Download the word file –> Kannyakumari Mayamma (Tamil)
Contents
- முன்னுரை
- பிரமிக்கவைப்பது வசீகரமுமானது
- கன்னியாகுமரியின் புனித அன்னை மாயீ
- எல்லாம் தாயே
- புனிதத் தாயின் ஆராதனை
- கன்னியாகுமரியின் மாயம்மா
- பக்தர்களின் அனுபவங்கள்
- தாயின் திருவடிகள்
- தெய்வீக மருத்துவர்
- தென்னாப்பிரிக்க பக்தர்கள்
- சகோதரி நிவேதிதா அகாடமிக்கு மாயம்மாவின் வருகை
- அன்னை மாயம்மாவுக்கு அஞ்சலி
- References:
முன்னுரை
சாது ரங்கராஜன் அவர்கள் மாயம்மாவைப் பற்றி 1985 இல் தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய உரையும், அவரது பத்திரிக்கையான தத்துவ தரிசனத்தில் மாயம்மாவைப் பற்றி, 1984, 1985 மற்றும் 1992 ஆண்டுகளில், அவர் எழுதிய சில கட்டுரைகளும் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
******
பிரமிக்கவைப்பது வசீகரமுமானது
ருடால்ப் ஓட்டோ என்ற ஜெர்மானியத் தத்துவஞானியின் “பிரமிக்கவைப்பது வசீகரமுமானது” என்ற இந்த வார்த்தைகளைக் கொண்டுதான் மாயம்மாவை விவரிக்க முடியும். அவர் மாயீ. மர்மமானவர். விளக்கத்திற்கு அப்பாற்பட்டவர். அவரைப் புரிந்துகொள்ள தர்க்க அறிவினால் நமக்கு உதவ முடியாது. அவரை உணர நம்பிக்கை, முழுமையான நம்பிக்கை, மற்றும் பச்சிளம் குழந்தை தாயை முழுமையாக சார்ந்திருப்பது போன்று அன்னையிடம் பரிபூர்ணமாக சரணடையும் மனோபாவம் தேவை.
முக்கடலும் புனிதமான பாரத மாதாவின் பாதங்களை கழுவிச் செல்லும் கன்னியாகுமரியின் மணல் வெளியில் மாயீ அமர்ந்திருப்பார். எப்பொழுதும் அவரை சுற்றி ஒரு சிறு நாய்க் கூட்டம் இருக்கும். அவை காளி தேவியை சுற்றி நடனமாடும் கால பைரவர்கள். மாயம்மா தன்னை சுற்றி இருக்கும் பக்தர்களோடு அந்த நாய்களுக்கும் உணவளிப்பார். அவரைப் பொறுத்தவரை உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், மனிதன், நாய் என்று எந்த பாகுபாடும் கிடையாது. புன்முறுவல் பூக்கும் அவரது முகத்தில் காயத்ரி தேவியின் பிரகாசத்தை பக்தர்கள் காண்கிறார்கள். அவர் குறைவாகவேப் பேசுவார். அவருடைய சொந்த மொழியில் அவர் சொல்லும் சொற்கள், கேட்பவரின் மனோபாவங்களுக்கும் அணுகுமுறைக்கும் ஏற்ப வெவ்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்தும். உயரிய மரியாதை கொடுக்கப்பட்டாலும் அல்லது கேலி செய்யப்பட்டாலும் அவர் எதையும் பொருட்படுத்துவதில்லை.
மாயம்மா எந்த வழிபாட்டையும் போதிக்கவில்லை. அவர் எந்த சமயப் பிரிவையோ அமைப்பையோ சேர்ந்தவர் அல்ல. அவர் மதங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். அவரை ஏற்பவர்களுக்கு மட்டுமல்லாமல் வெறுப்பவர்களுக்கும் சொந்தமானவர். அவருக்கு எந்த ஒரு பிரச்சாரகரோ, பிரதிநிதியோ தேவையில்லை.
யார் இந்த மாயீ? சிலர் அவரை ‘ஜீவன் முக்தர்’ என்று கருதுகின்றனர். யார் அவர்? அவரது பெயர் என்ன? அவர் எங்கிருந்து வந்தார்? அவரது வயதென்ன? இப்படிப்பட்ட எந்த கேள்விக்கும் நம்பத்தக்க, அதிகாரபூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் மாயீ. மர்மமானவர். விவரிக்க முடியாதவர் அல்லவா? எனினும் நமது வேதங்கள் அவரைப் பற்றி கூற முற்படுகின்றன. ஸ்ரீமத் பகவத் கீதை கூறும் அறிவு விளக்கத்தை இங்கே காண்போம்.
அவருக்கு ஆசைகள் எதுவும் இல்லை. அவரது ஆன்மா அவரிடத்திலேயே ஆறுதல் கொள்கிறது. எதிரான சூழ்நிலை அவரை மனக்கலக்கமடைய செய்யாது. கௌரவமும், வசதிகளும் அவரை களிப்புறச் செய்யாது. எந்த உயிரினத்துடனும் பிணைப்போ அல்லது வெறுப்போ அவருக்கு கிடையாது. பொருட்களாலான உலகத்திலிருந்து தன் புலன்களை விலக்கி கொண்டு, தன்னுடைய ஓட்டினுள் வாழும் ஆமையைப் போல் வாழ்கின்றார். அனைத்திலும் இறைவனைக் காணும் அவருக்கு புலன்களுக்கு உணவூட்டும் பொருட்களின் மீது ஈடுபாடு இல்லை. கட்டுப்பாடான மனம், மற்றும் தெய்வீகமான ஞானம் மூலம் இவர் புனிதமான அமைதியான உணர்வு நிலையை பெற்றுள்ளார். ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்து, காட்சிக்கு அப்பாற்பட்டவைகளைக் காண்கின்றார்.
நிரந்தரமாக கர்ஜித்து கொண்டிருக்கும் சமுத்திரத்தையும் மற்றும் தென்முனையில் இருக்கும் நமது தாய் மண்ணையும் காணவரும் மனிதப் பெருங்கடல் எழுப்பும் ஒலியின் நடுவே, அவர் சாந்தமாக, அமைதியாக, சந்தோஷமாக, இன்பநிலையில் அமர்ந்திருப்பார். அவருக்கு ‘நான்’, ‘எனது’ என்ற எண்ணம் கிடையாது.
ஆதி சங்கரரின் விவேக சூடாமணியை வாசித்தவர்கள், அதன் அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும், அம்மாவை பார்த்தால், இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள இயலும். “மூன்று விஷயங்கள் அரிது. அவை இறைவனின் அருளினால் மட்டுமே பெறமுடியும்” என்கிறார் சங்கரர். “அவை மனித பிறவி, முக்தி அடைய விழைவு மற்றும் ஒரு பெரும் துறவியை சரணடைதல்”. அம்மாவை பார்க்க முடிந்தவர்களுக்கு வாழ்வில் வேறு என்ன இருக்கிறது சாதிப்பதற்கு?
அம்மாவின் மேன்மையான பார்வை “தத்துவ தரிசனம்”. அதை தாண்டி “பார்க்க” எதுவுமில்லை. இந்த ஆன்மீக பத்திரிகை, “தத்துவ தரிசனம்”, மாயம்மாவை “பார்க்க” விதிக்கப் பட்டவர்களின் மனதிற்குத் தேவையானவற்றை வழங்கவும், அவர்களை முடிவில்லாப் பேரின்பத்தை அடைவதற்கான பாதையில் முன்னேற்றவும் முற்படுகிறது. இந்த தெய்வீகத் தாயின் அருள் முழு மனித குலத்தின் மேல் பொழியப்படட்டும்!
(தத்துவ தரிசனம் பிப்ரவரி – ஏப்ரல் 1984)
******
கன்னியாகுமரியின் புனித அன்னை மாயீ
ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவேசர்வார்த்த சாதிகே । sசரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ।
பரமபூஜணீய குருதேவா, பூஜ்ய சுவாமி சஹஜனந்தா, தாய்மார்களே, சகோதரர்களே! அனைவருக்கும் எனது வணக்கம்.
இன்றைய சத்சங்கத்திற்க்கு வரும் பொழுது, இன்று ஆற்ற வேண்டிய உரைக்கான தலைப்பு எதுவும் என் மனதில் எழவில்லை. ஆனால் இங்கு வந்ததும், சுவாமிஜி எனக்கு ஒரு தலைப்பு அளித்தார். பேசுவதற்கு எதுவுமே இல்லாத ஒரு தலைப்பு. அது என்னவென்றால் “கன்னியாகுமரியின் தாய் மாயீ.”
வேதங்கள் மூலாதாரமான பரம்பொருளை பற்றிக் கூறுகிறது – “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸ:” – “மனதால் அடைய இயலாமல் எங்கிருந்து வார்த்தைகள் திரும்புகிறதோ அவர்தான்” என்று. நமது மனதால் அவரைப் புரிந்துகொள்ளவோ, வார்த்தைகளால் அவரை விவரிக்கவோ இயலாது. அவர் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவர். என்னால் எப்படி அம்மாவை பற்றிப் பேச முடியும்? அவர் உணரப்படவேண்டியவர். பேசப்படவேண்டியவர் அல்ல. அவரை அறிய வேண்டுமென்றால், நீங்கள் வந்து அவர் காலடியில் அமர வேண்டும்.
ஏனென்றால் இன்றுவரை யாரும் அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை. பெரும்பாலானோர் முயற்சி செய்து இயலவில்லை. அவர் ஒரு மர்மமான அதிசயக் காட்சி. அம்மாவை பற்றி சில விஷயங்கள் கூறுவதற்கு முன், தாய்மையை பற்றி சிலவற்றை கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.
எல்லாம் தாயே
நமது ரிஷிகள், நடைமுறையில் கடைபிடிக்கக் கூடிய வேதாந்தத்தை நமக்குப் பயிற்றுவித்தார்கள். தைத்ரிய உபநிஷத்தில், ஒரு குரு தன் சீடனிடம் பட்டமளிப்பு உரையாற்றுகிறார். அவனிடம், ”மாத்ருதேவோ பவ! பித்ருதேவோ பவ! உன் தாய் உனது தெய்வமாக இருக்கட்டும். உன் தந்தை உனது கடவுளாக இருக்கட்டும்”, என உறைக்கின்றார். அவர் தாய்க்கு முதலிடம் அளிக்கின்றார். ஏன்? அவரில்லாமல் பிரபஞ்சத்தில் எதுவும் அசையாது.
