வந்து சேர்ந்ததாக கூறினார். பகவான் இந்த சாது தந்தைக்கு தர்ப்பணம் செய்து விட்ட காரணத்தால் ஏதேனும் ஒரு உணவை சிறிதளவேனும் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சாது யோகிக்கு காணிக்கையை வழங்க, அதனை தனது கரங்களில் பெற்றுக் கொண்ட யோகி, “உனது தந்தை இதனை ஏற்றுக்கொண்டார்“ என்றார் அதன்பின் இந்த சாது பிருந்தாவன் ஓட்டலுக்கு சென்று மிகவும் லேசான உணவை எடுத்துக்கொண்டான். நாங்கள் திரும்பி வருகையில் விவேக் ‘ஹிந்துயிசம் டுடே’ என்ற பத்திரிகையிலிருந்து, யோகியிடம் பதில் வேண்டி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுதப்பட்ட பதில்களை படித்துக் கொண்டிருந்தான். அதனை நாங்கள் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியோடு தயாரித்தோம். யோகி எங்களை மூன்று முறை அதனை படிக்கச் சொல்லிவிட்டு பின்னர் அதற்கு ஒப்புதலையும், ஆசியையும் வழங்கினார். அதனை ஹவாய்க்கு அனுப்புமாறும் கூறினார். எங்களின் “தெய்வீக நாமம்” என்ற துண்டுபிரசங்களை பார்த்து அதில் நிறுத்தற்குறிகளை திருத்தினார். நாங்கள் அவரிடம் டாக்டர். K. வெங்கடசுப்புரமணியம், யோகி ராம்சுரத்குமார் குறித்த ஒரு கருத்தரங்கினை டெல்லியில் நடத்தலாம் என்ற தனது திட்டத்தைக் கூறியுள்ளதாக, தெரிவித்தோம். யோகி அதனை அங்கீகரிக்க மறுத்ததோடு, பாண்டிச்சேரியில் ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்தரங்கினையும் அவர் கடுமையாக விமர்சித்தார். 

நாங்கள் அன்னை ஞானேஸ்வரி அவர்களின் கடிதம் பற்றி கூற யோகி தனது தந்தையின் ஆசியை அவர்களுக்கு தெரிவித்து விடும்படி கூறினார். தேசியத்தின் ஆன்மீக அடிப்படை குறித்த எனது வானொலி உரையை கேட்டதாக யோகி  கூறினார், பின்னர் எங்களை கோயிலுக்கு அழைத்துச்சென்று என்னை அங்கிருக்கும் நிர்வாக அலுவலரிடம் அறிமுகப்படுத்தினார். நாங்கள் எங்கள் பதிப்பகத்தின் சில புத்தகங்கள் மற்றும் சில துண்டுபிரசுரங்களையும் அவரிடம் தந்தோம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் லிங்கமாக வழிபட்டு சுற்றிவரும் அருணாச்சல மலைமீது சில தொழிலதிபர்கள் தங்கள் விளம்பரங்களை வைத்து அசுத்தப்படுத்தி உள்ளது பற்றி கூறினோம். அது போன்ற செயல்களை தடுப்பதாக கூறி பகவானிடம் உறுதியளித்தார். கோயில் குளத்தில் மீன் பிடிப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என பகவானிடம் அவர் உறுதியளித்தார். 

நாங்கள் நீண்ட நேரம் பகவானுடன் கோயிலில் அமர்ந்திருந்தோம். அதன்பின் அவர் கோயிலைச் சுற்றி அழைத்துச் சென்றார். என்னையும், விவேக்கையும் அவரது பக்கத்தில் அமரச்சொன்னார். பகவான் நீண்ட நேரம் இந்த சாதுவின் கரங்களைப் பற்றி இருந்தபோது போது, பரவமான ஒரு ஆன்மீக ஆற்றல் என்னுள் செலுத்தப படுவதை இந்த சாது உணர்ந்தான். பகவான் தன்னிடம் ஆசிபெற வந்த ஒரு அன்னையை ஆசீர்வதித்து அவரை தொடர்ந்து தனது பெயரை உச்சரிக்கச் சொன்னார். இந்த சாதுவும் அவர் பெயரை உச்சரித்தான். பின்னர் அவர் எங்களை அவரது இல்லத்திற்கு அழைத்து வந்தார். சென்னையை சேர்ந்த ப்ரீதா பொன்ராஜ் கொடுத்து அனுப்பி இருந்த உணவை எடுத்துக்கொண்டு எங்களிடம் பாத்திரங்களை திருப்பித்தந்தார். நாங்கள் சண்டிகரை சேர்ந்த ப்ரேம்நாத் மகசீன் என்பவர் காஷ்மீர் நிலை குறித்து எழுதிய கடிதத்தைப் பற்றி பகவானிடம் பேசினோம். பகவான், “காஷ்மீரின் பிரச்சனைகள் தீர்ப்பதை என் தந்தை பார்த்துக்கொள்வார்“ என்றார். நாங்கள் ராம்சிலை ஊர்வலம் சென்னையில் நடந்தது குறித்து அவரிடம் பேசினோம். நவம்பர் 19 ராம்சிலை ஊர்வலத்திற்கு ஏற்பட்ட தடைகள் பற்றியும், போலீஸ் அதிகாரிகள் அதைத் தடுத்து விவேக் மற்றும் தொண்டர்களை சில மணி நேரம் சிறை பிடித்து வைத்திருந்தது குறித்தும் பகவானிடம் கூறினோம்,. யோகி ராம்சுரத்குமார் அயோத்தியில் ராமர் கோயில் நிச்சயம் வரும் என்று உறுதி கூறினார். கிளம்பும் முன் விவேக் அவரிடம் தனது தேர்வுகளின் வெற்றிக்கு ஆசி பெற்றான். நிவேதிதாவிற்கு ஆசி வழங்கும் போது யோகி மீண்டும், “நான் ஒரு பிச்சைக்காரன் என்பது உனக்குத் தெரியுமா?“ என்றார். நிவேதிதா பகவான் மீதான ஒரு தமிழ்பாடலின் வரியான, “யாதும் தரும் யாசகா போற்றி“ என்று கூற யோகி தனது வெடிச்சிரிப்பை உதிர்த்தார். நாங்கள் இரவு 7.30 மணிக்கு அவரிடமிருந்து விடைப்பெற்றோம் அவர் வாசல்வரை வந்து வழியனுப்பினார். 

