Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/
ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு
ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்
அத்தியாயம் 2.31
பகவானின் தூதர்
நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை அன்று சிரஞ்சீவி. விவேகானந்தனும், குமாரி. நிவேதிதாவும் பகவானின் இல்லத்திற்கு காலை 11 மணிக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் இந்த சாதுவை தொலைபேசி மூலம் அழைத்து, பகவான் சாதுவை ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காக உடனடியாக திருவண்ணாமலைக்கு கிளம்பி வரும்படி கூறியதாக தகவலை பரிமாறினார்கள். விவேக்கையும், நிவேதிதாவையும் பகவான் பார்த்த மாத்திரத்திலேயே அவர் திரும்ப திரும்ப, “விவேக் வந்து விட்டான். நிவேதிதா வந்து விட்டாள் இந்த பிச்சைக்காரனின் கவலைகள் நீங்கின” என்றார். முதலில் அவர் எதற்காக இவ்விதம் கூறுகிறார் என அறியாது விவேக் மற்றும் நிவேதிதா தவிக்கையில், யோகி நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என வினவினார். நிவேதிதா பகவானிடம் தாங்கள் சென்னையில் இருந்து வருவதாகவும், விவேக் இங்கிருந்து சிதம்பரம் சென்று எம்.இ சேர இருப்பதாகவும், தான் சென்னை திரும்பி செல்ல இருப்பதாகவும் கூறினாள். பகவான் நிவேதிதாவிடம் தனக்காக ஒரு வேலையை செய்ய இயலுமா எனக் கேட்டார். அவளும் நிச்சயமாக அவர் என்ன விரும்புகிறாரோ அதனை செய்வேன் என்றாள. யோகி, “ நீ சென்று உனது தந்தையை அவரசமாக அனுப்ப இயலுமா ? “ என்றார். அவள், சாது, குருவை சந்தித்து முடிந்தப்பின் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கூறியதாகவும் எனவே தான் உடனடியாக அவரை தொலைபேசியில் அழைப்பதாக கூறினாள். பகவான் “ உடனடியாக அதனை செய்” என்றார். பின்னர் நிவேதிதா தனது தந்தையை உடனடியாக அழைத்தார். அவளது குரலில் இருந்தே சாது, பகவான் ஏதோ முக்கியமான ஒன்றிற்காகவே தன்னை அவசரமாக அழைத்திருக்கிறார் என புரிந்து கொண்டார். சாது, நிவேதிதாவிடம், தான் உடனடியாக கிளம்பி வருவதாகவும் சில மணி நேரத்தில் தான் அங்கே இருப்பேன் என்றும் பகவானிடம் கூறிவிடுமாறு சொன்னார். அன்று காலையே சாது பாண்டிச்சேரியில் மறுபதிப்பாக வெளிவர இருக்கும், ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் எழுதிய “ யோகி ராம்சுரத்குமார் – கடவுளின் குழந்தை திருவண்ணாமலை “ என்ற நூல் வெளியீடு குறித்த அழைப்பிதழை பெற்றார். எனவே அது சம்பந்தமாகவே யோகி தன்னை அழைக்கிறார் என்று சாது ஓரளவு யூகித்தார்.
மதிய நேரம் திருவண்ணாமலை அடைந்த உடன் சாது பகவானின் முன்னிலையில் ஆஜரானார். விவேக், நிவேதிதா மற்றும் பகவானின் உதவியாளர் சசி மட்டுமே அங்கிருந்தனர். பகவான் சாதுவை உள்ளே அழைத்து தன் அருகே அமரவைத்தார். அவர் பாண்டிச்சேரியில் இருந்து வந்திருந்த அழைப்பிதழை சாதுவிடம் காட்டி, அதனை படிக்குமாறு கூறினார். சாது தனக்கு ஏற்கனவே இந்த அழைப்பிதழ் வந்துவிட்டதாக கூறினார். அவர் தனக்கு அழைப்பிதழ் இப்போதுதான் கிடைத்ததாகவும் கூறி தொடர்ந்தார்: “இந்தப் புத்தகம் 1979ல் பதிப்பிக்கப்படது. அதன்பின் சிலர் அதனை மறுபதிப்பு செய்ய நினைத்து, அவர்கள் ட்ரூமன் கெய்லருக்கு கடிதம் எழுதினார்கள் அவர் மௌனமாகவே இருந்தார். எனவே அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்பொழுது இவர்கள் மறுபதிப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தப்பிச்சைக்காரன் அவர்கள் அனுமதி பெற்றிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இதுவும் அதே குழுவினரான, ராஜமாணிக்கம், டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியன் மற்றும் ரவீந்திர பாண்டியன், அவர்கள் செய்வதே. சிலகாலங்களுக்கு முன், அவர்கள் ஒரு டிரஸ்ட் துவங்க முயன்றார்கள், இந்தப் பிச்சைக்காரன் தேவகியை அது தொடர்பாக உன்னிடம் அனுப்பி வைத்தேன். உனக்கு நினைவிருக்கிறதா?“ சாதுஜி தனக்கு நினைவிருக்கிறது என்றார். மேலும் யோகி இரண்டு வருடங்களுக்கு முன்பே சாதுவிடம் அந்த புத்தகம் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக போடப்பட்டது என்றும், எனவே இதற்கு மறுபதிப்பு தேவையில்லை என்றும் கூறியதை யோகியிடம் நினைவு கூர்ந்தான். பகவான், “ ஆமாம். இந்த மனிதர்கள் எவருடைய அனுமதியும் இன்றி இதனை செய்கின்றனர். இது குற்றம். அப்படித்தானே ? “
சாதுஜி : “ ஆமாம் மஹராஜ் . இது குற்றச்செயல். ஒரு புத்தகத்தை உரியவரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக்கூடாது. “
பகவான் : “ ஆமாம். இது குற்றச்செயல். இப்பொழுது என்ன செய்வது ? நீ எந்த வழியில் இதனை நிறுத்த இந்த பிச்சைக்காரனுக்கு உதவி செய்ய இயலும்? இந்தப்பிச்சைக்காரன் இந்த அழைப்பிதழை பார்த்ததில் இருந்து மிகுந்த மனக்குழப்பமும் கவலையும் அடைந்துள்ளான். விவேக்கும், நிவேதிதாவும் சரியான நேரத்தில் இங்கு வந்தனர். இந்தப் பிச்சைக்காரன் நிவேதிதாவிடம் உன்னை உடனடியாக அழைக்குமாறு சொன்னேன். இப்பொழுது நீ எந்த வகையில் இந்தப்பிச்சைக்காரனுக்கு உதவ இயலும்?”
சாது : “ மஹராஜ் நான் உடனடியாக நேராகவே பாண்டிச்சேரிக்கு சென்று அங்கே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறேன். அவர்கள் இதனை அனுமதியின்றி செய்கிறார்கள் எனில், நான் அவர்கள் அச்சுப்பணியை முடித்திருந்தாலும், புத்தக வெளியீட்டை நிறுத்துகிறேன்.“
பகவான் : “இந்தப் பிச்சைக்காரன் மிக நிச்சயமாக கூறுவான் அவர்கள் எந்த அனுமதியும் பெற்றிருக்க மாட்டார்கள். அதனை அவர்கள் அனுமதியோடுதான் செய்வதாக கூறினால், அவர்களிடம் அந்த அனுமதியை காட்டுமாறு கோரி, அதனை நீ சரிபார். அவர்களிடம் அனுமதி ஏதும் இல்லையெனில் நீ நமது பலத்த எதிர்ப்பை காட்டு. அவர்களை நாம் கடுமையாக எதிர்ப்போம் என்பதையும் அவர்களிடம் கூறிவிடு.”