கேனோபநிஷத்தில் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. இது பத்து உபநிடதங்களில் முக்கியமான ஒன்று. ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் ஒரு கசப்பான போர் ஏற்பட்டது. அசுரர்கள் தோற்றுவிட்டனர். தங்கள் வெற்றியை பற்றி தேவர்கள் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டனர். ஒவ்வொருவரும் தன்னுடைய பலத்தினால்தான் அசுரர்களை வென்றதாக பெருமை அடித்துக் கொண்டனர். “நான் தான் அனைத்தையும் எரித்து பஸ்மமாக்கினேன்” என்றார் அக்கினி. கடல் கடவுள் வருணன், “இல்லை, இல்லை, நான் தான் எல்லா இடத்தையும் வெள்ளமாக்கி அவர்களை அழித்தேன்” என்றார். காற்றுக் கடவுள் வாயு, அவர் தான் அனைத்தையும் பறக்க வைத்ததாக கூறினார். இவ்வாறு, யார் அந்த போரின் நாயகன் என்பதில் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென்று, ஆதிசக்தி ஒரு மின்வெட்டொளி போல அடிவானத்தில் தோன்றினாள். அது என்னவென்று தெரியாமல், தேவர்கள் குழம்பிப் போயினர். தேவேந்திரன் அக்கினியை அழைத்து, அது என்னவென்று அறிந்துவரக் கூறினார். அக்கினி அந்த அதிசய ஒளியிடம் சென்று “மர்மமாக இருக்கின்றீர்களே! நீங்கள் யார்?” என்று கேட்டார். அந்த அதிசய சக்தி அக்கினியிடம் “நீங்கள் யார்?” என்று கேட்டது. “நான் அக்கினித் தேவன். அனைத்தும் அறிந்தவன்! பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் ஒரு கையளவு பஸ்மமாக ஆக்க என்னால் இயலும்!” என்றார் அக்கினி. அந்த அதிசய சக்தி ஒரு புல்லை அக்கினியின் முன் வைத்து, அதை எரிக்குமாறு கேட்டுக் கொண்டது. அக்கினி இச்சிறு வேலையை நினைத்து எரிச்சல் அடைந்தார். ஆனால் தன் முழு சக்தியைக் கொண்டும் அந்த புல்லை எரிக்க முடியவில்லை என்று விரைவில் அறிந்தார். தோல்வியோடு திரும்பினார். இந்திரன் வாயுவை அனுப்பினார். அவரிடமும், “நீ யார்?” என்று அந்த அதிசய சக்தி கேட்டது. “நான் வாயு பகவான். என்னால் அனைத்தையும் ஊதித் தள்ள இயலும்!” என்று பெருமையடித்தார். ஆனால், அவரால் அந்த புல்லை அசைக்க முடியவில்லை என்று உணர்ந்து, தோல்வியோடு திரும்பினார். கடல் கடவுள் வருணனாலும் அந்த புல்லை நனைக்கக் கூட இயலவில்லை. இப்போது இந்திரனே மிக பணிவோடு அந்த அதிசய சக்தியிடம் சென்றார். அந்த மின்வெட்டொளி மறைந்து, உமா ஹைமாவதி, தெய்வீகத் தாய், யாரில்லாமல் பிரபஞ்சத்தில் எதுவும் அசையாதோ அவர் தோன்றினார். அவர் தன்னை, அனைத்து தெய்வங்களுக்கும் சக்தி அளிக்கின்ற பெரும் சக்தியாக தெரியப்படுத்தினார். சக்தி இல்லாமல் சிவனும் சவமே. உண்மை என்னவென்றால் இந்த பிரபஞ்சம் முழுவதுமே தாயின் திருவிளையாடல் தான்.
தமிழ் நாட்டின் புகழ்பெற்ற தேசபக்த கவிஞர், மகாகவி சி. சுப்ரமணிய பாரதி, ஏராளமான எழுச்சியூட்டும் தேசப்பற்று பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களை தமிழில் பாடியுள்ளார். அவர் ஆங்கில மொழியிலும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் என்பது சிலர் மட்டுமே அறிந்த உண்மை. அவருடைய ஆங்கில எழுத்துகளை வாசித்தால், மகாயோகி ஸ்ரீ அரவிந்தரின் ஆற்றல் வாய்ந்த எழுத்துகள் போன்றிருப்பதை கண்டு அரவிந்தரின் வியந்துவிடுவீர்கள். ஸ்ரீ அரவிந்தர் அவர்கள் இங்கிலாந்து நாட்டில், உலகியல் அறிவு நிறைந்த மேற்கத்திய சுற்றுசூழலில் வளர்ந்தவர். ஆனால், பாரதியோ பல்கலைக்கழகக் கல்வி கூட அதிகமாக பெறாத, சாதாரண வாழ்க்கை வாழ்ந்த ஒரு சாமானிய மனிதர். இருப்பினும் அவரது ஆங்கில எழுத்து நடையும், ஆற்றலும், ஸ்ரீ அரவிந்தர் அவர்களை போன்றிருக்கின்றன. அவரது ஆங்கில எழுத்துக்கள், “அக்கினி மற்றும் பிற கவிதைகள், மொழிபெயர்ப்பு கட்டுரைகள், மற்றும் உரைநடைப் பகுதிகள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளன. அவரது ”மாத்ரு பூஜை” என்ற கட்டுரையில், அவர் புனிதத் தாயின் ஆராதனை பற்றி எழுதியுள்ளார். “தெய்வத்தந்தை ஒரு இலட்சிய உரு. தெய்வத்தாயே நிதர்சனமான உண்மை. நான் தூய உணர்வாகிய பரம்பொருளுடன் ஒன்றியுள்ளேன் என்பது ஒரு ஆன்மீக உணர்வு. வெளிப்படுத்தப்பட்ட உலகத்துடன் நான் ஒன்றியுள்ளேன் என்பது ஒரு உண்மையான, அன்றாட அனுபவம். நிச்சயமாக இறுதியில், லட்சியமும் நிதர்சனமும் ஒன்றே. ஆனால், இந்த பூமியின் குழந்தைகளாகிய நாம், இறைவனின் தாய்மையில் ஒரு நெருக்கமான உறவை, ஒரு அன்பான நல்லுறவைக் காண்கிறோம். அவளைக் காண நம் முன் ஆலயங்களை எழுப்ப தேவையில்லை; எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும், எக்கணமும் அழகாக இருக்கும் இயற்கையாக அவள் வெளிப்பட்டு நிற்கிறாள்.” அந்தப் பரம்பொருளை உணர, நாம் அவளையே வணங்க வேண்டும்.
புனிதத் தாயின் ஆராதனை
ஆராதனை என்றால் என்ன? ஆராதனைக்கு இன்றியமையாத் தேவை பக்தி அல்லது முழு ஈடுபாடு மட்டுமே. ‘பக்தி’ என்றால் என்ன? பக்தி சூத்திரத்தில் நாரதர், “பரம ப்ரேம ஸ்வரூபா” – “மிக தீவிரமான அன்பின் வெளிப்பாடு” என்று பக்திக்கு விளக்கமளிக்கிறார். யாரிடத்தில் நாம் மிகவும் தீவிரமான அன்பைக் காட்ட முடியும்? எவராலும் தன்னை பெற்றெடுத்த தாயிடமே மிக தீவிரமான அன்பை பொழிய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குழந்தைக்கும் அது யாரை அதிகம் விரும்புகிறது என்பது தெரியும். அம்மா என்னும் சொல்லே நம் இதயங்களில் அன்பு மற்றும் பாசத்தின் தீவிர உணர்வைத் தூண்டுகிறது. ஆகவே, அந்த பரம்பொருளை தெய்வீகத் தாயாக நாம் கருதும்போதுதான் தீவிர பக்தி வெளிப்படும். பழங்காலத்திலிருந்தே, இந்து மதத்தில், தெய்வங்களின் மனைவிமார்கள் அந்த தெய்வங்களையும் விட தீவிரமாக வணங்கப்படுகிறார்கள். அழிக்கும் சக்தியான சிவனை விட சக்தியே, நமக்கு நெருங்கியவரும், அன்பிற்குரியவருமாகும். செல்வத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவதற்காக, மகாலட்சுமியின் மூலமாக, லட்சுமி பூஜையின் மூலம், எளிதில் பொருளின் கடவுளான மகாவிஷ்ணுவை நாம் வழிபடலாம். மகாசரஸ்வதியிடம் சென்று வேண்டினால், அனைத்து ஞானமும் பெறலாம். தந்தையை விட தாயே நமக்கு அதிக அன்பிற்குரியவராக இருப்பார். மிக சிறந்த அத்வைத ஆச்சார்யரான ஆதிசங்கரர், “குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி” – “கெட்ட மகன் பிறக்க இயலும்; எந்த காலத்திலும் கெட்ட தாய் இருக்கவே முடியாது” என்கிறார். நாம், நம் தாயிடம், கொடூரமாக நடந்து கொண்டாலும், அவர் ஒருபோதும் நம்மிடம் கொடூரமாக நடந்து கொள்வதில்லை.
இதற்கு ஒரு சுவாரசியமான கதையுள்ளது. ஒரு சமயம் ஒரு பேதையான முட்டாள் இருந்தான். கெட்ட நடத்தைகளுடைய ஒரு பெண்ணின் வீட்டிற்கு செல்வதை பழக்கமாக வைத்திருந்தான். அவளை திருப்தி செய்ய, அவன் வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துச் சென்று அவளிடம் கொடுப்பான். அவனது தாய், மிகவும் ஏழை. அவர் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அவன் ஒருபோதும் அவரை அக்கறையோடு பார்த்ததில்லை. ஆனால், அந்த தீய எண்ணமுடைய வேசி, அவன் தாய் இருக்கும் வரை, அவனை முழுமையாக அடைய இயலாது என்று எண்ணி, அவன் தாயை ஒழித்துக்கட்ட முடிவு செய்து ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் அந்த இளைஞனிடம், “இங்கே பாருங்கள், நான் பிணியுற்றிருக்கின்றேன். உன் தாயின் இருதயத்தை சமைத்து உண்டால் மட்டுமே, நான் குணமாவேன் என்று மருத்துவர் கூறுகிறார். எனவே, தயவுகூர்ந்து சென்று அதை கொண்டு வாருங்கள்” என்று கூறினாள். அந்த இளைஞன் கவலையுற்றான். அவன், “நான் எவ்வாறு என் தாயிடம் சென்று அவரது இருதயத்தை தருமாறு கேட்க இயலும்?” என்று நினைத்தான். அவன் வீட்டிற்கு மகிழ்ச்சியற்று சோர்வான நிலையில் வந்தான். இதைக்கண்டு அவன் தாய், “மகனே, நீ மிகுந்த கவலையுற்று இருப்பது போல் தெரிகிறது. என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அப்போது அவன் அந்த பெண் கூறியதை தன் தாயிடம் கூறினான். அவன் தாய், “அவ்வளவு தானே! உன்னுடைய மகிழ்ச்சிக்காக, நான் என் இருதயத்தை தர தயாராக உள்ளேன்,” என்று கூறினார். அந்த தாய் தன் மகன், தன் இருதயத்தை எடுப்பதற்காக, தன்னையே வெட்டிக் கொண்டாள். அந்த இளைஞன், தன் தாயின் இருதயத்தை எடுத்துக் கொண்டு, அந்த வேசியின் வீட்டிற்குச் செல்லும் வழியில், கல் தடுக்கி நிலத்தில் விழுந்தான். அவன் கையில் வைத்திருந்த இருதயம், “மகனே, காயம் அடைந்துவிட்டாயா?” என்று அவனிடம் கேட்டது. இதுவன்றோ தாயின் இதயம்!
அதனால்தான், “ப்ரம்ம சத்யம், ஜகத் மித்யா” – “ப்ரம்மம் மட்டுமே உண்மையானது, உலகம் மாயையானது” என்று கூறிய மிகச் சிறந்த பிரம்மஞானியான ஸ்ரீ சங்கராச்சார்யார், தெய்வத் தாய் காமாக்ஷியின் வடிவத்தில் பாரமார்த்திக மெய்மையின் மீதான தனது பக்தியை பொழிந்தார். இவர், கனகதாரா ஸ்தோத்திரம், மீனாக்ஷி பஞ்சரத்னம் மற்றும், மூகாம்பிகையாகவும், சாரதாவின் வடிவிலும் இருக்கும் அன்னையைப் போற்றி பல பாடல்களை எழுதியுள்ளார். அவர் தாயின் அனைத்து கோயில்களிலும், தாயின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து விடுவார். ஏனென்றால், உயர்ந்த ஆன்மிக நிலை அடைந்தவரும் கூட, பரம்பொருளுடன் தன் இணைப்பை, தாயின் மூலமாகவே தேட இயலும்.