பகவானின் ஆசி ராம்நாம் சப்தாஹத்திற்கு ஒரு அன்பு காணிக்கையின் வடிவில் வந்தது. நவம்பர் 23 அன்று பேராசிரியர். தேவகி இந்த சாதுவின் இல்லத்திற்கு ரூ.812 / – கொண்டு வந்தார் அதனை பகவான் எங்களிடம் ஒப்படைக்க சொன்னதாக கூறினார். அவர் எங்களுடன் முற்பகல் நேரத்தை செலவழித்தார். நாங்கள் அவரின் நெருங்கிய நண்பரான சௌ. விஜயலட்சுமி இடம் தொலைபேசி வாயிலாக பேசினோம். நிவேதிதா “ஹிந்துயிசம் டுடே” என்ற பத்திரிகைக்கான கட்டுரையை தட்டச்சு செய்ய துவங்கினார். அடுத்தநாள் பகவானின் இன்னொரு பக்தரான திரு. E.R. நாராயணன் தனது கவிதை தொகுப்பான “யோகி ராம்சுரத்குமார் — திருவண்ணாமலையின் கடவுளின் குழந்தை“ என்ற நூலை கொண்டுவந்தார், அந்த நூலுக்கு முன்னுரையை இந்த சாது வழங்கியிருந்தான். அவர் என்னிடம் மூன்று பிரதிகளையும் முதல் இரண்டு பிரதிகள் விற்ற பணத்தையும் தந்துவிட்டுச் சென்றார். 

ராம்நாம் சப்தாஹம் சனிக்கிழமை நவம்பர் 25 , 1989 ல் துவக்கப்பட்டது. நகரின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பங்குகொண்ட அகண்ட ராம நாமம் காலை முதல் மாலை வரை நடந்தது பிறகு ஹனுமன் சாலிசா, ஆரத்தி ஆகியவைகளுடன் நிறைவுற்றது. அடுத்தநாள் எங்களோடு இணைந்த லீ லோசோவிக் அடுத்த இரண்டு நாட்களும் அகண்டநாமத்தில் எங்களொடு இருந்தார். லீ லோசோவிக் பக்தர்களிடம் நவம்பர் 27 மாலை உரையாற்றினார். அவரும் அவரது குழுவும் அடுத்தநாள் எங்களிடமிருந்து விடைபெற்றனர். சப்தாஹத்தின் அனைத்து நாட்களிலும் வெவ்வேறு பஜனை குழுக்கள் மற்றும் மாதர் சங்க குழுக்களால் அகண்ட நாம பஜன் நடைப்பெற்றது. பல பள்ளியை சேர்ந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோர் உடன் வந்து சத்சங்கம் மற்றும் ராம்நாம் ஜபத்தில் இணைந்தனர். 

பகவானின் ஜெயந்தியான டிசம்பர் – 1 அன்று மதியம் யோகி ராம்சுரத்குமார், பப்பா ராமதாஸ், மாதாஜி கிருஷ்ணா பாய், மற்றும் தியாகராஜ சுவாமிகள் ஆகியோருடைய திருஉருவ படங்களுடன் ஒரு பெரிய ஊர்வலம் நடைப்பெற்றது. திருவல்லிக்கேணியின் பல தெருக்களின் வழியாக இறுதியாக N.K.திருமலாசார் பெண்கள் உயர்நிலை பள்ளியை அடைந்தது. அங்கே யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் என்ற வண்ணமயமான பதாகை வரவேற்றது. இந்த சாது பகவானின் விருப்படி அந்த விழாவிற்கு தலைமை தாங்கினான். இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முக்கிய நபர்கள் , பாண்டிச்சேரியின் முன்னாள் இணை வேந்தரான டாக்டர் .K. வெங்கடசுப்பிரமணியன், வருமான வரித்துறை கமிஷனரான சௌ. விஜயலட்சுமி, மற்றும் திரு. V.R. நாகசுப்பிரமணியன் ஆவர், பகவானைப் பற்றி உளம் உருக கவிதைகள் புனைந்து, பல பெரும் பாடகர்கள் அவைகளை பாடி, பகவானின் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்ந்து, பகவானின் ஆசியையும் பெற்ற கவிஞர் திரு. பெரியசாமி தூரன் அவர்களின் மகளான திருமதி. சாரதாமணி சின்னசாமி வழங்கிய. இசையுடன் கலந்த பஜனும் பாடலும், ஆன்மாவை கிளறச்செய்தன. பகவானின் ஜெயந்தி விழா மிக வெற்றிகரமாக நிறைவுற்றது. 

யோகி ராம்சுரத்குமார் , மா தேவகி, ஜஸ்டிஸ் அருணாச்சலம் , N.S.மணி

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.1

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Currently being shared for proof reading!
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.1 
குருவே தாய், குருவே அரசன்