சாதுஜி அதனை செய்வதாக ஏற்றுக் கொண்டார். பகவான் மேலும் சாதுவிடம் அவர்களிடம் மீண்டும் நாங்கள் இந்த நூலை மறுபதிப்பு செய்யமாட்டோம் என எழுத்து மூலம் தரச்சொல்வதோடு, அவர்களை புத்தக வெளியீட்டு விழா ரத்தானதாக பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு கேள். மேலும் யோகி சாதுவிடம் இது குறித்து நீ ஜஸ்டிஸ் ராஜூ அல்லது அருணாச்சலத்திடம் ஏதேனும் பேசவேண்டுமா என்று கேட்டார். சாது, தானே ராஜமாணிக்க நாடார், டாக்டர் K. வெங்கடசுப்பிரமணியன் மற்றும் ரவீந்திரபாண்டியன் ஆகியோரிடம் பேசுவதாகவும் கூறினான். எனினும் மற்றவர்களிடமும் இது பற்றி தெரிவிப்பதாகவும் கூறினான்.
குரு சாதுவுடன் ஒரு மணி நேரத்திற்கு இது குறித்து விவாதித்தார். மற்றவர்கள் வெளியே காத்திருந்தனர். அவர் சாதுவிடம் ரூ.200 கொடுத்து அதனை செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு கூறினார். மேலும் அவர் சாது ஜெயந்தி விழாவிற்கான பல்வேறு பணியில் இருக்கையில் சாதுவை தொந்தரவு செய்துவிட்டதாகவும் கூறினார். சாது பகவானிடம் இந்தப் பணி ஜெயந்தி விழாவை விட மிக முக்கியம், மற்றவர்கள் விழாவிற்கான பணியை பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறினான். சாது பகவானிடம் ஜெயந்தி விழா குறித்தும், விவேக் எம்.இ. சேருவது குறித்தும் விளக்கினார். பகவான் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். பின்னர் அவர் சாதுவின் தண்டத்தையும், தேங்காய் சிரட்டையையும் மந்திரித்து கொடுத்தார். யோகி தன் முன் இருந்த அத்தனை பழங்களையும் எடுத்து நிவேதிதாவிடம் பை நிறைய கொடுத்தார். மீண்டும் அவர் நிவேதிதாவையும், விவேக்கையும் ஆசீர்வதித்து அனுப்பினார். நாங்கள் அவரிடமிருந்து விடைப்பெற்று உடுப்பி பிருந்தாவன் வந்து அங்கு திரு. ராமசந்திர உபாத்யாயாவை சந்தித்தோம். விவேக், பிரபா மற்றும் சுந்தரராமன் வீட்டிற்கு அவர்களோடு தங்க சென்றனர். சாதுவும், நிவேதிதாவும் உடுப்பி பிருந்தாவனில் தங்கினர். சசி எங்களை பிருந்தாவனில் சந்தித்தார். காலையில் நிவேதிதா வருவதற்குமுன், பகவான் சாதுவின் விலாசத்தை தேடிக்கொண்டிருந்தார் என்றும், ஜெயராமன் வந்ததும் பகவான் ஜெயராமனிடம் சாதுவின் முகவரி என்னவென்று கேட்டதாகவும், சாது உடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் சொன்னார். அந்த நேரத்தில்தான் நிவேதிதாவும், விவேக்கும் அங்கே சென்றிருக்கிறார்கள். குரு தனது சீடனான சாதுஜி மீது கொண்டிருந்த நம்பிக்கையை அந்த நிகழ்வு உணர்த்தியது.
அடுத்தநாள் சாதுஜியும், நிவேதிதாவும் பாண்டிச்சேரிக்கு சென்று திரு. ரவீந்திரபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கு சென்றனர். அவரது மனைவி பிரபா மற்றும் பிள்ளைகள் லஷ்மி பாய் மற்றும் அரவிந்த் போன்றோர் சாதுவையும், நிவேதிதாவையும் வரவேற்றனர். பிரபா, ரவீந்திரபாண்டியனுக்கு தொலைபேசியில் தகவல் சொல்ல அவர் உடனே வந்து சேர்ந்தார். சாது அவரிடம் பேசி குருவின் உத்தரவை தெரிவித்தார். அவர் மிகுந்த பணிவோடு தாங்கள் தவறிழைத்து விட்டதாக ஒப்புக்கொண்டார். சாதுவிடம் அவர் புத்தகத்தின் அச்சுப்பணி முடிந்துவிட்டதாகவும், அட்டைப்படம் மட்டுமே அச்சடிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார் . சாது அவரிடம் அச்சுப்பணியை நிறுத்துமாறும், புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறும் கூறினார். அவர் ஒப்புக் கொண்டப்பின் அவரிடம் சாது கடிதம் ஒன்றை எழுத்து மூலமாக தருமாறு கூறினார். அவர் அதற்கு இணங்கினார். அவர் திரு.ராஜமாணிக்க நாடார் இந்த பணியை தன்னை மேற்கொள்ள சொன்னதாக கூறினார். அவர் ஒரு தந்தியை பகவானுக்கு அனுப்பி விட்டு அதன் நகலை சாதுவிடம், ஒரு கடிதத்துடன் கொடுத்தார். அவர் சாதுவையும், நிவேதிதாவையும் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அன்னை மற்றும் அரவிந்தர் சமாதிக்கு அவர்கள் தங்கள் பிரார்த்தனையை சமர்ப்பித்துவிட்டு அவரது இல்லத்திற்கு திரும்பவும் வந்தனர். சாது அவர்களை ஆசீர்வதித்து விட்டு சென்னைக்கு மாலையில் திரும்பினார். சாதுஜி, திரு. AR.PN. ராஜமாணிக்கம் அவர்களை தொலைபேசியில் அழைத்தார். அவர் சாதுவின் இல்லத்திற்கு மாலை பிரார்த்தனைக்கு வந்து சேர்ந்தார். சாது அவரிடம் பேசினார், அவர் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டார், ஆனால் அவர் பழியை ரவீந்திரபாண்டியன் மீது சுமத்தினார். சாதுஜி ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடமும் பேசினார். வியாழக்கிழமை நவம்பர் 26 கலையில் சாதுவிற்கு டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியம் அவர்களிடம் இருந்து தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. சாது ஜஸ்டிஸ் ராஜூவிடமும் பேசினார். அதன் பிறகு சாது ஒரு விரிவான கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினார்:
“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,
வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!