தாயை வழிபடுவது இந்து மதத்தில் மட்டுமல்ல. கிறித்துவ மதத்திலும் கூட கன்னி மேரியின் வழிபாடு என்னும் கருத்தை நாம் காண்கிறோம். கன்னி மேரி கன்னியாகுமரியிலிருந்து வேறுபட்டவர் அல்ல. சமஸ்கிருதத்தில் ‘கன்யா’ என்றால் ‘கன்னி’. ‘மேரி’ என்பது தமிழில் தெய்வீக தாயை குறிப்பிடும் ‘மாரி’ என்ற சொல்லின் மாறுபாடே. தெய்வீக தாயான பராசக்தியே மாரியம்மன் என்று போற்றப்படுகிறார். அம்மன் என்றால் தாய். தாயின் ‘கன்னித்தன்மை’ என்ற கருத்தின் தோற்றம் பழமையானது. அன்னை பார்வதி, வடக்கு முனையில் இமய மலையின் உச்சத்தில் இருக்கும் சிவபெருமானின் கரம் பிடிக்க, பாரதத்தின் தெற்கு முனையான கன்னியாகுமரியில் கன்னியாகுமாரியாக ஒற்றை காலில் தவமிருந்த கதையில் தாயின் ‘கன்னித்தன்மை’ என்ற கருத்து இருக்கிறது.
புகழ்பெற்ற மேற்கத்திய எழுத்தாளர் ஈ.ஏ. பெய்ன், சக்தி வழிபாட்டு முறை குறித்து “தி சாக்தாஸ்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார், அதில் அவர் இந்திய சக்தி வழிபாட்டில் கன்னி மேரி என்ற கருத்தின் தோற்றத்தை தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்த சக்தி வழிபாட்டு முறை இந்தியாவுக்கு வெளியே பண்டைய பாபிலோனியா, கிரீஸ், கிரீட், எகிப்து மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. பாபிலோனிய வார்த்தையான உம்மு, அகாடியன் உம்மி மற்றும் தாய்க்கான திராவிட சொல்லான அம்மா ஆகியவை நம் அனைவரின் தாயான உமாவை குறிக்கும் மாறுபட்ட சொற்களே. ஒரு முத்திரை மோதிரத்தில் ஒரு கிரேட்டன் தெய்வம், இரண்டு சிங்கங்களால் சூழப்பட்டு, ஒரு மலையின் உச்சியில் நிற்கின்ற ஒரு தாயின் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிங்கங்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு கிரேக்க தாய்-தெய்வம் உண்டு. மற்றும் வனவிலங்குகள் அவளது காலில் மண்டி இட்டபடி இருக்கும் ஒரு ஆசியா மைனரின் தாய் தெய்வமும் உண்டு. இவை அனைத்தும் தாயின் பல்வேறு வடிவங்களே. மன்னர் ஹவிஷ்காவின் நாணயங்களில், தேவியின் உருவம் ஓம்மோ என்கின்ற ஒரு கிரேக்க சொல்லுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இது உமா என்ற சொல்லின் மொழிபெயர்ப்பே. தாய் பார்வதியின் வாகனம் சிங்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மிகச்சிறந்த தாயின் வழிபாடு உலகம் முழுவதும் பரவி அனைத்து பண்பாடுகளையும் மக்களின் இதயங்களையும் கவர்ந்துள்ளது.
கன்னியாகுமரி ஒரு புனித உறைவிடம்
பராசக்தியின் புறவடிவமே பாரதவர்ஷம். நம் முன்னோர்கள் எவ்வாறு நம் தாய்நாட்டை மகாசக்தியின் வெளிபாடாக கருதி வழிபட்டனர் என்பதை முன்பே விளக்கினேன். கன்னியாகுமரியிலிருந்து இமையமலைக்கு இடையில் ஐம்பத்தி இரண்டு சக்திபீடங்கள் உள்ளன. நம் புனித மண்ணில், அனைத்து காலங்களிலும், மிக சிறந்த முனிவர்களும், தீர்க்கதரிசிகளும் அவதரித்துள்ளனர். குருதேவர் சிவானந்தா இந்தியாவின் முனிவர்கள் மற்றும் புனிதர்கள் பற்றி நிறைய எழுதியுள்ளார். வியாசர், யாக்ஞவல்கியரிலிருந்து ஏக்னாத், துக்காராம், ராம்தாஸ், ராமகிருஷ்ணர் மற்றும் ரமணமகரிஷி வரை, வேத காலம் முதல் நவீன காலம் வரை தோன்றிய அனைவரைப் பற்றியும் எழுதியுள்ளார். அனைத்து முனிவர்களும் அன்னை வழிபாட்டோடு நெருக்கமாக இருந்துள்ளனர். அன்னை பராசக்தி நின்று தவம் புரியும் இடம் கன்னியாகுமரி. கன்னியாகுமரியில் முக்கடல் சூழும் விவேகானந்தர் பாறையில், ஒரு கண்ணாடி பெட்டகத்தில் இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு அடிச்சுவட்டை நீங்கள் காண்பீர்கள். பாறையில் கட்டப்பட்டிருக்கும் விவேகானந்தர் மண்டபத்தின் எதிரில் இது உள்ளது. இது ஸ்ரீ பாத மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. முதலில் இப்பாறை ஸ்ரீபாதசிலா என்றே அழைக்கப்பட்டது. பின்பு விவேகானந்தர் இதில் அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தபின் விவேகானந்தர் பாறை என்று பிரசித்தி பெற்றது. ஸ்ரீ பாதம் என்றால் புனிதத்தாயின் திருவடிகள் என்று பொருள். பார்வதி தேவி இன்றும் இங்கு தான் தவம் புரிகிறார். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்தபோது அவரிடம் பணம் எதுவும் இல்லை. அதனால் கடலை கடந்து பாறைக்கு ஏற்றிச் செல்ல படகிற்கு கொடுக்க அவரிடம் எதுவும் இல்லை. ஆனால் அப்பாறையின் மீது வீற்றிருக்கும் தாயை வழிபடும் எண்ணத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, அந்த பாறையை அடைய முடிவு செய்தார். அவர் எதை பற்றியும் கவலை கொள்ளவில்லை. தன் உயிருக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று நீந்திச் சென்றாவது பாறையை அடைந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அவர் உடனடியாக கடலில் குதித்து கொந்தளிக்கும் கடல் அலைகளின் நடுவே நீந்தி பாறையை அடைந்தார். இங்கு அமர்ந்து தாய் நாட்டின் உருவில் இருக்கும், தாயை நினைத்து மூன்று நாட்கள் தியானம் செய்து தாயின் அருளை பெற்றார். அதனால் கன்னியாகுமரி மிகவும் புனிதமான இடம்.
கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரம் என்று மற்றொரு இடம் உண்டு. ‘சுசீந்திரம்’ என்ற பெயருக்கு ஒரு காரணம் உண்டு. மாமுனிவர் அத்ரி மற்றும் அவரது மனைவி அனுசூயா பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். அவர்கள் இந்த இடத்தில் வாழ்ந்த போது ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்று நடந்தது. தேவர்களின் தலைவனான தேவேந்திரன் ஒரு மாபெரும் ரிஷியின் கோபத்திற்குள்ளாகி அவரால் சபிக்கப்பட்டான். எனினும் சாபத்திற்கு விமோசனம் பெற அந்த ரிஷியே ஒரு வழியையும் கூறினார். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் கன்னியாகுமரிக்கு அருகில் ஒரு புனிதமான இடத்தில் ஒரே உருவாக அவதரிப்பார்கள். அந்த உருவில் அவர்களை வழிபட்டால் சாபத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறினார். எனவே அந்த சந்தர்ப்பத்திற்காக அவன் காத்திருந்தான். மூன்று பிரபஞ்சத்திலும் ஏதாவது தவறு நடந்தால், நாரதர்தான் அதை திறமையாக கையாண்டு இறைவனின் அவதாரம் தோன்ற வழி செய்வார். நாரதர் ஏதாவது தந்திரம் செய்து குழப்பங்களை ஏற்படுத்துவார். இறுதியில் அனைத்தும் நல்லவையாகவே முடியும். அத்ரி இல்லாத பொழுது நாரதர் அவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தார். அனுசூயா அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். தனக்காக அற்புதமான ஒரு காரியத்தை செய்து தருமாறு நாரதர் அனுசூயாவை கேட்டுக்கொண்டார். நாரதர் அவரிடம், “என்னிடம் சிறு இரும்பு உருளைகள் உள்ளன. தயைகூர்ந்து அதை எனக்கு சமைத்து தாருங்கள்” என்று கேட்டார். கற்பின் உருவான அனுசூயாவிற்கு அது ஒரு பெரிய விஷயம் இல்லை. தன் கணவருக்கு பாதபூஜை செய்த நீரை தன்னிடம் வைத்திருந்தார். அந்த நீரை உருளைகள் மீது தெளித்தார். தனது கற்பின் வலிமையை பயன்படுத்தி அந்த உருளைகளை சமைத்து கொடுத்தார். நாரதர் அதை வானுலகிற்கு எடுத்து சென்று சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதியிடம் கொடுத்தார். அவர்களிடம், “இங்கே பாருங்கள், சிறிது காலத்திற்கு முன் இந்த இரும்பு உருளைகளை தங்களிடம் சமைத்து தர கூறினேன். ஆனால் தாங்கள் அது இயலாத காரியம் என்று கூறினீர்கள். ஆனால் பூவுலகில், தங்களை விட ஆற்றல் மிகுந்த கற்பில் சிறந்த பெண் ஒருவர் இருக்கின்றார். அவர் இதை செய்துவிட்டார்” என்று கூறினார். இயற்கையாகவே தன்னைவிட வலிமையானவள் என்று வேறு யாராவது புகழப்பட்டால், பெண்கள் பொறாமை கொள்வார்கள். நாரதர் அவர்களிடம், “நீங்கள் அவரை எப்படி வேண்டுமானாலும் சோதியுங்கள். அவள் வென்றுவிடுவாள்” என்று கூறினார். எனவே அவர்கள் அனுசூயாவின் துாய்மையை சோதித்து பார்க்க முடிவு செய்தனர். மூவரும் தங்கள் கணவர்களான பிரம்மா, விஷ்னு மற்றும் சிவனை அழைத்து அனுசூயாவின் வலிமையை சோதிக்குமாறு கூறினார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு நீங்கள் சென்று தர்மம் கேட்கவேண்டும் என்றனர். மூம்மூர்த்திகளும் “அது கடினமல்ல” என்று கூறினர். அதற்கு தெய்வ அன்னையர், “அது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் அவளிடம் அலங்காரமற்று, நிர்வாணமாக வந்து தர்மம் தருமாறு கேட்க வேண்டும்” என்று கூறினர். துணைவியர்கள் ஆணையைக் கேட்டு, கணவர்கள் செய்வதறியாது இருந்தனர். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அனுசூயா வாழும் இடத்தை அடைந்தார்கள். அவளுக்கு மும்மூர்த்திகளை ஒரே நேரத்தில் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்பு மும்மூர்த்திகள் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறிவிட்டு, தங்கள் துணைவியர்கள் கூறிய நிபந்தனைகளையும் கூறினார்கள். அனுசூயா புன்முறுவலோடு, “அது மிக எளிது” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார். தன் கணவனின் பாதங்களை கழுவிய புனிதமான நீர் இருக்கும் பாத்திரத்தை கொண்டு வந்தார். அந்த நீரை மும்மூர்த்திகளின் மீது தெளித்தார். மூவரும் சிறு குழந்தைகளாக மாறினர். பின்பு அவர்களை அனுசூயா உள்ளே எடுத்துச் சென்று, அவர்களுக்கு வேண்டிய வண்ணம் உணவு ஊட்டினாள். இச்செய்தி விண்ணுலகை எட்டியது. சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி அதிர்ச்சியடைந்தனர். மூவரும் அந்த ஆஸ்ரமத்திற்கு விரைந்து சென்று, அனுசூயாவை அடிபணிந்தனர். அனுசூயா மூன்று குழந்தைகளையும் அவர்கள் முன் வைத்து விட்டு, அவரவர் கணவரை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரி இருந்தனர். முப்பெருந்தேவிகளால் தங்கள் கணவன்மார்களை அடையாளம் காண இயலவில்லை. அனுசூயா அவர்களிடம் இது அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கும் திருவிளையாடல். அதனால் அது முடிவு வரும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். பின் தன் கற்பின் வலிமையால் அந்த மூன்று குழந்தைகளையும் ஒன்றாக மாற்றினார். இவ்வாறு தான் தத்தாத்ரேயர் அவதாரம் தோன்றியது. தத்தாத்ரேயரின் கதை இதற்கு மேலும் ஒரு நீண்ட கதை. நான் சுட்டிக்காட்ட விரும்பும் கருத்து என்னவென்றால், இந்த திருமூர்த்திகளே “தாணுமாலையன்” என்று அழைக்கப்படுகின்றனர். “தாணு” என்றால் சிவன். “மால்” என்றால் விஷ்ணு. “அயன்” என்றால் பிரம்மா. சுசீந்திரத்தில் என்றும் தலைமைக் கடவுளாக வழிபடுவது தாணுமாலயனைத்தான். தேவேந்திரன் இங்கு வந்து சாபவிமோசனம் பெற்றுச் சென்றான். எனவே இந்த இடம் “சுசீந்திரம்” என்ற பெயர் பெற்றது. ‘சுசீந்திரம்’ என்பதற்கு ‘இந்திரன் தூய்மையாக்கப்பட்ட இடம்’ என்று பொருள். எனவே, தாய் தவம் புரியும் கன்னியாகுமரி மற்றும் அனுசூயா கற்பின் வலிமையை நிலைநாட்டிய சுசீந்திரம் ஆகிய இரண்டு இடங்களுமே மிகவும் புனிதமானவை.
