Yōgi Rāmsuratkumār eṉṉai vandu āḷuvāi

யோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்
எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
உடன் பாடியவர், அவரது மகள், செல்வி ஸ்ரீகௌரி
யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்திற்கு வந்த போது பதிவு செய்யப்பட்டது

Composed by Tamil Writer, Sri. Balakumaran
Sung by him accompanied by his daughter, Selvi. Srigowri
during a visit to Yogi Ramsuratkumar Ashram to have the darshan of Bhagavan Yogi Ramsuratkumar, Godchild, Tiruvannamalai
http://www.writerbalakumaran.com/wp-content/uploads/2017/11/yogithunai.pdf

எங்கு நானிருப்பினும்

செய்வதேது ஆயினும்

ஏகனாயிருப்பினும்

கூட்டமோடு ஆடினும்

பொங்கு கோபமாயினும்

பூஞ்சிரிப்பு ஆயினும்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

நல்லனாய் இருப்பினும்

அல்லவேறு ஆயினும்

கள்ள ஞானப் பொய்மையோடு

காதல் பேச்சு பேசினும்

பள்ளம் பாயும் நீரைபோல

காமவேகம் ஆயினும்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

கடந்து போன பாதையில்

நடந்து போன வேதனை

கிடங்கு போல பூட்டியே

அடங்கி வாதை செய்யுமே

தடங்கள் யாவும் மாற்றி வைத்து

தம்மை மேலும் ஏற்றியே

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

வாடி நின்ற பூமிபோல்

வானம் பார்த்த ஏரிபோல்

பாடிப்பாடித் தன் இணை

தேடுகின்ற பேடைபோல்

தேடித்தேடி என்னுள்ளே

உந்தன் நாமம் சொல்கிறேன்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

வாழ்க்கை இங்கு வேதனை

வாய்மையாவும் சோதனை

தாழ்வுறாத வண்ணம் வந்து

எந்தன் நெஞ்சில் தங்குவாய்

சூழ்ந்து வந்த ஊழ்வினை

சுற்றி நின்று தாக்கையில்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

என்னுள் வந்து தங்கி நீ

இரும்பில் செய்த வாளதாய்

வெண்ணெய் பூசித் தோகையோடு

வீசுகின்ற கருவியாய்

நாணுகின்ற செயல்கள்யாவும்

நான் துணிந்து நிற்கவே

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

சுற்றி நின்ற உறவுகள்

சோம்பலின்றி வாழவும்

பற்றி நின்ற நட்புகள்

பண்பு கூட்டி பேசவும்

கற்றறிந்த சபையிலே

எந்தன் வாக்கு வெல்லவும்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

பச்சை நெல்லு வயலிலே

வெள்ளை கொக்கு காட்சியாய்

இச்சை கொண்ட என்னுள்ளே

உந்தன் ரூபம் ஜோதியாய்

அச்சு வெல்லக்கட்டியாக

ஆனையாக தோன்றுவாய்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

செம்மையாய் சிறப்பினோடு

சேர்ந்து வந்த செல்வமாய்

தன்மையாய் தடங்கலின்றி

தாழ்ந்து வந்த மேகமாய்

உண்மையாய் உணர்ச்சியாய்

உயர்வடைந்த காதலாய்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

ஆண்டகை அணைத்த கை

அன்பு அன்பு செய்ததை

தூண்டலைத் துளைத்தலைத்

தோன்றி நின்ற ஜோதியை

விண்ட பாலகுமரனிங்கு

எழுதி வந்த பாட்டிலே

யோகி ராம்சுரத்குமார்

நின்று என்றும் ஆளுவாய்

 

யோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

உடன் பாடியவர், அவரது மகள், செல்வி ஸ்ரீகௌரி

யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்திற்கு வந்த போது பதிவு செய்யப்பட்ட

இந்த காணொளியை வழங்கிய திரு. N.S. மணி அவர்களுக்கு நன்றி !

Composed by Popular Tamil Writer, Sri. Balakumaran
Sung by him accompanied by his daughter, Selvi. Srigowri
Thanks to Sri. N.S. Mani for sharing this video that was recorded when they had come for the darshan of Bhagavan Yogi Ramsuratkumar