இந்த சாது பாண்டிச்சேரிக்கு நேற்று காலை சென்றடைந்து நேரடியாகவே திரு. ரவீந்திரபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கு சென்றேன். அவரது மனைவி அவரை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அழைக்க அவர் வந்து இந்த சாதுவை வரவேற்றார். அவர் மிகவும் கருணையோடும் அன்புடனும் நடந்து கொண்டார். இந்த சாது அவரிடம் நீங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழை பெற்றுக் கொண்டதாகவும், இந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்ய திரு. ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் அவர்களிடம் ஏதேனும் அனுமதி பெறப்பட்டதா என நீங்கள் அறிய விரும்புவதாகவும் கூறினேன். அவர் எந்த அனுமதியும் நூலின் ஆசிரியரிடம் பெறப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டதோடு அவர் ஆல் இந்தியா பிரஸ்ஸில் புத்தகத்தை அச்சிடுவதாகவும் கூறினார். இந்த சாது அனுமதி பெறப்படாமல் புத்தகத்தை இவ்விதம் மறுபதிப்பு செய்வது ஒரு குற்றச்செயல் என்று நீங்கள் என்னிடம் அவர்களுக்கு தெரிவிக்கச் சொன்னதையும், உங்களின் பலத்த எதிர்ப்பு இத்தகைய செயலின் மீது இருப்பதையும் அவர்களுக்கு உணர்த்தினேன். அவர் திரு. ராஜமாணிக்க நாடார் சிலநாட்களுக்கு முன் தங்களிடம் அனுமதி பெற்றதாக கூறியதனால் இந்தப் பணியை தான் மேற்கொண்டதாகவும் இந்த தெய்வீக காரியத்திற்கு எந்தவித எதிர்ப்பும் இருக்காது என தான் நினைத்ததாகவும் கூறினார். இந்த சாது அவரிடம் மிகத் தெளிவாக, ட்ரூமன் கெய்லரின் புத்தகத்தை அவருடைய அனுமதி இல்லாமல் மறுபதிப்பு செய்ய, நீங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும், நல்லெண்ணத்துடன் செய்யப்படும் செயல்களாக இருந்தாலும், அனைத்து சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது அவசியம் என்றும் உணர்த்தினேன். அவர் தனது தவறான செய்கைக்கு வருத்தம் தெரிவித்ததோடு புத்தகத்தின் அச்சுப்பணி மற்றும், புத்தக வெளியீட்டு விழாவையும் ரத்து செய்வதாக தெரிவித்தார். நான் அவர்களிடம் தாங்கள் கூறியதைப் போலவே புத்தக வெளியீடு நடக்காது என்ற பொது அறிவிப்பை செய்திதாள்களிலும் வெளியிடுமாறும், கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி தருமாறும் கூறினேன். நாங்கள் அவரது இல்லத்தில் அமர்ந்திருந்த போதே அவர் தனது அலுவலகத்திற்கு சென்று உங்களுக்கு தந்தி ஒன்றை அனுப்பினார் அதன் நகலையும், அதே விவரங்களை கடிதம் மூலமாகவும், தந்தார். இத்துடன் அந்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
நான் சென்னை திரும்பியவுடன் மாலையில், திரு. AR.PN. ராஜமாணிக்கம் அவர்களை தொலைபேசி மூலம் அழைத்து, எனது இல்லத்திற்கு உடனடியாக வரச்சொன்னேன். அவர் வந்து என்னை சந்தித்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சிலகாலங்களுக்கு முன் அவர் டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியன் அவர்களை உங்களிடம் ட்ரூமன் கெய்லரின் புத்தகத்தை மறுபதிப்பு செய்ய அனுமதி கேட்டு அனுப்பியதாகவும், அப்போது நீங்கள் அதற்கு அனுமதி அளித்ததாகவும், அதனை அவர் திரு.ரவீந்திரபாண்டியனிடம் கூறியதாகவும், ஆனால் பின்னர் புத்தகம் அச்சிட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் திரு. சங்கர்ராஜூலு அவர்களை உங்களிடம் அனுப்பிய பொழுது, நீங்கள் அனுமதி மறுத்ததாகவும் கூறினார். இறுதியாக நடந்த அனுமதி மறுப்பு தகவல் திரு. ரவீந்திரபாண்டியன் அவர்களுக்கு தெரியாமல், திரு. ராஜமாணிக்கம் நாடார் அவர்களிடமும் கலந்தாலோசிக்காமல், அச்சிட ஆரம்பித்து விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் திரு. நாடார் இரு தினங்களுக்கு முன்னர் பாண்டிச்சேரி சென்றபோதுதான் புத்தகம் அச்சிடப்பட்டு வரும் தகவல் அறிந்ததாகவும், உங்களின் அனுமதியின்றி இவ்விதம் செய்தல் தவறு என்று கூறியதாகவும் திரு. நாடார் கூறினார். இந்த சாது நாடாரிடம், நீங்கள் எவருக்கும் ட்ரூமன் கெய்லர் புத்தகத்தை மறுபதிப்பு செய்ய அனுமதி தரவில்லை என்றும், இவ்விதமான செயல்களை உங்களிடம் நேரடியாக பேசிய பின்னரே மேற்கொள்ள வேண்டும் என கூறியப்பின், அதனை ஒப்புக்கொண்ட திரு.ராஜமாணிக்க நாடார், திரு .ரவீந்திரபாண்டியன் அவர்களின் மீது பழிசுமத்தி, அவர் செய்தது தவறு என்று கூறியதோடு, அவர் உங்களுக்கு இது குறித்து மன்னிப்பு கேட்டு எழுதுவதாகவும் கூறினார்.
இந்த சாது டாக்டர். வெங்கடசுப்பிரமணியனை தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவர் டெல்லி சென்றிருந்தார். இன்றுகாலை டாக்டர். வெங்கடசுப்பிரமணியன் சென்னை திரும்பிய பிறகு இந்த சாதுவை தொடர்பு கொண்டார். நான் அவரிடம், புத்தகம் மறுபதிப்பு குறித்து திரு. நாடாரின் சார்பில், அவர் தங்களிடம் தொடர்புகொண்டு அனுமதி பெற்றாரா என்று கேட்டபோது அவர் முற்றிலும் அதனை மறுத்தார். மேலும் தனக்கு இது குறித்த எந்த விவரமும் தெரியாது என்றும், நாடார் சொல்வது முற்றிலும் தவறு என்றும் கூறினார். மேலும் அவர் ஆசிரியரின் அனுமதியின்றி வெளியிடுவதை கண்டித்தார். இது குறித்து நாடாரிடம் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.
எப்படி ஆயினும், அதிகாரபூர்வமற்ற முறையில் நடக்கும் புத்தக மறுபதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த சாதுவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் எச்சரித்துவிட்டான். இத்தகைய சூழல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்களுடைய அனுமதியின்றி இத்தகைய செயல்கள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தேன்.
இந்த சாது மாண்புமிகு நீதிபதிகளான ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் ராஜூ அவர்களிடமும் இது குறித்து தகவல் தந்து வைத்துள்ளான்.
திரு. ரவீந்திரபாண்டியன் அவர்களின் தந்தியை நீங்கள் ஏற்கனவே பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன். அவர் நடந்த அனைத்திற்கும் வருத்தம் தெரிவித்ததோடு, உங்களின் மன்னிப்பிற்காகவும் பிரார்த்தித்தார்.
உங்கள் ஆசியாலும், கருணையாலும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் விவேக் எம்.இ (கட்டமைப்பு) சேர்ந்துவிட்டு இன்று காலை திரும்பினான். அவனது கல்லூரி டிசம்பர் – 14ல் திறக்கப்பட இருக்கிறது. அவன் ஜெயந்தி விழாவிற்கு இங்கே இருப்பான். அகண்ட ராமநாமத்தில் பங்கேறக பலர் விருப்பப்பட்டு முன்வந்து தங்கள் பெயர்களை பதிவு செய்திருக்கின்றனர். திரு. பாலகுமாரன் இன்று காலை இந்த சாதுவை சந்தித்து அவரது இல்லத்தில் ஹோமங்களை நடத்துவது குறித்து சில வழிக்காட்டுதல்களைக் கேட்டார்.
பிரார்த்தனைகளுடனும், நமஸ்காரங்களுடனும்,
உங்கள் தாழ்மையான சீடன்,
சாது ரங்கராஜன். “
வியாழக்கிழமை மாலை குன்றத்தூரில் நடந்த ராம்நாம் சத்சங்கத்தில் பல பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த சாது உரையாற்றினான்.