கன்னியாகுமரியின் மாயம்மா
நான் இவை அனைத்தையும் கூறியதற்க்கான காரணம் என்னவென்றால் இந்த இரு புனிதமான இடங்களும் நமது கன்னியாகுமரியின் புனிதத்தாய் மாயம்மாவோடு நெருங்கிய தொடர்புடையவை. மாயீ எங்கிருந்து வந்தாள் என்று எவருக்கும் தெரியாது. எந்த வாழ்க்கை வரலாற்று ஆய்வாளரும் அவர் தோன்றிய இடத்தை கண்டறியவில்லை. அவரது வயது என்ன என்று யாருக்கும் தெரியாது. நான் கன்னியாகுமரிக்குச் சென்று அங்குள்ள சில எழுபது மற்றும் எண்பது வயதுடைய முதியவர்களைச் சந்தித்து, மாயம்மாவைப் பற்றி விசாரித்தேன். தாயை அவர்கள் தங்கள் சிறு வயது முதலே கடற்கரையில் காண்பதாகக் கூறினர். இன்னும் சிலர் அவரை சுசீந்திரத்தில் கண்டதாக கூறுகின்றனர். அங்கும் அவர் வாழ்ந்துள்ளார். கன்னியாகுமரியில் அதிகமான காலங்கள் வாழ்ந்துள்ளார்.
யாருக்கும் இவர் எங்கிருந்து வந்தார் என்பது பற்றித் தெரியாது. ஆனால், சில நேரங்களில் சில வெளிப்பாடுகளும் நடந்திருக்கின்றன. இந்த அறிவியல் யுகத்தில் இந்த வெளிப்பாடுகளை நீங்கள் நம்புவீர்களா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு அவை தோன்றின. ஒரு முறை எனக்கு அவரின் தோற்றத்தைப் பற்றி வெளிப்படுத்தினார். அவர் அசாமில் இருக்கும் பெரும் கோயிலான காமாக்கியாவிலிருந்து வந்தவர். அங்கு முதன்மைக் கடவுள் காமாக்கிய தேவி. நமது தாய் அந்த காமாக்கியதேவியின் அவதாரம் ஆவார். எப்படி, எத்தனை வருடங்களுக்கு முன் கன்னியாகுமரியை அடைந்தார்? யாராலும் பதில் கூற இயலாது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் காமாக்கியா கோவிலிலிருந்து கன்னியாகுமரி வந்திருக்கக்கூடும்.
கன்னியாகுமரியில் அவர் மீனவர்களுக்கு இடையே வாழ்ந்தார். பல நடைமுறை காரணங்களுக்காக அவர் மனநலம் குன்றியவர், பிச்சைக்காரி போன்றெல்லாம் தோற்றினார். யாருக்கும் அவர் சக்தி தெரியவில்லை. மீனவர்கள் அவருக்கு விறகு உடைத்தல், அரிசி புடைத்தல், மீனை உலர வைத்தல் போன்ற அனைத்து வேலைகளையும் அளித்தனர். அனைத்து வேலைகளையும் அவர் புன்முறுவலோடு செய்து முடிப்பார். இதற்கு சிறிதளவு சோறும் மீனும் அளிப்பார்கள். அவர் கோயில் மண்டபம் அல்லது தெருவோரங்கள் அல்லது ஏதாவது உணவகங்களின் முன்னே நித்திரை கொள்வார். அவரது பெருமை அப்போது யாருக்கும் தெரியவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகளை கொண்ட ஊர்தி ஒன்று கன்னியாகுமரிக்கு வந்தது. அந்த வாகனம் ஒரு தெரு நாயின் மீது மோதிவிட்டது. அந்த நாயின் குடல் வெளியேறி, அந்த இடத்திலேயே அது இறந்துவிட்டது. அந்த கோரமான நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த மனநலம் குன்றிய பிச்சைக்காரப் பெண் தன் கிழிந்த அழுக்கு மூட்டையுடன் எங்கிருந்தோ அந்த இடத்தில் தோன்றினார். இந்த பெண் என்ன செய்ய போகிறார் என்று அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் அந்த நாயின் குடலை அதன் உடம்பிற்குள் தள்ளி கொஞ்சம் வைக்கோல் வைத்து கட்டி அதன் முதுகில் தட்டினார். அனைவரும் வியக்கும் படி அந்த நாய் எழுந்து ஓடியது. அன்றே இவர் யார் என்று மக்கள் உணர்ந்தனர்.
அன்று முதல் கன்னியாகுமரியில் உள்ள மக்கள் அவரை தெய்வத் தாயாக ஆராதிக்கின்றனர். பலருக்கும் இதே போல் தனிப்பட்ட அனுபவங்கள் உண்டு. ஆனால் மிகச் சிலரே அதை பதிவு செய்துள்ளனர். சில வருடங்களுக்கு முன், தாயின் பக்தர்களிடம் இருந்து அவர்களது அனுபவத்தை சேகரிக்க தொடங்கினேன். இருப்பினும் தாய்க்கு அதிகாரபூர்வமான சரித்திரம் இல்லாத காரணத்தால் என்னுடைய அனுபவங்களை கொண்டே தாயை பற்றி பெரும்பாலும் கூற வேண்டியிருக்கிறது. என்னை பற்றி இங்கு அதிகம் பேசுவதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஐந்து வருடங்களுக்கு முன் தாயுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அது முதல் நான் அவரது பக்தர்களுக்கு வினாப்பட்டியல் அனுப்பி, அவர்களது அனுபவங்களை கேட்டு தாயை பற்றியத் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தேன். சில முக்கியமான நபர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் அவர்களது அனுபவங்களைக் கூறினர். அதில் சிலவற்றை என்னுடைய அனுபவங்களை பற்றி கூறும் முன் கூறுகிறேன்.
பக்தர்களின் அனுபவங்கள்
சுவாமி கோலோகானந்தா திருவனந்தபுரத்தில் இருக்கும் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தின் தலைவர். அவர் பகவதி அம்மனை தரிசிக்க கன்னியாகுமரி வந்திருந்தார். அருகில் இருந்த உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டு அமர்ந்திருக்கிறார். திடீரென்று அவர் கன்னியாகுமரி மாயம்மாவைப் பற்றி நினைத்தார். அவரை காண ஆழ்ந்த விருப்பம் கொண்டார். “இப்போது அவர் இங்கு வந்தால் அவருக்கு கொஞ்சம் உணவை பிரசாதமாக தரலாம்” என்று எண்ணினார். அவர் இதை எண்ணிய கணமே அவரை ஆச்சரியமடையச் செய்யும் வகையில் தாய் மாயீ அவர் அருகில் தன் மூட்டையுடன் நின்றார். அவர் அம்மாவுக்குக் கொஞ்சம் உணவு அளித்தார். தாய் பெருங்களிப்புடன் சிரித்தார். சுவாமிகளும் சிரித்தார். சுவாமிஜியே இந்த நிகழ்வை என்னிடம் பின்னர் பகிர்ந்தார்.
முனைவர் லட்சுமிகுமாரி, கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு நாடெங்கும் பரவியுள்ள விவேகானந்த கேந்திரத்தின் தலைவர். அவர் தன் வாழ்வை விவேகானந்த கேந்திரத்திற்காக அர்ப்பணித்தவர். விவேகானந்த கேந்திரத்தில் நிறைய பணியாளர்கள் உண்டு. ஆனால் சிலரே மாயீயிடம் நெருக்கமாக வந்துள்ளனர். முனைவர் லட்சுமிகுமாரிக்கு ஒரு சுவாரசியமான அனுபவம் உண்டு. ஒரு நாள் அவர் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று, தெய்வத்தின் திருவுருவின் முன் நின்று அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அந்த இடம் முழுவதும் தனிமையாக இருந்தது. திடீரென்று ஒரு குரல் அவரிடம், “நான் உனக்காக வெளியில் காத்திருக்கும் போது எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது. அவர் உடனடியாக தன் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே விரைந்தார். அங்கு தெய்வத்தாய் மாயீ இவரை பார்த்து சிரித்து கொண்டிருந்தது இவரை பிரமிக்க வைத்தது.
கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆறுமுகம் என்று ஒரு சுவாமிஜி இருந்தார். அவர் விநாயகருக்கு ஒரு சிறிய ஆலயம் அமைக்க விரும்பினார். அதற்கு சிறு சிலை ஒன்றை தேடிக் கொண்டிருந்தார். அவர் கன்னியாகுமரிக்கு வந்து தேவியை வழிபட்டுவிட்டு கடற்கரையில் நாய்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் தாயை காணச் சென்றார். நாற்பது அல்லது ஐம்பது நாய்கள் நன்றியுள்ள காவலர்களாக எப்போதும் அம்மாவை சுற்றியிருக்கும். அவரிடம் இருந்த எளிய உடைமைகளை திருடர்கள் திருட முயன்றதாக கூறுவார்கள். அவருக்கு என்ன உடைமைகள் இருந்திருக்கும்? சில கிழிந்த துணிகளும் பாத்திரங்களும் மட்டுமே இருந்திருக்கும்! அதை கூட திருட முயன்றார்கள். திடீரென்று நாய் கூட்டம் ஒன்று திருடர்கள் மேல் பாய்ந்து அவர்களை துரத்தியது. அன்று முதல் இந்த நாய்கள் அவருடன் இருக்கின்றன. அதில் பெரிய நாய்களுடன் குட்டி நாய்களும் இருக்கும். தாய் அந்த நாய் குட்டிகளை சீராட்டி கவனித்து கொள்வது அருமையானக் காட்சியாகும். அவற்றிர்க்கு உணவளிக்கும் போது அவர் நாய்களுக்கும் தனது பக்தர்களுக்கும் இடையே எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. நாய்களுக்கு உணவு ஊட்டிக் கொண்டு அதே கைகளால் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்குவார். அந்த நாய்கள் எப்போதும் அமைதியாக அவர் கொடுக்கும் பிரசாதத்தைப் பகிர்ந்து உண்ணும். திரு. ஆறுமுகசாமி வந்த போது, மாயம்மா நாய்களுடன் இருந்தார். அவரை கண்டவுடன் புன்னகைத்துக் காத்திருக்குமாறு கூறினார். பின் தன் ஆடைகள் அனைத்தையும் களைந்து விட்டு, கடலில் சென்று மூழ்கினார். அம்மாவுக்கு உடல் உணர்வோ அபிமானமோ இல்லை. எப்போதும் நிர்வாணமாகவே கடலில் குளிக்கச் செல்வார். கடலில் இருந்து ஒரு அழகிய கணபதி சிலையுடன் திரும்பினார். எப்படி அதை உருவாக்கினார்? அது மர்மமாகவே இருக்கிறது! அந்த சிலையை சுவாமிகள் பாதுகாத்து வருகிறார்.