 
மே – 12, 1988ல் இந்த சாது குருவைக்காண அவரது இல்லத்திற்கு சென்றான். இதற்கு முன்னதாக ஏப்ரல் 28, 1988ல் வியாழக்கிழமையில், திருவண்ணாமலை பப்பா ராம்தாஸ் அவர்களின் குகையில் யோகியாரிடம் தீக்ஷை பெற்றிருந்தேன் பெற்றிருந்தேன். தத்துவ தர்சனின் சிறப்பிதழில் திடீரென, எதிர்பாராமல் நடந்த தீக்ஷை நிகழ்ச்சி குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்தது. மேலும் அவ்விதழின் தலையங்கத்தில், “பிச்சை எடுக்கும் உரிமை” என்ற தலைப்பில் யோகியின் கட்டளைப்படி, இந்த சாதுவால் எழுதப்பட்ட கட்டுரையும் இருந்தது. இந்த இதழ் பாண்டிச்சேரியில் உள்ள யோகியின் பக்தர்களின் சபையில் வெளியிடப்பட்ட உடனேயே, மே – 8 ஆம் தேதியே, யோகியிடம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதுவும் சில பிரதிகள் அடங்கிய கட்டுக்களை எடுத்துக் கொண்டு, யோகியை தரிசிக்க ஆர்வம் கொண்டிருந்த இளம் பக்தரான V. ரங்கநாதன் என்பவரையும், சாதுவின் மகனான விவேகானந்தனையும் அழைத்துக் கொண்டு சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி இரவு 7.30 மணிக்கு திருவண்ணாமலை அடைந்தார். சாது எப்போதும் தனது வருகை குறித்து முன்பே யோகிக்கு தெரிவிப்பதன் காரணமாக, யோகி அவர்களுக்காக காத்திருந்தார். இந்த பயணம் குறித்து ரங்கநாதன் என்ற பக்தர் தத்துவ தர்சன் இதழில் எழுதும் போது, “நாங்கள் இரண்டு முறைக்கு மேல் அவரது வீட்டின் கதவை தட்டவில்லை, முகத்தில் புன்னகை தழுவ கதவைத் திறக்க வந்த யோகி, எங்கள் வரவை எதிர்ப்பார்த்தது போல் இருந்தது. நாங்கள் அனைவரும் அவர் பாதங்களில் பணிந்தோம். பின்னர் யோகி பேராசியர் ரங்கராஜனின் உடல் நலம் குறித்தும், அவர் திட்டமிடப்பட்டிருந்த ட்ரினிடாட் மற்றும் பிற நாடுகளின் பயணம் குறித்தும் விசாரித்தார். யோகி ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை வரவேற்பதைப் போல் வரவேற்றார்.” 
 
திருவண்ணாமலைக்கு வரும் முன் சாது எழுதிய இரண்டாவது கடிதம் பகவானின் கரங்களை ஏனோ அடையவில்லை. அதில் சாது,  திருமதி. இந்திராணி என்பவர் ட்ரினிடாட்டில் இருந்து யோகியை காண வருவதாக எழுதியிருந்தார். மேலும் சாது யோகியிடம் நேற்று தனக்கு வந்த தொலைபேசி அழைப்பின்படி, திருமதி. இந்திராணி வந்து கொண்டிருப்பதாகவும் அவர் நாளை திருவண்ணாமலை வந்து தங்களோடு இணைவார் என்றும் தெரிவித்தார். யோகி அனைவரையும் வராண்டாவில் அமரவைத்துவிட்டு அவர் படியில் அமர்ந்து கொண்டார், அதுவே அவரது சிம்மாசனம். சாது யோகியிடம் பாண்டிச்சேரி சந்திப்பு குறித்து விளக்கினார். யோகி சாதுவிடம் அவரது எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்து கேட்டதோடு, அவரது அனைத்து விரிவுரைகளும், நிகழ்ச்சிகளும் வெற்றி பெற வாழ்த்தினார். மேலும் சாதுவின் பணிகளுக்கு உதவுவதற்காக ரங்கநாதனையும் யோகி ஆசீர்வதித்தார். 
 
ரங்கநாதன் அன்றைய நிகழ்வுகளைக்குறித்து விவரிக்கையில் குறிப்பிடுகிறார்: “யோகி ராம்சுரத்குமார் தத்துவ தர்சன் இதழ் குறித்து விசாரித்தார். சாது புதிய இதழான பிப்ரவரி – ஜூன் 1988 இதழின் சில பிரதிகளை யோகியிடம் தர, யோகி அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை அங்கிருப்பவர்களுக்கு விநியோகம் செய்யச் சொன்னார். யோகி பேராசிரியரை அவரது தீக்ஷை குறித்த கட்டுரை மற்றும் தலையங்கமான, “பிச்சை எடுக்கும் உரிமை” என்ற கட்டுரையையும் வாசிக்கச் சொன்னார். இந்த இதழ் வெளியிட ஆகும் செலவு குறித்தும், அதனை எவ்வாறு நிறைவேற்ற முடிகிறது என யோகி கேட்க, சாது தனது சில நண்பர்கள் உதவுவதாக சொன்னார். யோகி அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததோடு, மேலும் நிறைய சந்தாதாரர்கள் வரவேண்டும் என ஆசீர்வதித்தார். 
 
“நாங்கள் அனைவரும் ஒர் வரிசையில் அமருமாறு சொல்லப்பட்டோம். பேராசிரியர் வரிசையின் தலைப்பகுதியில் அமர்ந்திருந்தார். இன்னொரு நபரை, யோகி எனதருகில் அமரச்சொன்னார். யோகி பின்னர் ராமநாமத்தை உரத்த குரலில் பாடத்துவங்க, நாங்கள் அனைவரும் அவரோடு இணைந்தோம். எனக்கு அருகில் இருந்தவரை அழைத்த யோகி, அவரைச் சென்று தேரடி மண்டபத்தில் இருக்கும் ஒரு சிறுவனை அழைத்து வருமாறு சொன்னார். அந்தச் சிறுவன் வந்தப்பிறகு அவனை சென்று சில கோப்பைகள் பால் வாங்கி வருமாறு சொன்னார். அந்தச் சிறுவன் சென்றபிறகு பாடல் துவங்கியது. நாங்கள் சிறிதுநேரம் ராமநாமத்தையும், பின்னர் அன்னை பாரதம் குறித்த பாடல்களையும் பாடினோம். பின்னர் யோகி பேராசிரியரின் விரிவுரைகள் குறித்தும் விசாரித்தார், பின்னர் மிகத் தெளிவான குரலில், ‘என் தந்தை உன்னை ஆசீர்வதிக்கிறார் ! உனது விரிவுரைகள் அனைத்தும்  மகத்தான வெற்றியை அடையும். ஆனால் நீ விரிவுரைகளை துவங்கும் முன், சாத்தியமெனில், இந்தப் பிச்சைக்காரனின் பெயரை  ஒருமுறை நினைவில் கொள்ளவும். என் தந்தை உடனடியாக உனக்கான உதவிகளை உடனடியாக அனுப்புவார்.’ பேராசிரியர், பாண்டிச்சேரியில் நடந்த சமீபத்து விரிவுரை மற்றும் யோகி குறித்த அவரது பேச்சு குறித்தும் விளக்கியதோடு, தட்சிணாமூர்த்தியில் தொடங்கி யோகி ராம்சுரத்குமார் வரையிலான குரு பரம்பரை வரிசைக்கு ஒரு வணக்கம் செலுத்தும் பாடலை அங்கு பாடியதையும் விளக்க யோகி தனது கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தார்.” 
 