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி அதிகாலையில் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் – 1, 1992ல் அகண்ட ராமநாம ஜெபத்துடன் தொடங்கியது. சுரேஷ் ஹோமங்களை நடத்தினார். வேதபாடசாலை வித்யார்த்திகள் வேத கோஷங்களை முழங்கினர். திரு. வெங்கடராமன் சாமகானம் பாடினார். முற்பகலில், ஜஸ்டிஸ் T.S. அருணாச்சலம் கூட்டத்தினரிடையே உரையாற்றினார். வசந்தா குழுவினரின் பஜனை, ஜன கல்யாண் உறுப்பினர்களின் பஜனை, மற்றும் ஜவந்தி நாதனின் உரை போன்றவை நடைப்பெற்றது. மதியம், தெற்கு ரயில்வே பணியாளர்களின் குவாட்டர்ஸை சேர்ந்த பக்தர்கள், அண்ணாநகர் பக்தர்கள் குழுவினர், மற்றும் திரு. கல்யாணராமனின் குழுவினர் பஜனை நடத்தினர். மாலை 6 மணிக்கு அகண்ட ராமநாமம் முடிந்தப்பின் விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடந்தேறியது. திரு. D.S. சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா, சுவாமி விஸ்வநாத் லிமாயே, தங்காடு மோகன் மற்றும் சாதுஜி போன்றோர் கூட்டத்தினரிடையே உரையாற்றினர். திரு. சுகவனம் தனது பகவான் பற்றிய கவிதைகளை பகிர்ந்தார். தென்னாப்பிரிக்க தமிழ் வேதிக் சொசைட்டியின் தலைவர், திரு.N.C.நாயுடு, விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். டாக்டர். ராதாகிருஷ்ணன் நன்றியறிவித்தார். அடுத்தநாள் காலையில் நிவேதிதா, பிஹாரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் காயத்ரி, ஆகியோர் திருவண்ணாமலைக்கு சென்று பகவானிடம் விழா பற்றிய முழுமையான தகவல்களை தெரிவித்தனர். ‘விவேகானந்த கேந்திர பத்திரிகா’வை அவள் யோகி இடம் சேர்ப்பித்தாள். பகவான் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்து, பிரசாதங்களை நிவேதிதா மூலம் அனுப்பி வைத்தார்.
சனிக்கிழமை, டிசம்பர் 19, 1992 அன்று சாது, பகவானுக்கு, கடிதம் ஒன்றை, தனது 23 ஆம் தேதி பயணம் குறித்து எழுதினார்:
“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,
வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!
‘தத்துவ தர்சனா’வின் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி சிறப்பு மலர் இப்போது அச்சில் உள்ளது. அது தயாரானவுடன் அதன் முதல் பிரதியை எடுத்துக்கொண்டு புதன்கிழமை டிசம்பர் 23 ஆம் தேதி 1992ல் நாங்கள் திருவண்ணாமலைக்கு வர இருக்கிறோம்.
சந்த் ஸ்ரீ வி்ஸ்வநாத் லிமாயே என்ற சுவாமிகள் 10 அடி உயர ஸ்ரீ ராமர் சிலையை ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்ததில் பாரத் ஏகாத்மதா பவனில் நிறுவுவதற்கான பணியை மேற்கொண்டு இருக்கிறார். அவரும் எங்களுடன் வர இருக்கிறார். அவர் வால்மீகி ராமாயணத்தை ஆங்கிலத்தில் இரண்டு பாகங்களாக எழுதியுள்ளார். அதனை அவர் தங்கள் புனிதமான பாதங்களில் சமர்பித்து ஆசிபெற நினைக்கிறார்.
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா ஏற்பாடு செய்ய எங்களுக்கு பெரிதும் உதவிய திருமதி மற்றும் திரு.N.S. மணி, அமெரிக்காவில் ஒரு கணிணி பொறியியல் மாணவரான அவரது மகன் திரு. ஸ்ரீனிவாஸ், ஆகியோரும் எங்களுடன் உங்கள் ஆசியை பெற வருகிறார்கள். உங்கள் தரிசனத்திற்கு நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
செவ்வாய்க்கிழமை டிசம்பர் 22, 1992 அன்று குமாரி நிவேதிதா காஞ்சன்காடு செல்கிறாள். அவள் ஆனந்தாஸ்ரமத்தில் பத்து நாட்கள் தங்க இருக்கிறாள். அவளும், திருமதி. பாரதியும் தங்களது நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். சிரஞ்சீவி விவேக், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சென்னைக்கு திரும்பும் முன், திருவண்ணாமலைக்கு 24 ஆம் தேதி அன்று வருவான்.
சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,
சாது ரங்கராஜன். “
நிவேதிதா, ஆனந்தாஸ்ரமத்திற்கு செல்வதற்கு முன் பகவானின் ஆசியைப் பெற, சுப்பிரமணி என்ற பக்தர் உடன், திருவண்ணாமலைக்கு ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 20 அன்று சென்று, அடுத்தநாள் திரும்பி வந்தாள். பின்னர் செவ்வாய்க்கிழமை டிசம்பர் 22 அன்று அவள் ஆனந்தாஸ்ரமத்திற்கு பயணித்தாள்.
டிசம்பர் 23, 1992 அன்று சாதுஜி திருமதி. பாரதி, திரு. N.S. மணி மற்றும் சுவாமி விஸ்வநாத் லிமாயே போன்றோர் காரில் சென்று, மதியம் யோகியின் இல்லத்திற்கு சென்று சேர்ந்தோம். திருமதி. பவதாரிணி மற்றும் பல பக்தர்கள் அங்கே இருந்தனர். பகவான் சாதுவை உள்ளே வரச.சொல்லி அவரிடம் நேரம் என்ன என்று கேட்டார். சாது நான்கு மணி என்றார். யோகி சாதுவை கோயிலுக்குச் சென்று ஐந்து மணிக்கு வருமாறு கூறினார். நாங்கள் கோயிலுக்குச் சென்று 5 மணிக்கு யோகியின் இல்லத்திற்கு வந்தடைந்தோம். அவர் அனைத்து பக்தர்களையும் அனுப்பி வைத்து விட்டு எங்களை வரவேற்று அமரவைத்தார். சாது யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி சிறப்பு மலரான ‘தத்துவ தர்சனா’ மற்றும் லிமாயேஜியின் இராமாயணம் போன்றவற்றை பகவானின் முன் வைத்தனர். பல பக்தர்கள் வந்தும், சென்றவண்ணமும் இருப்பதன் காரணமாக தன்னால் யாரிடமும் ஓய்வாக அமர்ந்து எதையும் பேச இயலவில்லை என யோகி புகார் அளித்தார். அவர் அனைவரையும் அனுப்பிவிட்டு எங்களிடம் திரும்பினார். பகவான் திரு லிமாயே பற்றி வினவினார். சாது, திரு. லிமாயே மற்றும் மணியை அறிமுகப்படுத்தினார். திரு. லிமாயே, ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்கத்தில், உ.பி.யின் மாநில பிரசாரக்காக இருந்ததையும், காஞ்சி காக்கோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தீக்ஷை பெற்றபின் தனது பணிகள் குறித்தும், பகவானிடம் ஹிந்தியில் பேசினார். அவர் பகவானின் ஆசியை வேண்டினார். யோகி, “என் தந்தையின் ஆசிகள்” என்றார். யோகி பின்னர் திரு. லிமாயே அவர்களின் படைப்புக்களை ஒரு பார்வை பார்த்தார். பின்னர் ‘தத்துவ தர்சனா’ இதழினை ஒரு பார்வை பார்த்தார். யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவின் புகைப்படங்களை பார்த்தார். சாதுஜி திரு. மிசேல் கோகே (ஷிவ் சங்கர்) எழுதிய கடிதத்தை பகவானிடம் காட்டினார். பகவான் சாதுவை அந்த கடிதத்தை படிக்குமாறு கூறினார். அதில் மிசேல், யோகி ராம்சுரத்குமார் குறித்த ஒரு நூலை பிரென்ச் மொழியில் எழுத வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். பகவான் சாதுவிடம், “ நீ அவருக்கு அவர் அதனை செய்யலாம் என்று எழுதி விடு“ என்றார். சாது பகவானிடம் திரு.V.V. நாராயணசுவாமி எழுதிய கடிதம் பற்றியும் அவர் தன்னை கோயம்புத்தூர் வர கேட்டிருப்பதையும் கூறினார். சாது பகவானிடம் சக்தியின் வீட்டில் நடக்க இருக்கும் சத்சங்கம் மற்றும் காஷ்மீரின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டி சென்னையில் நடத்த இருக்கும் சண்டி ஹோமம் குறித்தும் கூறினோம். யோகி சண்டி ஹோமம் குறித்த முடிவுகளை எங்களையே எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். சாது நிவேதிதாவின் காஞ்சன்காடு பயணம் பற்றி கூறினார். யோகி யாருடன் நிவேதிதா சென்றிருக்கிறாள் என்று கேட்டார். சாது, “ லலிதா “ என்றார்.