தாயின் திருவடிகள்
கடந்த பதினைந்து அல்லது பதினாறு வருடங்களாக நான் கன்னியாகுமரிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறேன். ஸ்ரீ ஏகநாத் ரானடே அவர்கள் விவேகாநந்த கேந்திரத்தை தொடங்கிய காலத்திலிருந்தே எனக்கு கேந்திரத்தோடு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்களது வெளியீடுகளை தொகுத்து பதிப்பிக்கும் பொறுப்பில் இருந்தேன். அதனால் அடிக்கடி கன்னியாகுமரிக்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடன் பணிபுரிந்தவர்களுள் ஒருவரான சகோதரர் கோபாலகிருஷ்ணன், முன்பு சின்மயா மிஷனில் இருந்து, பின்பு கேந்திராவில் சேர்ந்திருந்தார். இப்போது அனைத்தையும் விட்டுவிட்டுத் தாயின் பாதத்தில் சரணடைந்து, ஆன்மீக பயிற்சி புரிவதற்கென்று தன்னை அர்ப்பணித்துள்ளார். அவர் கடற்கரையில் அமர்ந்திருக்கும் தாயின் பெருமையைப் பற்றி என்னிடம் கூறுவதுண்டு. ஆனால் மாயம்மாவிடம் நெருக்கமாக வேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் இருந்ததித்லை. “அவர் அங்கேயே அமர்ந்து இருக்கட்டும். நான் ஏன் அவரை தொந்தரவு செய்ய வேண்டும்?” என்று நினைத்தேன். ஒரு முறை நான் அங்கு சென்றிருந்த போது, கோபாலகிருஷ்ணன் அவர்கள், என்னிடம் “நீங்கள் திரும்பிச் செல்லும் முன் தாயைக் காண்பீர்கள்” என்று கூறினார். அது மதிய வேளை. நான் கன்னியாகுமரியில் இருந்து கிளம்ப சில மணி நேரங்களே இருந்தன. கிளம்பும் முன் அவரை காண வாய்ப்பில்லை என்று நான் எண்ணினேன். அடுத்தமுறை வரும்போது, அவரை காண்கிறேன் என்று கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கூறினேன். ஆனால் எனது பயண சீட்டை வாங்குவதற்காக கேந்திரா அலுவலகத்திற்கு வந்த போது, அன்று மதியம் இரயில் சேவைகள் இல்லை என்று தெரிவித்தனர். அதனால் என் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. நான் என் அறைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்க முயன்றேன். நான் எனது படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்தேன். உறங்குவதற்கு ஆயத்தமானேன். திடீரென்று ஒரு அழைப்பு கேட்டது. “வா, வெளியே வா” என்று. நான் திடுக்கிட்டு எழுந்து அறையின் கதவை கூட மூடாமல், ஏதோ ஒரு மர்மமான சக்தியின் ஈர்ப்பால், கடற்கரையை நோக்கி நடந்தேன். அங்கு மாயம்மா எனக்காகக் காத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். எப்போதும் போலவே நாய்கள் அவரை சுற்றியிருந்தன. அந்த மதிய வேளையில் சுட்டெரிக்கும் சூரியன் மேலே இருந்தது. கடற்கரையில் மாயம்மாவுடன் அவரது நம்பிக்கைக்குரிய, விசுவாசமுள்ள உதவியாளர், திரு. ராஜேந்திரன் மட்டுமே இருந்தார். திரு. ராஜேந்திரன் ஒரு கொத்தனார். பன்னிரண்டு வருடங்களுக்கு முன் அவர் கன்னியாகுமரி வந்து அம்மாவை சந்தித்தார். மாயம்மாவை பார்த்த கணமே அன்னையின் தெய்வீகத்தால் ஈர்க்கப்பட்டார். அன்று முதல் அவர் தனது வேலையை விட்டு அம்மாவின் முதன்மை சீடராக இருந்து, பக்தியுடனும் விசுவாசத்துடனும் சேவை செய்து வருகின்றார். இப்போது அவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் அம்மாவுடன் வாழ்கின்றனர். இப்போது அவருக்குக் காலை முதல் இரவு வரை ஒரே ஒரு வேலை மட்டும் தான். அது அம்மாவின் தேவைகளை கவனிப்பது மட்டுமே. அம்மாவுக்கு உணவு சமைப்பது, அவரது ஆடைகளை துவைப்பது, மற்றும் இயற்கை அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்க உதவுவது மட்டுமே அவருடைய வேலை. நாள் முழுவதும் அவர் அம்மாவுடனே இருந்து மிகுந்த பயபக்தியுடன் சேவை செய்வார். அன்று அவர் அங்கு தாயுடன் இருந்தார். நான் என்னையறியாமல் அம்மாவின் பாதங்களில் விழுந்தேன். ஏதோ ஒன்று என்னை அவரிடம் நெருக்கமாக ஈர்த்தது. அவர் எனது தலையை தொட்டவுடன், ஒரு பரவச நிலையினுள் மூழ்கினேன். நான் கண்களை திறந்த போது இரவு 7.30 மணி ஆகியிருந்தது. சுட்டெரிக்கும் சூரியனுக்கு பதிலாக குளிர்ந்த காற்று வீசியது. அந்த இடம் முழுவதும் இருளாக இருந்தது. அம்மா என் முன் இருந்தார். அது ஒரு உள்ளக் கிளர்ச்சியூட்டுகின்ற அனுபவமாகும்.
பின்பு அவருடன் மூன்று நாட்கள் தங்கினேன். சென்னையில் இருக்கும் என் வீட்டிற்கு திரும்பி வந்தபின் பத்து பதினைந்து நாட்களுக்கு அம்மாவை தவிர வேறு எதையும் யோசிக்க இயலவில்லை. எனது மனம் அவரிடம் ஆழ்ந்திருந்தது. நான் மற்றவர்களிடம் அம்மாவை பற்றி மட்டுமே பேசினேன். என்னால் என் வேலைகளைச் செய்ய இயலவில்லை. கல்லுரியில் சொற்பொழிவுகளை வழங்கவும் இயலவில்லை. என் வீட்டில் இருப்பவர்கள் கூட, என் நடவடிக்கைகளைப் பார்த்து, ஏதோ தவறாக இருக்கின்றது என்று நினைத்தனர். நான் அப்படி ஒரு மனநிலையில் இருந்தேன்.
பதினைந்தாம் நாள், ஏதோ ஒரு சக்தி என்னை மறுபடியும் 700 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் கன்னியாகுமரிக்குச் செல்ல ஈர்த்தது. உடனடியாக பேருந்தில் ஏறி, மறுநாள் காலையில் கன்னியாகுமரியை அடைந்தேன். தாயுடன் சிறிது காலம் செலவழித்தேன். அப்போது தான் அவர் தன்னைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்தினார். அன்று நான் அவர் முன் அமர்ந்திருந்த போது, அருமையான சம்பவம் ஒன்று நடந்தது. ஒரு பெண் அம்மாவின் காலடிகளில் வந்து விழுந்து, கதறி அழுது கொண்டிருந்தார். அவர் அம்மாவிடம் ஏதோ கூறினார். நானும், என் நண்பர் கோபாலும் சற்று தொலைவில் அமர்ந்து, அந்த பெண்ணையும், மாயம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று அம்மா என்னை சுட்டிக்காட்டி அந்தப் பெண்ணை என்னிடம் அனுப்புவதைக் கவனித்தேன். அந்த பெண் என்னை நோக்கி வந்தார். அந்த பெண்ணை அம்மா எதற்காக என்னிடம் அனுப்புகிறார் என்று வியந்து கொண்டிருந்தேன். அந்த பெண், நீர் வழியும் விழிகளோடு வந்து என்னிடம், “சுவாமி, உங்கள் உதவி எனக்கு வேண்டும்” என்று கேட்டார். நான், “நீங்கள் யார் அம்மா? உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். “நான் திருவனந்தபுரத்தில் இருந்து வருகிறேன். நான் ஜகதியில் வாழ்கிறேன். எனது கணவர் கிருஷ்ணன் பிள்ளை ஒரு பலசரக்கு வியாபாரி. இருபது வயதான எங்கள் மூன்றாவது மகன், இரண்டு வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று விட்டான். அவன் எங்கிருக்கிறான் என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. நாங்கள் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம். நான் தாயிடம் சில வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன். நான் துன்பத்தில் இருக்கும் போது அவர் தான் எனது இறுதியான தஞ்சம். இன்று அவர், எங்களுக்கு உதவ உங்களால் இயலும் என்று உங்களை சுட்டிக் காட்டியுள்ளார்” என்று கூறினார். நான் இக்கட்டான நிலையில் இருந்தேன். நான் எவ்வாறு உதவ முடியும்? அவரது மகன் தொலைந்து போனது, நான் வாழும் சென்னையில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் திருவனந்தபுரத்தில். யாருக்கு தெரியும் அவன் எங்கு சென்றான் என்று, சென்னைக்கா அல்லது வேறு இடத்திற்கு சென்றானா என்று. சென்னைக்கே வந்திருந்தாலும், சென்னை ஒரு பெரிய நகரம். அங்கு அவனைத் தேடுவது கடினம். எனினும் அவரை சமாதானப்படுத்த வேண்டும் என்று நான் அவரிடம், “இங்கே பாருங்கள், எனக்கு அம்மாவின் தெய்வீக சக்தியின் மேல் மிகுந்த நம்பிக்கை உண்டு. அவரே உங்களுக்கு என்னை காட்டினார். எனவே அவரே வழிகாட்டுவார். தயைகூர்ந்து உங்கள் முகவரியை தாருங்கள். தாயின் அருளால், ஒரு நாள் உங்கள் மகனை கண்டுபிடித்து, உங்களைத் தொடர்பு கொள்வேன். அவரை நம்புங்கள்” என்று கூறினேன். அந்த பெண் தன் முகவரியைத் தந்தார். அன்றே நான் சென்னை திரும்பினேன். அனைத்தும் தாயின் திருவளையாடலே!