“பேராசிரியர் தனது சமீபத்து இதழை அச்சடிக்க சில பொருளாதார நெருக்கடிகள் வந்ததாகவும், அதனை தான் யோகியின் பெயரை உச்சரித்து உதவிகளைப் பெற்றதாகவும் கூறினார். யோகி, “ எப்போதெல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ, அப்போது இந்தப் பிச்சைக்காரனை நம்பிக்கையோடு அழையுங்கள். என் தந்தை உடனடியாக உங்களுக்கு உதவுவார். எனக்கும் எனது தந்தைக்குமிடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. யாரெல்லாம் என் பெயரை, அழைக்கிறார்களோ, என் தந்தை உடனடியாக உதவியை அனுப்புவார்.’ யோகி ராம்சுரத்குமார் எழுந்தார். தனது வீட்டிற்குள் நுழைந்து, எங்களுக்காக ஒரு பழைய பாடல் ஒன்றின் பிரதி ஒன்றை அவர் எடுத்து வந்தார். அது ஆர்தர் ஹில்கோட் என்ற ஆஸ்திரேலிய பக்தர் எழுதிய பாடல். அது யோகியின் நாமத்தின் மகிமையை கூறியது. அதனை யோகி பேராசிரியரிடம் தந்து அவரை சிறிது காலம் வைத்திருக்கச் சொன்னார். 
அந்த ஆங்கிலப்பாடலின் தமிழ் மொழிப்பெயர்ப்பு:
 
யோகி ராம்சுரத்குமார்
– ஆர்தர் ஹில்கோட்
 
ஆஸ்திரேலியாவிலிருந்து நான் பயணித்திருந்தாலும்
 உண்மையில் நான் வெகுதூரம் பயணித்திருந்தேன் 
வழியில் வந்த ஒரு புனிதமான மனிதர்
யோகி ராம்சுரத்குமார்.
 
அவரோடு அமைதியில் அமர்ந்தேன் 
அன்பை உள்ளுக்குள் கனமாக உணர்ந்தேன்
இறுதியில் நான் அவர் முன்பிருந்தேன்
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன். 
பலமுறை நான் அவரது ஆசியை பெற்றிருக்கிறேன்
என்னுள் இருக்கும் கடவுள் அசைந்தது
அமைதியில் ஒரு தூண்டல்
தானாகவே நிகழ்ந்தது. 
 
அவர் கூறினார் “எப்பொழுது உனக்கு ஒரு பிரச்சனையெனில்,
அதற்கு நீங்கள் அடிபணிந்து விடுவீர்கள் என உணர்ந்தால்,
நீங்கள் என் பெயரை ஒருமுறை அழையுங்கள் 
என் தந்தையே வருவார்” 
 
பின்வந்த வாரத்தில் பிரச்சினை வந்தபோது
அதனை என்னால் தாங்க முடியாமல் 
நான் யோகியின் பெயரைச் சொல்லி அழைத்தேன்.
அடுத்த கணம் – நான் தந்தையின் பாதுகாப்பில் இருந்தேன்.
 
நான் எனது மிகுந்த நன்றியை தினமும் 
வழங்கப்பட்டு வரும் அருளுக்காக சமர்ப்பிக்கிறேன்.
கண்களை மூடி அமர்ந்தால் 
நான் யோகியின் புனித முகத்தைப் பார்க்கிறேன். 
நான் ஏன் இவ்விதம் தொலைதூரத்திலிருந்து
இவ்வளவு தூரம் கொண்டு வரப்பட்டேன் என
அடிக்கடி ஆச்சரியப்பட்டேன்.
ஆனாலும் நான் அவரை எப்போதும் அன்புடனே பார்ப்பேன்.
                 –யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு.
 
“ஒரு மனிதன் எங்களோடு இணைந்து வரிசையில் அமர்ந்தார். வெளியே சென்றிருந்த சிறுவன் சில கோப்பைகள் பாலோடு வந்தான். யோகிக்கு கொண்டு வந்த பால் எனக்கு பிரசாதமாக கிடைக்குமா என்று ஆர்வத்தோடு எண்ணிக்கொண்டிருக்க, ஆச்சர்யமூட்டும் வகையில் யோகி பேராசிரியரின் மகனான விவேக் இடம், அங்கிருக்கும் அனைவர் முன்பும் ஒரு கோப்பை பால் வைக்குமாறு கூறினார். அங்கிருந்தவர்களுக்கு போதுமான அளவு கோப்பையும், பாலும் இருந்தது. பேராசிரியர் ஒரு சிரட்டையை பாலினை ஊற்றுவதற்காக கொண்டுவந்து தர அதில் பால் ஊற்றப்பட்ட சிரட்டையை கையில் வாங்கி அதிலிருந்து சிறிது பாலை தனது சிரட்டையில் ஊற்றிக் கொண்டு அதனை ஆசீர்வதித்து கொடுத்தார். குரு ஆசீர்வதித்த சிரட்டைக்கும் பார்வை இருக்கும் என்பது போல் அந்த சிரட்டையில் கண்களைப் போன்று இரண்டு அடையாளங்கள் இருந்ததை நாங்கள் அந்த சிரட டையை கவனித்து கண்டறிந்தோம். 
 