யோகி பத்து பிரதி ‘தத்துவ தர்சனா’வை எடுத்துக்கொண்டார். அவர் ஒரு பிரதியை சசியிடமும், இன்னொன்றை சுந்தரராமன் இடமும் தந்துவிட்டு மீதமுள்ளவற்றை தன்னிடம் வைத்துக்கொண்டார். அவர், வேறு எட்டு பிரதிகளில் தனது கையொப்பத்தை இட்டு இந்த சாதுவிடம் நமது நூலகத்திற்காக கொடுத்தார். சாது பகவானிடம் லீ யின் பாடல்கள் தவிர அவரது கட்டுரையும் இந்த இதழில் வெளியிட்டு இருப்பதாக கூறினார். அந்த நேரத்தில் ஒரு கூட்டமாக பக்தர்கள் யோகியின் வாசலை அடைந்தனர். பகவான் சங்கடத்திற்கு உள்ளானதாக உணர்ந்தார், அவரால் அமர்ந்து இயல்பாக பேச இயலவில்லை. சாதுஜி பகவானிடம் தான் விடைப்பெற்று கொண்டு அடுத்தநாள் காலை 10 மணிக்கு வருவதாக கூறினார். பகவான், “வேறு வழியில்லை, நாளை நாம் சந்திப்போம்“ என்று பதிலளித்தார். சாது விவேக் மற்றும் மஹேந்திராவும் நாளை எங்களோடு இணைவார்கள் என்றார். அவர் பரவாயில்லை என்றார். சாதுவும் அவரது குழுவினரும் பிருந்தாவனுக்கு வந்து தங்கினர். பகவானின் பக்தர்கள் சாதுவை வந்து சந்தித்தனர் அவர்களுக்கு பகவானின் படத்தையும், புத்தகங்களையும் பிரசாதமாக வழங்கினார். விவேக் இரவில் வந்து சேர்ந்தான்..
அடுத்தநாள் காலை சாதுஜி பக்தர்களோடு அருணாச்சல கிரிவலத்திற்கு சென்றதோடு சேஷாத்திரி சுவாமி ஆசிரமம், ரமணாச்ரமம், மற்றும் அடி அண்ணாமலை போன்ற இடங்களுக்கு சென்று, பிறகு, பகவானுக்கு விருப்பமான டீக்கடைக்கு சென்று டீ அருந்தினர். பின்னர், இடுக்குப்பிள்ளையார் கோயிலுக்குச் சென்று விட்டு, உடுப்பி பிருந்தாவனில் காலை உணவை மேற்கொண்டனர். பின்னர் யோகியின் இல்லத்திற்கு காலை 10 மணிக்கு அடைந்தனர். பகவான் எங்களை உள்ளே அழைத்தார். சாது, பாரதி, விவேக், மணி மற்றும் லிமாயே யோன்றோர் அமரவைக்கப்பட்டோம். அவர்தனது குழந்தைகளுடன் வந்திருந்த சாந்த சரஸ்வதி என்ற பக்தரை ஆசீர்வதித்து அனுப்பினார். யோகி திரு. லிமாயேஜி அவர்களின் முழுப்பெயரை கேட்டார், சாதுஜி, “ ஸ்ரீ விஸ்வநாத் லிமாயே “ என்றார். திரு லிமாயே ராமேஸ்வரத்தில் அமைய இருக்கும் ராமர் கோயிலின் உத்தேச வரைப்படத்தை பகவானின் காலடியில் சமர்ப்பித்தார். பகவான் அதனை ஆர்வத்தோடு பார்த்து ஆசீர்வதித்தார். அவர் விவேக்கிடம் நிவேதிதா எங்கே என வினவினார். விவேக் பகவானிடம் நிவேதிதா காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்றிருப்பதாக சொன்னான். அவர் பாரதியிடம் மலர்களை வழங்கினார். திரு.லிமாயே மறுபடியும் குருவின் ஆசீர்வாதங்கள் வேண்டி பிரார்த்தித்தார். குரு அவரிடம் தான் ஒரு பூஜயம் என்றும் தனது தந்தையே அனைத்தும் என்றார். தன்னிடம் வழங்க எதுவுமில்லை என்றார். திரு. லிமாயே முன்பு மக்கள் தாங்கள் அவருக்கு ஏதேனும் தரவேண்டும் என்று நினைத்தனர் என்றும், ஆனால் அவர்கள் இப்பொழுது நீங்கள் ஏதேனும் தருவீர்கள் என அறிந்து கொண்டதாகவும் கூறினார். பகவான் உரக்க சிரித்தார். மேலும் யோகி காலையில் திரு.ஜெயராமனிடம் ஸ்ரீ லிமாயேஜி எழுதிய ராமாயணத்தை காண்பித்து அதை படிக்க நினைவூட்டுமாறு கூறியதாக சொன்னார். பின்னர் அவர் கூறத் துவங்கினார்: “ரங்கராஜா, நீ இந்த சுவாமியிடம் கூறு, இந்தப்பிச்சைக்காரன் பப்பா ராம்தாஸ் அவர்களின் பாதங்களில் 1952ல், தீக்ஷைக்குப்பின் ஏழு நாட்கள். கழித்து, இறந்துவிட்டான் என்று. அனைத்தும் தந்தையே, தந்தை மட்டுமே இருக்கிறார். அவர் எங்கும் இருக்கிறார். அனைவரும் அவருள் இருக்கிறார்கள்.” ஸ்ரீ லிமாயே பகவானிடம் தந்தை எப்போதும் மகாத்மா மற்றும் பகவானைப் போன்றவர்களின் வடிவத்தில் வருவார்கள் என்றார். யோகி மீண்டும் சிரித்தார். யோகி தான் இருக்கமாட்டேன், ஆனால் தந்தை மட்டிலும் இருப்பார். எனவே தான் ஆசி வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை, தந்தை மட்டுமே ஆசீர்வதிக்க முடியும். என்றார். யோகிஜி தன் முன்னால் இருந்த மலர்கள், பழங்கள் மற்றும் தூசினை காட்டி அனைத்தும் தந்தையே என்றார். பின்னர் அவர், “ லா குடியா….” எனத்துவங்கும் கபீரின் பாடலை பாடினார். திரு.லிமாயே இந்த பாடல் மீராவுடையதாக இருக்கலாம், ஏனெனில் இது ஒரு பெண் பாடியது போல் உள்ளது, என்றார். அதற்கு பகவான் ஆண்கள் கூட பெண்பக்தர்களைப் போல் பாடல்களை எழுதலாம். இது கபீருடையதுதான் என்றார். இந்த பாடலின் அர்த்தம் ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தை அளக்கச்சென்று அந்த கடலில் கரைந்து ஒன்றானது என்பதே ஆகும் என்றார். பகவான் மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் பற்றியும் குறிப்பிட்டார்.