ஒரு வெள்ளிக்கிழமை காலை, பூஜையை முடித்துக் கொண்டு, எங்கள் சகோதரி நிவேதித்தா அகாடமி மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தேன். வகுப்பு முடியும் நேரத்தில், ஒரு இளைஞன் என் அறையினுள் வந்தான். எனது வீட்டில், ஒரு சிறு அறை மட்டுமே உள்ளது. அதிலும் புத்தகங்களே நிறைந்திருக்கும். எங்களிடம் போதிய நாற்காலிகள் இல்லாததால் சொற்பொழிவு கேட்க வருபவர்களும், வேறு காரியங்களுக்காக வருபவர்களும் தரையில் தான் அமர்வார்கள். அந்த இளைஞன் அமைதியாக வந்து தரையில் அமர்ந்து கொண்டான். அவனை பார்த்த உடனே, கன்னியாகுமரியில் நான் பார்த்த திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்த தாய் நினைவிற்கு வந்தார். நான் உடனடியாக மாணவர்களை அனுப்பிவிட்டு அந்த இளைஞனை மட்டும் இருக்கச் சொன்னேன். அவனிடம் கேட்காமலேயே, என் மனைவியிடம் இருவருக்கும் உணவு கொண்டுவரச் சொன்னேன். அந்த இளைஞன் அதிர்ச்சியுற்றுப் பார்த்தான். அவன், “சுவாமி, நான் யாரென்று கூட தாங்கள் கேட்கவில்லை!” என்று கூறினான். ”நான் உன்னிடம் கேட்க வேண்டியதில்லை. நீ யாரென்று எனக்குத் தெரியும். முதலில் நாம் மதிய உணவு அருந்திவிட்டு, பின்பு பேசலாம்” என்று பதிலளித்தேன். அந்த இளைஞனால் இதை நம்ப முடியவில்லை. அவன், “சுவாமி, தாங்கள் வேறு யாரோ என்று தவறாக நினைத்துள்ளீர்கள். எனக்கு உங்களை தெரியாது” என்று கூறினான். நான் அவனிடம், “நீ ஜகதியிலுள்ள ராதா அம்மாவின் மகன் தானே?” என்று கேட்டேன். அந்த வாலிபன் அதிர்ச்சியுற்றான். “ஆம்! தங்களுக்கு எப்படி தெரியும், சுவாமி?” என்று கேட்டான். நான் அருகில் இருந்த அன்னை மாயீயின் வரைபடத்தைச் சுட்டிக்காட்டி, இவரை தெரியுமா என்று கேட்டேன். அவன் அந்த படத்தை பார்த்துவிட்டு, “ஆம்! என் தாய் இவருடைய பக்தர். என் தாய் அங்கு அடிக்கடி செல்வார்” என்று கூறினான். நான் பின்பு அவனிடம் தெய்வத் தாயேதான் அவனை என்னிடம் கொண்டுவந்தார் என்று கூறினேன். அவன் சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தான். அவன் எவ்வாறோ என் சந்திப்பு அட்டையைப் பெற்று, சகோதரி நிவேதித்தா அகாடமியின் பெயரை பார்த்து, இங்கு ஏதாவது வேலை கிடைக்கும் என்று வந்துள்ளான். அந்த இளைஞன் சில நாட்கள் என்னோடு இருந்தான். அவன் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் வீட்டிற்குத் தகவல் அனுப்பினேன். அவனது அண்ணன் வந்து அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். என்ன ஒரு அதிசயம்!
தெய்வீக மருத்துவர்
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு, எனக்கு நுரையீரலில் தொற்றுநோய் ஏற்பட்டது. நான் தினமும் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் கடுமையாக இருமுவதுண்டு. நான் தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டேன். அது என் பிராரப்த கர்மம் என்று நினைத்தேன். எனது நண்பர் ஒருவர் என்னை ஜோதி என்ற மருத்துவரிடம் அழைத்து சென்றார். அவர் என்னை இரண்டு மூன்று நாட்களுக்குச் சோதித்துப் பார்த்தார். ஆனால் அந்த நோய் என்னவென்று குறிப்பிட்டுக் கூறவில்லை. சில சோதனைகளும் நடத்தப்பட்டன. தினமும் என் நண்பர் என்னை அந்த மருத்துவரிடம் அழைத்து சென்றார். அவர் தினமும் எனக்கு ஊசி மூலம் மருந்தைச் செலுத்தினார். அவர் என் நண்பரிடம் என் பிணி பற்றி ஏதோ மெல்ல கூறுவதைக் கேட்டேன். நான் நேராக அவரிடம், “இது புற்று நோய்க்குண்டான தொற்றா?” என்று கேட்டேன். நான் அவரிடம், “மருத்துவரே, பயங்கரமான புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைவது என்பதே கிடையாது என்று எனக்குத் தெரியும். நான் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ்வேன் என்று கூறுங்கள். இவ்வுலகை விட்டுச் செல்லும் முன், நான் நிறைவேற்ற வேண்டிய காரியங்களையாவது நிறைவேற்றுவேன்” என்று கூறினேன். அவர், “இல்லை இல்லை. உங்களுக்கு சரியாகிவிடும். நீங்கள் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்” என்றார். நான் திருப்தி அடையவில்லை.
நேரடியாக கன்னியாகுமரியில் தாய் மாயீயிடம் சென்றேன். கடற்கரையோரம் இருக்கும் சிறு குடிசையில் கலங்கிய மனதுடன் அவர் முன் அமர்ந்திருந்தேன். எனக்கு என்ன பிரச்சனை என்று அம்மாவுக்குத் தெரியும். அவர் என்னை கடற்கரைக்கு அழைத்து சென்று குப்பை குவியல் ஒன்றை சுட்டிக் காட்டினார். அந்த கடற்கரை குப்பை குவியலில் தான் அம்மா தினமும் தனது ஹோமத்தைச் செய்வார் என்பதை அவரது பக்தர் கோபியின் மூலம் தெரிந்து கொண்டேன். நான் அதைக் கேட்டு வியப்படைந்தேன். அதன் பின் நான் கடலுக்கு சென்று நீராடினேன். அன்று அமாவாசை. எனவே தர்பணம் செய்தேன். அதன் பின் யக்ஞம் செய்யும் இடத்திற்கு வந்து அந்த குவியலுக்கு நெருப்பு முட்டி அக்கினியை ஆவாகனம் செய்தேன். அதற்குள் அம்மா தன் குளியலை முடித்துவிட்டு, கை நிறைய கடற்பாசி, சிப்பி முதலியவைகளோடு வந்தார். அவற்றை ஹோமநெருப்பிலிட்டார். நான் தினமும் யக்ஞம் செய்ய வேண்டும் என்றுச் சுட்டிக்காட்டினார்.
நான் வீடு திரும்பிய பின், 108 நாட்கள் தொடர்ந்து ஹோமம் செய்தேன். அக்கினிக்கு நான் அளித்த ‘சமித்’, அதவாது விறகு குச்சிகள், சமஸ்கிரதத்தில் ‘குடிச்சி’, தமிழில் ‘சீந்தல் கொடி’ (மெனுஸ்பெர்மம் கார்டிபோலியம்) எனப்படும். அவை மருத்துவ குணமுடைய கொடி வகைகளுள் ஒன்று. நான் உச்சரித்த ம்ருத்யுஞ்ஜெய மந்திரம் – “ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் மோக்ஷீய மாம்ருதாத்”. இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, அந்த கொடியின் 108 துண்டுகளுடன், நெய் மற்றும் பழங்களை ஹவிசாக அளித்தேன். 108 நாட்களுக்கு பிறகு எனது உடல் நலத்தில் மிக பெரிய முன்னேற்றத்தைக் கண்டேன். எனினும் சிறிதளவு பிரச்சினைகள் இருந்தன.
எனது நண்பர்கள் நான் மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர். அவர்கள் எனது நலம் விரும்பும் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி கோலோகானந்தாவிடம் தகவல் தெரிவித்தனர். அவர் என்னை திருவனந்தபுரத்திற்க்கு அழைத்தார். நான் என் மனைவி மக்களுடன் அங்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம், “நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர். நீங்கள் இங்கே தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நான் உங்களை செல்ல அனுமதிப்பேன்.” என்று கூறினார். அவருடைய அன்பு கட்டளையால் சிறிது மனம் கலங்கினேன். அவர் ஊடுகதிர் சோதனை மற்றும் பிற சோதனைகள் நடத்த ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனையில் ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த மருத்துவச் சோதனை முடிவுகள் வரும் முன், நான் சுவாமிஜியிடம், “சுவாமிஜி, நான் கன்னியாகுமரியில் இருக்கும் தாய் மாயீயைக் காண என் மனைவி மக்களை அழைத்து வந்தேன். நான் கன்னியாகுமரி சென்று, தாய் மாயீயை பார்த்துவிட்டு, மனைவி மக்களை திரும்ப சென்னைக்கு அனுப்பிவிட்டு, இங்கு வந்து சிகிக்சைக்காகத் தங்குகிறேன்” என்று கூறினேன். அவர் எனக்கு அனுமதி அளித்தார். நான் கன்னியாகுமரி சென்றேன். ஆனால் கன்னியாகுமரியில் எதிர்பாராத விஷயங்கள் நிகழ்ந்தது. நான் தாயிடம் திருவனந்தபுரம் செல்ல அனுமதி கேட்ட போது அவர் மறுப்பு தெரிவித்தார். அவர் என்னை சென்னைக்கு திரும்பிச் செல்லுமாறு கூறினார். அவர் என் பையில் இருந்த மருந்துகளை எடுத்து கடலில் வீசினார். அதனால், நான் சென்னைக்குத் திரும்பி விட்டு, என் இக்கட்டான நிலையை விவரித்து சுவாமிஜிக்கு நல்ல விதமாக கடிதம் ஒன்றை எழுதினேன்.
ஆனால் சென்னையில் என் நண்பர்கள் என்னை விடவில்லை. எனது நண்பர்களுள் ஒருவரான டாக்டர். அருணகிரிநாதன் மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அவர் மிகவும் அன்பான நல்ல மனிதர். அவரே எனக்கு மருந்தும் வாங்கித் தந்தார். அவரின் அன்பின் கட்டாயத்தால், நான் ஒப்புக் கொண்டேன். ஆனால் ஒரு நாள் அவர் ஊசி மூலம் மருந்தை உட்செலுத்த ஆயத்தமான போது அந்த ஊசி உடைந்தது. இது எதை உணர்த்துவதற்கான அறிகுறி என்று நான் புரிந்து கொண்டேன். எனவே சிகிச்சை ஏற்பாட்டை நிறுத்த முடிவு செய்தேன். என்னுடைய ‘சிக்ஷாகுரு’ சுவாமி சின்மயானந்தர், என் உடல் நல குறைவைப் பற்றி அறிந்து என்னிடம் வினவினார். நான் தாயுடன் எனக்கு உள்ள தொடர்பைப் பற்றி கூறிய போது, அவர், “ஓ! மீனை பச்சையாக விழுங்கும், கன்னியாகுமரியில் இருக்கும், அந்த மூதாட்டியின் வசியத்தில் இருக்கிறாயா? அவர் விருப்பப்படியே நடக்கட்டும்!” என்று கூறினார். படிப்படியாக என் உடல் நலக்குறை மறைந்தது.