“யோகி தனது தெய்வீக குரலால் ராமநாமத்தை பாடத்துவங்கினார். அவரது ஆன்மாவைக் கிளறும் தெய்வீக குரலானது ஆன்மாவை ஊடுருவும் வண்ணம் அமைந்தது. நாங்கள் வேறு உலகத்திற்குள் பிரவேசித்தோம். எங்கள் குருவே, தெய்வீகத்தாயாகவும் இருப்பவர். மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் அந்நாளின் அனைத்து தேவைகளையும் எங்களுக்கு பூர்த்தி செய்தார். நமக்கான தேவை என்பதே அவர் முன்னிலையில் இருக்காது. யோகியின் இருப்பினால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிரப்பப் பட்டிருந்தோம். “
 
பகவான் ஒரு பக்தரை சாதுவுடன் அனுப்பி உடுப்பி பிருந்தாவன் ஓட்டலில் எங்களுக்கான அறைகளை இரவு தங்கவதற்காக பதிவு செய்யச் சொன்னார். யோகி விவேக்கிடம் ட்ரினிடாடை  சேர்ந்த திருமதி. இந்திராணி அவர்களின் வருகை மற்றும் அடுத்த நாளுக்கான  நிகழ்ச்சி நிரல் குறித்தும் விசாரித்தார். யோகி நாங்கள் அனைவரும் ரமணாச்ரமம் சென்று அங்கே நடக்கும் ஆராதனைவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என விரும்பினார். சாது சென்ற பிறகு, யோகி வராண்டாவில் சிறது நேரம் அமர்ந்து ஆழமாக தனக்குள் மூழ்கினார். சிறிது நேரம் கழித்து சாதுவும், அவரோடு சென்று வந்த நண்பரும் திரும்பி வந்துவிட, நாங்கள் அனைவரும் பாடத்துவங்கினோம். எங்கள் அனைவருக்கும் மெல்ல பசியெடுக்கத்துவங்கியது. உடனே யோகி எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து அவரிடம் சிறிதளவு பணம் தந்து, அவரிடம் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏதேனும் வாங்கிவருமாறு கூறினார். அந்த மனிதர் சென்றவுடன், யோகி, “நாம் ஒன்றாக செலவிட இன்னும் சிறிது நேரம் இருக்கிறது“ என்று கூற நாங்கள். தொடர்ந்து பாடினோம். யோகி திடீரென எழுந்து, வீட்டிற்குள் சென்றார், உள்ளேயிருந்து ஒரு பொரி பொட்டலமும் தண்ணீரும் கொண்டுவந்தார். ரங்கநாதனிடம் அதனைத்தந்து அனைவருக்கும் கைநிறைய பொரியை வழங்குமாறும் கூறிவிட்டு யோகியும் சிறிதளவு எடுத்துக் கொண்டார். எங்கள் அனைவருக்கும் தண்ணீர் குடிப்பதற்கு தந்தார். நாங்கள் தொடர்ந்து நாங்கள் ராமநாமத்தையும், பாரதமாதா மீதான பஜனைகளைப் பாடினோம். 
 
யோகி, சாதுவிற்கு தீக்ஷை தந்தபிறகு அவரது இல்லத்தில் தந்த முதல் இரவு உணவு குறித்து ரங்கநாதன் விவரிக்கிறார்: “யோகி அனுப்பிய மனிதர் எங்களுக்கு உண்பதற்கான உணவைக் கொண்டு வந்தார். யோகி பேராசிரியரின் உணவை அவரிடம் தந்து எங்களையும் உண்ணுமாறு கூறினார். நாங்கள் இனி சாப்பிட முடியாது என்ற நிலையில், யோகி, “வருந்தாதீர்கள், உங்களால் உண்ண முடியவில்லையெனில், பசுவிற்கு கொடுத்து விடுங்கள்” என்றார். ஒரு பசு யோகியின் இல்லத்தின் அருகே நின்றிருந்தது. அவர் எங்களது கரங்களை கழுவிக் கொள்ள தண்ணீரைத் தந்தார். நாங்கள் மேலும் சிறிது நேரம் அவரோடு அமர்ந்திருந்தோம். மொத்த நேரமும் நாங்கள் ராமநாமத்தை சொன்னோம். அதன்பிறகு யோகி எங்களை தங்கும் விடுதிக்கு சென்று ஓய்வெடுக்குமாறு கூறினார். நாங்கள் யோகியின் பாதங்களில் விழுந்து வணங்கி விடைப்பெற்றோம்.” சாதுவிற்கு மறக்க இயலாத நினைவாக அந்த இரவுணவு அமைந்தது. யோகி சாதுவினருகே அவரது சிம்மாசனமான படிக்கட்டில் அமர்ந்து கொண்டார். தனது சீடனான சாதுவின் தட்டிலிருந்த சாம்பார் மற்றும் சட்டினியில் ஊறிய தோசையை, சாது முழுங்க தயங்கியபோது யோகி அதனை எடுத்து சாப்பிட்டார்.  மூன்று மணிநேரம் யோகியோடு செலவழித்தப்பின் நாங்கள் எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தோம். 
 