பக்தர்கள் குவியத் தொடங்கினர். பகவான் சாதுவுடன் சில முக்கியமான விஷயங்களை பேச விரும்பி அவரை வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்றார். அந்த உரையாடலுக்குப்பின் பகவான் சாதுவிடம், தான் குறிப்பிட்ட விஷயம் குறித்து சிலரிடம் தனது சார்பாக பேசுமாறு கூறினார். பின்னர் நாங்கள் வெளியே வந்து மற்றவர்களோடு இணைந்தோம். சாதுவுடன் வந்த மஹேந்திராவை சாது பகவானுக்கு அறிமுகப்படுத்தினார். பகவான் அவரை உள்ளே வர அனுமதித்தார். மீண்டும் 11.40 மணிக்கு யோகி சாதுவை உள்ளே வருமாறு கூறி தனியே அழைத்துச் சென்று, சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்தப்பின் இருவரும் வெளியே வந்தனர். அவர் எங்களை வழியனுப்பினார். சாது பகவானிடம், தானும் தனது குழுவினரும் சென்னைக்கு திரும்பும் முன் திருக்கோயிலூர் செல்ல இருப்பதாக கூறினார். அவர் இரண்டு பெரிய பொட்டலங்கள் நிறைய கல்கண்டை பாரதியிடம் தந்து பிரசாதமாக மாலையில் சாதுவின் இல்லத்தில் நடைபெறும் சத்சங்கத்திற்கு வரும் பக்தர்களிடம் வழங்குமாறு கூறினார். மற்றவர்கள். அனைவருக்கும் பழங்களை வழங்கினார். சாதுவிடம், “ இந்தப் பிச்சைக்காரனின் பணியை செய் “ என்றார். பின்னர் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து வழக்கம்போல் ஆசீர்வதித்து தந்தார். பின்னர் எங்களை வழியனுப்பினார். பிருந்தாவனில் மதிய உணவை முடித்துவிட்டு நாங்கள் ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்திற்கு சென்றோம். அங்கே திரு.D.S. சிவராமகிருஷ்ணன் எங்களை வரவேற்றார். வள்ளியம்மை ஆச்சி எங்களை வந்து பார்த்தார். நாங்கள் சுவாமி நித்யானந்தா, திரு. முத்து வீரப்பன் போன்றவர்களை சந்தித்தோம். நாங்கள் வள்ளியம்மை அவர்களின் காட்டேஜ்க்கும் சென்றோம். உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு, நாங்கள் சென்னைக்கு இரவில் வந்து சேர்ந்தோம்.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 25, 1992 அன்று சாதுஜி திரு. K. வெங்கடசுப்பிரமணியன் அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தான். அவரும் அவரது மனைவியும் இந்த சாதுவை வரவேற்றனர். இந்த சாது சிலமணிநேரங்கள் டாக்டர். வெங்கடசுப்பிரமணியன் அவர்களிடம் பகவான் கூறிய விஷயங்களை குறித்து விவாதித்து விட்டு அடுத்தநாள் காலை பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினான்:
”பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,
வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!
உங்கள் கருணையால் இந்த சாதுவிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டான். டாக்டர் K. வெங்கடசுப்பிரமணியன் டெல்லியில் இருந்து நேற்று காலையே திரும்பி வந்தார். இந்த சாது மாலையில் அவரை சந்தித்தான். அவரும், அவரது மனைவி, மற்றும் மகள் மிகுந்த கருணையோடு இந்த சாதுவை வரவேற்றனர்.
அவர் தனியாக இருக்கும்போது இந்த சாது அவரிடம் உங்கள் தகவலை தெரிவித்தேன். அவர் உடனடியாக, உங்கள் சொல் ஒவ்வொன்றையும் இனிமேல் அவர் அப்படியே பின்பற்றுவதாகவும், திரு.ராஜமாணிக்க நாடார் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் மட்டுமே இவ்விதமான தவறுகள் நடந்ததாகவும், இனி அவ்விதம் நடக்காது என்றும் கூறினார். அவர் என்னை அவரது படுக்கையறைக்கு அழைத்துச் சென்று அங்கே உங்களது படத்தைக்காட்டி, “யோகி ராம்சுரத்குமார் எங்கள் குடும்பத்தின் தலைவர். நான் அவர் கூறுவதை அப்படியே பின்பற்றுவேன், ” என்றார். அவர் இந்த உறுதியை உங்களிடம் தெரிவிக்க சொன்னார். அவரும் இரண்டொரு நாட்களில் உங்களுக்கு கடிதம் எழுதுவார் என்றார்.
சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,
சாது ரங்கராஜன்.”
சிரஞ்சீவி விவேகானந்தன் மற்றும் டாக்டர் ராஜலட்சுமி மாண்புமிகு நீதியரசர் வெங்கடசாமி அவர்களை டிசம்பர் – 31 அன்று சந்தித்து அவரை ஜனவரி – 12, 1993 அன்று சுவாமி விவேகானந்தர் ஜெயந்திக்கு தலைமை விருந்தினராக அழைத்தார்கள். ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 3, 1993 அன்று ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் திருமதி. சக்தி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. அடுத்தநாள் நிவேதிதா காஞ்சன்காட்டில் இருந்து திரும்பி வந்தாள். பகவானின் ஒரு உதவியாளரான யோகராஜ் மாலையில் நடந்த பிரார்த்தனைக்கு வந்தார். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் விவேகானந்தா ஜெயந்திக்கான ஏற்பாடுகளும் தேசிய இளைஞர் தினம் பேச்சுப்போட்டிக்கான பணிகளும் முழு வீச்சில் நடைப்பெற்றது. ஒரு சுழற் கேடயம் ஜூனியர் அளவிற்கான போட்டிக்கு தயாராக இருந்தது. சாது பகவானுக்கு ஜனவரி 8, 1993 அன்று ஒரு கடிதம் எழுதினார்:
“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,
வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!
உங்கள் கருணையாலும் ஆசியாலும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால், செவ்வாய்க்கிழமை, 12 ஆம் தேதி ஜனவரி 1993, அன்று திருவல்லிக்கேணி இந்து சீனியர் உயர்நிலைப்பள்ளியின் விவேகானந்தா ஹாலில், மாலை 6 மணிக்கு நடைப்பெற இருக்கிறது. பத்திரிக்கைகள் இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளன. இத்துடன் பத்திரிக்கை செய்தியை இணைத்துள்ளோம். மாண்புமிகு நீதியரசர் திரு K. வெங்கடசாமி இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்க இருக்கிறார்.
யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயத்திற்கான, மாணவர்களுக்கிடையேயான சுவாமி விவேகானந்தர் குறித்த போட்டி ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 10, 1993 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம் ஜூனியர் அளவிற்கான போட்டிகளுக்கு உரியதும் தயாராக உள்ளது. நாங்கள் உங்களிடம் பரிசுப் பொருட்களை திங்கள்கிழமை ஜனவரி 11, 1993 அன்று கொண்டுவந்து ஆசிபெற நினைக்கிறோம். நாங்கள் உங்களின் தரிசனத்திற்கு பிரார்த்திக்கிறோம்.
இந்த சாது, பாண்டிச்சேரியில் இருந்து கடிதம் ஒன்றை வரப்பெற்றான். அதற்கு பதில் எழுதும் முன் உங்களின் வழிகாட்டுதலை வேண்டுகிறேன்.