தென்னாப்பிரிக்க பக்தர்கள்
தென்னாப்பிரிக்க பக்தர்களைச் சார்ந்த மற்றொரு முக்கியமான நிகழ்வு உண்டு. புனிதத் தாயின் அருளாலே திருமதி. மற்றும் திரு. டி. எம். மூட்லி தம்பதியினர் சென்னைக்கு வந்து என்னை சந்தித்தனர். அவர்கள் வந்த அன்று நான் தாயின் பூஜையை முடித்துவிட்டு, என் முன் சிறு பாய் ஒன்றை விரித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்தேன். அந்த அர்ப்பணிப்பு மிகுந்த தம்பதியினர் உள்ளே வந்தனர். அவர்கள் சம்மணம் இட்டு பாயில் அமர்ந்து, அவர்கள் வந்த நோக்கத்தை கூறினார்கள். அவர்களுக்கு ரிஷிகேஷம் செல்ல எண்ணம் இருப்பதையும் கூறினார்கள். நான் அங்கு செல்வதற்கான வழியை அவர்களுக்குக் கூறினேன். அவர்கள் ரிஷிகேஷம் சென்று, சென்னை திரும்பும் முன் மாயம்மா என் தியானத்தில் தோன்றி, அன்று வந்தவர்கள் யார் என்று வெளிப்படுத்தினார். அவற்றை இப்போது நான் விவரிக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன். ஏனெனில் அவை மர்மமானவை. மாயம்மா இவர்களை தன்னிடம் அழைத்து வரரேண்டும் என்பதையும் வெளிப்படுத்தினார். அவர்கள் திரும்பிய போது நான் அவர்களிடம் எதுவும் கூறவில்லை. அவர்கள் கன்னியாகுமரிக்குச் செல்ல ஆயத்தமானபோது, என்னிடம் வந்து நீங்களும் எங்களுடன் வந்தால், நாங்கள் பெருமகிழ்ச்சி அடைவோம் என்றனர். இது தாயின் விருப்பம் என்று எனக்குத் தெரியும். அவர்களுடன் ராமேஸ்வரம் சென்று அவர்களை விட்டுப் பிரிந்த மகன் யுகேந்திரனுக்குத் தர்ப்பணம் செய்தேன். அன்று மாலை, நான் என் அறையில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருந்த பொழுது, மூட்லி தம்பதியினர் கையில் ஒரு தட்டில் வெற்றிலை, பழங்கள் மற்றும் ஒரு நூறு ரூபாய் நோட்டு இவற்றை எடுத்துக் கொண்டு வந்தனர். அதை எனக்கு க் காணிக்கையாகக் கொடுத்துவிட்டு அடிபணிந்தனர். நான் குழம்பிப் போனேன்! மாயீ அவர்களை என்ன செய்ய வைக்கிறார்! என் வாழ்நாளில் நான் யாருக்கும் புரோகிதராக இருந்ததில்லை. ஆனால், நான் கண்களை மூடிக்கொண்டு காணிக்கையை ஏற்றுக்கொண்டேன். அடுத்த நாள் காலை, கன்னியாகுமரியை அடைந்தேன். நான் அந்த தம்பதியினரை மாயீயிடம் அழைத்துச் சென்றேன். அம்மாவுக்கு இவர்களை முன்பே தெரியும். எனவே, “யுகேந்திரனின் பெற்றோர்” என அறிமுகப்படுத்தினேன். மாயம்மா தன் தலையை அசைத்துவிட்டு, தன் கைகளை உயர்த்தி திருமதி. மூட்லி அவர்களிடம் ஒரு செய்தியை தூய ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார். திருமதி. மூட்லி ஆச்சரியம் அடைந்தார். அவர் இங்கு இருக்கிறார். அவருக்கு என்ன செய்தி கிடைத்தது என்பது அவருக்குத் தெரியும். அவரை சமாதானம் படுத்தும் வகையில், நெஞ்சைத் தொடும் வண்ணம் அவருக்கு ஒரு அறிவுரை கிடைத்தது. “உன்னுடையது அல்லாத ஒன்றுக்காக நீ ஏன் வருந்துகிறாய்?” என்பது அந்த அறிவுரை. மாயம்மா அந்த தம்பதியினரை நன்கு ஆசிர்வதித்தார். சென்னை திரும்பும் முன் இந்த தம்பதியினர் எனக்கு கொடுத்த தட்சணையை மாயம்மாவிடம் கொடுத்து விட்டு கிளம்பினேன்.
சில நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் கன்னியாகுமரி சென்றேன். இம்முறை “தத்வ தர்ஷனா” அதாவது “தத்துவ தரிசனம்” என்னும் பத்திரிக்கையைத் தொடங்குவதற்காகச் சென்றேன். என் நண்பர் திரு. சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னுடன் வந்தனர். கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில் நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றோம். நான் அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தேன். கோயிலில் இருந்து வெளியே வரும் போது, நான் என் நண்பரிடம் நம் திட்டத்திற்கு மிகுந்த உதவியாக இருக்க போகும் ஒருவரை கன்னியாகுமரியில் சந்திக்கப் போகிறோம் என்று என் தியானத்தில் வெளிப்பட்டதாக கூறினேன். என் நண்பர் அந்த மனிதர் யார் என்று கேட்டார். நான் “அங்கு சென்ற பின் தான் தெரியும். ஆனால், நமக்கு அவர் உதவி கிடைக்கும் என்று அம்மா வெளிப்படுத்தியுள்ளார்” என்று பதிலளித்தேன். கன்னியாகுமரியை அடைந்த பின் விவேகானந்தபுரத்தில் மூன்று நாட்கள் தங்கினோம். நாங்கள் தாயிடம் சென்று முழு நேரமும் அவருடனே இருந்தோம். மதுரையில் இருக்கும் போது தியானத்தில் வந்த வெளிப்பாட்டை முற்றிலுமாக மறந்து விட்டோம். மூன்றாவது நாள், நாங்கள் விடைபெற இருந்த வேளையில் அம்மாவிடம் கன்னியாகுமரியில் இருந்து விடைபெற அனுமதி கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நான் என் நண்பரிடம் “அம்மா அனுமதி வழங்கும் வரை என்னால் இங்கிருந்து வர இயலாது. எனவே தாங்கள் பயணத்தைத் தொடருங்கள்” என்று கூறினேன். ஆனால் என்னை அங்கே தனியாக விட்டுவிட்டு பயணத்தை தொடர அவர் விரும்பவில்லை. எனக்கு அம்மா அனுமதி வழங்கும் வரை அவரும் என்னுடன் காத்திருக்க முடிவு செய்தார். மறுநாள் காலை அனுமதி வாங்குவதற்காக அங்கு சென்ற போது திடகாத்திரமான கருப்பு நிறம் கொண்ட மனிதர் ஒருவர் அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தார். என்னை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவர் எனக்காக கடந்த பதினைந்து நாட்களாக காத்துக் கொண்டிருந்ததாக கூறினார். நாங்கள் ஒரு வாரம் முன்பு தான் கன்னியாகுமரிக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தோம். ஆனால் எவ்வாறு இவர் இரண்டு வாரங்களுக்கு மேல் எனது வருகைக்காக காத்திருந்தார்? இவை அனைத்தும் தாயின் திருவிளையாடலே. அந்த மனிதர், தூத்துக்குடியில் இருக்கும் அக்ஸர் என்னும் பெரிய நிறுவனத்தின் இயக்குனர்களுள் ஒருவர், மற்றும் மாயம்மா சமாஜின் தலைவர், திரு. ராஜமாணிக்கம் ஐயா என்று தெரியவந்தது. அவர் தாயின் தீவிர பக்தர் ஆவார். ராஜமாணிக்கம் ஐயா அவர்கள் அவருடைய உதவியை அளித்தார். அவரது தொழில் நிறுவனத்தின் விளம்பரத்தை, தத்துவ தரிசனத்தின் இதழ்களின் இறுதி பக்கத்தில் காணலாம். மாயம்மா எவ்வாறு அவர் மனதில் வந்தார்? ஏன் எங்களுக்கு உதவச் சொன்னார்? இவற்றைப் பற்றி எனக்குத் தெரியாது. இது தாயின் செயல் என்று ராஜமாணிக்கம் ஐயா அவர்கள் கூறினார். எனவே இந்த ஆன்மீக பத்திரிகை மாயம்மாவுக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அம்மாவிடம் விடைபெற்றுவிட்டு சென்னை திரும்பினோம்.
விரைவில் அம்மாவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அம்மா அவரிடம் பணம் எதுவும் வைத்துக்கொள்வதில்லை. ஆனால், இம்முறை நான் அங்கு சென்ற போது ராஜேந்திரனை என்னிடம் ஒரு நூறு ரூபாயை தரச் செய்தார். எனக்கு உடனடியாக மூட்லி தம்பதியினருடன் சென்ற போது நான் அவருக்கு அளித்த காணிக்கை நினைவுக்கு வந்தது. இன்றும் அந்த நூறு ரூபாய் நோட்டை விலைமதிப்பற்ற பொக்கிஷமாக என் சிறு கோவிலில் பாதுகாத்து வருகிறேன். அவரது அருளால் எனது அன்றாடத் தேவைகளைச் சந்திப்பதில் எந்த இன்னலும் வந்ததில்லை. எந்த வேலையை மேற்கொண்டாலும், அதில் எழும்பும் பிரச்சனைகள் சுலபமாக கரைந்துவிடுகின்றன.
நான் இப்போது கடைசி சம்பவத்திற்கு வருகின்றேன். மூட்லி தம்பதியினர் தென்னாப்பிரிக்காவிற்குத் திரும்பிச் சென்ற பிறகு திரு. மூட்லியிடமிருந்து, தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல எனக்கு அழைப்பு பூஜ்ய சுவாமி சகஜானந்தாஜி மகராஜிடம் இருந்து வந்து சேரும் என்று தகவலோடு ஒரு கடிதம் வந்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம். இப்படி ஒரு வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு குழப்பமாகவும் இருந்தது. ஏனெனில் இந்திய அரசாங்கம் பொதுவாக இந்திய குடிமக்களை, தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கீட்டு கொள்கையினால், அங்கு செல்ல அனுமதிப்பதில்லை. எப்படி என்னால் தென்னாப்பிரிக்கா செல்ல இயலும் என்று வியந்து கொண்டிருந்தேன். அன்று இரவிலும் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
மறுநாள் அதிகாலை சென்னையிலிருக்கும் என் வீட்டிற்கு மாயீ வந்தார். பொதுவாக கன்னியாகுமரியை விட்டு எங்கும் செல்லாதவர், இன்று சென்னையில்! எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திரு. மூட்லியின் கடிதத்தை அவர் முன் வைத்தேன். அவர் அதை கையில் எடுத்து அங்குமிங்குமாக திருப்பினார். அவர் படிக்க கற்காதவராய் இருக்கலாம். ஆனால், அவருக்கு அனைத்தும் தெரியும். அந்த கடிதத்தை ப் பார்த்துவிட்டு என்னிடம் தமிழில் “போயிட்டு வா” என்று கூறினார். என்னை மேலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அவர் அங்கு இருக்கும் போதே பூஜ்ய சுவாமியிடமிருந்து கடிதம் வந்தது. அந்த கடிதத்தை அவர் முன் வைத்த போது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் முகம் மலர்ந்துச் சிரித்தார். நான் அம்மாவிடம் “அம்மா என்னுடன் வருவீர்களா?” என்று கேட்டேன். “ஆம்” என்று பதிலளித்தார். தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல பாஸ்போர்ட்டில் ஒப்புதல் பெறுவதில் இருந்த சிரமம் எனக்கு விரைவில் அகன்றதில் ஆச்சரியமில்லை. இது மாயம்மாவுடைய கருணையைத் தவிர வேறில்லை!
தாயின் கீர்த்தியை பாடுவதற்கு பல மணிநேரங்களும் பல நாட்களும் தேவைப்படும். புனித அன்னையின் பெருமையை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்துவது இயலாத காரியமாகும். உங்கள் அனைவரிடம் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் எப்போதாவது புனித பூமியான பாரதவருஷத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தால் தென்முனையில் வீற்றிருக்கும் புனித அன்னையை தரிசித்துச் செல்லுங்கள். நேற்று தோங்காட் கடற்கரையில் சத்சங்கம் ஒன்று நடத்தினோம். என்னுடன் இருந்தவர்களிடம், “நம் மாயம்மா பெருங்கடலின் மறுபக்கம் இருக்கிறார். நாம் இந்தியப் பெருங்கடலின் இந்தப் பக்கம் இருக்கிறோம். அவரை அழையுங்கள். அதை கேட்டு அவர் வருவார். அவரது அருளை பெற ஆயத்தமாக இருங்கள்” என்று கூறினேன். நான் திரு. மூட்லி வீட்டிற்கு திரும்பிய பின் அங்குள்ள பூஜையறையில் மாயம்மா இருப்பது போன்ற காட்சி தெரிந்தது. இன்று ஆச்சரியப்படுத்தும் வகையில் சுவாமிஜி என்னிடம் தாய் மாயீயைப் பற்றிப் பேசுங்கள் என்று ஆணையிட்டார். சுவாமிஜி மற்றும் உங்கள் அனைவருக்கும் மாயம்மாவைப் பற்றி பேச வாய்ப்புக் கொடுத்ததற்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரைப் பற்றி பேசவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நான் பேச வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அதன்படியே இங்கு நடந்தேறியுள்ளது.