சாது மறுநாள் காலை எழுந்து தனது வழக்கமான சடங்குகளான சந்தியாவந்தனம் போன்றவற்றை முடித்தார். சாது விவேக் மற்றும் ரங்கநாதனை ரயில் நிலையம் சென்று திருமதி. இந்திராணியை அழைத்துவரச் சொன்னார். ஆனால் இன்ப அதிர்ச்சியாக சாதுவின் குருவான யோகி ராம்சுரத்குமார் ரங்கராஜன் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அதிகாலையிலேயே வந்து சேர்ந்தார். சாது அவரை வரவேற்று தனது படுக்கையில் அவரை அமரவைத்தார். அதே நேரத்தில் விவேக், ரங்கநாதனுடன் திருமதி. இந்திராணியும் வந்து சேர்ந்தார். நாங்கள் எங்கள் அனைவருக்கும் காபியை ஆர்டர் செய்தோம். பகவான் கூறினார், “இந்தப் பிச்சைக்காரன் உங்களோடு கோயிலுக்குச் சென்று அங்கே சிறிது நேரம் செலவழிக்க விரும்புகிறான். நீங்கள் அனைவரும் தயாராக இருக்கிறீர்களெனில், நாம் அனைவரும் அங்கே இப்போதே போகலாம்.” என்றார். ரங்கநாதன் மட்டும் குளியலை முடிக்காதமையால் சிறிது தயங்கினார். அதற்கு பகவான், அனைவரும் தயாராகும் வரை தான் காத்திருப்பதாக கூறினார். நாங்கள் அமர்ந்து சிறிது நேரம் ராமநாமத்தை சொன்னோம். ரங்கநாதன் தயாரானவுடன், பகவான் எழுந்து எங்களை அறையை பூட்டிவிட்டு தன்னோடு வருமாறு கூறினார். 
 
யோகி கோயிலுக்குச் செல்லும் போது ஒரு அரசனைப்போல் ராஜநடைப்போட்டுச் சென்றார். நாங்கள் அவரைப் பின்தொடர்ந்து ஒரு உண்மையுள்ள ஊழியனைப் போல் சென்றோம். ரங்கநாதன் இதைப்பற்றிக் குறிப்பிடும்போது மிகச்சரியாக கூறுகிறார்: “ நேற்று அவர் ஒரு இரக்கமுள்ள தாயாக முன்னிரவில் காட்சியளித்தார். ஆனால் இப்போதோ அவர் அனைத்து சக்திகளும் கொண்ட அரசனைப் போல் காட்சியளித்தார்”. அவர் கோயிலுக்குள் நுழையும் போது, அது ஜூலியஸ் சீசர், ரோம நாட்டின் அரண்மனைக்குள் நுழைவதைப் போல் இருந்தது. கோயில் இருக்கும் சாலையின் இரண்டு புறங்களிலும் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்கள் அவரை கைகளைக் கூப்பி வணங்கினர், யோகியும் பதிலுக்கு அவர்களை தன் கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்ததோடு, அங்கிருந்த அனைவரின் முகத்தையும் ஆர்வத்தோடு பார்த்தார். தனது பாதங்களில் விழுந்து வணங்கிய பக்தர்களையும் அவர் ஆசீர்வதித்தார். 
 
கோயிலின் வளாகத்தில் நுழைந்த யோகி, வலது புறமாக திரும்பி எங்களை பிரகாரத்தின் ஒரு மூலையை நோக்கி வழிநடத்தினார். அவர் பிரகாரத்தின் வெளியே நின்று கொண்டிருந்த பெரிய மரத்தை பார்க்குமாறு சொன்னார். இரண்டு பெரிய தேன் கூடுகளும் அதிலிருந்து தேனானது சொட்டிக்கொண்டும் இருந்தது. யோகி அவைகளை தனது அரசவையின் பெருமை மிகுந்த உடைமை என்பதைப் போல் பார்த்தார். யோகி அந்த தேன் கூடானது துவக்கப்பட்டது முதல் அடைந்த வளர்ச்சியை தொடர்ந்து கவனித்திருப்பார் என்றே தோன்றியது. இயற்கை அன்னையின் சுயநலமில்லாத கொடையைக் கண்டு வியந்த யோகி அதிலிருந்து  அனைவரும் பாடம் கற்க வேண்டும் என விரும்பினார்.. தேன்கூடுகளை சிறிதுநேரம் கவனித்துக் கொண்டிருந்த யோகி எங்களை நேரடியாக கோயிலின் உள்ளே இருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அழைத்துச் சென்றார். தட்சிணாமூர்த்தி கோயிலின் ஸ்தல விருட்சமான மகிழமரத்திற்கு கீழே இருக்கும் சன்னதி ஆகும். நாங்கள் அனைவரும் தட்சிணாமூர்த்தியின் சீடர்களைப் போல் அவர்முன் அமர்ந்தோம். சிறிது நேரம் யோகி மௌனத்தில் ஆழ்ந்திருந்தார், நாங்கள் அனைவரும் அவரது ஞானவார்த்தைகளை கேட்க காத்திருந்தோம். அவர் எங்களிணம் பேசத் தொடங்கினார். அவர் பேசிய தலைப்பு, “வலியத்தாக்கும்  ஹிந்துமதம்“. யோகி, “வலிமையே மதம். எது பலவீனமாக்குகிறதோ அது மதமல்ல.” சாது,  சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை யோகி எதிரொலிப்பதாக உணர்ந்தார். மேலும் யோகி, “ ஆத்மனே, நான், சதையல்ல” யோகி எங்களை நோக்கி, “சந்தனக்குழம்பு மிகவும் குளிர்ச்சியானது. ஆனால் இரண்டு சந்தனக்கட்டைகளை ஒன்றாக உரசினால், அதிலிருந்து தீப்பொறி வரும்.” மேலும், “ இன்றைய தேவை, “வலியத்தாக்கும்  ஹிந்துமதம்“. நீங்கள் தொடர்ந்து பாவம் செய்ய முடியாது, என் தந்தை, சிவா, மிகுந்த இரக்கம் உடையவர். அவர் மிகுந்த பொறுமையுடையவர். ஆனால் அவர் கோபம் அடைந்தால், எங்கும் பேரழிவே. மஹாபிரளயமே.”
 