குமாரி நிவேதிதா காஞ்சன்காட்டில் இருந்து, பன்னிரண்டு நாட்கள் தங்குதலுக்கு பிறகு, திங்கள்கிழமை அன்று வந்துள்ளாள். அவள் தனது பயணம் குறித்து நேரடியாக வந்து தங்களிடம் பகிர விருப்பம் கொண்டுள்ளாள்.
சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்
சாது ரங்கராஜன்
இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”
சுவாமி விவேகானந்தர் குறித்த தேசிய இளைஞர் தின பேச்சுப்போட்டி மாநகர் மாணவர்களுக்கு ஜனவரி 10 தேதி திருவல்லிக்கேணி இந்து சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் நடுவர்களாகவும், விவேகானந்தா கல்லூரியின் மூத்த மாணவர்கள் விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆகவும் கொண்டவர்களாகவும் பணிபுரிந்தனர் திங்கள்கிழமை, ஜனவரி 11, 1993 அன்று சாதுஜி திரு.N.S.மணி அவர்களுடன் இணைந்து திருவண்ணாமலையில் பகவானின் இல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றனர். அவர் எங்களை வரவேற்றார். நாங்கள் சுழல் கேடயம் மற்றும் மாணவர்களுக்கான பரிசுகளை அவர் முன் வைத்தோம். பகவான் அவைகளை கூர்மையாக உற்று நோக்கினார். பின்னர் அவர் அங்கே கூடியிருந்த மக்களை ஆசீர்வதித்து அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் அனைவரும் சென்றபிறகு பகவான் சாதுவிடம் திரும்பி, “இந்தப்பிச்சைக்காரன் உனக்கு அளித்த பணியை செய்தமைக்காக உனக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறான். நாங்கள். உனது கடித்த்தை பெற்ற பின்னரே அவரது (டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியன்) கடிதத்தைப் பெற்றோம். நீ மிக சிறந்த பணியை செய்திருக்கிறாய்.” அவர் எழுந்து உள்ளே சென்று, லீ லோசோவிக் எழுதிய கடிதங்களைக் கொண்டு வந்து சாதுவிடம் கொடுத்தார். மீண்டும் நிறைய மக்கள் வந்து சேர்ந்தனர். அவர் ஒருவர்பின் ஒருவராக அனுப்பத் தொடங்கினார். சித்தூரைச் சேர்ந்த கனவான் ஒருவர் ஒரு கருவூல அதிகாரி மற்றும் ஒரு திரைப்பட தயாரிப்பாளருடன் வந்திருந்தார். அந்த திரைப்பட தயாரிப்பாளர் பகவானிடம் தான் 20 லட்சம் செலவழித்து ஒரு படம் எடுத்ததாகவும் அந்த படத்தை முடிக்க முடியாதமையால் தனக்கு 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். பகவான் அந்த படத்தின் பெயரைக் கேட்டார். அந்த திரைப்பட தயாரிப்பாளர் படத்தின் பெயரைக் கூற பகவான் மிகவும் அமைதியாக, இன்னொரு 20 லட்சம் செலவு செய்து படத்தை முடி என்று கூறி அனுப்பி வைத்தார். திரு. பாலகுமாரன் அனுப்பி வைத்த ஒரு தம்பதியினரை யோகி ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். சுவாமிநாதன் யோகியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். யோகி ராம்சுரத்குமார் ஜூனியர் சுழல் கேடயத்தை கவனித்து அதில் அருகருகே இருக்கும் சுவாமி விவேகானந்தர் மற்றும் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ப்ளைவுட் கட்அவுட்களைபார்த்து, “ நீ இந்தப் பிச்சைக்காரனின் படத்தை சுவாமி விவேகானந்தர் பக்கத்தில் போட்டிருக்க கூடாது. பெரும் மகானாக உலகளவில் அறியப்பட்ட விவேகானந்தா எங்கே, இந்த அழுக்குப்பிச்சைக்காரன் எங்கே !“ என்றார். சாதுஜி சிரித்தவாறே பதிலளித்தார், “இது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால் வழங்கப்படுவதனால் பிள்ளைகளை விவேகானந்தர் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும், உங்கள் புனிதத்தன்மையை அறிந்து கொள்ளவுமே வடிவமைக்கப்பட்டது குருவே” பகவான் கூறினார்: “சரி, இந்தமுறை செய்து விட்டாய், ஆனால் அடுத்தமுறை இவ்விதம் இந்தப் பிச்சைக்காரனின் படத்தை சுவாமி விவேகானந்தர் பக்கத்தில் போடாதே. ராமகிருஷ்ண மிஷனை சார்ந்தவர்கள் என்ன நினைப்பார்கள் ? “
பகவான் சாதுவை இல்லத்தின் உள்ளே அழைத்துச் சென்று மீண்டும் மீண்டும் அவனது தாழ்மையான பணிக்கு நன்றி தெரிவித்தார். சாது அவரிடம் தான் அவரது ஒரு கருவி மட்டும் தான் என்றார். பகவான் சாதுவின் கடிதத்தை தேடி எடுத்தார். அவரால் டாக்டர் K. வெங்கடசுப்பிரமணியன் கடிதத்தை கண்டெடுக்க முடியவில்லை. சாது பகவானிடம் பாண்டிச்சேரியில் இருந்து ட்ரூமன் கெய்லர் அவர்களின் முகவரியை கேட்டு ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் அதற்கு என்ன பதில் அளிக்கலாம் என்று கேட்டதற்கு யோகி முகவரியை தரவேண்டிய அவசியமில்லை என்றார். சாதுஜி அதனை ஏற்று, அதற்கேற்றாற் போல் பதில் எழுதுவதாக கூறினார். பின்னர் யோகி வெளியே வந்து சுழல் கேடயம் மற்றும் பரிசுகளுக்கு முன்னால் அமர்ந்து கொண்டார். அவர் கேடயங்களை பார்த்து, மீண்டும் ஒருமுறை தனது படத்தை சுவாமி விவேகானந்தர் அருகில் போடவேண்டாம் என்றார். அவர் மீண்டும் நகைச்சுவையாக சுவாமி மதுரானந்தா ஒரு முறை தன்னிடம் தான் ராமகிருஷ்ணரின் அவதாரம் என்று கூறியதை கூற, சாதுஜி தான் சுவாமிஜியின் கருத்துடன் இணைவதாக கூறினார். அதைக்கேட்டு பகவான் விழுந்து விழுந்து சிரித்தார். பகவான் சாதுவிடம் ஸ்ரீ லிமாயேவின் குரு பற்றி கேட்டார். சாதுஜி நாங்கள் அனைவரும் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் அவர்களின் கீழ், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்., பின்னர் நாங்கள் விவேகானந்தரின் நினைவுச்சின்னத்தை ஏற்படுத்திய ஸ்ரீ ஏக்நாத் ரானடே அவர்களுடன் செயல்பட்டோம். ஸ்ரீ லிமாயேஜி காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் இந்தியா முழுமைக்கும் பயனப்பட்டார்கள். சாதுஜி, ஸ்ரீ லிமேயேஜி மீண்டும் ஒருமுறை பகவானின். தரிசனத்தை பெற இந்த சாதுவுடன் வர நினைப்பதாக கூறினார். ஆனால் அவர் இப்பொழுது பெங்களூர் போயிருக்கிறார் என்றார். பகவான் சாதுவிடம், “ராமேஸ்வரத்தின் திட்டப்பணி சம்பந்தமாகத்தானே அவர் பயணித்திருக்கிறார?. அப்படித்தானே?“ என்று கேட்டார் . சாது “ ஆமாம் “ என்றார். மேலும் சாது திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த திட்டத்திற்கான சிலையை செய்து தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்றார். பகவான் எந்த பொருளில் சிலை அமையும் என்று கேட்டார். சாது, “ கல்லில் “ என பதிலளித்தார். கணபதி ஸ்தபதி என்பவர், சுவாமி சித்பவானந்தர் கன்னியாக்குமரியில் நிறுவிய விவேகானந்தர் சிலை உருவாக்க, ராமேஸ்வரத்திற்கு அருகே பணி புரிந்த்தாக கூறிய பகவான், அந்த ஸ்தபதி தனது உதவியாளரிடம், “ஒரு நல்ல சுவாமி விவேகானந்தர் சிலையை உருவாக்க, ஒருவர் சதாகாலமும் அவரை பற்றியே சிந்திப்பவராக இருக்க வேண்டும்“ என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.