வந்தே மாதரம்!
[தென்னாப்பிரிக்காவில், டர்பன், ரிசர்வாயர் ஹில்ஸ், தெய்வ நெறி கழகத்தில், டிசம்பர் 8, 1985 இல் வழங்கப்பட்ட பேச்சு]
*********
சகோதரி நிவேதிதா அகாடமிக்கு
மாயம்மாவின் வருகை
கன்னியாகுமரியின் புனிதத் தாய் மாயம்மா, சகோதரி நிவேதிதா அகாடமிக்கு வெள்ளிக்கிழமை ஏப்ரல் 12, 1985 அன்று அதிகாலை எதிர்பாராத வருகை தந்தார். தமிழ் வருடப் பிறப்பன்று தொடங்கப்பட்ட இந்த கல்விச் சாலையின் 8 வது ஆண்டு நிறைவு நாளன்று இந்த கல்விச் சாலையின் இயக்குனர் மற்றும் தத்வ தரிசனத்தின் ஆசிரியரான பேராசிரியர் வே. ரெங்கராஜன் அவர்களுடன் கல்விச்சாலை குடும்பத்தின் உறுப்பினர்கள் எல்லையற்ற ஆனந்தத்தோடு மாயம்மாவை வரவேற்றனர். அம்மா அவருடைய வசீகரிக்கும் புன்சிரிப்பால் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அரிதாக கன்னியாகுமரியை விட்டுச் செல்லும் அன்னை, சென்னைக்கு எதிர்பாராத வருகை புரிந்தார். செவ்வாய்க் கிழமையன்று ஒரு காரில் அவர் மற்றும் அவருடைய முக்கியமான சீடர்களான திரு. ராஜேந்திரன், கன்னியாகுமரியில் இருக்கும் மாயம்மா சமாஜின் தலைவர் திரு. ஏ. ஆர். பி. என். ராஜமாணிக்கம் மற்றும் சில பக்தர்கள் கிளம்பிய போது தாய் எங்கு செல்ல கிளம்புகிறார், இந்த பயணத்தின் நோக்கம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் திருவண்ணாமலைக்குச் சென்றார். அங்கு யோகி ராம்சுரத்குமார் மாயம்மாவை வரவேற்றார். பின்பு, அவர் சென்னைக்குக் கிளம்பி புதன் கிழமை இரவு வந்து சேர்ந்தார். சென்னையில் இருக்கும் மிக முக்கியமான பிரமுகர்கள் உட்பட, நிறைய பக்தர்கள் வியாழக்கிழமையன்று அன்னையின் தரிசனம் பெற்றனர். அவர் வெள்ளிக்கிழமை மதியம் சென்னையை விட்டு கிளம்பினார்.
(தத்துவ தரிசனம், பிப்ரவரி – ஏப்ரல், 1985. பாகம் 1, எண் 1)
*********
அன்னை மாயம்மாவுக்கு அஞ்சலி
9 பிப்ரவரி, 1992 இல், ஞாயிற்றுக்கிழமையன்று கன்னியாகுமரியின் புனித அன்னை மாயம்மா தன் பூத உடலை விட்டுப் பிரிந்தார். தத்துவ தரிசன வாசகர்களுக்கு இதனை தெரிவிக்கும் பொழுது எங்களுக்கு இருக்கும் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகள் இல்லை. யாருக்கும் மாயம்மாவின் சரியான வயது தெரியாது. அவர் தன் பூதவுடலிலே பல நூற்றாண்டுகள் இருந்திருக்கிறார். அவருடைய இறுதி காலத்தில் சேலத்தில் இருக்கும் ஏற்காடு மலையடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். அங்கு தான் அவரது ஜீவ சமாதி அமைக்கப்பட்டுள்ளது. மாயீ என்று அன்பாக அழைக்கப்பட்ட மாயம்மா அழிவு இல்லாதவர். தாயின் அருளினால் பிறந்த தத்துவ தரிசனத்தில் முதல் தொடக்க வெளியீட்டில் அவருக்கு அதை அர்ப்பணிக்கும் விதமாக பிப்ரவரி 1984 இல் நாங்கள் “பிரம்மிக்க வைப்பது வசீகரமானது” என்ற தலைப்பில் இவ்வாறு எழுதியிருந்தோம். “அவர் மாயீ. மர்மமானவர். விளக்கத்திற்கு அப்பாற்பட்டவர். அவரைப் புரிந்துகொள்ள தர்க்க அறிவினால் நமக்கு உதவ முடியாது. அவரை உணர நம்பிக்கை, முழுமையான நம்பிக்கை, மற்றும் பச்சிளம் குழந்தை தாயை முழுமையாக சார்ந்திருப்பது போன்று அன்னையிடம் பரிபூர்ணமாக சரணடையும் மனோபாவம் தேவை.” கடந்த 10 ஆண்டுகளில் இந்த சாதுவுக்கும் மற்றும் அவருடைய நிறுவனமான சகோதரி நிவேதிதா அகாடமிக்கும் பெரும் சிறப்பு வாய்ந்த காலமாக இருந்தது. இந்தக் காலம் முழுவதும் தாயின் அளவில்லா அருள்பொழிவால் இந்த சாது மட்டுமின்றி அவரால் தொடங்கப்பட்ட நிறுவனமும் ஆசிப்பெற்றது. எளிமையான சிறு அணில் போன்ற நான் தென்னாப்பிரிக்காவில் செய்த எல்லாவற்றின் மேன்மையும் மாயம்மாவைச் சேரும். இந்த சாது வெளிநாட்டில் தங்கியிருந்த ஒவ்வொரு கணமும் அன்னை என் அருகில் இருந்து வழிகாட்டுவதை உணர்ந்திருக்கிறேன். அன்னை மாயீயைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு ஆர்வம் கொண்ட தென்னாப்பிரிக்க பக்தர்களின் நடுவே, டிசம்பர் 7, 1985 இல் தோங்காட் கடற்கரையோரம் இந்த சாது அமர்ந்திருந்தேன். இந்த சாது அவர்களிடம் கடலைச் சுட்டிக்காட்டி புனித அன்னை இந்தியப் பெருங்கடலின் மறுபக்கம்தான் இருக்கிறார் என்றேன். பக்தர்கள் தொலைதூரத்திலுள்ளத் தொடுவானத்தைப் பார்த்தனர். அங்குதான் பாரதத் தாயின் கால்களை கன்னியாகுமரியின் முக்கடல்கள் அலம்பிச் செல்லும் அந்தப் பெருங்கடலில், புனித அன்னை மாயீ தன் புனிதமான பாதங்களை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றேன். அவர்கள் ஆடிப் பாடி மிகவும் உருக்கமாக தங்களை ஆசீர்வதிக்குமாறு தாய் மாயீயிடம் பிரார்த்தனை செய்தனர். அன்று மாலையே தாய் மாயீ அவரது திவ்ய உருக்கொண்டு இந்த சாது தங்கியிருந்த ரிசர்வாயர் மலை விடுதியில் தோன்றினார். மறுநாளே சிவானந்த ஆசிரமம் சென்ற போது அந்த ஆசிரமத்தின் ஆன்மீகத் தலைவர் சுவாமி சகஜானந்தா, “தாய் மாயீயைப் பற்றிப் பேசுங்கள். அவர் இந்த ஆசிரமத்தில் தோன்றியிருப்பதை உணர்ந்தேன்” என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். டிசம்பர் 8, 1985 இல், ஒரு மணி நேரம், என் அறிவாற்றலின் உதவியின்றி, உள்ளத்தில் இருந்தவற்றை, தர்பானில் இருக்கும் சிவானந்தா ஆசிரமத்தில் நான் உரையாற்றியதே எனது வாழ்நாளில் மறக்கமுடியாத சிறந்த உரையாகும். இந்த சாது மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் சென்று இந்தியா திரும்பியதும், அன்னை மாயீ மறுபடியும் சென்னைக்கு ஒரு எதிர்பாராத வருகை புரிந்தார். அப்போது தர்பானில் இந்த சாது ஆற்றிய முழு உரையையும் ஒரு ஒளிப் பேழையில் தாய்க்கு போட்டுக் காட்டினோம். அவர் அந்த உரையை மிகுந்த சந்தோஷத்துடன் கேட்டு ஒரு அன்புத் தாய் தன் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் சாதிப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி மற்றும் பெருமை அடைவது போல அவரது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அவருடைய ஆசியுடன் இந்த உரையை தத்துவ தரிசனத்தில் “இந்தியாவின் புனிதர்கள்” என்ற தொடரின் முதல் வெளியீட்டில் 1987 இல் மூன்றாம் ஆண்டு மலரில் வெளியிட்டோம். தாயைப் பற்றி முழு சரிதை மற்றும் பக்தர்களின் அனுபவங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது அனேகமாக இதுவே முதல் முறையாக இருக்கலாம். நாம் மிகுந்த நன்றியுடன் இங்கு குறிப்பிடவேண்டியது இந்த சாதுவிற்கு தாய் அருளிய பெரும் பரிசான குரு தரிசனம். புனித அன்னையே இந்த சாதுவை 1980 களின் தொடக்கத்தில் குருவிடம் அனுப்பி வைத்தார். புனித அன்னையால் ஊட்டம் அளித்து பாதுகாத்து வளர்க்கப்பட்ட இந்த எளிய மலர், புனித ஆசான் யோகி ராம்சுரத்குமாரின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டு, அந்த குருவால் அதனுடைய மார்பில் “ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்” என்ற மந்திரம் பதிய வைக்கப்பட்டு, மேலும் நறுமணமூட்டப்பட்டு, அந்த நறுமணத்தை எல்லா இடங்களிலும் இந்த எளிய பூ பரப்பும்படி செய்தார்.
நம் அன்னை இருக்கிறார். நம் அன்னை நிச்சயமாக இருக்கிறார். நம் அன்னை என்றும் நம் மனதில் இருக்கிறார். அவர் நம் உள்ளத்தில் வசித்து, நமக்கு வழிகாட்டுவதை தொடர்வார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் நாங்கள் தத்துவ தரிசனத்தை அவரது பாதங்களில் மறுபடியும் அர்ப்பணிக்கின்றோம். மே, 1984 இல் எழுதிய கவிதை ஒன்றை இங்கு நினைவு கூறுகிறோம்.
“தாயே இன்று மலர்ந்தது
இன்னொரு நறுமண மலர்
ஒரு சொல்லுக்காக ஏங்கி
உங்கள் கொடிப் பந்தலில்”.
(தத்துவ தரிசனம், பிப்ரவரி – ஏப்ரல், 1992, பாகம் 9, எண் 1)
*********
References:
The English original is available @ https://yogiramsuratkumarblog.wordpress.com/2020/02/13/sadhu-rangarajan-on-mayamma/
Some pictures are available @
https://yogiramsuratkumarblog.wordpress.com/2019/07/31/video-sadhu-rangarajan-on-how-he-met-mayi-and-yogi/
The Tamil translation is available @ https://yogiramsuratkumarblog.wordpress.com/2020/03/08/mayamma-tamil-articles-sadhu-rangarajan/
*********