திடீரென அங்கே வந்த ஒரு வயதான பெண்மணி, யோகியின் பாதங்களில் விழுந்து வணங்கி, பகவானிடம் தனது புகார்களை சொல்லத் துவங்கினாள், “சுவாமி, போனவாரம் முழுவதும் நான் இங்கு வந்து உங்களைத் தேடினேன் சுவாமி, ஆனால் உங்களை பார்க்கவே முடியவில்லை சுவாமி“ என்றாள். அவள் சுவாமி என குறிப்பிட்டது யோகியை, ஆனால் யோகியோ சிரித்தபடியே அவளது வார்த்தைக் கொண்டு வேறுவிதமாக விளையாடினார். “நீங்கள் இங்கே ஒருவாரமாகத்தான் சுவாமியைத் தேடி வருகிறீர்கள், ஆனால் நானோ சுவாமியை நீண்ட காலமாக தேடி வருகிறேன், இதுவரை என்னால் கண்டறிய முடியவில்லை.” என்று கூறிய யோகி சிறிய இடைவெளி விட்டு, “அவர் இங்கேதான் எங்கோ இருக்க வேண்டும். நீ அவரைத்தேடு, நானும் தேடுகிறேன். சிலர் அவர் இங்கே இல்லை என்கின்றனர். ஆனாம் நாம் அவர் இங்குதான் எங்கேயோ இருக்கிறார் என நினைக்கிறோம். இங்கே அவர் இல்லை என்று சொல்வது தவறு. நமக்கு நம்பிக்கையிருக்குமெனில், அவரை நம்பிக்கையோடு தேடுங்கள். நாம் நிச்சயம் அவரை கண்டுபிடிப்போம். நீ இந்த வழியாகச்  சென்று அவரைத்தேடு, நான் அந்த வழியாகச் சென்று அவரைத் தேடுகிறேன். நாம் நிச்சயமாக அவரை கண்டறிவோம். அவரை நாம் இழக்கமாட்டோம். அவர் நிச்சயமாக இங்கேதான் எங்கேயோ இருக்கிறார். “ என்று கூறிவிட்டு யோகி இடைவிடாது சிரிக்கத் தொடங்கினார். 
 
யோகி எங்களை நோக்கித் திரும்பி பின்வருமாறு தொடர்ந்தார், “வலிமை மட்டிலுமே மதம். பலவீனமாக்கும் எதுவும் மதமல்ல. நீங்கள் அனைவரும் மிகுந்த  சக்தி கொண்டவர்கள், நீங்கள் அனைத்தும்  அறிந்தவர்கள், நீங்கள் பரிபூரண ஆனந்தமானவர்கள். அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்காதீர்கள். நீங்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தால், அனைத்தையும் இழப்பீர்கள். நீங்கள் ஆத்மன் என்று நம்புகிறீர்கள் அல்லவா. அதனை உங்களிடமே சொல்லுங்கள். பல வருடங்களாக அதனை சொல்லி வாருங்கள். அதன்பின் என்ன நடக்கிறதென்று பாருங்கள்.”
 
ரங்கநாதன் மிக மிருதுவாக இந்த இடத்தில் குறுக்கிட்டு, “ஆன்மாவிற்கு துணிவிருக்கிறது, ஆனால் சதையோ பலவீனமாயிருக்கிறது“ என்று கூற, யோகி பதிலளித்தார், “ஆமாம். சதை பலவீனமானதுதான். இந்த உடல் அழுகக்கூடியதே. அதனால்தான் நான் உங்களை ஆத்மனோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளச் சொல்கிறேன். நானொரு ஆத்மன் எனச் சொல்லுங்கள், அதன்பின் என்ன நடக்கிறதென்று பாருங்கள்.” 
 
குருவிடமிருந்து வழிந்த ஏராளமான இந்த ஞானம் குறித்து ரங்கநாதன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ”அவர் உயர்ந்த உண்மைகளை எளிய வார்த்தைகளில் எங்களுக்கு பகிர்ந்தார். அவர் எங்களுக்கு அறிவை தந்தார். முந்தையநாள் இரவு அவர் எங்களுக்கு உணவையும், தங்குமிடத்தையும் தந்தார், அடுத்தநாளே எது உண்மையான அறிவோ அதனை தந்தார். வேறென்ன நாம் அவரிடம் கேட்க வேண்டியுள்ளது?” 
 
இந்திராணி தன்னுடைய மங்களகரமான, தங்கத்திலான, தாலியை யோகி ஆசீர்வதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சாதுவிடம் வைக்க அதனை அவர் யோகியிடம் சமர்ப்பித்தார். யோகி தாலியை தனது கரங்களில் பெற்று சூரியனை நோக்கி உயர்த்திப் பிடித்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்து அதனை இந்திராணியிடம் தந்து அதனை உடனே அணிந்துக் கொள்ளச் சொன்னார். 
 
பின்னர் யோகி எங்களை கோயிலைச் சுற்றி அழைத்துக் கொண்டு சென்று மேற்கு புறத்தில் அமர செய்து,  அருணாச்சல மலையின் நுனியை கவனிக்குமாறு உத்தரவிட்டார், அவரும் அதனை ஐந்தில் இருந்து பத்து நிமிடங்கள் வரை  கவனித்த பின், “வலிமையே மதம்” என்று திரும்பத் திரும்ப கூறினார். கோயிலை சுற்றிவருகையில் யோகி, “ஒரே நிலையில் இருக்கவே முடியாது, ஒன்று நீங்கள் விரிவடைய வேண்டும் அல்லது சுருங்க வேண்டும். நாம் விரிவடைய இதுவே நேரம்.” என கூறி எங்கள் இலக்கை யோகி ராம்சுரத்குமார் காட்டினார். 
 
கோயிலை பிரதட்சணமாக வந்து வடக்கு வாசலை அடையும் போது, யோகி எங்களை ரமணாச்ரமத்தில் நடக்கும் ஆராதனா விழாவில் கலந்து கொள்ள செல்லுமாறு கூறிவிட்டு, எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு அவர் கோயிலுக்குள் நடந்து சென்றார். 
 