சாது யோகிஜியிடம் நிவேதிதாவின் ஆனந்தாஸ்ரமத்தின் பயணம் குறித்து கூறினார். யோகி நிவேதிதாவின் அனுபவம் குறித்து சாதுவிடம் கேட்டார். சாது அவளுக்கு அது இனிய அனுபவமாக அமைந்தது என்றும், சுவாமி சச்சிதானந்தர் அவளது சேவையில் மகிழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார். பகவான், “அவளும், லலிதாவும் ஒன்றாகத்தானே இருந்தார்கள். அப்படித்தானே ? “ என்று கேட்டார். சாது, “ ஆமாம்” என்றார். மேலும் நிவேதிதா வந்து தனது பயணம் குறித்து உங்களிடம். தெரிவிப்பாள் என்றார் சாது. யோகி கேடயங்களை தனது கரங்களில் எடுத்து ஆசீர்வதித்தார். யோகி டாக்டர். ராஜலட்சுமி குறித்து சாதுவிடம் விசாரித்தார், சாது ராஜலட்சுமி அவர்களின் குடும்பத்தில் நடந்த ஒரு மரணம் காரணமாக அவர் வரவில்லை என்றார்.. பின்னர் பகவான் விவேகானந்தர் ஜெயந்தி அழைப்பிதழை பார்த்தார். யோகி நடுவராக இருந்தவர்களின் பெயர் குறித்து கேட்டார். மேலும், “நீங்கள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பரிசு அளிக்கிறீர்களா?“ எனக் கேட்டார். சாது முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசுகளை தவிர்த்து பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசு உண்டு என்றார். யோகி, “நீங்கள் பங்கேற்கும் 130 பேருக்கும் பரிசளிக்க இருக்கிறீர்களா?“ எனக்கேட்டார். சாது, “ ஆமாம் “ என்றார். யோகி, “ அவர்களுக்கு என்ன தருவீர்கள் ? “ என்று கேட்க, சாதுஜி, “ புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள்” என்றார். யோகி, “ நாளை எத்தனை மணிக்கு விழா ? “ சாது, “ மாலை 6 மணிக்கு “ என்று பதிலளித்தார். பகவான் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்து, “ என் தந்தையின் ஆசிகள், விழா பெரும் வெற்றி பெரும்” என்றார். அவர் பை நிறைய பழங்கள் இன்னும் பிறவற்றை பிரசாதமாக கொடுப்பதற்கு கொடுத்தார். பின்னர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து தந்தார். பின்னர் சாதுவையும், மணியையும் பகவான் ஆசீர்வதித்தார். நாங்கள் அவரிடமிருந்து விடைப்பெற்று சென்னை வந்தடைந்தோம்.
சுவாமி விவேகானந்தா ஜெயந்தி யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால் சிறப்பாக ஜனவரி – 12, 1993 அன்று நடைப்பெற்றது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் K.வெங்கடசாமி அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் நிர்வாக இயக்குனரான திரு. K.M. நாராயணன், சென்னை விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர். தியாகராஜன், மற்றும் தென் ஆப்பிரிக்காவின் தமிழ் வேத சங்கத்தின் தலைவர் திரு. N.C..நாயுடு மற்றும் சாது போன்றோர் மாணவர்களிடையே உரையாற்றினர். டாக்டர். ராதாகிருஷ்ணன் விருந்தினர்களை வரவேற்றார். சுழல் கேடயங்கள் மற்றும் பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பேச்சாளர்கள் விழா மேடையிலும் பேசினர். விழாவின் நிறைவாக வந்தே மாதரம் பாடப்பட்டது. ஜஸ்டிஸ் திரு. வெங்கடசாமி, டாக்டர். தியாகராஜன் மற்றும் பிற விருந்தினர்களும் சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்து, யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆய்வு மையத்தின் நூலகத்தை பார்த்தனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் பலர் மாலையில் நடைப்பெற்ற சத்சங்கத்தில் கலந்து கொண்டனர். சாது பகவானுக்கு ஜனவரி 30, 1993 அன்று ஒரு கடிதம். ஒன்றை எழுதினார்:
“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,
வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!
உங்கள் கருணையாலும், ஆசியாலும் நமது சுவாமி விவேகானந்தா ஜெயந்தி விழா பெரும் வெற்றி பெற்றது. மாண்புமிகு நீதியரசர் K. வெங்கடசாமி அவர் விழாவிற்கு தலைமையேற்றதோடு எங்களின் இல்லத்திற்கும் விஜயம் செய்தார். அவரோடு விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர். தியாகராஜன் அவரும் ஜனவரி 12 அன்று வந்திருந்தார். இத்துடன் இந்த விழா குறித்து வெளியான இரண்டு பத்திரிகை செய்தி குறிப்புகளை இணைத்துள்ளோம்.
திரு. கிருஷ்ணா கார்செல் பிரான்ஸில் இருந்து திரு. சிவ சங்கர் அவர்களின் கட்டுரையை நகலெடுத்து அனுப்பியுள்ளார். அது பிரென்ச் மொழியில், “லே மாண்டே இன்கொம்மூ “ என்ற இதழில், “ஜப நாமஸ்மரணா” என்ற தலைப்பில், வெளியாகியுள்ளது. அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.
அகில இந்திய வானொலியின் சென்னை – A வில் “சான்றோர் சிந்தனை” என்ற பெயரில் இந்த சாதுவின் உரை காலை 6.55 மணிக்கு தினமும் பிப்ரவரி 22, 23 மற்றும் 24 அன்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு ஒலிபரப்பாகும். இதன் ஒலிப்பதிவு 1-2-1993 அன்று நடைபெறும் இந்த சாது அதற்கு உங்கள் ஆசியை வேண்டுகிறான்.
நமது ராம்நாம் பணி மிக வேகமாக முன்னேறி வருகிறது. நாளை காலை முதல் மாலை வரை நாங்கள் இங்கே அகண்ட ராமநாம ஜபத்தை நிகழ்த்த உள்ளோம். இனி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த அகண்ட ராமநாமத்தை நடத்த இருக்கிறோம்.
குமாரி. நிவேதிதா மற்றும் திருமதி. பாரதி தங்களது நமஸ்காரத்தை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள். சிரஞ்சீவி. விவேக் உங்கள் கருணையால் அண்ணாமலை நகரில் தனது படிப்பில் சிறப்பாக முன்னேறி வருகிறான்.
சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,
சாது ரங்கராஜன்.
இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி. “
ஆசிரமத்தில் யோகி ராம்சுரத்குமார் கட்டிட பணியாளர்களை ஆசீர்வதிக்கிறார்
யோகி ராம்சுரத்குமார், கடவுளின் குழந்தை, திருவண்ணாமலை.