இந்த சாது விவேக், ரங்கநாதன் மற்றும் இந்திராணி உடன் ரமணாச்ரமம் நோக்கி நடந்தான். அங்கிருக்கும் ஆசிரம அதிகாரிகளுடன் சிறிது நேரம் செலவழித்தப்பின், விருந்தினர்கள், மற்றும் சென்னையைச் சேர்ந்த சுவாமி தேவானந்தா ஆகியோருடன் சிறிது நேரம் கழித்து விட்டு, நாங்கள் அனைவரும் மேற்கு புறத்தில் உள்ள பேய் கோபுரம் நோக்கி நடந்து மலையேற துவங்கினோம். விவேக், இந்திராணியை தங்கும் அறைக்கு அனுப்பிவிட்டு, இந்த சாதுவோடும், ரங்கநாதனோடும் இணைந்தார். நாங்கள் ஆலமர குகைக்குச் சென்றோம். எங்கே யோகி இந்த சாதுவிற்கு தீக்ஷை அளிப்பு நிகழ்த்தினாரோ அங்கே சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, மலையைவிட்டு இறங்கினோம். நாங்கள் கோயிலைச் சுற்றி இருக்கும் சில பக்தர்களின் இல்லங்களுக்குச் சென்றோம். அதன்பின் மீண்டும் யோகியின் இல்லத்திற்கு திரும்பி அவருடன் மாலைநேரத்தை செலவிட நினைத்தோம். 
 
யோகியின் இல்லத்திற்கு மாலை ஆறுமணிக்கு வந்து சேர்ந்தோம். யோகி வாசலில் எங்களுக்காக காத்திருப்பது போல் அமர்ந்திருந்தார். அவர் தனது வழக்கமான தலைப்பாகையை அணிந்திருக்காமல் தனது தலைக்கேசத்தை அவிழ்த்து விட்டிருந்தார். அவர் ஸ்ரீ அரவிந்தரைப்போல் காட்சியளித்தார். அவர் எங்களை வராண்டாவில் அமரச்சொல்லிவிட்டு எங்களை ஆர்வமாக கவனிக்கத் தொடங்கினார். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பக்தருமான திரு. வீரராகவன் தனது மனைவியோடும், தனது தாயாரோடும் வந்T யோகியிடம் அதிஷ்டான சஞ்சிகையின் சில இதழ்களை தந்தார். 
 
ஒரு பால்காரர் யோகியின் வாசலுக்கு வந்து நின்றார். யோகி விவேக்கிடம் தனது மண்பானையில் பாலை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். விவேக் பாலைப்பெற்று யோகியிடம் தர, யோகி அந்த பானையிலிருந்து நேரடியாகவே பாலை அருந்தத்தொடங்கினார். அங்கிருந்த ஒரு பெண் பக்தர் யோகியிடம் பாலை காய்ச்சி தரட்டுமா என்று வினவ, யோகி அவரிடம், “இந்தப்பிச்சைக்காரன் தனக்கு என்ன கிடைக்கிறதோ அதனை அப்படியே எடுத்துக் கொள்வான். அவன் அனைத்தையும், எதையும் எடுத்துக் கொள்வான்.”
 
ரங்கநாதன் அதன்பின் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார். “யோகி வந்திருந்த வழக்கறிஞரிடம் பேராசிரியரை அறிமுகப் படுத்தினார். அந்த வழக்கறிஞர், பேராசிரியர் குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டபோது, யோகி பேராசிரியரிடம் சகோதரி நிவேதிதா அகாடமி மூலம் செய்யப்படும் வேலைகள் குறித்து விளக்குமாறு கூறினார். பேராசிரியரும் வழக்கறிஞரிடம் அகாடமியின் செயல்பாடுகள் குறித்தும், எப்படி அது துவங்கப்பட்டு எவ்விதம் ஆன்மீக தேசியவாதம் புதுப்பிக்கப்படுகிறது என்பது குறித்தும், யோகியின் ஆசியால் அகாடமியின் இதழான தத்துவ தர்சன் துவக்கப்பட்டது குறித்தும் பகிர, யோகி தனது தலையை அசைத்து அதனை ஆமோதித்தார். வழக்கறிஞர் தத்துவ தர்சன் இதழுக்கு சந்தாதாரர் ஆக விரும்புவதாக கூற, யோகி, “ஆம் எங்களுக்கு நிறைய சந்தாதாரர்கள்” தேவை என்றார். யோகி வழக்கறிஞரிடமிருந்து பணத்தைப் பெற்றார் அது ஒரு ஆண்டு சந்தாவைவிட அதிகமாகவே இருந்தது. யோகி அதனை ஆசீர்வதித்து பேராசிரியரிடம் தந்தார். சாதுவின் கரங்களை சிறிது நேரம் பற்றியிருந்து யோகி தியானித்தார். யோகிஜி வழக்கறிஞரிடம் பேராசிரியரின் விரிவுரைக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பரிந்துரைத்தார். யோகி,  சாதுவின் பணிகள் ஒருபோதும் பணத்திற்காக சிரமம் கொள்ளாது என்றும், தனது தந்தை சாதுவின் உன்னதமான பணிகளுக்கு எப்போதும் உதவுவார் என்றும் ஆசீர்வதித்தார்.“ 
 
ரங்கநாதன் யோகியுடன் நடந்த எங்களுடைய சந்திப்பு குறித்த கட்டுரையை எழுதி முடிக்கும்போது, “குரு எங்களுக்கு உணவு, இருப்பிடம், அறிவு இவைகளோடு செல்வத்தையும் கொடுத்தார். பின்னர் அனைவரையும் அனுப்பிவிட்டு, யோகி எங்களிடம் வேறெதாவது வேண்டுமா என வினவினார். வேறென்ன அவரிடம் கேட்பது? அவர் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அனுப்பினார்“ என்று குறிப்பிடுகிறார்.
 
யோகியிடம் விடைப்பெற்ற நாங்கள் எங்கள் அறைக்கு வந்து சென்னை திரும்புவதற்காக பொருட்களை அடுக்கினோம். இந்திராணி பெங்களூர் சென்றார், நாங்கள் சென்னைக்கான பேருந்தைப் பிடித்தோம். பயணத்தின் போது  எங்கள் அனைவரின் எண்ணமும் யோகியின் முன்னிலையில் நாங்கள் பெற்ற இறையனுபவத்தை மையப்படுத்தியே இருந்தது.
 
ஜெயது ஜெயது ராமசுரதகுமார யோகி, ராமசுரதகுமார யோகி!